Sunday, November 28, 2010

இன்றே கடைசி

ரு உறவினரிடமோ அல்லது நண்பரிடமோ ஏதோ ஒரு காரணத்துக்காக நாம ரொம்ப கோபப் படறோம், சண்டை போடறோம்னு வச்சுக்குவோம். கோபம் வந்தாதான் நமக்கு கண்ணு மண்ணு எதுவும் தெரியாதே... அவர் மனம் புண்படும்படி, கண்டபடி வார்த்தைகளைக் கொட்டிடறோம். அன்றைக்கு சாயந்திரமே அந்த நண்பர் எதனாலோ திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார்னு சேதி வருது. அப்ப நமக்கு எப்படி இருக்கும்! நம்ம மனசு படக் கூடிய பாட்டையும், அந்த குற்ற உணர்வு காலமெல்லாம் நீட்டிப்பதையும் தவிர்க்க முடியுமா?

முடியும், நாம நினைச்சா... அதாவது, முதல்லயே அப்படியெல்லாம் கட்டுப்பாடில்லாம நடந்துக்கறதை, பேசறதை, கோவப்படறதைத் தவிர்த்தா, அதனோட பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்.

மரணம்.

அதைப் பார்த்தாலே, அடுத்த சில நாட்களுக்கு நம் மனசில் ஒரு பாதிப்பு இருக்கும். அது நம்ம நடவடிக்கைகளிலும் தெரியும். அதுவும் நமக்கு கொஞ்சம் நெருங்கியவர்களுடையதுன்னா, கேட்கவே வேண்டாம். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, அநித்தியமானது, அப்படின்னு யாரோ ‘சுளீர்’னு மண்டையில் அடிச்சு சொல்லிட்டுப் போன மாதிரி இருக்கும்.

நாளைக்கே… இல்லையில்லை… இன்றைக்கே நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள், எத்தனை தாபங்கள், எத்தனை வருத்தங்கள், எல்லாம் குழம்பிய சேறு மாதிரி, நம்ம மனசின் அடியில் தங்கி விட்டவை. இவை எதுவுமே இல்லாம மனசு தெளிவா நிர்மலமான நீரோடை மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!

ஆனா அது ஒரே நாளில் வரக் கூடிய விஷயமா என்ன? தினம் தினம் நம்மை, நம் செயல்களை, நம் உணர்வுகளை, நம் நினைவுகளை, இப்படி எல்லாத்தையும் நாமே கவனிச்சு, நம்மை நாமே பயிற்றுவிச்சுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் அது.

அந்தப் பெரிய விஷயத்தையும் கொஞ்சம் சுலபமா செய்ய ஒரு வழி இருக்கு… அது என்ன வழி?

ஒவ்வொரு நாளையும் இன்றே கடைசின்னு நினைச்சு வாழறதுதான் அது.

அப்படி நினைக்கிறதால என்ன ஆகும்? நாம செய்யற தினசரி வேலைகளை முழு மனசோட, முழு ஈடுபாட்டோட செய்வோம். நம்மைச் சுற்றி இருக்கறவங்ககிட்ட சுடுசொல்லே பேசாம, அன்பை மட்டுமே பகிர்ந்துக்குவோம். புறம் பேச மாட்டோம். நம் குடும்பத்தினர் நாம இல்லாம தவிக்கக் கூடாதுங்கிறதுக்காக அவங்களை பல விஷயங்களிலும் பழக்கப் படுத்துவோம். சாதாரணமா நாளைக்கு நாளைக்குன்னு ஒத்திப் போடற விஷயங்களை இன்றைக்கே செய்ய முயற்சிப்போம். இப்படி ஒவ்வொண்ணையும் கருத்தோட செய்யும்போது, எங்கே நிம்மதின்னு தேட வேண்டிய அவசியமே வராது. மனசு அமைதிப் பூங்காவாத்தான் இருக்கும்!

பிறக்கும் போது, நாம அழுதுகிட்டே பிறக்கறோம்; நம்மைச் சுத்தி இருக்கறவங்க சந்தோஷப்படறாங்க. ஆனா நாம இந்த உலகை விட்டுப் போகும் போது நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாம் வருத்தப்படணும்; அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை வாழணும், என்பார் ஸ்ரீயோகானந்த பரமஹம்ஸர்.

தினமும் காலையில் இறைவனை நினைச்சு விபூதி பூசிக்கும் போது, வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நினைச்சுப் பார்த்து, இந்த விபூதியைப் போல இந்த உடலும் எந்த நிமிஷமும் சாம்பலாகலாம்னு உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி நாம நடந்துக்கணும் என்பதற்காகத்தான் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினாங்க.

அதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்!

Live one day at a time and make it a master piece! – எங்கேயோ படிச்சது; எனக்குப் பிடிச்சது :)

“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – இது மகாத்மா காந்தி சொன்னது.

அன்பாய் வாழ்க! அமைதியாய் வாழ்க!
நன்றாய் வாழ்க! நீடுழி வாழ்க!


அன்புடன்,
கவிநயா

Sunday, November 21, 2010

பயணம்

ன்னும் நாலு நாள்தான் இருக்கு. கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி இன்னும் ஏதாச்சும் வேணுமா, வாங்கணுமா, அப்படின்னு மனசுல ஓடிக்கிட்டிருந்தது. புது எடம், புது மனுஷங்க, பழக்க வழக்கமெல்லாமும் புதுசாத்தான் இருக்கும். நினைக்க நினைக்க கவலையும் அதிகமாகிக்கிட்டே வருது…

ஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.

எம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.

**

ஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.

“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”

“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல? அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”

முதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.

--கவிநயா

Friday, November 19, 2010

அண்ணாமலையாய் அருள்பவன்!

அனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!


அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!

கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!

விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!

--கவிநயா

Saturday, November 13, 2010

கோலங்கள்

போன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...

என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.

கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.






















கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)

Monday, November 8, 2010

சிறு துளி...

மழை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

குறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே? :)

(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன? :)



குட்டிக் குட்டித் துளித் துளியாக
குனிந்து மண்ணில் வீழுது பார்!
அடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து
அழகாய்க் கோலம் போடுது பார்!

அடிக்கும் காற்றின் திசைக் கேற்ப
தானும் அசைந்து ஆடுது பார்!
இசையில் சிறந்த கலைஞரைப் போலே
இனிதாய்த் தாளம் போடுது பார்!

நேரம் கொஞ்சம் செல்லச் செல்ல
வேகம் இன்னும் கூடுது பார்!
சடசட சடவென சப்தம் எழுப்பி
செல்லக் கோபம் காட்டுது பார்!

செடிகொடியெல்லாம் குளிக்கச் செய்ய
பூவாய் மேலே சொரியுது பார்!
பூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து
புத்தம் புதிதாய் ஆக்குது பார்!

பயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து
பசித்தவர்க் குணவு படைக்குது பார்!
நீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து
உயிர்களின் தாகம் தீர்க்குது பார்!

சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
ஆறாய் குளமாய் ஆகுது பார்!
அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
அறிவும் பொருளும் பெருகும் பார்!!


--கவிநயா

பாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)
படத்துக்கு, கூகுளாருக்கு நன்றி!

Tuesday, November 2, 2010

கற்றதனால் ஆய பயன்

வணக்கம்.

கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல! :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா