Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Monday, September 13, 2010

ஜலதோஷமும் சந்தோஷமும்


சந்தோஷம் என்பது பூமணம் போல. உங்ககிட்ட ஒரு கை மல்லிகைப்பூ இருக்குன்னு வைங்க, அதை நீங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறீங்க. அவங்க அதை வைக்கிற இடம் கமகமக்கும். பிறகு அதை அவங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறாங்க, இப்ப இன்னும் கொஞ்ச பேரோட இடம் மணமணக்கும்! இப்படியே உங்க பூவோட மணம் எவ்வளவு தூரத்துக்கு பரவுது பாருங்க.

சந்தோஷமும் அப்படித்தான். நீங்க கொஞ்சம் அடுத்தவங்களுக்கு குடுத்தா, அந்த சந்தோஷத்தில் அவங்க இன்னொருத்தவங்களுக்கு குடுப்பாங்க, அவங்க இன்னொருத்தங்களுக்கு, இப்படியே பரவும். மல்லிகைப் பூவாச்சும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போயிடும். ஆனா நாம பரப்பற சந்தோஷம் இருக்கே, அது இரட்டிப்பாகுமே தவிர, குறையாது.

அது சரி, ஒருத்தரை சந்தோஷப்படுத்த சுலபமான வழி எதுன்னு நினைக்கிறீங்க?

அவங்களைப் பாராட்டறதுதான்!

அன்னை தெரசா என்ன சொல்றாங்க பாருங்க –
“There is more hunger for love and appreciation in this world than for bread.”~ Mother Teresa

உங்களைப் பாராட்டினா உங்களுக்கு சந்தோஷமா இருக்காதா? நிச்சயமா இருக்கும். ஆனா, பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

ஆனா பல சமயங்களில் நடப்பது என்ன? ஒருத்தர்கிட்ட காரியம் ஆகணும்கிறதுக்காக வலியப் போய் பொய்யான பாராட்டுக்களை அள்ளி விடறவங்கதான் அதிகமா இருக்காங்க.

அதோட மட்டுமில்லாம, பொதுவாகவே மற்றவங்களோட குறைகள்தான் நம் கண்ணில் அதிகம் படும்; நிறைகள் கண்ணில் படுவது அபூர்வம். அதனாலதான் நாம் மனதார பாராட்டுவதும் அபூர்வமா இருக்கு போல.

இப்படி செய்து பார்க்கலாம்… ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒருத்தரையாவது உண்மையா பாராட்டணும் அப்படின்னு வச்சுக்குவோம். அந்த ஒருத்தர், நம்ம குடும்பத்தில் ஒருத்தரா இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்கிறவரா இருக்கலாம், ஏன், காய்கறிக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அன்றைக்கு முழுக்க நாம சந்திக்கக் கூடிய நபர்களில் யாராக வேணும்னாலும் இருக்கலாம்.

ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.

எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க அது! எங்கேயும் எப்பவும் நல்லதை மட்டுமே பார்க்கப் பழகுவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி ஒரு நல்ல விஷயத்தை எடுத்து, நீங்க ஒருத்தரை மனதார பாராட்டினீங்கன்னு வைங்க! அந்த சந்தோஷத்தில் அவர் இன்னொருவரிடம் அன்பாக நடந்து கொள்வார்; வேறொருவரை பாராட்டுவார், பிறகு அவங்க தங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் சிலரிடம் கொடுப்பாங்க… நீங்க ஆரம்பிச்ச சந்தோஷம் இப்படியே பரவிக்கிட்டேதானே போகும்!

அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது…

ஆக மொத்தம், ஜலதோஷம் போல சந்தோஷமும் ஒரு தொற்று வியாதிதான்!
(அப்பாடி, தலைப்பு வந்திருச்சா?)

பரப்புவோமா? :)

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி: முகஸ்துதி பண்றது, காக்கா பிடிக்கிறது அப்படிங்கிற பிரயோகங்கள் எப்படி வந்தது?

அன்புடன்
கவிநயா

பி.கு.: படத்துக்கு நன்றி: தினமலர்

Saturday, February 13, 2010

அதிசயக் குளம்!


வற்றாத குளமொன்று
வாகாக வெட்டி வைத்தேன்
கருத்தோடு தூரெடுத்து
கச்சிதமாய்க் கட்டி வைத்தேன்

அள்ள அள்ளக் குறையாத
அதிசயக் குளம் இதுவாம்
சொல்லச் சொல்ல இனிப்பாகி
சொக்க வைக்கும் குளம் இதுவாம்

புது முகம் பழைய முகம்
பேதங்கள் பார்ப்பதில்லை
வழிப்போக் கரானாலும்
வரம்புகள் ஏதுமில்லை

பாலை யெல்லாம் சோலையாக்கும்
கோழை யென்றால் வீரமாக்கும்
காய்ந்த தெல்லாம் தழைக்கவைக்கும்
பாய்ந்து மனம் குளிரவைக்கும்

ஆழ் மனதால் நெய்தகுளம்
ஆசை யாகச் செய்தகுளம்
இறைக்கக் குறையாத இன்பக்குளம் -
இந்த அன்புக்குளம்!


