Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, October 5, 2010

உங்களுக்கு எத்தனை அம்மா?



ஹையோ…. நீங்க நினைக்கிறாப்ல இது ஒண்ணும் வில்லங்கமான கேள்வி இல்லீங்க :) "அன்னை எத்தனை அன்னையோ" அப்படிங்கிற ஆன்மீகக் கேள்வியும் இல்லை!

அம்மான்னாலே ரொம்ப சிறப்பில்லையா? அம்மா-பிள்ளை உறவுக்கே தனி மதிப்பு; தனிச் சிறப்பு. பிள்ளைன்னா அதுல ஆம்புளப் புள்ள, பொம்பளப் புள்ள, எல்லாப் புள்ளையும் அடக்கம் :) எத்தனைதான் தவறு செஞ்சாலும் திரும்பத் திரும்ப மன்னிச்சு ஒரே மாதிரி அன்பு செலுத்த அம்மாவால் மட்டுமே முடியும்.

என்னைப் பொறுத்த வரை தன்னலமில்லாம, எதிர்பார்ப்பில்லாம, கலப்படமில்லாம, அன்பு செலுத்தறவங்க எல்லோருமே அம்மாதான்!

உதாரணத்துக்கு என் உயிர்த்தோழி. பல சமயங்களில் ஏன்தான் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்காங்களோ, இவங்களுக்கு நான் என்ன செய்திருக்கேன்னு நினைச்சு நினைச்சு வியப்பதுண்டு. அவங்க அளவு எனக்கு அவங்க மேல அன்பிருக்கான்னும் கேட்டுக்கறதுண்டு. அந்த அளவுக்கு என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாங்க :) (touchwood!)

அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும். அதனாலதான் உங்களுக்கு எத்தனை அம்மான்னு கேட்டேன்!

சரி, எல்லா அம்மாவையும் சொல்லிட்டு, எல்லாருக்கும் அம்மாவை சொல்லாம விட்டுட்டேன்னா, அவ என்னை மன்னிக்கவே மாட்டா! குருவாய் திருவாய் உருவாய் அருவாய் திகழும் அவளைப் பற்றி சொல்லாம விட்டா எப்படி! இன்னும் சொல்லப் போனா அன்புக்கு ஏங்குபவர் யாராய் இருந்தாலும், ஏதோவொரு ரூபத்தில் வந்து அந்த அன்பை அள்ளித் தரும் அம்மா அவள்தானே! அவளை நவராத்திரிக்கு வரவேற்க உங்களைப் போலவே நானும் ஆயத்தமாகிக்கிட்டிருக்கேன்…

அனைவருக்கும் முன் கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்!

அம்மா

தொப்புள் ‘கொடி’யை அறுத்தாலும்
தொடரும் உறவோ 'ஆலா'கும்
அம்மா என்ற ஒரு சொல்லில்
அன்(பு) ஆலயமே உருவாகும்

உதரத்தில் சுமப்பாள் சிலகாலம்
இதயத்தில் சுமப்பதோ பலகாலம்
குதறிடும் துன்பம் துளைத்தாலும்
கதறிடச் சுக(ம்)அவள் மடியாகும்

பதறும் மனமும் பதமாகும்
சிதறும் உணர்வும் சீராகும்
மதுரமாம் அவளின் மொழிகேட்டால்
கதிரொளி யாய்க்களி உருவாகும்!

--கவிநயா

பி.கு. இப்ப என்ன Mother’s Day கூட இல்லையே, ஒரே அம்மா புராணமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அதாங்க, என் பெற்றோர் நேற்று ஊருக்கு போயிட்டாங்களா… அவங்களை ரெண்டு கண்ணிலும் தே…டி வருதா… அதுக்குத்தான் இந்த (புலம்பல்) பதிவு…


படம் இங்கேர்ந்து சுட்டேன்: http://www.jesus-christ-channel.com/mary-mother-of-jesus-christ.html