Wednesday, December 31, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 7




7.

அன்னே, இவையும் சிலவோ, பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இருஞ்சீரான்,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்,
என்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு, ஏலோர் எம்பாவாய்.



அன்னே - தாயே!

இவையும் சிலவோ - இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்!

பல அமரர் - பல தேவர்களும்,

உன்னற்கு அரியன் - நினைத்தற்குக் கூட அரியவனும்,

ஒருவன் - ஒப்பற்றவனும்,

இரும் சீரான் - பெரும் புகழை உடையவனது,

சின்னங்கள் கேட்ப - சங்கு, தாரை முதலிய விடியற்காலை இசைக்கருவிகள் முழங்கக் கேட்டு,

சிவன் என்றே வாய் திறப்பாய் - சிவா சிவா என்று சொல்லிக் கொண்டே உன் வாய் திறப்பாய்

தென்னா என்னா முன் - தென்னவனே என்று சொல்லும் முன்னர்

தீசேர் மெழுகொப்பாய் - நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் உருகுவாய்

என் ஆனை - என் தலைவன்

என் அரையன் - என் அரசன்

இன் அமுதன் - இனிய அமிழ்தம் போன்றவன் என்று

எல்லோரும் வெவ்வேறாய் சொன்னோம் கேள் - என்று நாங்கள் எல்லோரும் சொன்னாலும்

இன்னமும் துயிலுதியோ - இன்னும் உறங்குகிறாயே!

அன் நெஞ்சப் பேதையர் போல் - கல் போன்ற கடினமான மனமுள்ள அறிவில்லாதவர்களைப் போல்

வாளா - வீணாக, அசையாமல்

கிடத்தியால் - படுத்திருக்கின்றாயே!

என்னே துயிலின் பரிசு - தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!

[இரும் சீரான் - பெரும் புகழுடையவன்; உன்னற்கு - நினைத்தற்கு]

அடீ அம்மா! இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்! முன்பெல்லாம், அதிகாலையில் சங்கு, தாரை எனும் வாத்தியங்கள் ஒலித்தவுடன், பல தேவர்களும் நினைத்தற்குக் கூட அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழை உடையவனுமான அந்த இறைவனின் பெயரைச் சொல்லி, "சிவா சிவா" என்று சொல்லிக் கொண்டேதான் எழுந்திருப்பாய். "தென்னவனே" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய். ஆனால் இப்போதோ, "என் தலைவன், என் அரசன், அமிழ்தினும் இனிமையானவன்", என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பலவாறாகச் சொல்வதைக் கேட்டும், இன்னும் உறங்குகின்றாயே! கல் போன்ற கடினமான நெஞ்சம் கொண்ட அறிவில்லாதவர்களைப் போல் வீணாக, அசையாமல், படுத்திருக்கின்றாயே! உன் தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

Tuesday, December 30, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 6



6.


மானே, நீ நென்னலை "நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே
போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்,
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.



மானே - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே!

நீ நென்னல் - நீ நேற்று,

நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் - நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்

என்றலும் - கூறியிருந்தும்,

நாணாமே - வெட்கப்படாமல் சொல்,

போன திசை பகராய் - அந்தச் சொல் இப்போது எந்த திசைக்குப் போயிற்று?

இன்னம் புலர்ந்தின்றோ? - இன்னும் விடியவில்லையா?

வானே - விண்ணில் உள்ள தேவர்களும்,

நிலனே - நிலத்தில் வசிக்கும் மாந்தர்களும்,

பிறரும் - மற்றவர்களும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான்,

தானே வந்து - தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி,

எம்மை தலையளித்து - நம்மை கருணை கூர்ந்து,

ஆட்கொண்டருளும் - ஏற்றுக் கொண்டு அருள் புரியும் (சிவபெருமானின்)

வான்வார் கழல்பாடி - மிகப் பெருமை வாய்ந்த திருவடிகளைப் பாடி,

வந்தோர்க்கு - வந்த எங்களுக்கு,

உன்வாய் திறவாய் - ஒன்றும் பேசாமல் உறங்குகிறாயே!

ஊனே உருகாய் - உன் உடல்தான் உருகாதா?

உனக்கே உறும் - இப்படிக் கிடத்தல் உனக்குத்தான் பொருந்தும்

எமக்கும் - எங்களுக்காகவும்,

ஏனோர்க்கும் - பிறருக்காகவும்,

தம் கோனைப் பாடு - நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


[நென்னல் - நேற்று; வான் - பெருமை]

மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே! "நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்", என்று நீதானே நேற்று சொன்னாய்? நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன்! இன்னும் உனக்கு விடியவில்லையா? விண்ணில் வசிக்கும் தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இன்னும் மற்றவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான், தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி, நம்மைக் கருணையுடன் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தாரே! அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே! எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா? அதைக் கேட்டும், இப்படிக் கிடப்பது உன்னால்தான் முடியும். எங்களுக்காகவும், பிறருக்காகவும், நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://shaivam.org

Monday, December 29, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 5



5.

மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.



ஏலக்குழலி - மயிர்ச்சாந்தினைப் பூசிய, வாசனை உள்ள கூந்தலை உடையவளே!

மால் அறியா - திருமால் (பன்றி உருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து தேடியும்)

நான்முகனும் காணா - பிரமனும் (அன்னப்பறவை உருக்கொண்டு உயரப் பறந்து தேடியும்) காண முடியாத

மலையினை - பெரிய வடிவு கொண்ட மலை போன்றவனை,

நாம் அறிவோம் - நம்மைப் போன்றவர்கள் அறியும் ஆற்றல் கொண்டோம்,

என்று உள்ள பொக்கங்களே பேசும் - என்று பொய்யான சொற்களையே பேசும்,

பால் ஊறு தேன்வாய் படிறீ - பாலும் தேனும் கலந்தாற்போல் இனிக்கப் பேசும் வஞ்சனை உடையவளே,

கடை திறவாய் - கதவைத் திறப்பாயாக!

ஞாலமே - இவ்வுலகத்தாரும்,

விண்ணே - தேவர்களும்,

பிறவே - பிறரும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின்,

கோலமும் - திருவுருவத்தையும்,

நம்மை ஆட்கொண்டு அருளி - நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு,

கோதாட்டும் சீலமும் - நம்மைப் புனிதமாக்கிய அருள் குணத்தையும்,

பாடி - புகழ்ந்து பாடி,

சிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று உரக்கப் பாடினாலும்,

உணராய் உணராய் காண் - அறிந்து கொள்ளாமல்,

பரிசு - (விழித்துக் கொள்ளாதவளே) இதுதானோ உன் தன்மை?


[பொக்கம் - பொய் வார்த்தைகள், படிறீ - வஞ்சனை உடையவள்; கோது - குற்றம்; பரிசு - தன்மை]

'கமகம'வென்று மணக்கும் வாசனையான கூந்தலை உடையவளே! திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே! கதவைத் திறப்பாயாக! இவ்வுலகத்தாரும், தேவர்களும், பிறரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின் திருவுருவத்தையும், நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே! இதுதானோ உன் தன்மை?


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://www.shaivam.org

Sunday, December 28, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 4



4.

ஒள்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ!
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ!
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
உள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.



ஒள்நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே!

இன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் பொழுது விடியவில்லையா?

வண்ணக்கிளி மொழியார் - அழகு பொருந்திய, கிளிபோல் இனிமையாகப் பேசும் பெண்கள்

எல்லாரும் வந்தாரோ - எல்லாரும் வந்து விட்டார்களா?

எண்ணிக்கொடு - அவர்களை எண்ணிக் கொண்டு,

உள்ளவா சொல்லுகோம் - உள்ளபடி சொல்லுகிறோம்,

அவ்வளவும் - அது வரையிலும்,

கண்ணைத் துயின்று - தூங்கிக் கிடந்து,

அவமே - வீணே

காலத்தைப் போக்காது - காலத்தைக் கழிக்காமல்,

விண்ணுக்கு ஒரு மருந்தை - தேவர்களுக்குக் கூட ஒப்பற்ற அமிழ்தத்தைப் போன்றவனை,

வேத விழுப் பொருளை - வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை,

கண்ணுக்கு இனியானை - காண்பவர்களுக்கு இனிமையானவனை,

பாடிக் கசிந்து - வாயாரப் பாடி மனம் கசிந்து,

உள்ளம் உள்நெக்கு நின்று உருக - உள்ளம் மெழுகு போல் உருகும்படி

யாம் மாட்டோம் - எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட மாட்டோம்!

நீயே வந்து எண்ணி - நீயே எழுந்து வந்து கணக்கிட்டு,

குறையில் - குறையுமானால்,

துயில் - மீண்டும் சென்று உறங்குவாயாக!


"ஒளி பொருந்திய பற்களை உடைய பெண்ணே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?" என்று எழுப்ப வந்த பெண்கள் கேட்க,

"அழகு மிகுந்த கிளி போல இனிமையாகப் பேசும் பெண்களே! எல்லோரும் வந்து விட்டார்களா?" என்று உறங்கியிருப்பவள் வினவுகிறாள். (என்னை மாதிரி ஆள் போல!)

அதற்கு மற்ற பெண்கள், "எங்களோடு வந்திருப்பவர்களை எண்ணிக் கொண்டு பிறகு சொல்கிறோம். அது வரையிலும், தூங்கிக் கிடந்து காலத்தை வீணாக்காமல், தேவர்களுக்குக் கூட ஒப்பில்லாத அமிழ்தம் போன்றவனை, வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை, உள்ளம் மெழுகு போல் உருகும்படி பாடுவாயாக!" என்று கூறியும், அந்தப் பெண் இன்னும் எழுந்திராமல் இருக்கிறாள்.

எனவே காத்திருக்கும் பெண்கள், "எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட்டு சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். யாரேனும் குறைவதாகத் தெரிந்தால், நீ திரும்பவும் போய் உறங்கலாம்!" என்கிறார்கள்.


(எனக்கு பிடித்த பாடல் :)


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கைலாஷி - http://thiruvempavai.blogspot.com

Saturday, December 27, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 3




3.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப்பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட் கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோரெம்பாவாய்.



முத்து அன்ன வெண் நகையாய் - முத்து கோத்தது போல உள்ள வெண்மையான பற்களை உடையவளே!

முன் வந்து எதிர் எழுந்து - எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து,

என் அத்தன், ஆனந்தன், அமுதன் என்று - என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் எனப் பலவாறு புகழ்ந்து,

அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் - அனுபவித்து, வாய் நிறைந்து, இனிமையாகப் பேசுவாய்,

வந்து உன் கடை திறவாய் - வந்து உன் வாயில் கதவைத் திறப்பாயாக

பத்து உடையீர் - இறைவனிடத்து நீங்கள் மிகுந்த பற்று உடையவர்கள்,

பழ அடியீர் - பழைய தொண்டர்கள்,

பாங்குடையீர் - அவனிடம் மிக்க உரிமை உடையவர்களே,

புத்து அடியோம் - புதிய தொண்டர்களாகிய எங்களது

புன்மை தீர்த்து - கீழ்மை குணங்களை நீக்கி,

ஆட்கொண்டால் பொல்லாதோ - எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?

எத்தோ உன் அன்புடைமை - ஆகா, உன் அன்புதான் எவ்வளவு?

