Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Sunday, October 8, 2017

நினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்

வெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்து ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஆனால் இன்று என்னவோ எழுத வேண்டுமென்று தோன்றியது. இன்னதைப் பற்றி என்று குறிப்பாக ஏதும் இல்லை.

எண்ணங்கள் தளும்பாத நேரமே இல்லை.
சிலவற்றைப் பகிரலாம்.
சிலவற்றைப் பகிர இயலாது.
கரையைத் தொடாமல் உள்ளேயே மடிந்து விடும் சில அலைகளைப் போல
சில எண்ணங்களும் தளும்பி விழாமல் உள்ளேயே மறைந்து விடுகின்றன.

‘மடிந்து’ என்று சொல்லாமல், ‘மறைந்து’ என்று சொன்னதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்,
எந்த எண்ணமும் மடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு உணர்வு உண்டு, ஒரு சக்தி உண்டு. நாம் எவ்வளவு திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ, அதைப் பொறுத்தே அதன் சக்தி கூடவோ குறையவோ செய்கிறது. அதனாலேயே பெரியோர்கள் நல்ல எண்ணங்களையே விதைத்து, நல்ல எண்ணங்களையே வளர்க்கச் சொன்னார்கள்.

இந்த நிமிடம் மனம் அமைதியாக இருக்கிறது. “content” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல. ஆனால் “போதும்” என்ற நினைப்பு வந்து விட்டால் அங்கு வளர்ச்சிக்கு இடம் இல்லை என்றும் சொல்வார்கள். அந்த எண்ணம்தான் இந்தப் பதிவிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

“போதும்” என்று இருக்கிற நிலையில் இருப்பது நல்லதா, அல்லது “போறாது” என்ற வெறியுடன் வளர்ச்சிக்கான வழிகளை ஆலோசிப்பது நல்லதா?

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைந்துதானே ஆக வேண்டும். ஓடி ஆடி உழைக்கச் சக்தி இருக்கும் போதே இந்நிலை வருவது நல்லதா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி வந்து விட்டால் அதற்கு “சோம்பல்” என்ற பொருள் ஏற்படுமா?

சமீபத்தில் வேலையிலிருந்து Grace Hopper Celebration என்ற கூட்டத்திற்குப் (conference) போயிருந்தேன். க்ரேஸ் ஹாப்பர் என்ற பெண்மணியை கௌரவப் படுத்தும் வகையில் அனிடா என்ற பெண்மணி, பெண் தொழில் நுட்ப வல்லுநர்களுக்காகவே ஏற்படுத்திய இயக்கம். 3 நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், 18000 பெண் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் அளக்க இயலாத திறமைகளும், உச்சியைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் தெரிந்தது. அடிமட்டத்திலிருந்து வந்து, வாழ்க்கையில் பலவிதமாக அடிபட்டு, உச்சத்தைத் தொட்ட பல பெண்மணிகளை அங்கு பார்க்க முடிந்தது. அதில் சிலருடைய உரைகளைக் கேட்கவும் முடிந்தது.

என்னுடைய நிலையையும் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் நான் பார்த்த பெண்மணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. நான் யார்? தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்னுடைய இலக்குதான் என்ன? இது போன்ற பல கேள்விகளை மீண்டும் என்னுள் தூண்டி விட்டிருக்கிறது. விரைவில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்…

வாசித்ததற்கு நன்றி.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Monday, August 3, 2015

நெகிழ வைத்த வாழ்த்து


ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள் வந்தாலே பயமா இருக்கு இப்பல்லாம்! வயசு ஏறிக்கிட்டே போகுதில்ல, அதான். ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... எல்லாருக்குமே அப்படித்தானே? ஹி…ஹி…

இந்த வருடமும் என்னோட குடும்பத்தினர் மட்டுமல்லாம, எதிர்பாராத விதமா சில மாணவிகளிடமிருந்து, சில தோழிகளிடமிருந்து, இப்படியெல்லாம் வாழ்த்துகள் கிடைச்சது. (எதிர்பாராம கிடைச்சா சந்தோஷம். எதிர்பாராமா இருக்கறதால கிடைக்கலன்னா வருத்தமும் இல்லை! அதான் நம்ம பாலிஸி)

என்னோட அன்பான நாத்தனார் சொன்னதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. “அண்ணி உங்களுக்கு அத்தனை (சொல்ல மாட்டேனே!) வயசு இல்லை… உங்களுக்கு 18 வயசுதான் + அத்தனை வருஷ அனுபவம்”, அப்படின்னு! இது எப்படி இருக்கு!

எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி ஒரு வாழ்த்து லலிதாம்மாகிட்ட இருந்து, “அம்மன் பாட்டு” தளத்தில்: எதிர்பார்க்கவே இல்லை. அழுகையா வந்திருச்சு…

கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !


கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
 பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும்  !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !


அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள்  வாழ்த்துக்கள் !



அன்பைப் பொழிகிற அனைவரையும் அன்னையின் உருவாகவே காண்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

Sunday, June 16, 2013

இணையமே… இதயமே…



"I had a life once... now I have a computer." ~Author Unknown
 
போன வாரக் கடைசியில் எங்க வீட்ல திடீர்னு இணையம் வேலை செய்யலை! இணையம் வழிதான் தொலைபேசி, தொலைக்காட்சி, எல்லாமே. இந்த மாதிரி சமயங்கள்லதான் தெரியுது,  நாம எந்த அளவு இணையத்தை சார்ந்திருக்கோம்னு.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கணினியில் செலவிடாட்டா தூக்கம் வராது. சனிக்கிழமை மட்டும் விதி விலக்கு. முழுக்க நடன வகுப்புகள் இருக்கும், அதுலயே அசந்துடும். கணினியாவது ஒண்ணாவதுன்னு இருக்கும். ஆனா திரும்ப ஞாயிற்றுக் கிழமை தேட ஆரம்பிச்சிடும். கோடை விடுமுடுறைனால இந்த வாரத்தில் இருந்து நடன வகுப்புகளும் குறைஞ்சிடுச்சு.

இந்தியால இருக்கிற என் தங்கைகிட்ட பேசிக்கிட்டிருந்த போது சொன்னேன், "ஒண்ணுமே இல்லாம போரடிக்குதுடி”ன்னு. அவ சிரி சிரின்னு சிரிச்சிட்டு சொல்றா, “எங்க வாழ்க்கைய நீயும் ரெண்டு நாளைக்கு வாழ்ந்து பாரேன்”, அப்படின்னு! “என்னடி பண்றது, உனக்கு அப்படியே பழகிருச்சு, எனக்கு இப்படியே பழகிருச்சு”ன்னு சொன்னேன்.

“பாருங்க, என் தங்கை இப்படிச் சொல்றா”, அப்படின்னு என் தோழிகிட்ட சொன்னா, அவங்க அதுக்கு மேல சிரி சிரி! இது எப்படி இருக்கு? இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக”, அப்டின்னு சொன்னாரோ வள்ளுவர்? :)

இதைப் பற்றி புகார் குடுக்கறதுக்காக அந்த கம்பெனிக்கு தொலைபேசினா, பதிவு பண்ண தகவல்தான் (voice portal) வந்தது. அது நல்லாதான் வேலை செஞ்சதனால (முன்ன பின்ன செத்திருந்தாதானே சுடுகாடு தெரியும்?) நானும் நிஜ மனுஷங்களைக் கூப்பிடாம அதுலயே திங்கட்கிழமைக்கு ஆள் வந்து பார்க்கிறதுன்னு ஏற்பாடு பண்ணி வெச்சாச்சு.

திங்கட்கிழமை கூப்பிட்டு கேட்டா, “அப்படி எதுவுமே எங்க சிஸ்டத்துல இல்லை, நீங்க மறுபடி புதுசா புகார் குடுக்கணும். அதுக்கப்புறம் எப்ப முடியுதோ அப்பதான் தருவோம்”னு சொல்லிட்டாங்க! ரொம்ப டென்ஷனாயிடுச்சு. மறுபடி தொலைபேசில அந்த கம்பெனியக் கூப்பிட்டேன். இந்த முறை முன் ஜாக்கிரதை முத்தம்மாவாகி, நிஜ ஆள்கிட்டதான் பேசணும்னு முதல்லயே '0'வை அமுக்கிட்டேன்! ஒரு பெண்மணிதான் எடுத்தாங்க, பொறுமையாதான் பேசினாங்க, ஆனா செவ்வாய்க்கிழமைதான் முடியும்னு சொல்லிட்டாங்க. வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னாடி கூப்பிடுவாங்க, யாராவது வீட்ல இருக்கணும் அப்படின்னாங்க. எங்க ரெகார்டட் சிஸ்டத்தை இனிமே பயன்படுத்தாதீங்கன்னு வேற சொன்னாங்க!

