நலந்தானே?
இப்பல்லாம் அடிக்கடி பார்க்க முடியறதில்லை, ஆசை இருந்தாலும். அதனால பதிவிடும் இடைவெளி அதிகமாகிக்கிட்டே இருக்கு, பதிவுகள் படிக்கிற இடைவெளி அதை விடவும் அதிகமாகிக்கிட்டிருக்கு :(
வலது பக்கம் ஒரு வாரமா ஓடிக்கிட்டிருக்கே, பார்த்தீங்களா?
//Wrap yourself in the thought of God. His holy Name is the power of all powers. Like a shield it deflects all negative vibrations.
- Sri Pramahamsa Yogananda//
இதைப் பற்றித்தான் இன்னிக்கு பேசப் போறோம்.
நாம் நினைக்கிற ஒவ்வொரு நினைப்புக்கும், ஒவ்வொரு எண்ணத்துக்கும், ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தி அந்தந்த எண்ணத்துடைய தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும்.
நீங்களே அனுபவத்தில் பார்த்திருப்பீங்க… எதற்காகவாவது ரொம்ப தீவிரமா, மனமுருகி பிரார்த்தனை செய்தீங்கன்னா, அது கண்டிப்பா நடக்கும். கூட்டு பிரார்த்தனைகள் எதற்காக செய்யறோம்? அத்தனை பேருடைய நல்ல எண்ணங்கள், மனம் ஒன்றி பிரார்த்திக்கும் போது ஒன்று சேர்ந்து பெரும் சக்தியாகிறது. அதனாலதான் கூட்டு பிரார்த்தனை செய்யும் பழக்கம் ஏற்பட்டது.
நல்ல எண்ணங்களுக்கு இப்படிப்பட்ட சக்தி இருப்பது போலவே, தீய எண்ணங்களுக்கும் உண்டு. ஒரு விஷயத்தை நினைச்சு ரொம்ப பயந்துகிட்டே, அல்லது ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டே இருந்தோம்னா, அந்த விஷயம் கண்டிப்பா நடந்துடும். ஏன்னா, நாம அந்த விஷயத்தை திரும்பத் திரும்ப நினைச்சுக்கிட்டு, பயந்துகிட்டு இருக்கிறதால, அந்த எண்ணத்தையே வலிமையுள்ளதாக ஆக்கிடறோம்; அதன் மூலம் அது நடக்கறதுக்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தர்றோம்.
நாம ஏதாச்சும் நினைச்சுக்கிட்டே இருக்கிற போது மேலே போகிற கந்தர்வர்கள், ‘ததாஸ்து’, அப்படின்னு சொன்னாங்கன்னா, அது பலிச்சிடுமாம். அதனால எப்பவும் நல்லதே நினைக்கணும்னு சின்ன வயசில் அம்மா சொன்னது நினைவு வருது. ‘ததாஸ்து’ சொல்லிடுவாங்களேங்கிற பயத்திலாவது நல்லதை நினைப்போமேனுதான் பெரியவங்க அப்படில்லாம் சொல்லி வச்சிருக்காங்க.
எதிர்மறை (negative) எண்ணங்களும் உணர்வுகளும் இல்லாம மனுஷன் இருக்க முடியுமா, அப்படிங்கிற கேள்வி வரலாம். அப்படி கேள்வி வரதே மனுஷன் என்கிறதாலதான்; ஆறறிவு இருக்கிறதாலதான். அதனால் அவனால் அதை கடக்கவும் முடியும் என்பது நிதர்சனம்.
இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கு அது இன்னும் சுலபம். ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட எண்ணம்/பயம்/உணர்வு வரும்போது இறைவனின் நாமத்தை ஜபிச்சா போதும். வேற ஒண்ணுமே செய்ய வேண்டாம்… அப்படின்னு நான் சொல்லலைங்க, ஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் சொல்றார்.
எப்படிப்பட்ட எதிர்மறை எண்ணத்தின் சக்தியையும் அழித்து விடும் திறன், இறைவனின் நாமத்திற்கு மட்டுமே உண்டு. எந்த விதமான தீங்கும் நம்மை அண்டாமல் காக்கின்ற அற்புதமான கவசம் அது, அப்படிங்கிறார், அவர். அது நம்மைப் பற்றிய பிறருடைய எதிர்மறை எண்ணமா இருந்தாலும் சரி, அல்லது நம்முடையதாகவே இருந்தாலும் சரி.
அதனால்,
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
அன்புடன்
கவிநயா