எல்லோம் அறியோமோ - என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா?

சித்தம் அழகியார் - மனத்தூய்மை உடையவர்கள்

பாடாரோ நம் சிவனை - நம் இறைவனைப் பாட மாட்டார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கு - நாங்கள் விரும்புவதெல்லாம் நீயும் வந்து எங்களோடு கலந்து கொள்ள வேண்டுமென்பதே!


"முத்து கோத்தது போல வெண்மையான பற்களை உடையவளே! எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து, என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் என்று இறைவனைப் பலவாறு புகழ்ந்து, அனுபவித்து, வாய் நிறைய இனிமையாகப் பேசுவாயே. படுக்கையிலிருந்து எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறப்பாயாக", என்று தோழியர் அழைக்க,

படுக்கையிலிருப்பவள், "இறைவனிடத்தில் மிகுந்த பற்று உடையவர்களே, பழைய தொண்டர்களே, அவனிடத்தில் மிக்க உரிமை உடையவர்களே! புதிய தொண்டர்களாகிய எங்களது கீழ்க் குணங்களை நீக்கி, எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?" என்று கேட்க,

எழுப்ப வந்த தோழியர், "ஆகா. உன் அன்புதான் எவ்வளவு என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா? மனத்தூய்மை உடையவர்கள், நம் இறைவனைப் பாட மாட்டார்களா? நாங்கள் விரும்புவதெல்லாம், நீயும் வெளியே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே!" என்கிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://iranikulamtemple.com/kerala-hindu-temple/shivan.jpg

Friday, December 26, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 2



2.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்,
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்.

நேரிழையாய் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே!

இராப்பகல் நாம் பேசும்போது - இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம்

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் - என் பாசமெல்லாம் அந்த மேலான ஒளிவடிவான இறைவனுக்கே என்பாய்,

எப்போது - அதை மறந்து எப்போது,

இப் போது ஆர் அமளிக்கே - இந்த பூப்படுக்கையின் மேல்,

நேசமும் வைத்தனை - இவ்வளவு நேசம் வைத்தாய்!

நேரிழையீர் - நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே!

சீசீ இவையும் சிலவோ - இப்படி ஏன் இகழ்ந்து பேசுகிறீர்கள்!

விளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாட்டாகப் பழித்துப் பேசும் இடம் இதுதானோ?

விண்ணோர்கள் - தேவர்கள் கூட,

ஏத்துதற்குக் கூசும் - (இறைவன் திருவடியை) பாடிப் புகழ்வதற்கு ஏற்ற நல்வினை வாய்ப்பு தமக்கு இன்மையால் வெட்கப்படும்

மலர்பாதம் - அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

தந்து அருள வந்து அருளும் - நமக்கு அருள் புரிவதற்காக தந்து அருளும்,

தேசன் - பொலிவுடைய,

சிவலோகன் - சிவலோகநாதன்

தில்லைச் சிற்றம்பலத்து ஈசனார்க்கு - தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்துள் நடம்புரியும் ஈசனுக்கு,

அன்பார்யாம் - நாம் எல்லோரும் அன்புடையார் அல்லவா?

"சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்! ", என்று எழுப்ப வந்த பெண்கள் கூற,

உறங்கியிருக்கும் பெண் சொல்கிறாள், "நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே! ஏன் இவ்வளவு இகழ்ந்து பேசுகிறீர்கள்? விளையாட்டாகப் பழித்து பேசும் இடம் இதுவோ?" என்கிறாள்.

அதற்கு வெளியில் இருக்கும் கன்னியர், "இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா?" என்று கூறி அவளை எழுப்புகிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://thiruvempavai.blogspot.com

Thursday, December 25, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1

வணக்கம்.

எங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம். திடீர்னு திருவெம்பாவை பொருளோட எழுதணும்னு தோணிச்சு. சரியா மார்கழி 10-ல ஏன் தோணனும், இது இறையருளேன்னு நினைச்சு தொடங்கறேன்.

எனக்கா பொருள் எழுதத் தெரியாது. நான் இங்கு இடுகிற பொருள், திரு. எஸ். ஸ்ரீநிவாசன் என்கிறவர் எழுதிய, "Thiruppaavai and Thiruvempaavai" என்கிற புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் வெளிநாடுகளில் வாழுகிற இந்தியர்களுக்காகவே எழுதப் பட்டிருக்கு. பாடல்களும் பொருளும் தமிழ்லயும், ஆங்கிலத்துலயும் (transliteration) தொகுத்துத் தரப்பட்டிருக்கு. எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)

தினம் ஒரு பாடல் இடுவதாக, இடர் நீக்கும் கணபதியின், அவன் தகப்பன் ஈசனின், என் அன்னை சக்தியின், திருக்கழல்கள் பணிந்து தொடங்குகிறேன்.

திருவெம்பாவையை இன்னும் விளக்கமாகப் படிக்க வேண்டுபவர்கள், கைலாஷி அவர்கள் போன மார்கழியில் எழுதிய thiruvempavai.blogspot.com க்குச் சென்று பாருங்கள். படமும் அங்கிருந்துதான் எடுத்தேன். நன்றி கைலாஷி.




திருச்சிற்றம்பலம்

1.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!


வாள் தடம் கண் மாதே - ஒளி பொருந்திய, அகன்ற கண்களையுடைய பெண்ணே!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை - தோற்றமும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளிவடிவானவனை,

யாம் பாடக் கேட்டேயும் - நாங்கள் பாடுவதைக் கேட்டும்,

வளருதியோ - இன்னும் உறங்குகின்றனையோ?

வன்செவியோ நின்செவிதான் - உன் காதுகள், சொல்வதைக் கேளாத வன்மையான செவிகளோ?

மாதேவன் வார்கழல்கள் - இறைவனான சிவபெருமானின் அழகிய வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை,

வாழ்த்திய வாழ்த்தொலி போய் - நாங்கள் வாழ்த்திக் கொண்டே வரும் ஓசை,

வீதிவாய்க் கேட்டலும் - தெருவில் கேட்டவுடன் (ஒரு பெண்)

விம்மி விம்மி - தேம்பித் தேம்பி அழுது,

மெய்மறந்து - உணர்ச்சி இல்லாமல்,

போது ஆர் அமளியின் மேல் நின்றும் - மலர்கள் பொருந்திய படுக்கையிலிருந்து,

புரண்டு - உருண்டு கீழே விழுந்து,

இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - நிலத்தில், செயலற்று, ஒன்றுக்கும் உதவாதவளாய் கிடந்தாள்.

என்னே என்னே - இந்த அதிசயம் என்னென்பேன்?

ஈதே எம் தோழி பரிசு - எம் தோழியாகிய உன் நிலைமை இன்னும் படுத்துக் கிடப்பதோ?

Wednesday, December 24, 2008

கோதையின் வாடலும் பாடலும்

கோதை இல்லாத மார்கழியா? கண்ணன் இல்லாத சுடர்கொடியா? கோதையுடைய ஏக்கத்தைத் தீர்க்க முடியாட்டாலும், வெண்ணிலாவோட சேர்ந்து நாமும் அவள் பாடலை காது கொடுத்தாவது கேட்கலாம் வாங்க...



வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

Thursday, December 18, 2008

சுண்டக் காயும் சுண்டைக்காய்

பஸ் ஸ்டாப்புக்குள் நுழையும் போதே அவன் குரல் கேட்கிறது. எதற்காகவோ அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

“என்னடா, தெனம் அந்தக் குருட்டுப் பொண்ணோட அவ்வளவு வழிஞ்சுக்கிட்டிருக்கே? லவ்வு, கிவ்வு ஏதாச்சுமா?” கேட்பவன் அவன் நண்பன் போலும்.

கேள்வி அவளைப் பற்றியதாய் இருப்பதிலிருந்தே அவர்கள் இவள் வருவதைக் கவனிக்கவில்லை என்பது நிதர்சனம். இவளும் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆவலில், மனம் படபடக்க, ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள்.

“போடா. நீ வேற. நான் என்ன அவ்வளவு லூசா? என்னமோ பஸ் ஸ்டாப்ல பொழுது போகல; அவளும் நல்லாப் பேசறான்னு பேசினேன். குருட்டுப் பொண்ணை வச்சிக்கிட்டு வாழ்நாள் பூரா கஷ்டப்பட நான் ஒண்ணும் முட்டாளில்லடா. அட் லீஸ்ட் பார்க்க நல்லாருந்தாலும் பரவால்ல. இங்க அதுவும் இல்ல. அவளுக்குதான் நம்மைப் பார்க்க முடியாது, ஆனா நாம அவளைப் பார்த்துதானே ஆகணும்?”

பெரிய ஜோக் சொல்லி விட்டது போல் மறுபடியும் “ஹா ஹா ஹா” என்று சிரிக்கிறான்.

அப்படியே இழுத்து வைத்து நாலு அறை விடலாம் போல இருக்கிறது அவளுக்கு. எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகி விட்டது போல் இருக்கிறது. அவமானம் பிடுங்கித் தின்கிறது. பூமி பிளந்து அப்படியே அந்த நிமிடமே தன்னை விழுங்கி விடாதா என்றிருக்கிறது.

அவனா இப்படிப் பேசுகிறான்? நம்பவே முடியவில்லை அவளால். நடந்தவைகளைப் புரட்டிப் பார்க்கையில் அவன் ஒரு முறை கூட அவளை விரும்புவதாகச் சொன்னதில்லை என்பது உண்மைதான். ஆனால்??

அவன் இனிக்க இனிக்கப் பேசியது? அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தது? அவள் பிறந்த நாளுக்கு அழகான பேசும் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தது? அவளுக்குச் சிவப்பு நிறம் மிக அழகாக இருப்பதாகச் சொன்னது? ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருப்பதை நேரடியாகச் சொன்னால்தானா? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதெல்லாம் ஏமாற்றியதாகாதா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகாதா?

ஆனால் அவள்மேல் தான் தவறு. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியது அவள் தவறு. முன்பின் யோசியாமல் கனவுகளை வளர்த்துக் கொண்டது அவள் தவறு. பேசப்படும் வார்த்தைகள் எல்லாமே இதயத்திலிருந்து வருவதாக நினைத்ததும் அவள் தவறுதான். அவளைப் போல் பெண்கள் இருப்பதால்தான் அவனைப் போலக் கயவர்களும் இருக்கிறார்கள். பெண்ணின் மனசைச் சுண்டைக் காயாய் நினைத்து சுண்டிக் காயெறிந்து விளையாடுகிறார்கள்.

“ஆனால் நீ சுண்டைக்காய் இல்லையடி. நீ ஒரு பெண். அதிலும் அற்புதமான பெண். தாயை இழந்து, பார்வையை இழந்து, தகப்பனின் அன்பில் வளர்ந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, படித்து, வேலைக்குப் போய், சொந்தக் காலில் நிற்கும் பெருமைக்குரிய பெண். அப்படிப்பட்டவள் இந்த அற்ப மனிதனால் துவண்டு போவதா? அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா?” நன்றாகவே இடித்துக் காட்டுகிறது மனசு.

மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறாள். பேசும் வாட்சைத் தொடுகிறாள். அது உடனே சமர்த்தாக நேரத்தை அறிவிக்கிறது. தொடர்ந்து அருகில் காலடிச் சத்தம்.