***

காதலர் தினம்னா காதலரின் தினம் மட்டும்தானா என்ன? அதையே அன்புள்ளங்களின் தினம், அல்லது அன்பின் தினமாகவும் கொண்டாடலாம்தானே. நீங்க ஒவ்வொருத்தரும், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும், ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப நல்ல்ல்லா இருக்கணும்னு மனமார வாழ்த்தி வேண்டிக்கிறேன்.

அன்புடன்
கவிநயா

Sunday, July 5, 2009

அன்பாய் இரு. பாசமாய் இராதே!

ஆன்மீகத்தில் அடிக்கடி காதில் விழுவது இதுதான். பற்றில்லாத அன்பே செலுத்த வேண்டும் என்பது. அதனால் இந்த கேள்வியும் அடிக்கடி எழும்: அன்புக்கும் பாசத்துக்கும் என்ன வித்தியாசம்? இது பற்றி ஒரு உரத்த சிந்தனை… என் புரிதல்கள் தவறாகவும் இருக்கலாம். உங்க எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க!

அன்பு என்பது, அதிலும் தூய்மையான அன்பு என்பது என்ன? இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached)! தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம்! விதின்னு ஒண்ணு இருந்தாலே, அதற்கு விலக்குன்னும் ஒண்ணு உண்டு :) ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.

ஒரே வரில சொல்லணும்னா, தூய அன்பு என்பது, சுயநலம் கலக்காதது. எதிர்பார்ப்புகள் இல்லாதது.

உதாரணத்துக்கு, தம்பதிகளுக்கிடையில் இருக்கும் அன்பை எடுத்துக்கலாம். அவங்க அன்பில் possessiveness, அதனால் ஏற்படற அசூயை, இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். அளவுக்கதிகமான அன்பினால்தான் அப்படி ஆகிறதுன்னு நாம சொல்றோம். ஆனால், அப்படி இருக்கிறதுக்கு பேரு, அன்பில்லை. பாசம்! பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும்! இதுவே தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட!

“சராசரி மானுடர்க்கு எப்படி சுயநலம் இயல்பாயிருக்கிறதோ அது போல் தெய்வ நிலை அறியும்போது பெரியோர்க்கு பரோபகாரம் இயல்பாகும்; அன்பு பெருகும். மனம் கசடுகளை கொண்டிருக்கும் வரை அதில் ஏற்படுவது அன்பாயிருக்காது. பாசமாகத்தான் இருக்கும் என்று யோகம் சுட்டிக் காட்டுகிறது." – ‘நம்பிக்கை’ குழுமத்தில் ஸ்ரீ காழியூரர்.

'என் உடைமை' என்ற எண்ணம், சுயநலம், பொறாமை, கோபம், முதலான இந்த மாதிரி குணங்களைத்தான் ஸ்ரீ காழியூரர் “மனக் கசடுகள்” என்று குறிப்பிடுகிறார்.

எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து (பாண்டிச்சேரி) ஸ்ரீ அன்னை சொல்வதை கேளுங்க:

“one must learn how to love better: to love with devotion, with self-giving, self-abnegation, and to struggle, not against love itself, but against its distorted forms: against all forms of monopolising, of attachment, possessiveness, jealousy, and all the feelings which accompany these main movements. Not to want to possess, to dominate; and not to want to impose one's will, one's whims, one's desires; not to want to take, to receive, but to give; not to insist on the other's response, but be content with one's own love; not to seek one's personal interest and joy and the fulfillment of one's personal desire, but to be satisfied with the giving of one's love and affection; and not to ask for any response. Simply to be happy to love, nothing more. - The Mother [CWMCE, 8:302-03]”

எவ்வளவு அழகா சொல்லியிருக்கிறார்!

கொஞ்சம் சிந்தித்தாலே தெரியும், நாம் பிறர் மீதும், ஏன், ஜடப் பொருட்கள் மீதும் கூட எவ்வளவு உரிமையும் பற்றும் பாசமும் கொண்டிருக்கிறோம் என்பது! அதனால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.

மனித இயல்பே சுயநலம்தான், சொந்தம் கொண்டாடுதல்தான், எனும்போது அதனை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் அதே காரணத்தால்தான், இந்த குணங்களை மாற்றிக் கொண்டால், அல்லது, மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் கூட, மனிதன் தெய்வத் தன்மை கொண்டவனாகி விடுகிறான்!

