Showing posts with label வரலக்ஷ்மி. Show all posts
Showing posts with label வரலக்ஷ்மி. Show all posts

Saturday, August 29, 2015

ஸ்ரீலக்ஷ்மி

ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துகள்!
செந்தாமரைப் பூவில் செஞ்சூரியன் போல
சிரிக்கின்ற ஸ்ரீதேவியே!
கண் தாமரை கொண்டு கார்மேக மேனியனைக்
கவர்கின்ற ஸ்ரீகாந்தையே!

பாருலகம் காக்கின்ற பாற்கடல் மாதவனின்
மார்புறையும் ஸ்ரீபத்மையே!
ஓர்நெல்லிக் கனிக்காகப் பொற்கனிகளைப் பொழிந்த
கருணைமிகு ஸ்ரீகமலையே!

ஒட்டிய தலை ஓட்டில் பிச்சையிட்டு சிவனைக்
காத்திட்ட ஸ்ரீபுத்தயே!
கட்டிய மன்னவனைக் கணமும் அகலாமலே
களிக்கின்ற ஸ்ரீசித்தயே!

ஓரெட்டு வடிவங்கள் கொண்டிந்த உலகிற்கு
ஒளியூட்டும் ஸ்ரீஸத்யையே!
ஈரெட்டு செல்வங்கள் ஈந்திடும் தேவியே
எமைக் காக்கும் ஸ்ரீலக்ஷ்மியே!



--கவிநயா

(ஒரு நாள் தாமதம். ஆனா அவ ஒண்ணும் சொல்ல மாட்டான்னு நம்பிக்கை)


Thursday, August 15, 2013

தாமரை மலர் மேலே...

அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடிப் பரவசமடைந்திருப்பதை நீங்களும் கேட்டு ஆனந்தியுங்கள்!


தாமரை மலர்மேலே தானொரு மலர்போலே
திகழ்ந்திடும் திருத்தேவியே!
மாதவன் மணி மார்பில் மங்கையுன் திருக்கோலம்
கொண்டதோர் எழிற்காட்சியே!

செல்வத்துக் கதிபதி நீயென்பார், எனக்கு
செல்வத்தைத் தாராயோ?
பக்தி செல்வத்தைத் தாராயோ?
அழகின் திருவுருவம் நீயென்பார், எனக்கு
அழகினைத் தாராயோ?
அழகு மனதினைத் தாராயோ?

வரலக்ஷ்மி தேவியே வரமருள் ராணியே
வந்தருள் திருத்தேவியே!
சிரமுன்றன் பதம்வைத்தேன் சிந்தையுள் உனைவைத்தேன்
திசையெங்கும் எழிற்காட்சியே!

தாமரைக் கரங்களில் தாமரைகள் தவழ…
பூவெழில் வதனத்தில் புன்னகையோ மலர…
கார்முகில் கருவிழிகள் கருணைமழை பொழிய…
கடைவிழிப் பார்வையிலே கர்மவினை கழிய!


--கவிநயா

Thursday, July 26, 2012

வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா அருமையாக சஹானா ராகத்தில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! கேட்டுக் கொண்டதும் பாடித் தந்தமைக்கு மிக மிக நன்றி தாத்தா!


வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!
தரவேண்டும் தரவேண்டும் வரம் லக்ஷ்மி நீயே!

அஷ்ட லக்ஷ்மியாகி அருள்கின்ற தாயே!
அஷ்ட ஐஸ்வர்யங்களின் அதிபதி நீயே!
கஷ்டங்களைப் போக்கி காத்திடும் தாயே!
இஷ்டங்களைத் தந்து இன்பம் அளிப்பாய் நீயே!!

(வரவேண்டும்)

திருமாலின் திருமார்பில் திகழ்கின்ற தாயே!
தமிழ்மாலை உனக்காக, ஏற்பாயே நீயே!
ஒருமனதாகி உன்னைத் தொழுபவர்க்கே தாயே!
திருவாகி வளம்யாவும் அளிப்பாயே நீயே!!


--கவிநயா


Thursday, August 11, 2011

வரலக்ஷ்மி தேவி!

வரலக்ஷ்மி விரத சிறப்புப் பதிவு.



லலிதாம்மா மூலமாக அறிமுகமான கலா அவர்கள் இந்தப் பாடலை தன் மிக இனிமையான குரலில் பாடித் தந்திருக்காங்க. கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி கலா, மற்றும் லலிதாம்மா!

வரலக்ஷ்மி தேவி வரவேண்டும் அம்மா!
வேண்டும் வரம் அத்தனையும் தர வேண்டும் அம்மா
(வரலக்ஷ்மி தேவி)

மறைக ளெல்லாம் போற்ற அலைகடலில் உதித்தாய்
மரகத வண்ணனை மன்னவனாய் வரித்தாய்!
(வரலக்ஷ்மி தேவி)

மாலவன் மார்பினிலே மணியெனவே ஒளிர்வாய்
தாளிணைகள் பணிகின்றோம் தயக்கமின்றி அருள்வாய்
கோல எழில் தாமரையில் கொஞ்சும் வடிவுடனே
கோலம் கொண்ட திருமகளே தஞ்சம், அருள் தருவாய்!
(வரலக்ஷ்மி தேவி)

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/search/label/Goddess%20Lakshmi%20Images

Friday, August 20, 2010

வருவாய் வருவாய் வரலக்ஷ்மி!

அனைவருக்கும் வரலக்ஷ்மி நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்.




வருவாய் வருவாய் வரலக்ஷ்மி
தருவாய் தருவாய் வரம் லக்ஷ்மி

ஆழியில் அலைகளில் உதித்தவளே - எங்கள்
ஊழ்வினை அழித்து காப்பவளே
செல்வங்கள் அனைத்துக்கும் அரசியளே – உன்னை
சொல்கொண்டு பாடிட மகிழ்பவளே

எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!


--கவிநயா

Thursday, July 30, 2009

வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி !


வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!

(வரம்)

ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!

தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!

பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!

வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!

(வரம்)

எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!

வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!

எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!

மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!

அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!

உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!

(வரம்)


--கவிநயா