“அடேடே, வந்துட்டீங்களா… எங்கே காணுமேன்னு பார்த்தேன்”, அவன் குரல்தான்.

“அட, எனக்காகவா காத்திருக்கீங்க?” எதுவும் நடவாதது போல் புன்னகைக்கிறாள்.

“ஆமாங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்குதான்… நான் முந்தியே உங்ககிட்ட சொல்லிக்கிடிருந்தேன்ல? நாளைக்கு பைக் டெலிவரி எடுக்கப் போறேன்… அதனால இனிமே நானே வந்து உங்களை….”

அவன் முடிப்பதற்குள் குறுக்கிடுகிறாள்.

“அப்படியா. சந்தோஷங்க. அப்ப இனிமே உங்கள பார்க்க முடியாது. என்ன… நீங்க இருந்ததால எனக்கும் பஸ்ஸுக்குக் காத்திருக்க நேரத்துல நல்லா பொழுது போச்சு. இனிமே வேற யாராச்சும் பேச்சுத் தொணைக்குக் கிடைப்பாங்களான்னு பார்க்கணும், அவ்வளவுதானே?” புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே அவன் தந்த அந்த வாட்சை நழுவ விடுகிறாள்.

“ஒரு நிமிஷங்க… வாட்ச் கீழ விழுந்திருச்சு”, அவன் குனிந்து எடுக்க முயலும் முன், “அப்படியா, எங்கேங்க?”, கேட்டுக் கொண்டே திரும்பி ‘தெரியாமல்’ வாட்சை மிதித்து விடுகிறாள். காலடியில் அது நொறுங்குவதை அவளால் உணர முடிகிறது.

இத்தனை காலமாக இல்லாத ஆசை ஒன்று இன்றைக்கு முளைக்கிறது – இந்த நிமிடம் அவன் முகம் போகும் போக்கைப் பார்க்கவேனும் பார்வை வேண்டுமென்று...


--கவிநயா

Monday, December 15, 2008

சிறை



சுவாசம் கூட
சுதந்திரமாய் வெளியேற இயலாமல்
இதயத்தின் கேவலில்
சிக்கித் திணறுகிறது

திரும்பும் திசையெல்லாம்
நெருப்புக் கம்பிகள்
வெப்பம் விரவுகின்றன
இரக்கமின்றி

ஏறும் பாரத்தை
எதிர்க்கத் தெரியாமல்
வாயில்லாப் பிராணியாய்
வலியில் புதைகிறது மனசு

ஒரு அடி வைக்க முயன்றாலும்
காலடியினின்றும்
விரோதித்து நழுவுகிறது பூமி

இருளைத் தழுவிய கண்கள்
ஒளியின் இருப்பை மறந்து
மாயை உணரா மனிதன் போல்
மயங்கிக் கிடக்கின்றன

வெட்ட வெளிச் சிறையின்
கரிய வானத்தில்
போனால் போகிறதென்று
கண் சிமிட்டிச் சிரிக்கிறது
ஒரே ஒரு நட்சத்திரம்


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/lakshmanaraja/2270901460/

Wednesday, December 10, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா !


அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஓராறு முகம் கொண்ட வேலா
ஓம்காரப் பொருள் சொன்ன பாலா
ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
அடிமைக்கு அருள் செய்ய வாவா!

நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்
பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்
சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை
விட்டுத் தெறித் தோடச் செய்வாய்!

சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
முத்தாக வந்து தித்த உன்னை - என்
சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!

மயில் மீது ஏறியே வருவாய் - என்
மனதிலே கோவில் கொண் டமர்வாய்
பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
பிறவிப் பயன் தந்து அருள்வாய்!


--கவிநயா


அம்மன் பாட்டு நூறாவது இடுகையும் இன்றுதான். வந்து அன்னையைத் தரிசித்து அருள் பெறுங்கள்!

Sunday, November 30, 2008

சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே...

சந்தோஷமோ சஞ்சலமோ, அவள்தானே எல்லாம்? அதென்னவோ இப்போ அவள் பாட்டு போடணும்னு தோணுச்சு. அன்னையின் திருவடிகள் சரணம்.



சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!

அன்னை உந்தன் பெயர் சொல்லையிலே - எண்ண
மெல்லாம் நிறையுது அன்பினிலே!
அன்னை உன்னை மனம் நாடையிலே - என்
ஊழ்வினை ஓடுதுன் பார்வையிலே!

தேவி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
தேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
தேவி உன்னை மனம் நாடையிலே - என்
தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!

துர்க்கை உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சொர்க்கம் தெரியுது கண்களிலே!
துர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
மார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!

--கவிநயா

Sunday, November 23, 2008

சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...

குடுகுடுன்னு ஓடிக்கிட்டு, குட்டிக் கையில கொய்யாப் பழத்தை ஏந்திக்கிட்டு, கூர் பல்லால நறுக் நறுக்னு கடிச்சிக்கிட்டு, துறுதுறுன்னு திரியற அணிலை வேடிக்கை பார்க்க எனக்குப் பிடிக்கும்! உங்களுக்கு?



சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை
சுறு சுறுப்பாகச் சுற்றி வரும்

துறு துறுவென்ற கண்களினால்
சுற்றுப் புறத்தை நோட்டம் விடும்

பக்குவமான கொய்யாக் கனியைக்
கண்டு பிடித்துக் கடித்துண்ணும்

பாவம் மனிதர் என்றெண்ணி
மீதம் கொஞ்சம் வைத்து விடும்

வாசல் சற்றே திறந்திருந்தால்
குடு குடுவென உள் புகுந்து விடும்

வெளியேறும் வழி தெரியாவிடில்
திரு திருவெனவே விழித்து நிற்கும்

சிறிய உதவி செய்திடினும்
பெரிய மனதைப் பெற்றதினால்

மனித தெய்வம் ராமனுக்கு
பிரிய முடையதாய் ஆனதுவே

நாமும் தினமும் அது போலே
பிறர்க்கு உதவி மகிழ்ந்திடுவோம் !

--கவிநயா

படத்துக்கு நன்றி - http://www.flickr.com/photos/yeliseev/2748470727/sizes/m/

Wednesday, November 19, 2008

ஆயிரமாயிரம் விளக்கேற்றி...

எங்க ஊர் தமிழ் சங்கம் தீபாவளி விழாவில நான் சமீபத்தில் எழுதிய "தீபாவளி" பற்றிய பாடலுக்கும், சில நாள் முன்பு எழுதிய "என்று வருவான்" என்ற கண்ணன் பாடலுக்கும், எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க, கிட்டத்தட்ட 20 பெண்கள் பாடினோம். (ஆமாங்க, நானும்தான்!) ஆனா அதை சரியா ஒலிப்பதிவு செய்ய முடியல. அதனால அதையே மீனா மட்டும் பாடித் தந்திருக்காங்க. கேட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)

"ஆயிர மாயிரம் விளக்கேற்றி..." தீபாவளிப் பாடல் வரி வடிவம்...

Get this widget | Track details | eSnips Social DNA


"என்று வருவான்" கண்ணன் பாடலின் வரி வடிவம்...


Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, November 16, 2008

காணாமல் போனவர்கள்



"தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்" கம்பீரமான மிருதங்கத்தின் தாள கதிக்குத் தகுந்தபடி வேகமாகச் சுழன்று ஆடுகிறாள், அந்தச் சிறுமி.

கச்சிதமான பட்டுப் பாவாடை சட்டையில், கர்ப்பக்கிருகத்திலிருந்து அப்போதுதான் எழுந்து வந்த அம்மன் போல் அப்படி ஒரு அழகு! சலங்கை கட்டிய கால்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு அவயமும் அபிநயம் பிடிக்கிறது, அபிநயா என்ற அவள் பெயருக்கு ஏற்றாற்போல்.

அவள் ராதாவாக கண்ணனை வரிக்கையில் அவளோடு சேர்ந்து அனைவருக்கும் கன்னம் சிவக்கிறது, வெட்கத்தில். அவள் யசோதாவாக மாறி சின்னக் கண்ணனைக் கூப்பிடுகையில், அனைவரும் திரும்பி அந்தத் திசையில் பார்க்கிறார்கள், உண்மையாகவே அங்கே கண்ணன் நிற்பதைப் போல்; அவன் பவழ வாய் திறந்து அவளுக்கு உலகத்தைக் காண்பிக்கையில், அவளோடு சேர்ந்து அனைவரும் அந்தக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார்கள். அவள் ஆட்டம் மட்டுமின்றி, பாட்டும், மிருதங்கமும், நாதஸ்வரமும் கூட அந்த அரங்கத்தில் மாயாஜாலம் போல அற்புதமாக ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஒலி வடிவிலும், அவளும் தன் சலங்கைகளுடன் ஏறிப் பயணம் செய்வது போன்ற பிரமை.

பார்வையாளர்கள் அனைவருக்கும் நடனம் முடிந்தது கூடத் தெரியவில்லை; இன்னும் அந்த இனிய மந்திரத்துள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். அரங்கமெங்கும் பூரண நிசப்தம். ஒரு நிமிடம்தான். பிறகு அரங்கம் அதிரும் அளவுக்கு எழுந்த கரவொலி வானைப் பிளக்கிறது. வாத்தியக் கோஷ்டியும், அவளும் மேடைக்கு நடுவில் வந்து வணங்குகிறார்கள். ஒரே கணத்தில் சின்னஞ்சிறுமியாக மாறி, பட்டுப் பாவாடையின் இரண்டு பக்கங்களையும் விரித்துப் பிடித்துக் கொண்டு மேற்கத்திய நடன மாதர்கள் போல் தலையைக் குனிந்து வந்தனம் அபிநயிக்கிறாள், கன்னங்குழியச் சிரித்தபடி. இந்தக் குறும்புக் காரக் குழந்தையா இவ்வளவு நேரம் காதல் வயப்பட்டாள், யசோதாவாக மாறிக் கண்ணனைக் கண்டித்தாள், என்று எல்லோருக்கும் மிகவும் அதிசயமாக இருக்கிறது.

அன்று அந்த மேடையில் இருந்தவர்கள் எல்லோருமே சின்னஞ்சிறார்கள்தான். ஏன், பார்வையாளர்களிலும் பெரியவர்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். இனி அடுத்த நிகழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையை விட்டு இறங்கியதும், அனைவரும் அருகில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.

மிருதங்கம் வாசித்த பையன் பெயர் பாலா. அவன் மட்டும் அபிநயாவின் அருகில் தங்கினான். "அபி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்", என்றான் தயக்கத்துடன்.

அவன் முக பாவத்தைப் பார்த்ததுமே ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று புரிந்தது, அபிக்கு. "என்னடா ஆச்சு? சும்மா சொல்லு", என்று ஊக்குவித்தாள்.

"அது வந்து... வந்து... எனக்கு அழைப்பு வந்திடுச்சு அபி. நான் நாளைக்கே கிளம்பணும்", குரல் இலேசாக நடுங்குகிறது.

"என்னடா, நிஜமாவா சொல்ற?" அபியின் குரலிலும் கண்ணீரின் ஆரம்பம். என்ன இருந்தாலும், பாலா ஒருவன்தான் அவளுக்கு உயிர் நண்பன். அவனும் போய் விட்டால்? ஆனாலும் இது எதிர்பார்த்ததுதானே? எப்போதும் இங்கு யாராவது வருவதும் யாராவது போவதுமாகத்தான் இருக்கிறது. யாரும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெரிந்த விஷயம்தானே?

