Sunday, November 30, 2008

சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே...

சந்தோஷமோ சஞ்சலமோ, அவள்தானே எல்லாம்? அதென்னவோ இப்போ அவள் பாட்டு போடணும்னு தோணுச்சு. அன்னையின் திருவடிகள் சரணம்.



சக்தி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!
சக்தி உன்னை மனம் நாடையிலே - என்
துன்பங்கள் தீருதுன் ஜாடையிலே!

அன்னை உந்தன் பெயர் சொல்லையிலே - எண்ண
மெல்லாம் நிறையுது அன்பினிலே!
அன்னை உன்னை மனம் நாடையிலே - என்
ஊழ்வினை ஓடுதுன் பார்வையிலே!

தேவி உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
தேறுதல் பிறக்கு துள்ளத்திலே!
தேவி உன்னை மனம் நாடையிலே - என்
தேடுதல் தீர்ந்த தின்னாளினிலே!

துர்க்கை உந்தன் பெயர் சொல்லையிலே - ஒரு
சொர்க்கம் தெரியுது கண்களிலே!
துர்க்கை உன்னை மனம் நாடையிலே - வாழும்
மார்க்கம் ஒளிருதென் நெஞ்சினிலே!!

--கவிநயா

Sunday, November 23, 2008

சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை...

குடுகுடுன்னு ஓடிக்கிட்டு, குட்டிக் கையில கொய்யாப் பழத்தை ஏந்திக்கிட்டு, கூர் பல்லால நறுக் நறுக்னு கடிச்சிக்கிட்டு, துறுதுறுன்னு திரியற அணிலை வேடிக்கை பார்க்க எனக்குப் பிடிக்கும்! உங்களுக்கு?



சின்னஞ் சிறிய அணிற் பிள்ளை
சுறு சுறுப்பாகச் சுற்றி வரும்

துறு துறுவென்ற கண்களினால்
சுற்றுப் புறத்தை நோட்டம் விடும்

பக்குவமான கொய்யாக் கனியைக்
கண்டு பிடித்துக் கடித்துண்ணும்

பாவம் மனிதர் என்றெண்ணி
மீதம் கொஞ்சம் வைத்து விடும்

வாசல் சற்றே திறந்திருந்தால்
குடு குடுவென உள் புகுந்து விடும்

வெளியேறும் வழி தெரியாவிடில்
திரு திருவெனவே விழித்து நிற்கும்

சிறிய உதவி செய்திடினும்
பெரிய மனதைப் பெற்றதினால்

மனித தெய்வம் ராமனுக்கு
பிரிய முடையதாய் ஆனதுவே

நாமும் தினமும் அது போலே
பிறர்க்கு உதவி மகிழ்ந்திடுவோம் !

--கவிநயா

படத்துக்கு நன்றி - http://www.flickr.com/photos/yeliseev/2748470727/sizes/m/

Wednesday, November 19, 2008

ஆயிரமாயிரம் விளக்கேற்றி...

எங்க ஊர் தமிழ் சங்கம் தீபாவளி விழாவில நான் சமீபத்தில் எழுதிய "தீபாவளி" பற்றிய பாடலுக்கும், சில நாள் முன்பு எழுதிய "என்று வருவான்" என்ற கண்ணன் பாடலுக்கும், எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க, கிட்டத்தட்ட 20 பெண்கள் பாடினோம். (ஆமாங்க, நானும்தான்!) ஆனா அதை சரியா ஒலிப்பதிவு செய்ய முடியல. அதனால அதையே மீனா மட்டும் பாடித் தந்திருக்காங்க. கேட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)

"ஆயிர மாயிரம் விளக்கேற்றி..." தீபாவளிப் பாடல் வரி வடிவம்...

Get this widget | Track details | eSnips Social DNA


"என்று வருவான்" கண்ணன் பாடலின் வரி வடிவம்...


Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, November 16, 2008

காணாமல் போனவர்கள்



"தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்" கம்பீரமான மிருதங்கத்தின் தாள கதிக்குத் தகுந்தபடி வேகமாகச் சுழன்று ஆடுகிறாள், அந்தச் சிறுமி.

கச்சிதமான பட்டுப் பாவாடை சட்டையில், கர்ப்பக்கிருகத்திலிருந்து அப்போதுதான் எழுந்து வந்த அம்மன் போல் அப்படி ஒரு அழகு! சலங்கை கட்டிய கால்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு அவயமும் அபிநயம் பிடிக்கிறது, அபிநயா என்ற அவள் பெயருக்கு ஏற்றாற்போல்.

