
கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென்று கும்மியடி!
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
வருந்துவோர்
எவரும் இருக்க மாட்டார்
நோயற்ற வாழ்க்கையை
குறைவற்ற செல்வமாய்
அடைந்து மகிழ்வோமென கும்மியடி!
அன்பு பெருகிடும்
பண்பு உயர்ந்திடும்
தீதொன்று பிறர்க்கு
நினைக்க மாட்டோம்
மக்கள்தம் சேவையே
மகேசன் சேவையாய்
எண்ணி மகிழ்வோமென கும்மியடி!
சந்திரனைக் காட்டி
சோறூட்டும் பிள்ளைக்கு
சந்திரனில் சென்று
சோறூட்டுவோம்
சூரியன் போலவே
ஒளிர்ந்திடுவோம் அறிவில்
சுற்றுப்புறத்தையும் காத்திடுவோம்!
இயற்கை அன்னையை
மதித்திடுவோம் நாங்கள்
காடுகள் மரங்கள்
அழிக்க மாட்டோம்
வனவிலங்கினத்தை
வேட்டையாடாமலே
விவேகமாகவே பராமரிப்போம்!
கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென கும்மியடி!
--கவிநயா