
திருப்பள்ளியெழுச்சி - 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!
இன்றுடன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!!