Tuesday, December 31, 2013

அந்தப் பிள்ளை யாரு??

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

வந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி
வரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு?
கந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்
சொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

ஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு
ஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு?
பானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்
பத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன
மூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு?
மஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன
மகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல
அழகான தந்தமுள்ள பிள்ளை யாரு?
மாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி
வேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு
வஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு?
பிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம
நெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

எதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்
தடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு?
அன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்
பணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு!

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!


--கவிநயா

படத்திற்கு நன்றி...
 
 

Monday, November 18, 2013

ஆதிசிவன் நாயகியோ அற்புதமோ கற்பகமோ?


சுப்பு தாத்தாவின் இயக்கிய குறும் படத்தைக் கண்டு/கேட்டுக் களியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு

வானோடு வெண்ணிலவு
வட்டமிட்டு விளையாட
தேனூறுந் தமிழெடுத்து
தாலாட்டு நான் பாட

மீனாடும் விழியாளே
மெல்ல மெல்லக் கண்ணுறங்கு
வான் மீன்கள் வியந்திருக்க
வண்ண மலரே யுறங்கு

சூரியனும் உறங்குதடி
சொக்கத் தங்கமே யுறங்கு
சோலை மலர் உறங்குதடி
சொர்ணமே நீயுறங்கு

தாமரை மல ருறங்க
தங்க மலரே யுறங்கு
தத்தி வருந் தென்றல் வந்து
தாலாட்ட  கண்ணுறங்கு

ஆடும் மயிலுறங்க
பாடுங்குயில் தானுறங்க
கூடுகளில் குருவியெல்லாம்
குடும்பத் தோடுறங்க

கானகத்து உயிர்களெல்லாம்
கண்ணயர்ந்து தானுறங்க
என்னகத்தை ஆள வந்த
இன்னுயிரே கண்ணுறங்கு

ஆதிசிவன் நாயகியோ
அற்புதமோ கற்பகமோ
பாதி சிவன் விட்டு எந்தன்
பக்கம் வந்த பொக்கிஷமோ

மாதா சக்தி இந்தப்
பேதையிடம் வந்தாளோ
நான் பாடுந் தமிழ் கேட்க
என் மடிக்கு வந்தாளோ

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://vadakovaiouraan.blogspot.com/2013/08/blog-post_28.html

Sunday, October 27, 2013

How to let go?


ஒரு துயரமோ, பிரச்சனையோ வரும்போது அதை இறைவனிடம் விட்டுடு, அவன் பார்த்துப்பான் அப்படின்னு பலரும் ஆறுதல் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. ஆனா அப்படின்னா என்ன? அதை எப்படிச் செய்யறது? அது தெரிஞ்சாதானே செய்ய முடியும்? பல பெரியவங்க சொல்றதையும்படிக்கிறதில், அது எப்படின்னு இப்பதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சிருக்கு.


நமக்கு ஒரு கணக்கு சரியா வரலை; எங்கேயோ உதைக்குது. அல்லது அலுவலக வேலையில் ஒரு விஷயம் எப்படி செய்யறதுன்னு தெரியலை. கேட்கவும் ஆளில்லை; நாமளேதான் கண்டு பிடிச்சாகணும். இந்த மாதிரி சமயத்தில் பொதுவா நாம செய்யறது என்ன? அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும்! ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும்! எப்படி இந்தக் கோணத்திலிருந்து யோசிக்காம விட்டோம்னு தோணும். “யுரேகா” ஞாபகம் இருக்கா!

நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போதும் அதே தவறைத்தான் செய்யறோம். அதை மனசுக்குள் போட்டு, புரட்டி எடுத்து, அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற  அளவு ஏதேதோ கோணங்களில் அதைப்பற்றி நினைக்கிறோம், கவலைப் படறோம். அந்த உணர்வுகள் ஏற்படுத்தற தாக்கத்தோடேயே, கோபத்தோடேயே, வருத்தத்தோடேயே, சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்துக்கறோம். ஆனா அது பிரச்சனையை சரி பண்ணாம, மேலும் எதிர் விளைவுகளைத்தான் தருது. புதை குழி மாதிரி நம்மை இன்னும் இன்னும் உள்ளே இழுத்துக்குது.

கார்லயோ, பைக்லயோ பிரச்சனை வந்தா என்ன செய்யறோம்? நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு  நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா? அப்படில்லாம் செய்தா, நீயே பாத்துக்கய்யான்னு சொல்லிட்டு அவரு கோச்சுக்கிட்டுப் போயிடுவாரு!

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் இந்த உதாரணம் பொருந்தும். நம்ம உடலைக் கவனிக்கிற பொறுப்பை, மருத்துவரை நம்பிதானே கொடுக்கிறோம். நீ சரியா செய்ய மாட்டே, நகருன்னு சொல்லிட்டு நாமளே கத்தியைத் தூக்க முடியுமா?

அதாவது, இந்த உதாரணங்கள் மூலம் சொல்ல வர்றது என்னன்னா, வேலை தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, நாம அதைப் பற்றி நினைக்கிறதில்ல, தலையிடறதில்லை, கவலைப்படறதும் இல்லை. அவர் சரி பண்ணிடுவார்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு காத்திருக்கோம்.