இன்னொரு தரம் கூப்பிட்டா இன்னொரு ஆள் வருவாங்க, அவங்ககிட்ட மறுபடி கேட்டுப் பாருன்னு ஐடியா குடுத்தார், ரங்கமணி. சரின்னு மறுபடி கூப்பிட்டப்ப, வேற ஒரு பெண்மணி எடுத்தாங்க. அவங்களும், நான் சொன்னதையெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டாங்க. “என் தப்பில்லை, உங்க சிஸ்டத்து மேலதான் தப்பு. அது வேலை செய்யாதுன்னு எனக்கு எப்படித் தெரியும்?” அப்படின்னு சொன்னேன். “அச்சோ, இப்படியெல்லாம் உங்களுக்கு பிரச்சனை வருதே, பாவம்தான் நீங்க. ரொம்ப ஸாரி”, அப்படின்னு சொல்லி, “ஆனா உங்களுக்கு என்னால உதவ முடியாது, நான் வேற பகுதியில் வேலை செய்யறேன், உங்களுக்கு உதவ வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுக்கறேன்”னு சொல்லிட்டு, வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுத்தாங்க.

இப்ப வந்தவரு ஒரு ஆண்மணி. அதுவும் இந்தியர். குரலையும் பேசற விதத்தையும் கேட்டாலே தெரியுது. மற்றவங்களை மாதிரி இவர் தன்னை பேர் சொல்லி அறிமுகப் படுத்திக்கலை. மொட்டையா "ஹலோ… ஹலோ"ன்னாரு. என்னமோ தப்பான எண்ணுக்குப் போயிருச்சாக்கும்னு நினைச்சிட்டேன். பிறகு நானே எதுக்குக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அவருக்குப் பொறுமையும் இல்லை. அவர் சொல்றது ஏதாச்சும் புரியலைன்னு இன்னொரு தரம் கேட்டா கோவம் வேற வருது. சிடுசிடுப்பா பதில் சொல்றாரு. நியாயமா பார்த்தா கோவப்பட வேண்டியது நானு. ஆனா நான் பொறுமையா, நிதானமா, மென்மையா, நிலைமையை எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கேன். இத்தனைக்கும் இந்த உரையாடல்களை எல்லாம் ரெகார்ட் பண்றாங்க. அப்படியும் இவங்கல்லாம் இப்படிப் பேசறாங்க. ஆனா இவரு மறுபடியும் பார்த்துட்டு திங்கட்கிழமையே பார்க்க முடியும்னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் குடுத்துட்டாரு. அந்த வரை பரவாயில்லை.

திங்கள் மதியம் அந்த டெக்னீஷியன் கூப்பிட்டப்போ செல் போன்ல வேற கால்ல இருந்ததால எடுக்கல. இதென்னடா வம்புன்னு சொல்லி, இன்னும் ஒரு முறை கூப்பிட்டு, மறுபடியும் (நெசம்மா!) இன்னும் ஒரு நிஜ ஆள்கிட்ட பேசினேன். அவரும் ஒரு ஆண்மணி. அமெரிக்கர். அவ்வளவு அருமையா பொறுமையா பேசினாரு.

வாடிக்கையாளர் சேவையை நான் அவ்வளவா கூப்பிட்டதில்லை, இது வரை. ஆனா நிறைய பேரு இதைப் பற்றி புகார் பண்றதைக் கேட்டிருக்கேன். என் அனுபவம் மோசம் இல்லைன்னாலும், முன்னல்லாம் வாடிக்கையாளர்களை ராஜா மாதிரி நடத்துவாங்க. இப்பல்லாம் வேண்டாத விருந்தாளி மாதிரி நடத்தறாங்க. நாம தினசரி சந்திக்கிற, பழகற மனுஷங்ககிட்டயே அன்பா இருக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இங்கே, அன்பா, சிநேகமா இருக்கறதுக்குன்னே காசு (சம்பளத்தைத்தான் சொல்றேன்) குடுக்கறாங்க, அப்படியும் அதொண்ணும் காணும். தொலைபேசியில் மட்டும் சொல்லலை. கடைகளுக்குப் போகும் போதும் அப்படித்தான். சில கடைகள்லதான் வாடிக்கையாளர்களை மரியாதையா நடத்தறாங்க.

