Thursday, May 20, 2010

அனுமந்தா அனுமந்தா...!


அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!

ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!

கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!

புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!

கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!

நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!


--கவிநயா

Thursday, May 6, 2010

ஒற்றைக் கொலுசும், ராஜகுமாரனும்

“டம டம டம டம டம…..”

“இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில், இளவரசி சுந்தரி அணிந்திருந்த கால் கொலுசுகளில் ஒன்று தவறிப் போய் விட்டது. அதனைக் கண்டு பிடித்துக் கொண்டு வருபவரையே இளவரசி தன்னுடைய மணாளனாக ஏற்றுக் கொள்ளுவார்….”

“டம டம டம டம டம…..”

இப்படி ஒரு அறிவிப்பு குடுத்தா எப்படி இருக்கும், அப்படின்னு சிந்தனை ஓடுது, சுந்தரிக்கு. சின்னப் புள்ளையில இருந்தே அவளுக்கு சிண்டரெல்லா கதைன்னா ரொம்பப் புடிக்கும். அதுதான் இப்படி கற்பனை தறிகெட்டு ஓடக் காரணம். இன்னொரு காரணமும் இருக்கு…

அவளோட கொலுசைக் காணும்!

அதுவும் எப்பேற்பட்ட கொலுசு? அவ அம்மா அவளுக்காக ஆசை ஆசையா குடுத்தது. குடுத்துட்டு அவளும் போய் வேற சேர்ந்துட்டா. இனிமே பார்க்கவே முடியாதவங்க குடுக்கிற பொருளுக்கெல்லாம் மதிப்பு அதிகம் தானே.

சிண்டரெல்லாவுக்கு மாதிரிதான் சுந்தரிக்கும் பொல்லாத சித்தி ஒருத்தி இருக்கா. கிட்டத்தட்ட இவ கதையும் அதே மாதிரித்தான். அதனால தான் தன்னையும் ஒரு ராஜகுமாரன் வந்து அலாக்கா தூக்கிட்டு போயிர மாட்டானான்னு உள்ளூர ஒரு ஏக்கம் இவளுக்கு, எப்பவும். இப்ப இருக்கிற நிலைமையில அவளே வேலைக்கு போயி, அவளே பணம் சேர்த்துதான் கல்யாணம் பண்ணிக்கணும் போல.

குருட்டு யோசனை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிருந்தாலும், காலும் ஒரு எடத்திலயும் நிக்கல. கடலோரமா நடந்து நடந்து பார்வையால மணலை அரிச்சிக்கிட்டேதான் இருக்கா, கொலுசுக்காக.

ஹும்… அப்படியே பணம் சேர்த்தா மட்டும் என்ன, மாப்பிள்ளை கூட அவளேதான் பார்த்துக்கணும் போல. அதுதான் அங்கே பரிதாபம். அப்பாவால ஒண்ணும் முடியாது. படுத்த படுக்கையா ஆயிட்டார். சித்தியை மீறி ஒண்ணும் பண்ண முடியாது அவரால.

இன்னிக்கு என்னமோ மனசே சரியில்லை. அதனால ஆபீசுல இருந்து சீக்கிரம் கெளம்பி, கடற்கரைக்கு வந்தா, அது இப்ப தப்பாப் போச்சே. கொலுசு இல்லாம வீட்டுக்கு போறதை நினைச்சே பார்க்க முடியல, அவளால.

“ஹலோ…. ரொம்ப நேரமா என்னமோ தேடறீங்க போல. இதையா?”

கொரல் கேட்டு ‘டக்’குன்னு திரும்பறா. அங்கே இவ கற்பனையில் வர்ற ராஜகுமாரன் போலவே…

“அடச்சீ, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறாப்ல இருக்கு. முழிச்சுக்கோடீ”, அப்படின்னு திட்டுது, மனசு.

நீட்டின அவன் கையில் இவளோட இன்னொரு கொலுசு. அவனுக்கு நிரூபிக்கணும்னு நெனச்சோ என்னமோ, கணுக்கால் அளவு சேலையை இலேசா ஒசத்தி, இன்னொரு கொலுசை காட்டறா. அல்லது இவளே சரி பாத்துக்கறாளோ?

“ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலங்க. இந்த கொலுசு எனக்கு எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா”, சொல்லிக்கிட்டே கொலுசை வாங்கிக்கறா.

“அப்படியா. எவ்ளோ ஸ்பெஷல்? சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கறேன்”, குறும்பா வரிசைப் பல் தெரிய சிரிக்கிறான், அவன்.

குனிஞ்சு கொலுசை மாட்டிக்கிட்டிருந்தவ, ஓரக் கண்ணால அவனோட சிரிப்பை ரசிக்கிறா.

“இவன்தான் என் ராஜகுமாரனா அம்மா?”, கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.

கொலுசும் சந்தோஷத்தில் ஜல்ஜல்க்குது…


--கவிநயா