பாலாவை இப்போதுதான் பார்த்தது போல் இருக்கிறது. அவள்தான் முதலில் இங்கு வந்தாள். வந்த புதிதில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் பயந்தாலும், இயல்பான தன் தைரியத்தால் சீக்கிரம் பழகி விட்டாள். அவள் வந்து சில நாட்களில் பாலா வந்தான். அவளைப் போல் அவன் தைரியமாக இல்லை. வந்த போதே பயத்திலேயே மயங்கி விழுந்து விடுவான் போல இருந்தது. இவள்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி, இந்த இடத்தைப் பற்றி விளக்கித், தன் அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டாள். பிறகு சீக்கிரத்தில் இருவரும் சிறந்த நண்பர்களாகி விட்டார்கள். அந்த பாலாதான் இப்போது போகிறேன் என்கிறான். துக்கம் தொண்டையை அடைக்கிறது, அபிக்கு. பாலாவுக்கு அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இத்தனை நாளும் அபிதான் அவனுக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல வெகு சீக்கிரம் தன்னைத் தேற்றி கொண்டு விட்டாள், அபி. "சரி, இனிமே நம்ம கவலப்படக்கூடாது. உண்மையிலேயே உனக்கு இது சந்தோஷமான விஷயம். இந்த இடத்துக்கு வந்துட்டு திரும்பிப் போற சந்தர்ப்பம் எல்லாருக்கும் எப்போதும் கிடைக்கிறதில்லன்னு உனக்குத் தெரியுமே? அதனால நீ கிளம்பற வரைக்கும், நம்ம சந்தோஷமா இருக்கணும். சரியா?" வரவழைத்து கொண்ட உற்சாகத்துடன் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறாள்.

"உனக்கு அழைப்பு எப்படி வந்தது?" ஆவலுடன் கேட்கிறாள். முன்பே சிலரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் பாலாவையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசை.

"என் கனவில் வந்தது. என்னைப் போலவே இருக்கிறவர் ஒருத்தர், ஆனால் என்னை விடப் பெரியவர், என் கனவில வந்தார். வந்து, 'தயவு செய்து என்கிட்ட திரும்பி வந்துடு. இனி உன்னை மறக்கவே மாட்டேன்; பிரியவே மாட்டேன். இது சத்தியம்', னு சொல்லி ரொம்பக் கெஞ்சினார்"

"இங்க சில பேரெல்லாம் அவங்க கனவுல வந்த அழைப்ப நம்பாம போகாமயே இருந்திட்டாங்க. தெரியுமா? ஆனா நீ அப்படி இருக்க வேண்டாம். நீ சொல்றதப் பாக்கும் போது அவர் உண்மையாகவேதான் உன்னைக் கூப்பிடறாப்ல தோணுது", என்றாள் அபி.

அது ஒரு வினோதமான உலகம். காணாமல் போன, கண்டு கொள்ளாமல் போன, அடியோடு மறந்து போய் விட்ட பல்லாயிரம் திறமைகள் சேர்ந்து (§)தங்கியிருக்கும் உலகம். அங்கு நிறம், மொழி, இன பேதங்கள் கிடையாது. அநேகம் பேர் சிறு வயதிலேயே திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமலோ, வளர்த்துக் கொள்ளாமலோ நிராகரித்து விடும்போது, அவை எல்லாம் இங்கு வந்து வசிக்க நேரிடும். அபூர்வமாக சிலர் பெரியவர்களாகும் வரை திறமைகளை வளர்த்து விட்டுப், பிறகு அவற்றுக்குத் தீனி போட நேரமின்றி அவற்றை மறந்து விடுவது உண்டு. அந்த மாதிரி மறக்கப்பட்ட திறமைகளும் இங்குதான் வந்து சேரும். பெரியவர்களான பின் சிலர் தாங்கள் அது வரை நினைக்காமலிருந்த திறமைகளை மறுபடியும் வரவழைத்து வளர்த்துக் கொள்ள முனைகையில்தான் பாலா போன்றவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கிறது.

பாலாவுக்கும் அவன் திரும்பிப் போவது குறித்து மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது, அபியைப் பிரிய வேண்டும் என்பது தவிர அவனுக்கு வேறு வருத்தம் இல்லை. சிறுவர்களை விடச் சிறுமிகளுக்கு அழைப்பு வருவது இன்னும் அரிது என்பது அவனுக்கும் தெரியும். "கவலைப் படாதே, அபி. உனக்கும் ஒரு நாள் அழைப்பு வரும், பாரேன்", நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளுடன், பாலாவும் கிளம்பி விட்டான்.

அபி காத்துக் கொண்டிருக்கிறாள்.


--கவிநயா

பி.கு. இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/deep_shot/2048096515/

Wednesday, November 12, 2008

அமைதியின் அருமையை உணர்வோம்!

ரெண்டு பேருக்குள்ளேயோ, இல்லை ரெண்டு குடும்பங்களுக்குள்ளேயோ, இல்லை ரெண்டு நாடுகளுக்குள்ளேயோ, கருத்து வேறுபாடோ, சண்டையோ, ஏற்பட என்ன காரணம்? ரொம்ப சுலபமான பதில்தான். உட்கார்ந்தோ, ரூம் போட்டோல்லாம் யோசிக்க வேணாம். ரொம்ப அடிப்படையான ஒரு உணர்வு, “நான்”, “எனது”, “நீ சொல்லி நான் கேட்கிறதா” என்கிற எண்ணம் (ego) தான் இதுக்குக் காரணம். சின்னக் குழந்தைங்க சண்டையில இருந்து, குடும்பச் சண்டைகள்ல இருந்து, பெரிய பெரிய யுத்தங்கள் வரைக்கும் யோசிச்சுப் பாருங்களேன்.

பதிவுலகத்தில இருந்தே ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடறோம்னு வைங்க. அதுக்கு அவங்க பதில் எழுதலைன்னு வைங்க. அதனால நமக்கு வருத்தம் ஏற்படுது. ஏன்? ஒண்ணு, “நான்” இட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் அவங்க எப்படி பதில் எழுதாம இருக்கலாம், அப்படிங்கிற எண்ணம். ரெண்டு, அவங்களைப் பாராட்டுவது மட்டுமே நம்ம நோக்கமா இருந்திருக்கணும், அதை விட்டுட்டு நம் பாராட்டுக்கு அவங்க பதில் எழுதணும்னு “எதிர்பார்க்கிறது”. (“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அப்படின்னு கண்ணன் சொன்னது நினைவு வருதா?)

இதே போலத்தான் வாழ்க்கையில ஏற்படற எல்லா விதமான மன வேற்றுமைகளுக்கும், அதனால ஏற்படற துன்பங்களுக்கும், நாமேதான் காரணம். அதனாலதான் அந்தக் காலத்தில இருந்து எல்லா ஆன்மீகவாதிகளும், “நான்”, “எனது”ங்கிற எண்ணத்தை ஒழிக்கணும்னு சொல்லி வந்திருக்காங்க.

சரி… இதுக்கு என்னதான் தீர்வு? சண்டையை நிறுத்திட்டு, ஒருத்தராவது “நான் சொல்றதே சரி” ங்கிற எண்ணத்தை விட்டு இறங்கி வந்து, அடுத்தவர் சொல்றதை மதிச்சு காது கொடுத்து கேட்கணும். இந்த உலகத்தில பிறந்திருக்கிற, உலகத்திற்கு வந்திருக்கிற, “எல்லாருமே” “பிழைக்கத்தான்” வந்திருக்கோம்கிறதை மறக்காம, ஒருத்தொருக்கொருத்தர் அன்பா அனுசரணையா இருக்க பழகிக்கணும். அப்படி ஒரு காலம் விரைவில் வர, உலகெல்லாம் அமைதி நிலவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.

இது வரை பொறுமையா படிச்சதுக்கு நன்றி. அப்படியே இதோ இந்தக் கவிதையையும் படிச்சிடுங்களேன்… :)


வேண்டும்...

அன்பென்னும் ஓருணர்வே
அகிலத்தை ஆள வேண்டும்!

அகந்தை இல்லா நெஞ்சம்
அனைவருக்குமே வேண்டும்!

மனிதத்தை மறக்க வைக்கும்
மதவெறியை ஒழிக்க வேண்டும்!

சாதிகளும் பேதங்களும்
சடுதியிலே கரைய வேண்டும்!

போரோடு போர் தொடுக்க
புவியினர் புறப்பட வேண்டும்!

அமைதியின் அருமை தன்னை
அகிலத்தோர் உணர வேண்டும்!

இனம் மொழியாம் வேறுபாட்டை
இன்றே களைந்திடல் வேண்டும்!

உலகமெல்லாம் ஒர் குடிலாய்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்!!


--கவிநயா

Sunday, November 9, 2008

காதல் கொஞ்ச(ம்)...

...கவிதை கொஞ்ச(ம்). தமிழுக்கே உரிய அழகான சில வார்த்தைகள்ல காதலும் ஒண்ணுன்னு எனக்குத் தோணும். காதல் இல்லாத கவிதை இருக்கலாம்; ஆனா கவிதை இல்லாத காதல் இருக்குமோ? அதொண்ணுமில்லங்க, சில அழகழகான காதல் கவிதைகளைப் படிச்சதும் எனக்கும் ஒரு ஆசை - காதல் கவிதை எழுதணும்னு. அப்படி எழுதினதுல ஒண்ணுதான் இது. ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.



நினைவுகள்

சுட்டு விரலைக்
கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்
குட்டிப் பிள்ளை போல
உன் நினைவுகளுடன்
உரிமையாய்க் கைகோர்த்தபடி
பயணிக்கிறது மனசு.
கோர்த்த மனம் வேர்த்தாலும்
நினைவுகள் நழுவுவதில்லை;
ஊர் போய்ச் சேர்ந்த பின்னும்
ஓருயிர் இரண்டாவதில்லை...

***

நேராக நடப்பதையே மறந்து விட்ட
செக்குமாடுகள் போல்
வேறெங்கும் செல்லாமல்
உன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன
என் நினைவுகள்…

***

வானம் வெகுதொலைவில் இருந்தாலும்
மழைக்கரம் நீட்டி
பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
நினைவுக்கரம் நீட்டி
உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது
மனசு…


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/29643650@N04/2831493184/sizes/m/

Wednesday, November 5, 2008

அம்மா


பாலுவோட அம்மா செத்துப் போயிட்டாங்க.

நம்பவே முடியல. எங்கிட்ட எவ்வளவு அன்பா இருப்பாங்க. பாலு வேற யாருமில்ல, அவந்தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் அம்மா, அவனோட சேர்த்து என்னையும் தன் மகன் மாதிரியே நடத்துவாங்க. அவங்க சமையல் எனக்கு புடிக்கும்னு தெரிஞ்சு நான் எப்ப போனாலும் ஏதாச்சும் செய்து தராம இருக்க மாட்டாங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்கள பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவும் எப்ப இப்பிடி முகம் நிறைய சிரிப்பாங்கன்னு ஏக்கமா இருக்கும்.