அவள் ராதாவாக கண்ணனை வரிக்கையில் அவளோடு சேர்ந்து அனைவருக்கும் கன்னம் சிவக்கிறது, வெட்கத்தில். அவள் யசோதாவாக மாறி சின்னக் கண்ணனைக் கூப்பிடுகையில், அனைவரும் திரும்பி அந்தத் திசையில் பார்க்கிறார்கள், உண்மையாகவே அங்கே கண்ணன் நிற்பதைப் போல்; அவன் பவழ வாய் திறந்து அவளுக்கு உலகத்தைக் காண்பிக்கையில், அவளோடு சேர்ந்து அனைவரும் அந்தக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார்கள். அவள் ஆட்டம் மட்டுமின்றி, பாட்டும், மிருதங்கமும், நாதஸ்வரமும் கூட அந்த அரங்கத்தில் மாயாஜாலம் போல அற்புதமாக ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஒலி வடிவிலும், அவளும் தன் சலங்கைகளுடன் ஏறிப் பயணம் செய்வது போன்ற பிரமை.

பார்வையாளர்கள் அனைவருக்கும் நடனம் முடிந்தது கூடத் தெரியவில்லை; இன்னும் அந்த இனிய மந்திரத்துள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். அரங்கமெங்கும் பூரண நிசப்தம். ஒரு நிமிடம்தான். பிறகு அரங்கம் அதிரும் அளவுக்கு எழுந்த கரவொலி வானைப் பிளக்கிறது. வாத்தியக் கோஷ்டியும், அவளும் மேடைக்கு நடுவில் வந்து வணங்குகிறார்கள். ஒரே கணத்தில் சின்னஞ்சிறுமியாக மாறி, பட்டுப் பாவாடையின் இரண்டு பக்கங்களையும் விரித்துப் பிடித்துக் கொண்டு மேற்கத்திய நடன மாதர்கள் போல் தலையைக் குனிந்து வந்தனம் அபிநயிக்கிறாள், கன்னங்குழியச் சிரித்தபடி. இந்தக் குறும்புக் காரக் குழந்தையா இவ்வளவு நேரம் காதல் வயப்பட்டாள், யசோதாவாக மாறிக் கண்ணனைக் கண்டித்தாள், என்று எல்லோருக்கும் மிகவும் அதிசயமாக இருக்கிறது.

அன்று அந்த மேடையில் இருந்தவர்கள் எல்லோருமே சின்னஞ்சிறார்கள்தான். ஏன், பார்வையாளர்களிலும் பெரியவர்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். இனி அடுத்த நிகழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மேடையை விட்டு இறங்கியதும், அனைவரும் அருகில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.

மிருதங்கம் வாசித்த பையன் பெயர் பாலா. அவன் மட்டும் அபிநயாவின் அருகில் தங்கினான். "அபி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்", என்றான் தயக்கத்துடன்.

அவன் முக பாவத்தைப் பார்த்ததுமே ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று புரிந்தது, அபிக்கு. "என்னடா ஆச்சு? சும்மா சொல்லு", என்று ஊக்குவித்தாள்.

"அது வந்து... வந்து... எனக்கு அழைப்பு வந்திடுச்சு அபி. நான் நாளைக்கே கிளம்பணும்", குரல் இலேசாக நடுங்குகிறது.

"என்னடா, நிஜமாவா சொல்ற?" அபியின் குரலிலும் கண்ணீரின் ஆரம்பம். என்ன இருந்தாலும், பாலா ஒருவன்தான் அவளுக்கு உயிர் நண்பன். அவனும் போய் விட்டால்? ஆனாலும் இது எதிர்பார்த்ததுதானே? எப்போதும் இங்கு யாராவது வருவதும் யாராவது போவதுமாகத்தான் இருக்கிறது. யாரும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெரிந்த விஷயம்தானே?

