
20.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.
போற்றி - யாவராலும் போற்றப்படுபவனே!
அருளுக நின் ஆதியாம் பாதமாலர் - எல்லாவற்றிற்கும் மூலமான நின் திருவடிகளை எமக்கு அருள்வாயாக!
அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் - எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் தளிர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக!
எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் - எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய பாதங்களை போற்றுகிறோம்!
எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் - எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மென்மையான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்!
எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் - எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளை போற்றுகிறோம்!
மால் நான்முகனும் காணாத புண்டரிகம் - திருமாலும் நான்முகனும் காண இயலாத தாமரை போன்ற பாதங்களை போற்றுகிறோம்!
யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள் - எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் பொன்னடிகளை போற்றுகிறோம்!
யாம் மார்கழி நீர் ஆடு - நாங்கள் உன்னைப் பாடிப் புகழ்ந்து மார்கழி நீராடுகிறோம்!
யாவராலும் போற்றப்படும் சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் மூலமான உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய திருவடிகளைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மலர் போன்ற மென்மையான பாதங்களைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளைப் போற்றுகிறோம்! திருமாலும் நான்முகனும் கண்டறியாத உன் தாமரை போன்ற பாதங்களைப் போற்றுகிறோம்! எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் உன் பொன்னடிகளைப் போற்றுகிறோம்! இவ்வாறு உன்னைப் பலவாறு போற்றி நாங்கள் மார்கழி நீராடுகிறோம்! உன் திருவடிகளைக் கொண்டு எங்களைக் காத்தருளல் வேண்டும்!
பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/
[இத்துடன் திருவெம்பாவை நிறைவு பெறுகிறது. கணபதிக்கும், ஈசனுக்கும், என் அன்னைக்கும், படித்த, படிக்கவிருக்கும், பின்னூட்டமிட்ட, இடவிருக்கும், அன்பர்களுக்கும், நன்றி!]
--திருச்சிற்றம்பலம்--


















