Sunday, January 25, 2015

என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்?

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! 

இந்தியா எங்கள் தாய் நாடு!
இதுவே எங்கள் திரு நாடு!
கோடி கோடியாம் மக்கள் சேர்ந்து
கட்டியிருக்கும் பெருங்கூடு!
(இந்தியா)

காடு கரை உண்டு, பாயும் நதியுண்டு,
பச்சை வயலுண்டு, திரு நாட்டில்!
மாடு மனை உண்டு, மக்கள் உழைப்புண்டு,
மதியும் நிதியும் உண்டு வள நாட்டில்!
(இந்தியா)

இயற்கை வளமுண்டு, இயங்கத் திறனுண்டு,
என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்?
அணைக்கும் அன்புண்டு, ஆன்ம பலமுண்டு,
என்ன இல்லை எங்கள் வள நாட்டில்?
(இந்தியா)


--கவிநயா 

Monday, January 12, 2015

குன்று குடையா எடுத்தான்!

ஏரார்ந்த கண்ணி - 5


கோவர்த்தன கிரிமலையில் கோலாகலம்!
கோபர்களும் கோபிகளும் கொண்டாட்டம்!
நீல வண்ணன் திருவடிக்கு நீராஞ்சனம்!
கோல எழில் கண்ணனுடன் குதூகலம்!

தேவர்கள் தலைவன் இதனைக் கண்டான்!
தணியாத கோபம் கொண்டவன் வெகுண்டான்!

படபடவென்று வானம் இடிபட
தடதடவென்று பேய்மழை பொழிந்திட
வீசும் புயலினில் மலைகளும் அசைந்திட
மிகப் பெரும் நாசம் செய்திடத் துணிந்தான்!

குழந்தைகள், பெரியவர் அனைவரும் அரண்டனர்;
ஒதுங்க இடமின்றி தவித்தே அலைந்தனர்;
ஆவினம் யாவையும் அஞ்சி நடுங்கின;
ஓலமிட்டே எங்கும் ஓடித் திரிந்தன!

அவல நிலையிதைக் கண்டான் கண்ணவன்...
துவளும் உயிர்களைக் காக்கப் பிறந்தவன்...

அபயம் தந்திடத் திருவுளம் கொண்டான்!
சிறு இதழ் மீதினில் குறு நகை தவழ
சிற்றஞ் சிறுவிரல் நுனியின் மீதினில்
கோவர்த்தனத்தைத் தாங்கிப் பிடித்தான்!

மாபெரும் குடையொன்று செய்தான் கண்ணன்,
மக்கள், மாக்கள் அனைவரும் ஒதுங்கிட!
தஞ்சம் என்று வந்தவர்க் கெல்லாம்
அஞ்சேல் என்றே அடைக்கலம் அளித்திட!

அனைத்தும் கண்டாள், அன்னை யசோதை…
விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்


 

Sunday, January 4, 2015

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!

ஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு...

சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள்! சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!



தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!

ஆடும் பதம் தூக்கி நாடும் அடியவர்க்கு
  தேடி அருள் புரியும் நடராஜா!
பாடி வந்துந்தன் பாதம் பணிந்தோர்க்கு
  ஓடி வர மருளும் அருள்நேசா!

தாவித் தாவி உந்தன் பதங்கள் நடமாட
  தேவி சிவகாமி உடனாட
கொன்றை மலரணிந்த செஞ்சடைகளாட
  கொத்தும் அரவுகள் கூத்தாட

கையில் தீயாட காலிற் சிலம்பாட
  காற்றும் வெளியும் சேர்ந்தாட
கண்ணில் கனலாட கங்கைப் புனலாட
  மண்விண்ணும் தம்மை மறந்தாட

மெய்யில் நீறாட வையம் புகழ்ந்தாட
  மெய்யா உன்னைப் பணிந்தோமே!
வெய்யும் துயரோட ஐயம் பறந்தோட
  ஐயா உன்னடி அடைந்தோமே!

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!


--கவிநயா


படத்துக்கு நன்றி:  http://dwarak82.blogspot.com/2012/09/blog-post_9739.html