என்ன ஆயிருக்கும்? யாருக்கும் தெரியல. பாலுவுக்குக் கூட தெரியல. பாலுவோட அப்பா பெரிய வேலையில இருக்காரு. நல்ல வசதியானவங்க. அவங்களுக்கு என்ன கொறை இருக்க முடியும்னு யாருக்கும் ஊகிக்க முடியல. எட்டாவது படிக்கிற செல்லப் புள்ளைய விட்டுட்டு தற்கொலை பண்ணிக்க அவன் அம்மாவுக்கு எப்பிடி மனசு வந்துச்சோ? பாலு அழவே இல்லை. “என் மேல உண்மையான அன்பிருந்தா இப்பிடி பண்ணியிருப்பாங்களா?” அப்பிடின்னு ஒரே ஒரு தரம் சொன்னான். அவ்வளவுதான். அப்புறம் அதைப் பத்திப் பேசறதே இல்ல. அம்மாவைப் பத்தி பேச்செடுத்தாலே கண்ணும் மொகமும் செவசெவன்னு ஆயிரும் அவனுக்கு. ஒடனே அந்த எடத்த விட்டு எந்திரிச்சு போயிருவான்.

நேத்து சாயந்திரம் எங்கப்பா மறுபடியும் குடிச்சிட்டு வந்து எங்கம்மாவை நல்லா அடிச்சிட்டாரு. அவரு எவ்வளவு அடிச்சாலும் பேசுனாலும் என் அம்மாகிட்ட இருந்து ஒரு சத்தம் வராது. என் அம்மா அழுது நான் பார்த்ததில்ல. அவங்க சந்தோஷமா சிரிச்சும் பார்த்ததில்ல. என்னைப் பார்த்தா மட்டும்தான் அவங்ககிட்ட இலேசா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். அவங்க கலகலன்னு சிரிச்சு நான் பார்த்ததே இல்ல. ஒண்ணுமே நடக்காத மாதிரி இருப்பாங்க. எங்கிட்ட எப்பவும் போல ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டுக்கிட்டு… எனக்குப் புடிச்சதை சமைச்சுக்கிட்டு… என்னை கவனிச்சுக்கிட்டு… வீட்டு வேல பாத்துக்கிட்டு… ஒரு வேளை… என் அம்மாவும் பாலு அம்மா மாதிரி ஒரு நாள்… ம்ஹூம். என் அம்மா அப்பிடி செய்ய மாட்டாங்க. செய்யவே மாட்டாங்க. தலையை வேகமா ஆட்டி அந்த நெனப்ப ஒதறினேன்.

அன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்தப்ப, எங்க வீடு முன்னாடி ஒரே கூட்டமா இருந்திச்சு. எனக்கென்னமோ ரொம்ப கலக்கமா போச்சு. எல்லாரும் என்னைய இரக்கமா பாக்கறாங்க. சில பேர் கண்ணு கலங்கியிருக்கு. மெதுவா வீட்டுக்குள்ள தயங்கித் தயங்கி போறேன். அங்க நடு வீட்ல படுத்திருக்கது… யாரு? அம்மாவா? யாரு அது? அப்பாவா அம்மாவுடைய காலைப் பிடிச்சுக்கிட்டு அழறாரு?

அவ்வளவுதான். அதுக்கு மேல பார்க்க முடியல என்னால. நான் பயந்துகிட்டே இருந்தது இன்னிக்கு நடந்துருச்சா? கண்ணை இறுக மூடிக்கிட்டு, ரெண்டு கையாலயும் மொகத்த மூடிக்கிட்டு, “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” ன்னு ஒலகம் பூரா கேக்கற மாதிரி கத்தறேன்.

“கண்ணா… என்ன ஆச்சு? இங்க பாரு”, அப்படின்னு என்னை யாரோ உலுக்கறாங்க. மொகத்த மூடின கையை எடுக்காம, “வேண்டாம் வேண்டாம்” அப்பிடின்னு இன்னும் கத்தறேன். “கண்ணா… இங்க பாரு… அம்மா வந்திருக்கேண்டா…கெட்ட கனவு கண்டியா?” சொல்லிக்கிட்டே என் கைய மெதுவா பிரிக்கிறாங்க அம்மா. “அம்மா…அம்மா…”, ன்னு அவங்களக் கட்டிக்கிட்டு தேம்பித் தேம்பி அழறேன். ஒண்ணும் புரியாத அம்மா என்னை இறுக்கி அணைச்சுக்கறாங்க.


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/darksilver/149586991/sizes/m/

Sunday, November 2, 2008

சொந்தமும் பந்தமும் நீயே முருகா !

சஷ்டி கொண்டாட்டத்தை முன்னிட்டு எங்க ஊர் கோவில்ல பாடறதுக்காக எழுதிய எளிய பஜனைப் பாடல்கள் -


(1)

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வா
செந்தில் நாதா சிங்கார வேலா செந்தமிழ்க் குமரா வா
ஆவினன் குடியில் வீற்றிருக்கின்ற அம்பிகை மைந்தா வா
அகம் மிக மகிழ்ந்து உனைப் பணிகின்றோம் அழகா முருகா வா

குமரா குமரா குமரா குமரா குமரா குமரா வா
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா கார்த்திகை பாலா வா
ஓம் எனும் ப்ரணவப் பொருள் உரைத்தவனே போற்றுகின்றோம் நீ வா
ஓயாமல் உனைத் தொழுது நின்றோமே தாமதிக்காதே வா

வேலா வேலா வேலா வேலா வேலா வேலா வா
வடிவேல் முருகா வள்ளி மணளா வணங்குகிறோம் நீ வா
சூரனை அழித்து தேவரைக் காத்த சிவனுடை பாலா வா
சொந்தமும் பந்தமும் நீயே முருகா சோதிக்காதே வா

***

(2)

அழகனே முருகனே குமரனே வாவா

ஆறுதல் தந்திட அறுமுகா வாவா

இறைஞ்சியே அழைக்கிறோம் இக்கணம் வாவா

ஈசனின் மைந்தனே சடுதியில் வாவா

உலகெலாம் போற்றிடும் உத்தமா வாவா

ஊழ்வினை நீக்கிடும் வித்தகா வாவா

எங்கும் நிறைந்தவனே இங்கு நீ வாவா

ஏறுமயில் ஏறியே என்னிடத்தில் வாவா

ஐங்கரன் சோதரா அடிபணிந்தோம் வாவா

ஒப்பில்லா மணியேநீ ஓடோடி வாவா

ஓம்காரத் தத்துவமே விரைந்தோடி வாவா

ஔடதமே அன்புருவே எமைக் காக்க வாவா


***

(3)


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

***

அனைவருக்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!

அன்புடன்
கவிநயா

Sunday, October 26, 2008

அக இருள் அகன்று ஒளி பெறட்டும்!

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!




ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!

வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து
வாகாய்க் கங்கா ஸ்நானம் செய்து
புத்தாடைகள் பல புனைந்து
பலகாரங்கள் பகிர்ந்திடுவோம்!

படபட பட்டாசு முரசொலிக்க
பளபள மத்தாப்பு ஜொலிஜொலிக்க
ஊருடன் உறவுடன் ஒன்றாகி
நானிலம் நலம்பெற வாழ்த்திடுவோம்!

அகஇருள் அகன்று ஒளி பெறட்டும்!
முகம்மிகும் அன்பால் பொலிவுறட்டும்!
தீயன யாவையும் திசைநடுங்க
தீபஒளிதனில் கருகிடட்டும்!

ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!


--கவிநயா

பி.கு. இந்தப் பாடலுக்கும், இந்தக் கண்ணன் பாடலுக்கும் எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க எங்க ஊர் தமிழ்ச் சங்கத்துக்காகப் பாடப் போறோம். ஒலிப்பதிவை அப்புறமா (நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு)வலையேத்தறேன் :)

Wednesday, October 22, 2008

நம்பிக்கையின் சிறப்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து...


இறைவனை அடைய நினைப்பவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith, என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்பிக்கை என்பது குழந்தைக்கு தாயிடம் இருப்பதைப் போல் இருக்க வேண்டும். "இவர் தான் உன் அப்பா", " இதுதான் உன் அண்ணன்", இப்படி தாய் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறது குழந்தை. அம்மா தனக்கு நல்லதுதான் செய்வாள், சொல்வாள் என்பதை கேள்வி கேட்காமல் நம்புகிறது. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வசித்தார்கள். அந்த பிள்ளை பள்ளிக்கு போவதற்கு அடர்ந்த காட்டு வழியே போக வேண்டியிருந்தது. அது அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. தன் அம்மாவிடம் சொன்னான், "அம்மா, எனக்கு காட்டு வழியே தனியே நடக்கையில் மிகவும் பயமாக இருக்கிறதம்மா", என்று.

அம்மாவும், "இனிமேல் அப்படி பயமாக இருந்தால், மதுசூதனா என்று கூப்பிடு, அவன் துணைக்கு வருவான்", என்றாள்.

மகனும், மதுசூதனன் யார் என்று கேட்டதற்கு, அவள், "அது உன் அண்ணன்", என்றாள்.

மறுநாள் அவன் காட்டு வழி நடக்கையில் ஏதேதோ சப்தங்கள் கேட்டு பயந்து கொண்டான். அப்போது அம்மா சொன்னது நினைவு வந்தது.

"மதுசூதனா... மதுசூதனா...", என்று கூப்பிட்டான். யாரும் வரவில்லை. இன்னும் பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.

"அம்மா சொன்னாளே, அண்ணன் வரவில்லையே", என்று நினைத்து, பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அழுது கொண்டே அவன் திரும்பத் திரும்பக் கூப்பிட்டதும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், வந்தே விட்டான் மதுசூதனன்!

அவனை பத்திரமாக கொண்டு போயும் சேர்த்து விட்டான். "இனி பயமாக இருக்கும் போதெல்லாம் கூப்பிடு. உடனே வருகிறேன்", என்றும் சொன்னான்.

அந்த மதுசூதனன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமே? அந்தக் குழந்தையைப் போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் நமக்கும் இறைவனிடம் வேண்டும். அதைப் போன்ற நம்பிக்கையுடன் இறைவனுக்காக ஏங்கி அழுதால், அவனால் வராமல் இருக்கவே முடியாது என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஸ்ரீ ராமன், அவனே இறையாக இருந்த போதிலும், கடலைக் கடக்க பாலம் கட்ட வேண்டியிருந்தது, ஆனால் ஆஞ்சநேயரோ, ஸ்ரீ ராமன் மேல் இருந்த நம்பிக்கை ஒன்றாலேயே கடலை ஒரே தாவில் தாண்டி விட்டார்; அவருக்கு பாலமெல்லாம் தேவைப்படவில்லை, என்று வேடிக்கையாகச் சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஒரு மனிதன் கடலைக் கடக்க வேண்டி இருந்த போது, ராம நாமத்தை ஒரு ஓலையில் எழுதி, அதை அவன் மேல்துணியில் முடிந்து, "உனக்கு வேண்டியது இதில் இருக்கிறது. தைரியமாக போ", என்று அனுப்பி வைத்தானாம் விபீஷணன். அந்த மனிதனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக நீர்மேல் நடந்து சென்றானாம். பாதி வழி போகையில், அந்த முடிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆசை வந்ததாம். அதை எடுத்து அதில் இருந்த ராம நாமத்தைப் பார்த்ததும், "இவ்வளவுதானா?" என்று நினைத்தானாம். அந்த எண்ணம் முடியும் முன்னே நீரில் முழுகி விட்டானாம்.

அதனால், குழந்தைக்கு தாயின் மேல் உள்ள நம்பிக்கை போல நமக்கு இறைவனிடம் ஏற்பட அவனிடமே இறைஞ்சுவோம்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்!


பி.கு. : பக்தியிலும் நம்பிக்கையிலும் எனக்கு மிக மிகப் பிடிச்சவர் ஆஞ்சநேயர். அதான் அவருடைய படம் இங்கே. இங்கே இருந்து எடுத்தேன். http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg

Sunday, October 19, 2008

சிறகு முளைத்த சின்னப் பூ



மது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல ‘தொப்’புன்னு ஒக்கார்றா.

“மது… மது… சாப்பிட வாடீ”, அம்மா கீழ இருந்து கொரல் குடுக்குறாங்க.

“இரும்மா.. தோ வரேன். இன்னொரு அர மணி நேரத்துல வரேன் இரு”, அம்மா கத்திக்கிட்டே இருப்பான்னு, ஒரு நேரம் சொல்லி வக்கிறா.

மண்டைக்குள்ள கசாமுசான்னு ஒரே எரைச்சல். என்னத்த பண்றதுன்னு அவளுக்கு ஒண்ணும் புரியல.

“ஸ்….ப்ஸ்…”

“ம்? …. “, சத்தங் குடுத்தது யாருன்னு சுத்தும் முத்தும் பாக்குறா.

யாரையும் காணல.

“ஏய் மது…”, இன்னும் கிசுகிசுப்பா ஆனா இப்ப அவ பேரச் சொல்லியில்ல யாரோ கூப்பிடறாங்க!

ஒண்ணும் புரியாம அவ ‘திருதிரு’ன்னு முழிக்கிறப்ப அவ காலுக்கு பக்கத்துல கெடந்த ஒரு பூ லேசா ஆடுறத பாக்குறா.

என்னடா இது அப்பிடின்னு குனிஞ்சு பாத்தா…,

“அப்பாடி… இப்பவாச்சும் ஒனக்கு என்னய பாக்கணும்னு தோணிச்சே. நாந்தான் கூப்புட்டேன்”, அப்பிடின்னு சொல்லுது அந்த பூ!

“இதென்னடா இது. எனக்கென்ன மூள கீள கொழம்பிருச்சா?” அப்பிடின்னு மதுவுக்கே சந்தேகம் வந்திருச்சு.

“ஒனக்கு மூளயெல்லாம் நல்லாதான் இருக்கு. நாந்தான் கூப்புட்டேன். கொஞ்ச நேரத்துல என் வாழ்க்க முடிஞ்சுரும். அதுக்குள்ள நான் சில விஷயம் யார்கிட்டயாச்சும் சொல்லணும். இங்க ஒன்ன விட்டா யாரும் இல்ல”, அந்த பூ ரொம்ப சோகமா சொல்லிச்சு.

அப்பதான் மது, அத ஒழுங்கா பாக்குறா. அது ஒரு அழகான செகப்பு ரோஜாப்பூ. ஆனா ரொம்ப வாடி வதங்கி போய் பாக்க பரிதாபமா இருக்கு.

“சரி சொல்லு…” சத்தமா சொல்லிட்டு அவளே சுத்து முத்தும் பாத்துக்கறா. அவளுக்கே வினோதமா இருக்கு போல. அப்புறம் கொரல தழச்சுக்கிட்டு, “சரி சொல்லு…” அப்படின்னு கிசுகிசுப்பா சொல்லுறா.

ரோஜாப்பூ ஒரு பெருமூச்சோட சொல்ல ஆரம்பிச்சது…

“நான் மொட்டு விட்டப்போ, என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க…” ன்னு ஆரம்பிக்கவும்.

“அம்மாவா?” அப்படின்னு குறுக்கிட்டா மது.

“ஆமா, நான் மொட்டு விட்ட செடிதான் எனக்கு அம்மா. இது கூட தெரியலயே ஒனக்கு?” ன்னு சொன்னது ரோஜாப்பூ. அதை ஒரு மொற மொறக்கிறா மது.

“சரி.. விடு. ஒங்கூட சண்ட போட எனக்கு தெம்பில்ல. என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்களா… அப்புறம் நான் லேசா மலர ஆரம்பிச்சதும், அவ்ளோதான்… அவங்க சந்தோஷம் எல்லை மீறிடுச்சு. அதுலயும் நான் எல்லா மொட்டையும் விட குட்டியா இருந்ததால, என் அம்மா எப்பவும் என்னைய கவனமா பாத்துக்கிட்டாங்க. நான் அதிகமா வெளிய தெரியாம, என்னைய எலைக்குள்ளயும், மத்த கெள, பூக்களுக்குள்ளயும் இருக்க மாதிரி பாத்து பாத்து வச்சுக்குவாங்க…”

“அப்படி இருக்கும்போது.. நான் மலர ஆரம்பிச்ச ரெண்டாம்நாள் எனக்கு செறகு மொளச்சிருச்சு!”

எஃபெக்டுக்காக, அந்த ரோஜாப்பூ ஒரு நொடி நிறுத்திச்சு. இல்ல, மூச்சு விடத்தான் நிறுத்திச்சோ என்னமோ.

“ஏய்! என்ன கிண்டலா?” ங்கிறா மது.

அப்புறம் இந்த பூ கிட்ட நாம பேசிக்கிட்டிருக்கோமே – அது மட்டும் என்னவாம் அப்படின்னு ஒறைக்குது அவளுக்கு.

“கிண்டலா? கிண்டல் பண்ணவெல்லாம் எனக்கு நேரம் இல்ல மது…” அப்படின்னு அந்த பூ பாவமா சொன்னதும், ரொம்ப வருத்தமா போச்சு மதுவுக்கு.

அத எடுத்து மென்மையா உள்ளங்கைல வச்சுக்கிட்டு அன்போட பாக்கிறா…”ம்… அப்புறம் என்னாச்சு?” அப்படிங்கிறா.

“என் அம்மாவுக்கு கூடதான் நம்பவே முடியல. பூவுக்காவது செறகு மொளக்கிறதாவது, அப்பிடின்னு நம்பவே இல்ல, அவங்க. நானா லேசா பறந்து காண்பிக்கிற வரைக்கும். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. எங்க நான் பறந்து போயிருவனோன்னு. அவங்க பயமும் நியாயமானதுதான். பறக்கிறது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா?”

அப்பிடியே கொஞ்ச நேரம் அந்த அனுபவத்துல மூழ்கினாப்ல மௌனமா இருந்தது ரோஜாப்பூ.

“ம்…பறக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த பிடிமானமும் இல்லாம சுதந்திரமா மெல்ல மெல்ல மேல எழும்பி பறக்கிற சுகம்… எதுலயுமே கெடக்காது. மேல போனப்புறம் கீழ இருக்கவங்கள அங்கேர்ந்து பார்க்கிற அனுபவம்…!”

அது சொல்லச் சொல்ல மதுவுக்கே பொறாமை ஆயிடுச்சு.

“சரி சரி… ரொம்ப அலட்டிக்காம சீக்கிரம் மேல சொல்லு” அப்பிடின்னு அவசரப்படுத்தறா.

“அதான் என் அம்மாவுக்கு பயம். நாம்பாட்டுக்கு எங்கயாச்சும் பறந்து தொலைஞ்சு போயிருவனோன்னு… நான் அம்மா சொல்றதயெல்லாம் கேக்கறதா இல்ல. இதோ கொஞ்ச நேரம்மா… இதோ கொஞ்ச தூரம்மா… இப்படி சொல்லி சொல்லி அந்த சுகத்த அனுபவிச்சேன். நான் பறந்து வரத பாத்து என்கிட்ட வர பட்டாம்பூச்சி, தேனீ எல்லாம், தான் பயந்து வெலகி போயிடும். அத பார்த்தா எனக்கு ஜாலியா இருக்கும். கை தட்டி சிரிப்பேன். என் அம்மா திட்டுவாங்க. இப்படி ஒன்ன தேடி வரவங்களையெல்லாம் வெரட்டறியே, கர்வம் கூடாதுன்னு…”

“ரொம்ப தூரம் போயிடாதே. காத்துல மாட்டிக்குவே. பட்டாம்பூச்சி செறக விட ஒன்னுது எளசா இருக்கு, தாங்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் தான் கேக்காம ஒரு நாள்…”

மறுபடி கொஞ்சம் மூச்சு விட நிறுத்திச்சு பூ.

“என்ன? என்ன ஆச்சு?” மதுவுக்கு ஆவல அடக்க முடியல.

“ஹ்ம்ம்… என்னத்த சொல்ல? ஒரு நாள் அதோ அங்க இருக்க மரத்த தொடப் போறேன் இன்னிக்குன்னு சொல்லிட்டு அம்மா சொல்ல சொல்ல கேக்காம பறந்தேன். கொஞ்சம் எழும்ப எழும்ப தைரியம் வந்து இன்னும் வேகமா பறக்க போனப்போ…”

“வேகமா ஒரு காத்து சொழட்டி அடிச்சது. அதுல நான் ஒண்ணுமே செய்ய முடியல. காத்தோட சேந்து போய் சுத்தியடிச்சு, கடைசீல கீழ விழுந்தேன். நான் சுதாரிக்கிறதுக்குள்ள இன்னொரு காத்து. மறுபடி இழுத்து பொரட்டி எங்கயோ போய் தள்ளி விட்டுச்சு. இப்படியே காத்துல அகப்பட்டு அகப்பட்டு, என் அம்மாவ விட்டு தொலை தூரம் வந்துட்டேன். உடம்பெல்லாம் காயப்பட்டு… சாகப் பொழக்கக் கெடந்துக்கிட்டு… இதோ ஒங்கூட பேசிக்கிட்டிருக்கேன்..” கண்ணீரை வரவைக்கிற மாதிரி உருக்கமான கொரல்ல சோகமா சொல்லி முடிச்சது ரோஜாப்பூ.

மதுவுக்கு ரோஜாப்பூ மேலதான் கோவம் கோவமா வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அப்படின்னு மது திட்டறா அதை.

அப்புறம் அவளுக்கே பாவமா இருக்கு… எரக்கத்தோட கைல இருக்க ரோஜாப்பூவை பார்த்தா…

அதை காணும்!

“மது… மது… எவ்வளவு நேரமா கூப்புடறது ஒன்னய!”, கீழ இருந்து கேக்கற அம்மா கொரல்ல லேசா கோவம் தெரியுது.

மதுவுக்கு ஒண்ணும் புரியல. இவ்ளோ நேரம் கைல ஒக்காந்து பேசிக்கிட்டிருந்த பூ எங்கே, எப்பிடி மாயமா போச்சுது?! மறுபடி கொஞ்ச நேரம் ‘திருதிரு’ன்னு முழிச்சதுக்கப்புறம்தான் புரியுது அவளுக்கு - கட்டில்ல ஒக்கார்ந்தவ அப்பிடியே அசந்துட்டிருக்கான்னு.

