Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, March 13, 2011

அவளும் நானும்

வெள்ளிக்கிழமை. கோயிலுக்கு போகலாமா வேண்டாமான்னு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. எங்க ஊர் கோவிலில் மகாலக்ஷ்மிக்கு அபிஷேகம், லலிதா சகஸ்ரநாமம், இதெல்லாம் வெள்ளிக்கிழமை விசேஷங்கள். எனக்கும் அன்றைக்கு ஒரு நாள்தான் உருப்படியா கோவிலுக்கு போற வழக்கம். அப்படின்னா இந்த தரம் மட்டும் என்ன யோசனைங்கிறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு.

போன வாரம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது ஏதோ ஒரு காரணத்தால் மனசு ஏற்கனவே சஞ்சலப் பட்டுக்கிட்டிருந்தது. கோவிலுக்கு போயி, நல்லாதான் அபிஷேகம், அலங்காரம், எல்லாம் பார்த்தேன், லலிதா சகஸ்ரநாமமும் சொன்னேன். வழக்கமா தீபம் காண்பிச்ச பிறகு, அர்ச்சகர் தீபம், தீர்த்தம், சடாரி, பிரசாதம், இதெல்லாம் ஒவ்வொண்ணா குடுப்பார். தீபம், தீர்த்தம், ரெண்டும் கிடைச்சது. அடுத்ததா சடாரிக்கு குனியறதுக்காக, கைப்பையெல்லாம் கீழே வச்சுட்டு தயாரா நின்னேன்.. சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் நின்னவங்களுக்கு வரிசையா சடாரி வச்சுக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்துட்டு, போயே போயிட்டாரு! எனக்கு ஒரே வருத்தமா போச்சு. ஏற்கனவே வேற மனசு கஷ்டமா இருந்ததா, அதோட இதுவும் சேர்ந்துக்கிச்சு. சரி, என் மேல அவளுக்கு ஏதோ கோவம் போல, அப்படின்னு நினைச்சுக்கிட்டே வந்துட்டேன்.

அதனாலதான் இந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறது பத்தி சின்ன தயக்கம். ஆனா பழக்கம்கிறது விடக் கூடியதா என்ன? 7 மணிக்கு போய் அவள் முகத்தை பார்க்காமல் எப்படி இருக்கறது? சரின்னு அவகிட்ட ஒரு டீல் போட்டுக்கிட்டேன், “இன்றைக்கு எனக்கு எல்லாமே குறையில்லாம கிடைக்கணும், இல்லன்னா அடுத்த வாரத்திலிருந்து கோயிலுக்கு வர மாட்டேன், சொல்லிட்டேன்” அப்படின்னு!

அபிஷேகம் நல்லா முடிஞ்சது. பச்சைப் பட்டுப் புடவையில் அவ்ளோ அழகா இருந்தா. அர்ச்சனைக்கு குடுத்தவங்க யாரோ பூ வாங்கிக்கிட்டு வந்திருந்தாங்க, அந்த பச்சை புடவைக்கு பொருத்தமா, அதே பச்சையில் பூ. எப்படி அமையுது பாரு, அப்படின்னு தோணுச்சு. அதையும் வைச்சோன்ன, அழகுக்கு கேட்கவே வேணாம்!

தீபம் முடிஞ்சதும், வழக்கம் போல, தீபம், தீர்த்தம்…, இப்படி ஒவ்வொண்ணா வந்தது. எனக்கும் கிடைச்சது. சடாரி கொண்டு வந்தார். என்னை மறக்கப் போறார்னு நினைச்சுக்கிட்டே, ஆனாலும் தயாரா நின்னேன். மறக்கலை. அப்பாடின்னு இருந்தது! அடுத்ததா பிரசாதம்.

பிரசாதம்னா எங்க ஊர் கோவிலில் பாதாம் பருப்பும், கல்கண்டும் கலந்த கலவை. சில சமயம் பழம். இன்றைக்கு பருப்பு கலவை. ரெண்டு வரிசையிலும் மாத்தி மாத்தி குடுத்துக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்தே மறந்துட்டார்! எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்? சின்னப் புள்ள மாதிரி எனக்கும் குடுங்கன்னு கையை நீட்ட வெட்கமா இருந்தது. அவர் வேற ஏதோ அவசரத்தில் இருந்தார்.

இப்படியாக, இன்றைக்கும் ஒரே வருத்தமா போச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம, அங்கேயே சில நிமிஷங்கள் அப்படியே நின்னுக்கிட்டிருந்தேன். எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. சந்நிதியிலிருந்து எல்லாரும் கலைஞ்சு போன பிறகு வழக்கம் போல பக்கத்தில் போய் விழுந்து கும்பிட்டேன். “அப்படின்னா நான் அடுத்த வாரத்திலிருந்து வர வேண்டாமா? இல்ல, என்னால வராம இருக்க முடியுதான்னு சோதிச்சு பார்க்கிறியா?” அப்படின்னு அவளைக் கேட்டேன். “அப்ப நம்ம டீல் படி இனி நான் வராம இருக்க வேண்டியதுதானா?” அப்படின்னு சொல்லும் போது கண் கலங்கிடுச்சு…

அப்பதான் இன்னொருத்தரும் சந்நிதிக்கு அருகில் வந்தார்… எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பர்தான். வந்து கையை நீட்டினார், நானும் என்னன்னே தெரியாம, அனிச்சையா, இயல்பா, கையை நீட்டினேன். என் கையில் அவர் என்ன கொடுத்திருப்பார்னு உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!

என் சந்தோஷத்தை சொல்லி முடியாது! அப்புறம் என்ன? அடுத்த வெள்ளியும் அவளை பார்க்கத்தான் போறேன்!

அன்னையின் திருவடிகள் சரணம்.

அன்புடன்
கவிநயா

பி.கு. பொதுவா சின்ன புள்ளங்களுக்குத்தான் கல்கண்டு, பாதாம்லாம் பிடிக்கும். அதனால கோவிலில் வாங்கற பிரசாதத்தை நானுமே அங்கே பார்க்கும் புள்ளைகளுக்கு குடுக்கறதுண்டு. ஆனா! நான் எவ்ளோ பெரிய (சின்ன) பிள்ளை! என் முகத்தில் என்ன எழுதியிருந்ததோ! எனக்கு குடுக்கணும்னு அந்த நண்பருக்கு தோணியிருக்கே… தோண வச்சிருக்காளே… அவளைப் போல யாருண்டு?