Sunday, November 26, 2017

நன்றி நவிலும் நாள்


இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில் நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி சொல்வது நல்லதல்லவா?

எங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான் கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.

மனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன் அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச் சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில் வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.

ஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப் பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி.

இன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருந்ததா? நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா? நன்றி சொல்லுங்கள்.  உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா? நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக் கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள் தானாக மறைந்து விடும்.

நமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில் சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின் மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.

“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


6 comments:

  1. துளசிதரன்: (நான் கீதாவுடன் எங்கள் தளத்தில் எழுதுபவன். அவர் நண்பர்.) மிக மிக அருமையான பதிவு கவிநயாம்மா. ஆம் நாம் இவ்வுலகில் நன்றி சொல்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தினமும்.ஒவ்வொரு நொடியும்,,இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.,நல்லதொடு நாளைச் சொல்லிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    கீதா: கவிநயாம்மா வெகு அழகான பதிவு. ஆம் ஒவ்வொரு நொடியும் நாம் நன்றி சொல்லவேண்டும். ஒவ்வொன்றிற்கும் அப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் நம் மனதில் மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்கலும் மட்டுமே இருக்கும்...எத்தனை இருக்கின்றன!! நடக்கின்றது...நம்மைச் சுற்றி எத்தனை அன்புள்ளங்கள்!! எல்லாவற்றிற்கும் சேர்த்து அதை அனைத்தையும் நமக்கு அளித்திருக்கும் அந்த இறைவனுக்கு நாம்நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கும் சுப்புத்தாத்தாவுக்கும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் அம்மன் பாடல் பாடும் போது அவளுக்கு நன்றி உரைக்கும் போதே!!!மிக்க நன்றி கவிநயாம்மா!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிதரன் ஐயா, கீதாம்மா, உங்கள் இருவரின் உணர்வு பூர்வமான பின்னோட்டங்களுக்கும்.

      Delete
  2. நன்றி சொல்ல வேண்டும் -- கவிநயாவிற்கு.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என்னுடைய நன்றிகள் ஜீவி ஐயா, வருகை தந்தமைக்கு...

      Delete
  3. நானும் நன்றி சொல்கிறேன்!.. தங்களது இனிய நட்பைத் தந்த இறைவனுக்கு, மங்கள வாரம் (செவ்வாய்) தோறும் மங்களகரமாக, அம்பிகைக்கு பாமாலை சூட்டும் தங்களுக்கு, தங்கள் மூலம் கிடைத்த இனிய நட்புறவுகளுக்கும் நல்ல விஷயங்கள் அனைத்துக்கும்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பார்வதி. நீங்கள் கொடுத்து வைத்தவை இப்போது திரும்பக் கிடைக்கின்றன!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)