மறுநாள் காலைல காலெஜ்ல கூடப் படிக்கிற ஜோசஃபோட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு போக எடுத்த முடிவு, ஏதோ கனவைப் போல நெனைவு வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அவ சொன்ன வார்த்தைகள் அவளுக்கே மறுபடி கேக்குது…

செறகு மொளச்சிருச்சு, சரி… ஆனா பறக்கலாமா வேணாமான்னு இப்பதான் மொதல் மொறையா யோசிக்கிறா மது.


--கவிநயா

பி.கு. படத்துல இருக்க ரோஜா எங்க வீட்ல பூத்தது... என்னோட profile-ல இருக்கதும் அதான். அழகா இருக்குல்ல? :)

Wednesday, October 15, 2008

நெருப்பு!


நிஜம்

நிமிர்ந்து ஜொலிக்கிறது நெருப்பு!
நீண்டு வளைந்து வானத்தை
எட்டி முத்தமிடும் உத்தேசத்துடன்...

என்ன வனப்பு! என்ன கம்பீரம்!

நெற்றிக் கண்ணில் பிறந்த நெஞ்சுரமோ
சீதையையும் சிதையிலேந்திய கருவமோ
தன்பலம் தானறிந்த தைரியமோ
ஏதோ ஒன்று...

தகதகத்து நகைநகைத்து
தன்னெழிலில் தானே மயங்கி
சுற்றியுள்ள உயிர்களெல்லாம்
சூழ்ந்து நின்று பார்த்திருக்க
கண்கவரும் ஜ்வாலையுடன்
கடலலைபோல் ஆர்ப்பரித்துக்
கருத்தை மயக்கும்
கொள்ளை அழகுடன்
ஜொலிக்கிறது!

பக்கத்திலே போய்
பாசமுடன் தொடுகையில்தானே
தெரிகிறது நெருப்பின் குணம்...


--கவிநயா

Sunday, October 12, 2008

பழப் பாயசம் செய்யலாம், வாங்க !



(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள்! :)

முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொஞ்சூண்டு பால்ல இதெல்லாம் ஊற வைங்க. செய்யறதுக்கு ஒரு 2 மணி நேரம் முன்னாடியே ஊற வச்சிடுங்க. ஏன்னா பாதாம் ஊற நேரம் ஆகும். அல்லது வென்னீர்ல ஊற வச்சா 10 நிமிஷத்துல ஊறிடுமாம். (இது துளசிம்மா டிப்ஸ் - அவங்களோட மத்த டிப்ஸ்க்கு பின்னூட்டம் பாருங்க :)

இப்ப கொஞ்சம் பால் இன்னொரு கிண்ணத்துல எடுங்க. அதுல நம்ம கஸ்டர்ட் பவுடர் இருக்கில்ல? இல்லையா? அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க! நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…

ம்… வாங்கியாச்சா? இப்ப அதுல ஒரு 2 மேசைக்கரண்டி எடுத்து ஆறின பால்ல – அதான் அப்ப எடுத்து வச்சோமே, அந்த பால்ல நல்லா கரைச்சுக்கோங்க. கட்டி கிட்டியெல்லாம் இல்லாம, பவுடர் இருந்த அடையாளமே தெரியாம கரைச்சுக்கோங்க. சூடான பால்ல கரைக்க வராது. இது முக்கியம்!

மறுபடி ஒரு 2 கப் பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து அடுப்புல வச்சு நல்ல்ல்லா காய்ச்சணும். ஓ, சொல்ல மறந்துட்டேனா – முதல்ல அடுப்ப பத்த வைச்சுக்கணுங்க!

பால் காயும்போது, பாதாம் பருப்போட தோல (வலிக்காம) எடுத்துட்டு முந்திரியையும் அதையும் பாலோட சேர்த்து மிக்ஸில அரைச்சுக்கோங்க.

காஞ்சுக்கிட்டிருக்க பால்ல கஸ்டர்ட் கரைசலை மெதுவா ஊத்தணும். ஒரு கை ஊத்தும்போது இன்னொரு கை பாலை கிளறிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா கட்டி தட்டிரும்! இதை செய்யும்போது அடுப்பைக் குறைச்சு வச்சுக்கோங்க. கலக்க கலக்க கொஞ்சம் கெட்டியா ஆகும் பாலு. இதுதான் நிஜமாவே கொஞ்சம் கவனமா செய்ய வேண்டிய வேலை.

பாயசம் கெட்டியா வேணும்னா அதுக்குத் தகுந்தாப்ல கஸ்டர்ட் பவுடரை சேத்துக்கலாம் – தண்ணியா வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனா ஆறினப்புறம் இன்னும் கெட்டிப்படும். அதனால பார்த்துக்கோங்க!

அப்புறம் கண்டென்ஸ்ட் மில்க் – அதாங்க, நம்ம ஊர்ல மில்க்மெய்ட்னு சொல்வோமே, அது, அரைச்ச பருப்பு விழுது, சில சொட்டுகள் வென்னிலா எசென்ஸ், ஏலக்காய் தூள், எல்லாத்தையும் பால்ல சேருங்க. நல்லா கலக்குங்க!

கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கிறது, இனிப்புக்காகத்தான். அது இல்லைன்னா வெள்ளை சீனி சேர்த்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ அது சேர்த்தாதான் கொஞ்சம் flavor, consistency, எல்லாம் நல்லாருக்குன்னு தோணும்.

இதோட அடுப்புக்கு வேலை முடிஞ்சிருச்சு. அடுப்பை அணைச்சு, பாயசத்தை எறக்கி வச்சு, நல்லா ஆற வச்சு, குளிர்பதனப் பொட்டில வைங்க.

பழப்பாயசம் பாக்கவும் அழகா இருக்கணும்னா பல வண்ணங்கள்ல பழங்கள் வாங்கி சேருங்க. ஆப்பிள், மாம்பழம் (ரொம்ப கனியாம கொஞ்சம் காய்வெட்டா இருக்கணும்), கருந்திராட்சை, செர்ரி, அன்னாசி, சாத்துக்குடி, இந்த பழமெல்லாம் சேர்க்கலாம். இன்ன பழம்தான் சேர்க்கணும்னு விதிமுறையெல்லாம் இல்லை. நல்லாருக்கும்னா சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் அழகா நறுக்கி அதையும் குளிர்பெட்டில வைங்க.

நல்லா குளுகுளுன்னு ஆனதுக்கப்புறம் பரிமாறுறதுக்கு முன்னாடி ஜிலுஜிலு பாயசத்துல வகைவகையா பழங்களை போட்டு அழகழகா எல்லாருக்கும் குடுங்க! நீங்களும் மறக்காம சாப்பிடுங்க!!

இந்த கஸ்டர்டையே கொஞ்சம் கெட்டியா ஐஸ்க்ரீம் பதத்துக்கு செய்து அதுல பழங்கள் போட்டும் குடுக்கலாம். அதுக்கு பேரு பழ சாலட் (fruit salad)!!

தேவையானதை மறுபடி ஒரு தரம் தொகுத்து சொல்லிர்றேன்:

பால் – 2.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் – 1 சின்ன can
கஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
வென்னிலா எசென்ஸ் – சில சொட்டுகள்
பழங்கள் – விருப்பப்படி

செய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!


--கவிநயா

Thursday, October 9, 2008

எங்க ஊரு கொலு !


நவராத்ரி சிறப்புப் பதிவு. கொலு படங்களைத் தந்துதவிய எங்கள் ரிச்மண்ட் மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

கொலு பார்த்த பின் மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போங்க!



பார்கவி வீட்டு கொலு


புவனா வீட்டு கொலு



சித்ரா வீட்டு கொலு




லக்ஷ்மி வீட்டு கொலு



மீனா வீட்டு கொலு



மாலதி வீட்டு கொலு



பிரசாதம் - பழப் பாயசம்


எங்கூரு கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி!

இது வரை வந்த நவராத்ரி இடுகைகளை படிக்காதவங்க, இங்கு வந்து துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்களின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கறேன்!

இத்துடன் இந்த வருட நவராத்ரி சிறப்பு இடுகைகள் நிறைவு பெறுகின்றன!

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

Sunday, October 5, 2008

நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. கலைமகளின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!



நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்!
நாமணக்க பாடுகின்றேன் நாரணியே மனம்கனிவாய்!

நாதவடி வானவளே ஐந்தவியே அலர்மகளே
பாதமலர் பணிந்துன்னை பாடுகின்றேன் கலைமகளே
சீதள மதி முகத்தை சிந்தையிலே நிறுத்துகின்றேன்
பூதலத்தை ஆளுகின்ற பூவை உன்னை போற்றுகின்றேன்!

வேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே
பேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே
பக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே!

ஞானவடி வானவளே பாமகளே பைரவியே
வானவரும் தானவரும் வணங்கிடும் வசுந்தரியே
கானமழை பொழிந்துன்னை காலமெல்லாம் போற்றிடவே
ஞாலமெல்லாம் விளங்குகின்ற நாயகியே அருள்வாயே!


--கவிநயா



ஹைலஜா அக்கா இந்த பாடலை பாடித் தந்திருக்காங்க. கேட்டு கருத்து சொல்லுங்க. ஷையக்காவிற்கு நன்றிகள் பல.

Saraswathi_song.wa...

Thursday, October 2, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. ஸ்ரீலக்ஷ்மி தேவி அவள் பதங்கள் சரணம் !




தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/murtis/lakshmi.jpg

Tuesday, September 30, 2008

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

நவராத்திரி சிறப்பு பதிவு. துர்க்கை அம்மாவை நல்லா வணங்கிக்கோங்க!


வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg

Sunday, September 28, 2008

மீனாட்சி அம்மன் தாலாட்டு

தாலாட்டு பாடி ரொம்ப நாளாச்சுல்ல? அதான் நவராத்திரியும் அதுவுமா மீனாட்சி அம்மன் தாலாட்டு... :))) அம்மா படத்தை அவசியம் க்ளிக்கிப் பாருங்க.

இதுவரை பாடின மற்ற தாலாட்டெல்லாம் இங்கே .




ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆரிரரோ
பொழுது மினுமினுங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் பூக்கடையும் ஜோதி மின்ன
ஜரிகை தளதளங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் சந்நிதியும் ஜோதி மின்ன
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே கண்ணுறங்கு

கொத்தனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் குமரி விளக்குகளாம்
தச்சனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் சக்தி விளக்குகளாம்

கோபுரத்தின் கீழிறங்கி மீனாட்சி
குழந்தை வரம் தந்தாளோ
பக்கத்து முத்தெடுத்து மீனாட்சி அம்மன்
பத்திரமாய் உன்னைத் தந்தாளோ

மாவிளக்கு கொண்டு மதிலோரம் போகையிலே
மாவிளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மணிவிளக்காய்த் தந்தாளோ
காணிக்கை கொண்டு கடைத்தெருவில் போகையிலே
காணிக்கையை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மாணிக்கமாய்த் தந்தாளோ

நெய்விளக்கு கொண்டு நெடுந் தெருவிற் போகையிலே
நெய் விளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை நிறை விளக்காய்த் தந்தாளோ
நீதி நிலவிளக்கோ என் கண்ணே
மீனாட்சி அம்மன் நிச்சயமாய்த் தந்த கண்ணோ
கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே!

***

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி வாழ்த்துகள்!