நாம் இறைவன் மீது வைக்கும் அன்பும் இவ்விதமே தூயதாக இருக்க வேண்டுமென்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரும்.

ஆன்மீகமோ, இல்லையோ, இப்படிப் பட்ட தூய அன்பை பழகிக் கொண்டால், அது தினசரி வாழ்விலும் மிகுந்த மன அமைதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!

‘அன்புடன்’
கவிநயா

(நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது! :)

Wednesday, November 12, 2008

அமைதியின் அருமையை உணர்வோம்!

ரெண்டு பேருக்குள்ளேயோ, இல்லை ரெண்டு குடும்பங்களுக்குள்ளேயோ, இல்லை ரெண்டு நாடுகளுக்குள்ளேயோ, கருத்து வேறுபாடோ, சண்டையோ, ஏற்பட என்ன காரணம்? ரொம்ப சுலபமான பதில்தான். உட்கார்ந்தோ, ரூம் போட்டோல்லாம் யோசிக்க வேணாம். ரொம்ப அடிப்படையான ஒரு உணர்வு, “நான்”, “எனது”, “நீ சொல்லி நான் கேட்கிறதா” என்கிற எண்ணம் (ego) தான் இதுக்குக் காரணம். சின்னக் குழந்தைங்க சண்டையில இருந்து, குடும்பச் சண்டைகள்ல இருந்து, பெரிய பெரிய யுத்தங்கள் வரைக்கும் யோசிச்சுப் பாருங்களேன்.

பதிவுலகத்தில இருந்தே ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடறோம்னு வைங்க. அதுக்கு அவங்க பதில் எழுதலைன்னு வைங்க. அதனால நமக்கு வருத்தம் ஏற்படுது. ஏன்? ஒண்ணு, “நான்” இட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் அவங்க எப்படி பதில் எழுதாம இருக்கலாம், அப்படிங்கிற எண்ணம். ரெண்டு, அவங்களைப் பாராட்டுவது மட்டுமே நம்ம நோக்கமா இருந்திருக்கணும், அதை விட்டுட்டு நம் பாராட்டுக்கு அவங்க பதில் எழுதணும்னு “எதிர்பார்க்கிறது”. (“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அப்படின்னு கண்ணன் சொன்னது நினைவு வருதா?)

இதே போலத்தான் வாழ்க்கையில ஏற்படற எல்லா விதமான மன வேற்றுமைகளுக்கும், அதனால ஏற்படற துன்பங்களுக்கும், நாமேதான் காரணம். அதனாலதான் அந்தக் காலத்தில இருந்து எல்லா ஆன்மீகவாதிகளும், “நான்”, “எனது”ங்கிற எண்ணத்தை ஒழிக்கணும்னு சொல்லி வந்திருக்காங்க.

சரி… இதுக்கு என்னதான் தீர்வு? சண்டையை நிறுத்திட்டு, ஒருத்தராவது “நான் சொல்றதே சரி” ங்கிற எண்ணத்தை விட்டு இறங்கி வந்து, அடுத்தவர் சொல்றதை மதிச்சு காது கொடுத்து கேட்கணும். இந்த உலகத்தில பிறந்திருக்கிற, உலகத்திற்கு வந்திருக்கிற, “எல்லாருமே” “பிழைக்கத்தான்” வந்திருக்கோம்கிறதை மறக்காம, ஒருத்தொருக்கொருத்தர் அன்பா அனுசரணையா இருக்க பழகிக்கணும். அப்படி ஒரு காலம் விரைவில் வர, உலகெல்லாம் அமைதி நிலவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.

இது வரை பொறுமையா படிச்சதுக்கு நன்றி. அப்படியே இதோ இந்தக் கவிதையையும் படிச்சிடுங்களேன்… :)


வேண்டும்...

அன்பென்னும் ஓருணர்வே
அகிலத்தை ஆள வேண்டும்!

அகந்தை இல்லா நெஞ்சம்
அனைவருக்குமே வேண்டும்!

மனிதத்தை மறக்க வைக்கும்
மதவெறியை ஒழிக்க வேண்டும்!

சாதிகளும் பேதங்களும்
சடுதியிலே கரைய வேண்டும்!

போரோடு போர் தொடுக்க
புவியினர் புறப்பட வேண்டும்!

அமைதியின் அருமை தன்னை
அகிலத்தோர் உணர வேண்டும்!

இனம் மொழியாம் வேறுபாட்டை
இன்றே களைந்திடல் வேண்டும்!

உலகமெல்லாம் ஒர் குடிலாய்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்!!


--கவிநயா