Showing posts with label கணபதி. Show all posts
Showing posts with label கணபதி. Show all posts

Sunday, September 4, 2016

முக்கண்ணன் முதல் மகன் முன்னின்று காக்கட்டும்!


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்!
சுப்பு தாத்தாவின் உற்சாகாமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!





ஆனை முக நாயகனே! ஆதிசக்தி பாலகனே!
ஐந்து கரம் கொண்டவனே! ஆறுமுகன் சோதரனே!
பெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே!
சிற்றம்பலத்தானின் செல்வப் புதல்வனே!

ஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித் திகழ்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால் வழி காட்டி உதவிடுவாய்!
பழி யேதும் வாராமல் விழியிமை போல் காத்திடுவாய்!

அருகம் புல் மாலைக்கும் அன்புக்கும் வசப்படுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
மூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து அருளிடுவாய்!
மோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை விரட்டிடுவாய்!

ஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம் ஓடிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
அஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து விடும்!
நம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை காத்து விடும்!


--கவிநயா

 

Thursday, August 28, 2014

ஓம் கணநாதா கஜானனா!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!




ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா
எந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா
வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

பாலும் தேனும் பாகும் பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா
பாகாய்க் கனியும் அன்பை அதிலே கலந்து தந்தோமே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மோதகத்துள்ளே பூரணம் வைத்துச் செய்து வந்தோமே கஜானனா
மோகங்கள் களைந்தெமைப் பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அருகம்புல் கூட அற்புதம் என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா
குறுகி உனைப் பணிந்து கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மூஷிகந்தன்னை வாகனமாக விரும்பி ஏற்றவனே கஜானனா
மூச்சுக் காற்றாலே உடலத்தைச் சுமக்க உதவி செய்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கள்ளங் கபடமற்ற பிள்ளைகள் விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா
வெள்ளை உள்ளங்களை விரும்பி அதிலே குடிபுகுவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கஜமுகங் கொண்டு கருணை பொழியும் கனிமுகத்தோனே கஜானனா
பஜனைகள் செய்துனைப் போற்றிப் பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா


--கவிநயா



Tuesday, December 31, 2013

அந்தப் பிள்ளை யாரு??

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

வந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி
வரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு?
கந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்
சொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

ஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு
ஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு?
பானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்
பத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன
மூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு?
மஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன
மகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல
அழகான தந்தமுள்ள பிள்ளை யாரு?
மாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி
வேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு
வஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு?
பிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம
நெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

எதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்
தடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு?
அன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்
பணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு!

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!


--கவிநயா

படத்திற்கு நன்றி...
 
 

Sunday, September 8, 2013

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.

தமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க!) மன்னித்தருள வேண்டும்.

வட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்!


ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்


முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்


உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!


அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்


ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!


மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!



--கவிநயா 

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.


பொருள் உதவிக்கு நன்றி: http://visvacomplex.com/ganesa_pancharathnam.html


Tuesday, September 18, 2012

கணபதி தாள்கள் போற்றி!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
நம்பிக்கை வைத்தோரைத் தும்பிக்கையான் காப்பான்.




கற்பகக் கணபதி பாடலை அற்புதமாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல! நீங்களும் கேட்டு, பாடி, விக்ன விநாயகனின் அருளைப் பெறுங்கள்!


பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!

சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன் சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!

சுழி போட்டுத் தொடங்கி விட்டால் தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!

மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக் காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!

அகத்தியருக் கருள்செய்த அத்திமுக நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!

வியாசருக் கருளிடவே ஒருதந்தம் உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!

கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள் களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!

நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம் தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!

--கவிநயா

நன்றி: வல்லமை