Showing posts with label கவிநயா. Show all posts
Showing posts with label கவிநயா. Show all posts

Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!

நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம் தரும் நாள்
(நவ)

தேவியர்கள் மூவரும் நம்
இல்லம் தேடி வரும் நாள்
(நவ)

துர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்
(நவ)

அலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி அவற்றை அருள்பவளானாள்
(நவ)

நாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)


--கவிநயா

 

Saturday, August 16, 2014

குக்கூ கனவு

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


சுப்புத் தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா! கேட்டுக்கிட்டே வாசிங்க!



ஒற்றைக் குயிலொன்று ஒருமரத்தில் நின்று
குக்கூ கூவென்று கூவுதடி;
கண்ணன்கை வேய்ங்குழல் தானென்று மயங்கி
சின்னக் குயில்கூத் தாடுதடி!

புற்றுக்குள் ளிருந்து நாகமொன்று வந்து
சீறிப் படமெடுத் தாடுதடி;
சென்னியில் நர்த்தனம் செய்வான் கண்ணனென்று
கற்பனை அதற்கு ஓடுதடி!

கானமயில்களு திர்த்திட்ட தோகைகள்
காற்றினி லேறிவிரை யுதடி;
மாயக்கண்ணன் தன்னைச் சூடிக்கொள்வா னென்ற
எண்ணத்தி லேவிளை யாடுதடி!

வானமெங்கும் சின்னச் சின்னக் கருமேகம்
சூல்கொண்டு மெள்ளவே நாணுதடி;
நீலகண்ணன் தன்னைப் போர்த்திக் கொள்வானென்ற
நிச்சயத் துடனே தோணுதடி!

பட்டுப் பூச்சிகளும் இட்டமுடன் வந்து
பட்டுத் துகிலாக வேண்டுதடி;
இட்டமுடன் அந்தக் குட்டிக் கண்ணன்தம்மை
ஆடையாக்கிக் கொள்ள ஏங்குதடி!

மல்லிகை மந்தாரம் பாரிஜாத மெல்லாம்
மலர்ந்திதழ் விரித்துச் சிரிக்குதடி;
தங்கஎழில் கண்ணன் வண்ணமணி மார்பில்
தவழ்ந்திடக் கனவு காணுதடி!

--கவிநயா

முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டு தளத்தில் இட்டது...

Sunday, September 15, 2013

காணாமலே வந்த காதல்!

முதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக் கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக் காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.

அவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில் எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக் காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம் இன்னும்தான் அதிகமாகிறது!

“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை!”

“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான் அவளுக்கு. அவனைத் தவிர!”

“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா?”

“நீயும் காதல் வயப்பட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்!”

“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ, இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.

“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச் சட்டை செய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்!”

“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன் போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா?”


இவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.

“அவன் எப்படி இருப்பான்? நான் கற்பனையில் கண்டது போலவே இருப்பானா? என்னைக் கண்டதும் என்ன நினைப்பான்? என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு? நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா? காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது?  அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்?”

“ஏனடி இப்படியெல்லாம் கவலைப்படுகிறாய்? அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான், பாரேன்!”

அப்போதுதான் உணர்கிறேன், என் மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று! எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக் கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து சூடாவது எனக்கே தெரிகிறது.

“ஐய... வெட்கத்தைப் பார்! எங்களுக்குத்தான் உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே!”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.

“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம் அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “

“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்!” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி ஒருத்தி கேட்கிறாள்.

“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதலை எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற மனநிலையிலா இருந்தேன்?”

அந்தக் கடிதம் என் மனக் கண்ணில் ஓடுகிறது…

“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப் பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம் அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து என்னைக் காப்பாற்று.”

எந்தப் பெண்ணின் முதல் காதல் கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.

நாளைக்குத்தான் கௌரி பூஜை.

அவன் வருவானா?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.indianetzone.com/photos_gallery/42/Rukmini-harana.jpg
 
பி.கு: இது சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டில் வெளி வந்த பதிவு.
 

Friday, August 20, 2010

வருவாய் வருவாய் வரலக்ஷ்மி!

அனைவருக்கும் வரலக்ஷ்மி நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்.




வருவாய் வருவாய் வரலக்ஷ்மி
தருவாய் தருவாய் வரம் லக்ஷ்மி

ஆழியில் அலைகளில் உதித்தவளே - எங்கள்
ஊழ்வினை அழித்து காப்பவளே
செல்வங்கள் அனைத்துக்கும் அரசியளே – உன்னை
சொல்கொண்டு பாடிட மகிழ்பவளே

எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!


--கவிநயா

Thursday, October 2, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. ஸ்ரீலக்ஷ்மி தேவி அவள் பதங்கள் சரணம் !




தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/murtis/lakshmi.jpg