--கவிநயா

Sunday, September 21, 2008

தகுதி


வீறிட்டு அழுத குழந்தையின் குரல் கேட்டு தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள், கவிதா. மூன்று வயதிருக்கும். கண்ணீர் வழிய, சுற்றும் முற்றும் பார்த்தபடி அழுது கொண்டிருந்தது. கூட வந்த அம்மாவையோ, அப்பாவையோ தேடுகிறது போலும். குழந்தைகள் அழுதால் அவளால் தாங்கவே முடியாது. ஓடிச் சென்று அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது, அவளுக்கு. சின்னக் குழந்தையை அழ விட்டு மறைந்து விட்ட, முகம் தெரியாத அதன் பெற்றோரை மனதுக்குள் திட்டி முடிக்கும் முன், இரண்டடி தள்ளி குழந்தைகள் துணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நிறை மாத கர்ப்பிணி ஒருத்தி, "என்னம்மா கண்ணா. அம்மா இங்கதான் இருக்கேன் பாரு", என்று சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள். சற்றே நிம்மதியுடன், மறுபடியும் தான் பார்த்துக் கொண்டிருந்த சட்டையை நோக்கி கவனத்தைத் திருப்பினாள். அவள் தோழி சாந்திக்கு, இரண்டு நாள் முன்னால்தான் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருந்தது. முதல் இரண்டும் பையன்கள். பெண்ணுக்கு மிகவும் ஆசைப்பட்ட கணவனும் மனைவியும், அவர்கள் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள். அவள் கை தன்னிச்சையாகத் தன் வயிற்றுக்குச் சென்றது. ஐந்து வாரங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளாக இப்போதே எண்ண ஆரம்பித்து விட்டாள். இன்னும் இரண்டு நாளில் குழந்தைக்குப் பெயரும் வைத்து விடுவாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது, "இம் முறையேனும்..." என்ற நம்பிக்கையில்.

திருமணமாகி பத்து வருடங்கள் ஆகி விட்டன. அவள் மாமியார் சொல்வது போல அவள் வயிற்றில் இன்னும் ஒரு புழு, பூச்சியும் உண்டாகவில்லை. நான்கு வருடங்கள் வரை ஒரு கவலையும் இல்லை. ஐந்து வருடங்கள் ஆன பின், "என்னம்மா, அனுபவிச்சது பத்தாதா? எப்ப எனக்கு ஒரு பேரனைப் பெத்துத் தரப் போற?" என்று அம்மாவும், அப்பாவுமே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகு அவளுக்கே கவலை வந்து விட்டது. எத்தனை நாளுக்குத்தான் மற்றவர் குழந்தைகளையே கொஞ்சிக் கொண்டிருக்க முடியும்? அவள் கணவன் ராமும், அவளும் மருத்துவர்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். சின்னச் சின்னதாக ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தது. இது வரை எந்தப் பலனும் இல்லை. குழந்தைகளுடன் யாரைப் பார்த்தாலும் பொறாமையாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் பார்த்தால் ஏக்கமாக இருந்தது. இரண்டு நாள் தள்ளிப் போனாலும் சந்தோஷமாகி, கனவுகளை வளர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது. அதே போல நம்பிக்கை சிதைந்த பின், ஏங்கி அழுவதும் வாடிக்கையானது. பொது இடங்களுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ போவதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். ராமுக்கு அவள் போக்கு கவலையை அளித்தது. அதனால்தான், சாந்திக்குக் குழந்தை பிறந்த செய்தி வந்த பின் அவளை வற்புறுத்தி வெளியே அழைத்து வந்திருக்கிறான்.

மறு நாள் இருவரும் சாந்தியையும் அவள் குழந்தையையும் பார்க்கச் சென்றார்கள். ரோஜாக் குவியல் போல் இருந்த குழந்தையைக் கைகளில் ஏந்தியதும், பரவசமாக உணர்ந்தாள், கவிதா. ஆனால் அந்தக் குவியல் தனதில்லை என்ற எண்ணம் வந்ததும் சோகம் கனமாக மனசை அழுத்தியது. கிளம்ப வேண்டும் என்று கணவனிடம் சைகையில் உணர்த்தினாள்.

போகும் வழியில் கடற்கரையில் காரை நிறுத்தினான், ராம். அதே மன நிலையுடன் வீட்டுக்குச் செல்ல இருவருக்குமே இஷ்டமில்லை. மணற் பரப்பை நோக்கி இருவரும் மெதுவாக நடந்தார்கள்.

"ராம்"

"ம்"

"அந்தக் குழந்தையைப் பாத்தீங்களா, எவ்வளவு அழகு!"

"....."

"நமக்கு அந்தப் பாக்கியமே இல்லாமப் போயிடுமோன்னு பயம்மா இருக்கு, ராம்"

"இல்லன்னா என்ன? எனக்கு நீ குழந்தை; உனக்கு நான் குழந்தை", பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும் சொன்னான், ராம்.

"என்னால அப்படி ஈஸியா எடுத்துக்க முடியலயே", குரல் தடுமாறியது, கவிதாவுக்கு.

ஆதரவுடன், அவள் கையை எடுத்துத் தன் கையில் கோர்த்துக் கொண்டான், ராம். மெரீனா "ஜே, ஜே", என்று இருந்தது. கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடி இருவரும் அமர்ந்து கொண்டனர்.

"கவி, நமக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு? 40 வயசுல குழந்தை பெத்துக்கிட்டவங்கல்லாம் இருக்காங்க."

கவிதாவுக்கு 32 வயது. ராம் அவளை விட இரண்டு வயது பெரியவன்.

"என்னால அவ்வளவு நாள் காத்திருக்க முடியும்னு தோணல"

ராம் அவளைத் தோளுடன் அணைத்துக் கொண்டான். "அப்படியே இல்லன்னாலும், எவ்வளவோ அனாதைக் குழந்தைங்க ஆதரவில்லாம இருக்காங்களே, அவங்களத் தத்தெடுத்துக்கலாமே. அதப் பத்தி யோசிச்சயா?"

"ராம், எனக்கு என்ன தோணுது, தெரியுமா? எனக்கு நல்ல அம்மாவா இருக்கிற தகுதி இல்லயோன்னு தோணுது. அதனாலதான் கடவுள் எனக்கு அம்மாவாகிற பாக்கியத்தைக் குடுக்கலயோ, என்னவோ?"

"கவி, என்ன சின்னக் குழந்தை மாதிரிப் பேசற? இந்த மாதிரியான நெனப்பெல்லாம் உனக்கு எங்கேருந்து வருது? அப்படிப் பாத்தா, இந்த உலகத்துல குழந்தை பெத்துக்கிற பெண்களெல்லாம் அம்மாவாக ரொம்பத் தகுதியானவங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? டீனேஜ்ல தெரியாத்தனமா தப்பு செஞ்சுட்டு புள்ள பெத்துக்கிறவங்கள்ல இருந்து, பொண்ணாப் பொறந்துடுச்சேன்னு அதக் கொலையே பண்றவங்க வரைக்கும் இந்த உலகத்துல பல விதமான அம்மாக்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சுமா இப்படிப் பேசற?"

அவன் சொல்வதிலிருந்த நியாயம் உறைத்தது, கவிதாவிற்கு.

"அதோட உன்ன ஒரு முறை பார்த்தவங்க கூடச் சொல்ல மாட்டாங்க, உனக்குப் போய் அம்மாவாகிற தகுதி இல்லன்னு"

"அதுக்கில்லை, ராம். நான் முந்தி எங்கயோ படிச்சிருக்கேன். இன்பமோ, துன்பமோ, எந்த விஷயமா இருந்தாலும் இறைவன் நம்மால சமாளிக்க முடியற அளவுதான் கொடுப்பாருன்னு. அதப் பத்தி யோசிச்சப்போதான் எனக்கு இந்த மாதிரி தோணுச்சு"

"கவி, கண்டதையும் நெனச்சு மனசக் குழப்பிட்டிருக்க. அந்தக் கருத்துப்படியே பார்த்தாலும், நீ அதுக்கு அர்த்தம் செய்துகிட்ட முறை தப்பு"

"வேற என்ன அர்த்தம் இருக்க முடியும், அதுக்கு?"

"எல்லாப் பெற்றோர்களுக்கும், தங்கள் சொந்தக் குழந்தைங்க மேல அன்பு செலுத்தறது ரொம்ப சுலபம். அதுவே யாரோ பெத்த குழந்தைங்க மேல வருமா? ஆனா உன்கிட்ட அந்த அளவு அன்பு இருக்கு, கவி. இந்த உலகத்துக்கு தர்றதுக்கு உன்கிட்ட அன்பு, பண்பு, பாசம், நேசம், அறிவுன்னு எவ்வளவோ இருக்கு. எல்லாத்துக்கும் மேலா, உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன். அதனால கூட கடவுள் உனக்குன்னு ஒரு குழந்தையைக் கொடுக்காம இருக்காரோன்னு சொல்லலாம், இல்லயா?"

இனிமையான சங்கீதம் போல் கணவன் பேசுவதைக் கேட்டபடி, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்ட கவிதாவின் மனசு, இப்போது தெளிவாய் இருந்தது.

-- கவிநயா

இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/wtlphotos/2357618089/sizes/m
/

Monday, September 15, 2008

இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?

பெரிய பெரிய செய்திகளையும் தத்துவங்களையும் மிக எளிமையான குட்டிக் கதைகள் மூலம் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கி விடுதல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தனிச் சிறப்பு. "Gospel of Sri Ramakrishna" புத்தகத்தினின்றும் அப்படிப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் இதனை எழுதுகிறேன். ஏற்கனவே குரங்குக்குட்டி பூனைக்குட்டி கதையைப் பார்த்திருக்கிறோம்... இப்போது இந்த உலகத்தில் வாழும் முறை பற்றி அவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்...


நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும்; அதே சமயம் இறைவனிடம் இதயத்தைப் பதிக்கவும் வேண்டும். அன்னை, தந்தை, மனைவி, மக்கள், என்று அனைவருடனும் வாழலாம். அவர்களிடம் அபரிமிதமான அன்பு செலுத்தும் அதே சமயம், அவர்கள் நமக்குரியவர்கள் அல்ல என்பதையும் உணர்வது அவசியம்.

ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தர் இருக்கிறார். அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவளும் அவர் குடும்பத்தையும் பிள்ளைகளையும் தன்னுடையவர்கள் போல மிகவும் அன்புடனும் கவனத்துடனும் கவனித்துக் கொள்கிறாள். அவர் இல்லத்தையும் தன்னுடையதாய் பாவித்து சுத்தம் செய்து அழகு படுத்தி, கவனித்துக் கொள்கிறாள். இத்தனையும் அவள் உண்மையான அன்புடன் செய்கின்ற போதிலும், அவள் தன் உள்மனதில் அந்த வீடும் குடும்பமும் பிள்ளைகளும் தனக்குச் சொந்தமில்லை என்று அறிந்திருக்கிறாள். அவள் உடல் இங்கே இருந்தாலும் அவளுடைய எண்ணங்கள் அவளுடைய சொந்த ஊரிலும் அவள் சொந்த பிள்ளைகளிடமுமே இருக்கின்றன.

அந்த பெண்மணியைப் போலத்தான் நாமும் இந்த உலகத்தில் வாழ வேண்டும். நாம் இங்கு வாழ்ந்தாலும், இங்கிருப்பவைகள் எதுவும் நமக்கு சொந்தமில்லை, அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்.

***

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.