பாலாவை இப்போதுதான் பார்த்தது போல் இருக்கிறது. அவள்தான் முதலில் இங்கு வந்தாள். வந்த புதிதில் ஒன்றுமே புரியவில்லை. முதலில் பயந்தாலும், இயல்பான தன் தைரியத்தால் சீக்கிரம் பழகி விட்டாள். அவள் வந்து சில நாட்களில் பாலா வந்தான். அவளைப் போல் அவன் தைரியமாக இல்லை. வந்த போதே பயத்திலேயே மயங்கி விழுந்து விடுவான் போல இருந்தது. இவள்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி, இந்த இடத்தைப் பற்றி விளக்கித், தன் அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டாள். பிறகு சீக்கிரத்தில் இருவரும் சிறந்த நண்பர்களாகி விட்டார்கள். அந்த பாலாதான் இப்போது போகிறேன் என்கிறான். துக்கம் தொண்டையை அடைக்கிறது, அபிக்கு. பாலாவுக்கு அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இத்தனை நாளும் அபிதான் அவனுக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல வெகு சீக்கிரம் தன்னைத் தேற்றி கொண்டு விட்டாள், அபி. "சரி, இனிமே நம்ம கவலப்படக்கூடாது. உண்மையிலேயே உனக்கு இது சந்தோஷமான விஷயம். இந்த இடத்துக்கு வந்துட்டு திரும்பிப் போற சந்தர்ப்பம் எல்லாருக்கும் எப்போதும் கிடைக்கிறதில்லன்னு உனக்குத் தெரியுமே? அதனால நீ கிளம்பற வரைக்கும், நம்ம சந்தோஷமா இருக்கணும். சரியா?" வரவழைத்து கொண்ட உற்சாகத்துடன் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறாள்.

"உனக்கு அழைப்பு எப்படி வந்தது?" ஆவலுடன் கேட்கிறாள். முன்பே சிலரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் பாலாவையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசை.

"என் கனவில் வந்தது. என்னைப் போலவே இருக்கிறவர் ஒருத்தர், ஆனால் என்னை விடப் பெரியவர், என் கனவில வந்தார். வந்து, 'தயவு செய்து என்கிட்ட திரும்பி வந்துடு. இனி உன்னை மறக்கவே மாட்டேன்; பிரியவே மாட்டேன். இது சத்தியம்', னு சொல்லி ரொம்பக் கெஞ்சினார்"

"இங்க சில பேரெல்லாம் அவங்க கனவுல வந்த அழைப்ப நம்பாம போகாமயே இருந்திட்டாங்க. தெரியுமா? ஆனா நீ அப்படி இருக்க வேண்டாம். நீ சொல்றதப் பாக்கும் போது அவர் உண்மையாகவேதான் உன்னைக் கூப்பிடறாப்ல தோணுது", என்றாள் அபி.

அது ஒரு வினோதமான உலகம். காணாமல் போன, கண்டு கொள்ளாமல் போன, அடியோடு மறந்து போய் விட்ட பல்லாயிரம் திறமைகள் சேர்ந்து (§)தங்கியிருக்கும் உலகம். அங்கு நிறம், மொழி, இன பேதங்கள் கிடையாது. அநேகம் பேர் சிறு வயதிலேயே திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளாமலோ, வளர்த்துக் கொள்ளாமலோ நிராகரித்து விடும்போது, அவை எல்லாம் இங்கு வந்து வசிக்க நேரிடும். அபூர்வமாக சிலர் பெரியவர்களாகும் வரை திறமைகளை வளர்த்து விட்டுப், பிறகு அவற்றுக்குத் தீனி போட நேரமின்றி அவற்றை மறந்து விடுவது உண்டு. அந்த மாதிரி மறக்கப்பட்ட திறமைகளும் இங்குதான் வந்து சேரும். பெரியவர்களான பின் சிலர் தாங்கள் அது வரை நினைக்காமலிருந்த திறமைகளை மறுபடியும் வரவழைத்து வளர்த்துக் கொள்ள முனைகையில்தான் பாலா போன்றவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கிறது.

பாலாவுக்கும் அவன் திரும்பிப் போவது குறித்து மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது, அபியைப் பிரிய வேண்டும் என்பது தவிர அவனுக்கு வேறு வருத்தம் இல்லை. சிறுவர்களை விடச் சிறுமிகளுக்கு அழைப்பு வருவது இன்னும் அரிது என்பது அவனுக்கும் தெரியும். "கவலைப் படாதே, அபி. உனக்கும் ஒரு நாள் அழைப்பு வரும், பாரேன்", நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளுடன், பாலாவும் கிளம்பி விட்டான்.

அபி காத்துக் கொண்டிருக்கிறாள்.


--கவிநயா

பி.கு. இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/deep_shot/2048096515/

Wednesday, November 12, 2008

அமைதியின் அருமையை உணர்வோம்!