இதைப் பற்றிப் பேசும் போது பார்வதிஇராமச்சந்திரன் வல்லமையில் எழுதின கதை ஒண்ணு நினைவு வருது.

ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கத்தான் இருக்கு. ஆனா அதை வேலைக்குன்னு வர்ற இடத்தில் காண்பிக்கிறது நல்லதில்லை. இந்த விஷயத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை நினைச்சாதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். எப்பவும் புதுசா, பளிச்சுன்னு, முகம் சுளிக்காம சிரிச்சிக்கிட்டு, கலகலன்னு பேசிக்கிட்டு…. ஒரு நாள், ரெண்டு நாள்னா பரவாயில்லை. வருஷம் பூரா அப்படி இருக்கறது கஷ்டம்தான். ஆனா அவங்க தொடர்ந்து தினமும் வேலை செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ஒருத்தரோட பழகும்போது “இவர் நமக்கு எதுக்கு பயன்படுவார்” அப்படின்னு காரியவாதித்தனமா யோசிச்சு, ஆதாயம் இருந்தால் மட்டுமே பழகறவங்க அதிகம். அப்படியில்லாம, ஒருத்தரைச் சந்திக்கும்போது “இவருக்கு நாம எப்படி உதவலாம்?” அப்படின்னு நினைச்சே பழகணுமாம். அப்படிச் செய்தா, மனசுக்குள்ள நல்ல எண்ணமும், நட்பும், அன்பும், தானா வந்துரும். அப்படின்னா, மற்றவங்களுக்கு உதவறதையே வேலையா பார்க்க வர்றவங்க இன்னும் எவ்வளவு நல்லபடியா நடந்துக்கணும்!

(இணையத்திலிருந்து இதயத்துக்கு வந்துட்டோமா? :)

என்னமோ போங்க… நாமளாவது நம்ம வரைக்கும் நல்ல பிள்ளைகளா இருப்போம்!

அன்புடன்
கவிநயா 

Monday, March 18, 2013

மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 4

சென்ற பதிவின் தொடர்ச்சி...

குட்டி சைனீஸ் பிள்ளைகள் தேங்காய் உடைக்கத் தயாராக...



அன்று இரவு கோவிலில் இருந்து ஷட்டில் வண்டியில் மறுபடி தண்ணீர் மலைக் கோவிலுக்குப் போய் விட்டு வந்தோம். மறு நாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பால்குடம் எடுத்துக் கொண்டு போகத் தொடங்கி விடுவார்கள் என்று தெரிந்து கொண்டு, தைப்பூசத்தன்று அதி காலையில் நானும் நாத்தனாரும் சிவன் கோவிலுக்கு வந்து விட்டோம். நாங்கள்தான் முதலில். யாருமே, அர்ச்சகர்கள் கூட வந்திருக்கவில்லை. பிறகுதான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஒரு அர்ச்சகர் ஒவ்வொரு சந்நிதியாகப் போய் அபிஷேகம் செய்தார்; இன்னொருவர் ஒவ்வொரு சந்நிதியிலும் அலங்காரம் செய்தார்.

அலங்காரம் செய்யும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கிறது. கூட்டம் இல்லை என்பதாலோ என்னவோ, திரை போடாமலேயே அந்தக் கோவிலில் இருந்த குட்டி முருகனுக்கு அலங்காரம் செய்தார். அழகாக கண்களை எழுதி, இதழ்களை எழுதி, திலகமிட்டு, இப்படி நிமிடமாக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார்!

பால்குடங்கள்

பிறகு குடங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வந்தார்கள். பெயர் கொடுத்து, எண்ணிக்கை பார்த்து, பூஜை செய்து, அர்ச்சகரே பாலை ஊற்றித் தந்தார். பெரும்பாலும் பெண்கள்தான். வண்ண வண்ண மயமான ஆடைகளுடன் பலவித வயதுகளில் சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பால் குடம் எடுக்கிறார்கள்.

பால் குடங்கள் தண்ணீர் மலைக்குப் போய்ச் சேர்ந்த பின் அங்கே முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். அலங்காரம், தீபாராதனையுடன், தைப்பூசக் கொண்டாட்டம் முடிவடையும்.

