Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டி. Show all posts
Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டி. Show all posts

Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!

சதுர்த்தித் திருநாளில் கற்பகக் கணபதியின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

Saturday, December 26, 2009

என்னைத் தொட்ட பட்டாம்பூச்சி


பட்டாம் பூச்சி ஒன்று என்னை
தொட்டுப் பார்த்துச் சென்றது
விட்டம் பார்த்து நானிருந்தேன்
கிட்டே வந்து நின்றது

ஏனோ இந்தச் சோகம் என்று
என்னைக் கேள்வி கேட்டது
சோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்
என்றே கொஞ்சிச் சொன்னது

நாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து
கொஞ்சம் உப்பு என்றது
கண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ
சொல்லேன் என்று கேட்டது

கூட்டுப் புழுவாய்த் தான் இருந்த
துயரக் கதையைச் சொன்னது
அதையும் தாண்டிச் சிற கடிக்கும்
என்னைப் பாரேன் என்றது

பட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு
பூவாய் மனசு விரிந்தது
ஏதோ ஒன்று புரிந்தது போல்
தானும் சிரித்துக் கொண்டது.


--கவிநயா

உரையாடல் கவிதைப் போட்டிக்கு