ரெண்டு பேருக்குள்ளேயோ, இல்லை ரெண்டு குடும்பங்களுக்குள்ளேயோ, இல்லை ரெண்டு நாடுகளுக்குள்ளேயோ, கருத்து வேறுபாடோ, சண்டையோ, ஏற்பட என்ன காரணம்? ரொம்ப சுலபமான பதில்தான். உட்கார்ந்தோ, ரூம் போட்டோல்லாம் யோசிக்க வேணாம். ரொம்ப அடிப்படையான ஒரு உணர்வு, “நான்”, “எனது”, “நீ சொல்லி நான் கேட்கிறதா” என்கிற எண்ணம் (ego) தான் இதுக்குக் காரணம். சின்னக் குழந்தைங்க சண்டையில இருந்து, குடும்பச் சண்டைகள்ல இருந்து, பெரிய பெரிய யுத்தங்கள் வரைக்கும் யோசிச்சுப் பாருங்களேன்.

பதிவுலகத்தில இருந்தே ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடறோம்னு வைங்க. அதுக்கு அவங்க பதில் எழுதலைன்னு வைங்க. அதனால நமக்கு வருத்தம் ஏற்படுது. ஏன்? ஒண்ணு, “நான்” இட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் அவங்க எப்படி பதில் எழுதாம இருக்கலாம், அப்படிங்கிற எண்ணம். ரெண்டு, அவங்களைப் பாராட்டுவது மட்டுமே நம்ம நோக்கமா இருந்திருக்கணும், அதை விட்டுட்டு நம் பாராட்டுக்கு அவங்க பதில் எழுதணும்னு “எதிர்பார்க்கிறது”. (“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அப்படின்னு கண்ணன் சொன்னது நினைவு வருதா?)

இதே போலத்தான் வாழ்க்கையில ஏற்படற எல்லா விதமான மன வேற்றுமைகளுக்கும், அதனால ஏற்படற துன்பங்களுக்கும், நாமேதான் காரணம். அதனாலதான் அந்தக் காலத்தில இருந்து எல்லா ஆன்மீகவாதிகளும், “நான்”, “எனது”ங்கிற எண்ணத்தை ஒழிக்கணும்னு சொல்லி வந்திருக்காங்க.

சரி… இதுக்கு என்னதான் தீர்வு? சண்டையை நிறுத்திட்டு, ஒருத்தராவது “நான் சொல்றதே சரி” ங்கிற எண்ணத்தை விட்டு இறங்கி வந்து, அடுத்தவர் சொல்றதை மதிச்சு காது கொடுத்து கேட்கணும். இந்த உலகத்தில பிறந்திருக்கிற, உலகத்திற்கு வந்திருக்கிற, “எல்லாருமே” “பிழைக்கத்தான்” வந்திருக்கோம்கிறதை மறக்காம, ஒருத்தொருக்கொருத்தர் அன்பா அனுசரணையா இருக்க பழகிக்கணும். அப்படி ஒரு காலம் விரைவில் வர, உலகெல்லாம் அமைதி நிலவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.

இது வரை பொறுமையா படிச்சதுக்கு நன்றி. அப்படியே இதோ இந்தக் கவிதையையும் படிச்சிடுங்களேன்… :)


வேண்டும்...

அன்பென்னும் ஓருணர்வே
அகிலத்தை ஆள வேண்டும்!

அகந்தை இல்லா நெஞ்சம்
அனைவருக்குமே வேண்டும்!

மனிதத்தை மறக்க வைக்கும்
மதவெறியை ஒழிக்க வேண்டும்!

சாதிகளும் பேதங்களும்
சடுதியிலே கரைய வேண்டும்!

போரோடு போர் தொடுக்க
புவியினர் புறப்பட வேண்டும்!

அமைதியின் அருமை தன்னை
அகிலத்தோர் உணர வேண்டும்!

இனம் மொழியாம் வேறுபாட்டை
இன்றே களைந்திடல் வேண்டும்!

உலகமெல்லாம் ஒர் குடிலாய்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்!!


--கவிநயா

Sunday, November 9, 2008

காதல் கொஞ்ச(ம்)...