நாங்கள் இருவரும் பால்குடம் எடுப்பதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு, கொஞ்ச தூரம் பின்னால் சென்றோம். பிறகு ஹோட்டலுக்குப் போய் சப்பிட்டு விட்டு, கணவன்மார்களைக் கூட்டிக் கொண்டு மறுபடியும் ஷட்டில் பிடித்து தண்ணீர் மலைக் கோவிலுக்குச் சென்றோம். 

முருகனைச் சுமந்து கொண்டு நேற்று வந்த வெள்ளி ரதம் ஒரு அறை(?) (ஷெட்)டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது. இரவு இரண்டரை மணி ஆகி விட்டதாம் வருவதற்கு. இந்த அளவு தாமதமாக இது வரை வந்ததே இல்லையாம். தேங்காய் உடைப்பது அதிகமாகி விட்டதால் தாமதம் என்றார்கள். 

 வெள்ளி ரதத்தின் பக்கவாட்டில் வேலைப்பாடுகள்...

சந்நிதியில் மூலவருக்கு அருகில், அவருக்கு சரியாக முன்னால், உற்சவ மூர்த்தியை வைத்திருந்தார்கள். அதனால் இருவரையும் சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதுவும், அந்த மலைக் கோவிலில் அழகாக வரிசைப் படுத்தி விட்டது போல் இங்கே செய்யாததால், முருகனின் தரிசனம் பெறுவது அத்தனை எளிதாக இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாத் திசைகளிலும் போய் முயற்சித்த பின், ஒரே ஒருவர் இரக்கப்பட்டு, நீங்களும் பாருங்கள் என்று இடம் கொடுத்தார். அங்கே போய் நாங்கள் ஒவ்வொருவராக அபிஷேகத்தைப் பார்த்தோம்.

அலங்காரம் முடிய நேரம் ஆகும் என்று தெரிந்தது. மதியம் மறுபடியும் கோலாலம்பூர் செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கிருந்த அன்னதான வரிசையில் சென்று நின்று கொண்டோம். தீபம் பார்க்காமல் சாப்பிடப் போகிறோமே என்று கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. தகரத்தில் மூடி மிகப் பெரிய கொட்டகை போட்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் 700 பேர் சாப்பிடும் படி மேசை நாற்காலிகள் போட்டிருந்தார்கள். ஒரு பந்தி (700) முடிக்க 20 நிமிடங்கள் என்று கணக்கு. சரியாக 700 பேர்களை உள்ளே விட்டார்கள். குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் வரை பந்தி நடக்குமாம். எக்கச்சக்க தொண்டர்கள், குட்டிப் பிள்ளைகள் எல்லோரும் பரிமாற, உதவி செய்யத் தயாராக இருந்தார்கள். மின் விசிறிகள் போடப்பட்டிருந்தன. டி.வி. மானிட்டர்கள் ஆங்காங்கே முருகனின் கர்ப்பக்கிருகம் தெரிகிற மாதிரி அமைக்கப்பட்டிருந்தன.

தண்டாயுதபாணிக்கு அலங்காரம் முடிந்து தீபம் காண்பித்த பின்னர், அன்ன பதார்த்தங்களுக்கு தீபம் காண்பிக்கப்பட்டு, பிறகே தொடங்குவார்களாம். இதனால் நாங்கள் உள்ளே சென்று ரொம்ப நேரம் சும்மா உட்கார்ந்திருந்தோம். அலங்காரம் முடிந்த பின் தீபத்தை டி.வி. மானிட்டர்களிலேயே பார்த்தோம். தீபம் பார்க்காமல் போகிறோமே என்ற குறையைக் குமரன் இப்படியாகத் தீர்த்து வைத்தான்!

அன்னதானம் அமர்க்களமாக இருந்தது, பருப்பு நெய் முதல் பாயசம் வரையில் ஒன்று விடாமல் செய்து விருந்து படைத்தார்கள். சாப்பிட்டு முடிந்த பின் மறுபடியும் வந்து முருகனைப் பார்த்து விட்டு பினாங்கிலிருந்து கிளம்பி, கோலாலம்பூருக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் தான் ‘பத்து மலை’ முருகனைப் போய்ப் பார்த்தோம். முதல் நாள்தான் தைப்பூசம் முடிந்திருந்த படியால் அதன் பாதிப்பு எல்லா இடங்களிலும் தெரிந்தது – குப்பைகள், மலையாகக் குவிந்திருந்த செருப்புகள், இப்படி. பிரபலமான அந்தப் பெரீய்ய முருகன் முன்னால் நின்று கொண்டிருந்தான். 