அதே போலத்தான் இறைவனிடமும் நம்பிக்கை வைக்கணும். அவன்கிட்ட ஒரு பிரச்சனையை ஒப்படைச்சாச்சுன்னா, அதைப் பற்றி நினைக்கிறதையும், கவலைப் படறதையும் விட்டுடணும். அப்படிச் செய்யும் போது என்ன ஆகும்? மனசு அமைதி ஆகும். அமைதியான மனசில்தான் இறைவன் குடியிருப்பான். அவனே நமக்கு நல்ல வழியைக் காட்டுவான். அவன் காட்டற வழிப்படி, உணர்ச்சி வசப்படாம, அமைதியோட, நடு நிலைமையோட செய்யற காரியங்கள்தான் நன்மை தரும்.

இதே கருத்தை ரொம்ப எளிமையா சொல்ற ஒரு ஆங்கிலக் கவிதையை முன்ன ஒரு முறை Hallmark card –ஒண்ணுல படிச்சிருக்கேன். ஆனா அப்ப அது சரியா புரியல;  கருத்து மட்டும் நினைவிருந்தது. எப்படி எப்படியோ கூகுளார்கிட்ட கேட்டு ஒரு வழியா முழுக் கவிதையையும் கண்டுபிடிச்சிட்டேன்!

Poem: Let Go and Let God!

As children bring their broken toys with tears for us to mend,
I brought my broken dreams to God because He was my friend.
But then, instead of leaving Him in peace to work alone,
I hung around and tried to help with ways that were my own.
At last, I snatched them back and cried, ”How can you be so slow?”
“My child,” He said, ”What could I do?
You never did let go.” ~Lauretta P. Burns

ரொம்ப அழகா, எளிமையா இந்த ஆங்கிலக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன தெரியுமா? சரணாகதி! அல்லது Total Surrender! ஆமாம்... அதேதான்! உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா? அவ்வளவுதான். கவலையை விடுங்க.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://imagineagirldaydreaming.blogspot.com/2013/09/let-go.html

பி.கு.: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…‘அம்மன் பாட்டு’ வலைப்பூவில் மட்டும் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை பாடல்கள் இட விருப்பம் இருக்கு. பார்க்கலாம்… அவள் விருப்பம் எப்படியோ? அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

Sunday, October 20, 2013

தொலைந்து போக ஆசை!

செல்லும் இடமெல்லாம் சேர்ந்தே கூட வரும்
தப்பிக்க நினைத்தாலும் காட்டிக் கொடுத்து விடும்
ஒருநொடியும் பிரியாமல் உயிர்த்தோழி போலிருக்கும் -
பொல்லாத கைபேசியை சொல்லாமலே விட்டு

விழிக்கின்ற நேரம்முதல் படுக்கின்ற நேரம்வரை
விதவிதமாய் கடமையெல்லாம் வரிசையிலே காத்திருக்கும்
கடிகார நேரமுடன் கைகோர்த்து தான்சுழலும் -
பொல்லாத வேலையெல்லாம் சொல்லாமலே விட்டு

அதைச்செய்தால் இதுவென்கும் இதைச்செய்தால் அதுவென்கும்
சொன்னாலும் சொல்லாமல் போனாலும் தவறென்கும்
இருந்தாலும் இல்லாமல் போனாலும் தவறென்கும் -
பொல்லாத உலகிதனை சொல்லாமலே விட்டு

பசி யென்கும் தாக மென்கும் தூக்க மென்கும்
பிறகு நோயென்கும் நொடியென்கும் வாதை யென்கும்
சொன்னபடி கேளாது தன்னிஷ்டம் போல் நடக்கும் -
பொல்லாத உடலிதனை சொல்லாமலே விட்டு

எங்கேதான் சென்றாலும் கூடவே தானும்வரும்
ஒரு நினைவில் இருக்கையிலே இன்னொன்றை செருகி விடும்
ஒரு கவலை குறைந்த தென்றால் மற்றொன்றை தேடித் தரும் -
பொல்லாத மனமிதனை சொல்லாமலே விட்டு

தொலைந்து போக ஆசை!


--கவிநயா

 படத்துக்கு நன்றி: http://www.behance.net/gallery/A-Quiet-Place/4490979


Friday, October 11, 2013

நவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி


தூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே
மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே
பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே
அருட்கடலாக சித்தி அளிக்கும் துர்க்கையே

ஆசுரி என்னும் நாமம் கொண்ட துர்க்கையே
அன்புடன் எம்மை என்றும் காக்கும் துர்க்கையே


அஷ்ட சித்திகள் யாவும் அருளும் துர்க்கையே
இஷ்டங்கள் யாவும் பூர்த்தி செய்யும் துர்க்கையே
சிவ நடன மென்னும் ஸ்ருங்கார தாண்டவத்திலே
சித்தி ராத்ரியாய் அவ தரித்த துர்க்கையே

சித்தாத்ரி துர்க்கையே சிவ தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

சர்வ சக்தியும் ஒன்றாய் இணைந்த துர்க்கையே
மர்த்தினியாக கன்மம் மாய்க்கும் துர்க்கையே
அபயம் தந்தெமை ஆ தரிக்கும் துர்க்கையே
ஜெயங்கள் யாவுமே தந்து காக்கும் துர்க்கையே

மூல துர்க்கையே மஹா லக்ஷ்மி துர்க்கையே
தேவி துர்க்கையே சரணம் தரணும் துர்க்கையே!


--கவிநயா

(சுபம்) 

வாசித்து வந்த அனைவருக்கும் அன்னையின் அருள் சிறக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

துர்க்காஷ்டகம் கேட்க: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்திற்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/