...கவிதை கொஞ்ச(ம்). தமிழுக்கே உரிய அழகான சில வார்த்தைகள்ல காதலும் ஒண்ணுன்னு எனக்குத் தோணும். காதல் இல்லாத கவிதை இருக்கலாம்; ஆனா கவிதை இல்லாத காதல் இருக்குமோ? அதொண்ணுமில்லங்க, சில அழகழகான காதல் கவிதைகளைப் படிச்சதும் எனக்கும் ஒரு ஆசை - காதல் கவிதை எழுதணும்னு. அப்படி எழுதினதுல ஒண்ணுதான் இது. ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.



நினைவுகள்

சுட்டு விரலைக்
கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்
குட்டிப் பிள்ளை போல
உன் நினைவுகளுடன்
உரிமையாய்க் கைகோர்த்தபடி
பயணிக்கிறது மனசு.
கோர்த்த மனம் வேர்த்தாலும்
நினைவுகள் நழுவுவதில்லை;
ஊர் போய்ச் சேர்ந்த பின்னும்
ஓருயிர் இரண்டாவதில்லை...

***

நேராக நடப்பதையே மறந்து விட்ட
செக்குமாடுகள் போல்
வேறெங்கும் செல்லாமல்
உன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன
என் நினைவுகள்…

***

வானம் வெகுதொலைவில் இருந்தாலும்
மழைக்கரம் நீட்டி
பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
நினைவுக்கரம் நீட்டி
உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது
மனசு…


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/29643650@N04/2831493184/sizes/m/

Wednesday, November 5, 2008

அம்மா


பாலுவோட அம்மா செத்துப் போயிட்டாங்க.

நம்பவே முடியல. எங்கிட்ட எவ்வளவு அன்பா இருப்பாங்க. பாலு வேற யாருமில்ல, அவந்தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் அம்மா, அவனோட சேர்த்து என்னையும் தன் மகன் மாதிரியே நடத்துவாங்க. அவங்க சமையல் எனக்கு புடிக்கும்னு தெரிஞ்சு நான் எப்ப போனாலும் ஏதாச்சும் செய்து தராம இருக்க மாட்டாங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்கள பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவும் எப்ப இப்பிடி முகம் நிறைய சிரிப்பாங்கன்னு ஏக்கமா இருக்கும்.

என்ன ஆயிருக்கும்? யாருக்கும் தெரியல. பாலுவுக்குக் கூட தெரியல. பாலுவோட அப்பா பெரிய வேலையில இருக்காரு. நல்ல வசதியானவங்க. அவங்களுக்கு என்ன கொறை இருக்க முடியும்னு யாருக்கும் ஊகிக்க முடியல. எட்டாவது படிக்கிற செல்லப் புள்ளைய விட்டுட்டு தற்கொலை பண்ணிக்க அவன் அம்மாவுக்கு எப்பிடி மனசு வந்துச்சோ? பாலு அழவே இல்லை. “என் மேல உண்மையான அன்பிருந்தா இப்பிடி பண்ணியிருப்பாங்களா?” அப்பிடின்னு ஒரே ஒரு தரம் சொன்னான். அவ்வளவுதான். அப்புறம் அதைப் பத்திப் பேசறதே இல்ல. அம்மாவைப் பத்தி பேச்செடுத்தாலே கண்ணும் மொகமும் செவசெவன்னு ஆயிரும் அவனுக்கு. ஒடனே அந்த எடத்த விட்டு எந்திரிச்சு போயிருவான்.

நேத்து சாயந்திரம் எங்கப்பா மறுபடியும் குடிச்சிட்டு வந்து எங்கம்மாவை நல்லா அடிச்சிட்டாரு. அவரு எவ்வளவு அடிச்சாலும் பேசுனாலும் என் அம்மாகிட்ட இருந்து ஒரு சத்தம் வராது. என் அம்மா அழுது நான் பார்த்ததில்ல. அவங்க சந்தோஷமா சிரிச்சும் பார்த்ததில்ல. என்னைப் பார்த்தா மட்டும்தான் அவங்ககிட்ட இலேசா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். அவங்க கலகலன்னு சிரிச்சு நான் பார்த்ததே இல்ல. ஒண்ணுமே நடக்காத மாதிரி இருப்பாங்க. எங்கிட்ட எப்பவும் போல ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டுக்கிட்டு… எனக்குப் புடிச்சதை சமைச்சுக்கிட்டு… என்னை கவனிச்சுக்கிட்டு… வீட்டு வேல பாத்துக்கிட்டு… ஒரு வேளை… என் அம்மாவும் பாலு அம்மா மாதிரி ஒரு நாள்… ம்ஹூம். என் அம்மா அப்பிடி செய்ய மாட்டாங்க. செய்யவே மாட்டாங்க. தலையை வேகமா ஆட்டி அந்த நெனப்ப ஒதறினேன்.