பத்து மலை முருகன்

பத்து மலைப் படிகள் குறுகலாகவும் உயரமாகவும் இருந்தன. அதனால் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது, தண்ணீர் மலையைக் காட்டிலும். ஒரு பெண்மணி வேண்டுதலுக்காக முழங்கால்களால் படி ஏறினார். குரங்குகள் வேறு அதிகம் இருந்தன. கோலாலம்பூரில் அடிக்கடி மழை பெய்து கொண்டே இருந்தது. அதுவும் அடை மழை! அதனால் பத்து மலைக் குகைக்குள்ளும் ஆங்காங்கே தேங்கிய தண்ணீர். மிதியடிகளைப் போட்டுக் கொண்டேதான் மேலே போனோம். தனியாக விட இடம் இல்லை. பலரும் அர்ச்சனைக்குப் பொருட்கள் வாங்கி விட்டு அங்கேயே விட்டுச் சென்றார்கள். கூட்டத்தைப் பார்த்து, நாங்கள் அர்ச்சனைக்கெல்லாம் வாங்கவில்லை.  அங்கிருந்த பையன், “வாங்கணும்னு இல்லை, இப்படியே போட்டுட்டுப் போங்க” என்றான். 

பத்து மலைக் குகை வாயில்                    பத்து மலைக் குகைக்குள்ளே...

அன்றைக்கு மதியம் செம்பருத்தி தோட்டமும், ‘ஆர்கிட்’ தோட்டம் பார்த்தோம். இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்றார்கள், ஆனால் நேரமின்மையின் காரணமாக போக முடியவில்லை.

அன்றைக்கு மாலை தோழியின் மகளுடைய திருமண வரவேற்புக்குப் போய் விட்டு, மறு நாள் காலை சென்னை!

நடுவில் சைனா டவுனுக்குப் போய் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணினோம். அங்கே நன்றாக பேரம் பேசலாம் என்று சொன்னதால். ஆனால் அப்படி ஒன்றும் பேரம் பேச முடியவில்லை. ஒரு அளவிற்கு மேல் குறைக்கவே இல்லை. வேண்டாம் என்று வந்து விட்டால், “சரிதான் போய்க்கோ”, என்று விட்டு விடுகிறார்கள். பின்னாடியே வந்தெல்லாம் கெஞ்சவில்லை! 


 ஆர்கிட் தோட்டத்திலிருந்து சில மலர்கள்...

மலேஷியா போகிறோம் என்றவுடனேயே என் தங்கை அங்கே அருமையான தோசைக் கல் கிடைக்கிறதாம், வாங்கிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தாள். கடை பெயரெல்லாம் கூட (ரமணி ஸ்டோர்ஸ்!) விசாரித்துச் சொல்லி விட்டாள்! அந்தக் கடையைத் தேடிப் பிடித்துப் போனால், அவள் சொன்னது போல் இல்லை. ஆனால் இரும்பிலேயே இலேசான கல் இருந்தது. அந்தக் கடையிலிருந்த பையன், ‘ஏன்க்கா, இங்கே இருக்கறதெல்லாம்  நம்மூர்ல இருந்துதான் வருது; நீங்க என்னடான்னா அங்கேருந்து இங்கே வந்து, அதையே வாங்கிட்டுப் போறீங்களே!” என்றான் :) கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, “எப்படா ஊருக்குப் போவோம்னு இருக்குக்கா”, என்றான். அதைக் கேட்ட போது வருத்தமாக இருந்தது :( அந்தப் பையனின் கனவுகள், கடமைகள் சீக்கிரம் நிறைவேறி அவன் ஊர் திரும்ப முருகன் அருளட்டும்.

தண்டாயுதபாணியின் திருவடிகள் சரணம். தண்டாயுதபாணியின் மேலான ஒரு பாடலை இங்கே கேட்கலாம்... எழுதும்படி ஊக்குவித்து, பிறகு பாடியும் இட்ட சுப்பு தாத்தாவிற்கு மிக்க நன்றி!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

முற்றும்.
(யாருப்பா அங்கே அப்பாடா’ன்னு சொன்னது?! :)