Sunday, March 25, 2012

பாவை வனம்



கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.

என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.

என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

Sunday, March 18, 2012

அவ்யாஜ கருணா மூர்த்தி

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

“ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் “தர மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. அவர் சொன்ன மாதிரியே அச்சு அசலாக இருக்காது. நினைவிலிருந்து எழுதுகிறேன். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

“அவ்யாஜ கருணா மூர்த்தி”. லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது. இதற்கு சுகிசிவம் அவர்கள் சொன்ன விளக்கம் தான் இதுவரை சொன்னது.

“வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணமில்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

எத்தனையோ செய்திகளைக் கேட்கிறோம், வாசிக்கிறோம், பார்க்கிறோம். ஆனால் சில செய்திகள் மட்டும் நினைவில் நின்று விடுகின்றன. அதைப் போலத்தான் சுகி.சிவம் அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்ட போதும். எங்கேயோ படித்த, கேட்ட கதைகளையும், செய்திகளையும், எப்படியோ கொண்டு வந்து பொருத்தமாக கோர்த்து விடுகிறார்! குறிப்பாக அன்னையின் இந்த நாமத்தைப் பற்றி விளக்கும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்கின்ற கதையை உதாரணமாகச் சொன்னார் பாருங்கள்… நானும்தான் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை! எனக்கு இந்த நாமத்தின் பொருள் அப்போது தெரியாதுதான்; தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் யோசிக்க வராது! ஹ்ம்… அதனால்தான் அவர் ‘சொல்லின் செல்வரா’க இருக்கிறார், நான் இப்படி இருக்கிறேன் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, March 11, 2012

செல்லக் குட்டிப் பாப்பா!



குட்டிக் செல்லப் பாப்பா பார்!
கட்டி வெல்லப் பாப்பா பார்!
கிட்டச் சென்று தொட்டுப் பார்!
பட்டுப் போல இருக்கும் பார்!

கையைக் காலை உதைக்கும் பார்!
காந்தம் போல இழுக்கும் பார்!
பையப் பையப் பேசும் பார்!
பொக்கை வாயில் சிரிக்கும் பார்!

கையில் விரலைக் கொடுத்துப் பார்!
கெட்டி யாகப் பற்றும் பார்!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பார்!
குதூ கலமாய்ச் சிரிக்கும் பார்!

பசி எடுத்தால் அழுதிடும்!
உறக்கம் வந்தால் உறங்கிடும்!
கவலை ஏதும் இன்றியே
களிப் புடனே வாழ்ந்திடும்!

குழந்தை போல நீ இரு!
குறைகள் இன்றி வாழ்ந்திடு!
வெள்ளை உள்ளம் கொண்டிடு!
அள்ளி அன்பைத் தந்திடு!

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.happybabysite.com/

Sunday, March 4, 2012

நீயே சக்தி!


சுப்பு தாத்தா பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!


சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!

அன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்!
அன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்!
உயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்!
அகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்!
அம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்!
அன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்!

சக்தியும் நீயே! சகலமும் நீயே!
வித்தும் நீயே! விளைவும் நீயே!

அச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்!
துச்சம் நீயென எதிரியை அழிப்பாய்!
நல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை!
தீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை!
சக்தியை உணர்ந்து செயல்படுவாய்!
சகத்தினை நீயே காத்திடுவாய்!

சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!!


--கவிநயா


நன்றி: வல்லமை (மகளிர் வாரச் சிறப்பிதழ்)
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/