Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

Thursday, August 28, 2014

ஓம் கணநாதா கஜானனா!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!




ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா
எந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா
வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

பாலும் தேனும் பாகும் பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா
பாகாய்க் கனியும் அன்பை அதிலே கலந்து தந்தோமே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மோதகத்துள்ளே பூரணம் வைத்துச் செய்து வந்தோமே கஜானனா
மோகங்கள் களைந்தெமைப் பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அருகம்புல் கூட அற்புதம் என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா
குறுகி உனைப் பணிந்து கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மூஷிகந்தன்னை வாகனமாக விரும்பி ஏற்றவனே கஜானனா
மூச்சுக் காற்றாலே உடலத்தைச் சுமக்க உதவி செய்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கள்ளங் கபடமற்ற பிள்ளைகள் விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா
வெள்ளை உள்ளங்களை விரும்பி அதிலே குடிபுகுவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கஜமுகங் கொண்டு கருணை பொழியும் கனிமுகத்தோனே கஜானனா
பஜனைகள் செய்துனைப் போற்றிப் பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா


--கவிநயா



Tuesday, December 31, 2013

அந்தப் பிள்ளை யாரு??

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

வந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி
வரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு?
கந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்
சொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

ஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு
ஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு?
பானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்
பத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன
மூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு?
மஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன
மகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல
அழகான தந்தமுள்ள பிள்ளை யாரு?
மாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி
வேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு
வஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு?
பிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம
நெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

எதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்
தடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு?
அன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்
பணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு!

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!


--கவிநயா

படத்திற்கு நன்றி...
 
 

Tuesday, September 18, 2012

கணபதி தாள்கள் போற்றி!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
நம்பிக்கை வைத்தோரைத் தும்பிக்கையான் காப்பான்.




கற்பகக் கணபதி பாடலை அற்புதமாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல! நீங்களும் கேட்டு, பாடி, விக்ன விநாயகனின் அருளைப் பெறுங்கள்!


பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!

சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன் சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!

சுழி போட்டுத் தொடங்கி விட்டால் தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!

மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக் காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!

அகத்தியருக் கருள்செய்த அத்திமுக நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!

வியாசருக் கருளிடவே ஒருதந்தம் உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!

கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள் களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!

நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம் தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!

--கவிநயா

நன்றி: வல்லமை

Wednesday, August 19, 2009

பிள்ளையாரே பிள்ளையாரே!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

விக்ன விநாயகன் வினைகளைத் தீர்க்கட்டும்!
நற்குண நாயகன் நானிலத்தைக் காக்கட்டும்!


பிள்ளையாரே பிள்ளையாரே - மிக
சுட்டித்தனம் கொண்ட எங்கள் பிள்ளையாரே!
பிள்ளையாரே பிள்ளையாரே - இந்த
பிள்ளைகளை காக்க வேணும் பிள்ளையாரே!

உலகத்தை சுற்றச் சொன்னால்
பெற்றவரை சுற்றிடுவாய்!
பாரதத்தை எழுதச் சொன்னால்
தந்தம்கொண்டு எழுதிடுவாய்!

அவல்பொரி கடலை யெல்லாம்
அளவின்றி தின்றிடுவாய்!
மோதகத்தைப் பார்த்து விட்டால்
மோகம்மிகக் கொண்டிடுவாய்!

பார்வ தியின் தலைமகனே!
பார்புகழும் கோமகனே!
கூர் மதியைக் கொண்டவனே!
கொஞ்சுதமிழ் நாயகனே!

மூஞ்சூறில் ஏறி வந்து
மூவுலகும் காப்பவனே!
நா மணக்க பாடுகிறோம்
நல்லவழி காட்டிடுவாய்!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/images/issues/mgl0903/im0903-06_pillaiyar.jpg

Sunday, July 26, 2009

கற்பக கணபதியே!



கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.

சுப்பு தாத்தா இந்த பாடலை  மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார்.  மிகவும் நன்றி தாத்தா!