அன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்தப்ப, எங்க வீடு முன்னாடி ஒரே கூட்டமா இருந்திச்சு. எனக்கென்னமோ ரொம்ப கலக்கமா போச்சு. எல்லாரும் என்னைய இரக்கமா பாக்கறாங்க. சில பேர் கண்ணு கலங்கியிருக்கு. மெதுவா வீட்டுக்குள்ள தயங்கித் தயங்கி போறேன். அங்க நடு வீட்ல படுத்திருக்கது… யாரு? அம்மாவா? யாரு அது? அப்பாவா அம்மாவுடைய காலைப் பிடிச்சுக்கிட்டு அழறாரு?

அவ்வளவுதான். அதுக்கு மேல பார்க்க முடியல என்னால. நான் பயந்துகிட்டே இருந்தது இன்னிக்கு நடந்துருச்சா? கண்ணை இறுக மூடிக்கிட்டு, ரெண்டு கையாலயும் மொகத்த மூடிக்கிட்டு, “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” ன்னு ஒலகம் பூரா கேக்கற மாதிரி கத்தறேன்.

“கண்ணா… என்ன ஆச்சு? இங்க பாரு”, அப்படின்னு என்னை யாரோ உலுக்கறாங்க. மொகத்த மூடின கையை எடுக்காம, “வேண்டாம் வேண்டாம்” அப்பிடின்னு இன்னும் கத்தறேன். “கண்ணா… இங்க பாரு… அம்மா வந்திருக்கேண்டா…கெட்ட கனவு கண்டியா?” சொல்லிக்கிட்டே என் கைய மெதுவா பிரிக்கிறாங்க அம்மா. “அம்மா…அம்மா…”, ன்னு அவங்களக் கட்டிக்கிட்டு தேம்பித் தேம்பி அழறேன். ஒண்ணும் புரியாத அம்மா என்னை இறுக்கி அணைச்சுக்கறாங்க.


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/darksilver/149586991/sizes/m/

Sunday, November 2, 2008

சொந்தமும் பந்தமும் நீயே முருகா !

சஷ்டி கொண்டாட்டத்தை முன்னிட்டு எங்க ஊர் கோவில்ல பாடறதுக்காக எழுதிய எளிய பஜனைப் பாடல்கள் -


(1)

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வா
செந்தில் நாதா சிங்கார வேலா செந்தமிழ்க் குமரா வா
ஆவினன் குடியில் வீற்றிருக்கின்ற அம்பிகை மைந்தா வா
அகம் மிக மகிழ்ந்து உனைப் பணிகின்றோம் அழகா முருகா வா

குமரா குமரா குமரா குமரா குமரா குமரா வா
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா கார்த்திகை பாலா வா
ஓம் எனும் ப்ரணவப் பொருள் உரைத்தவனே போற்றுகின்றோம் நீ வா
ஓயாமல் உனைத் தொழுது நின்றோமே தாமதிக்காதே வா

வேலா வேலா வேலா வேலா வேலா வேலா வா
வடிவேல் முருகா வள்ளி மணளா வணங்குகிறோம் நீ வா
சூரனை அழித்து தேவரைக் காத்த சிவனுடை பாலா வா
சொந்தமும் பந்தமும் நீயே முருகா சோதிக்காதே வா

***

(2)

அழகனே முருகனே குமரனே வாவா

ஆறுதல் தந்திட அறுமுகா வாவா

இறைஞ்சியே அழைக்கிறோம் இக்கணம் வாவா

ஈசனின் மைந்தனே சடுதியில் வாவா

உலகெலாம் போற்றிடும் உத்தமா வாவா

ஊழ்வினை நீக்கிடும் வித்தகா வாவா

எங்கும் நிறைந்தவனே இங்கு நீ வாவா

ஏறுமயில் ஏறியே என்னிடத்தில் வாவா

ஐங்கரன் சோதரா அடிபணிந்தோம் வாவா

ஒப்பில்லா மணியேநீ ஓடோடி வாவா

ஓம்காரத் தத்துவமே விரைந்தோடி வாவா

ஔடதமே அன்புருவே எமைக் காக்க வாவா


***

(3)


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

***

அனைவருக்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!

அன்புடன்
கவிநயா