Showing posts with label குறுந்தொடர்கதை. Show all posts
Showing posts with label குறுந்தொடர்கதை. Show all posts

Saturday, July 17, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 3

(3)

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

ஆல்ஸைமர்ஸ். (தமிழில் அல்சிமர்).

டாக்டர் ஓரளவு கோடி காட்டுகையிலேயே நான் இந்த நோயைப் பற்றி முடிந்த போதெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். முதலிலேயே ஓரளவு அதைப் பற்றி அறிந்திருந்த போதிலும், மேலும் படிக்கப் படிக்க இது எவ்வளவு கொடுமையான நோய் இது என்று புரிய ஆரம்பித்தது.

"நான்" என்று எவற்றையெல்லாம் வைத்து நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோமோ அவற்றையெல்லாம் நம் கண் முன்னேயே சிறிது சிறிதாகக் கொள்ளையடித்து விடும் கள்வன்; நம் தனித்துவத்தை நலுங்காமல் பறித்துக் கொள்ளும் அரக்கன்; நம் நினைவுகளையும், குழந்தைகளையும், சொந்தங்களையும், நமக்கே இல்லாமல் செய்து விடும் கொடுங்கோலன்; என்பதெல்லாம் இந்த நோயைப் பற்றிப் படிக்கும் போது தெளிவாகியது.

இருந்தாலும் மனிதர்களுக்கே இயல்பான "நமக்கெல்லாம் அது வராது", என்ற முட்டாள்தனமான நம்பிக்கையும், நப்பாசையும் எனக்கும் இருந்தது, இன்று காலை வரையில். ஆசை நிராசையான பிறகு, "ஏன் எனக்குப் போய் வர வேண்டும்?" என்ற கேள்வியை விட என் மகளுக்கு நான் கொடுக்கப் போகும் துன்பங்களும், அவற்றைத் தடுக்க இயலாத என் கையாலாகாத நிலைமையையும் நினைத்துத்தான் மறுகுகிறது மனசு.

நிலைமை ரொம்ப மோசமாக ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகுமாம், டாக்டர் சொன்னார். இருந்தாலும் இப்போதே நான் மஞ்சுவிற்குக் கொடுக்கும் சிரமங்கள் அதிகமாகத் தோன்றுகிறது. உதவிக்கென்று வந்து விட்டு, பெரும் உபத்திரவமாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறேன்?

சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வதும், அடிக்கடி பல பொருட்களையும் மறந்து வைத்து விடுவதும், பழக்கமான இடங்களிலேயே வழி தவறித் தொலைந்து போவதும்... மஞ்சுவும், மாப்பிள்ளையும் கண்ணைப் போலத்தான் பார்த்துக் கொள்வார்கள். அதற்காக அவர்களாலும் எவ்வளவு நாளைக்கு முடியும்? யோசிக்க யோசிக்கத் தலை சுற்றியது. பெரு மூச்சுடன் எழுந்து படுக்கச் சென்றேன்.

ஒரு வாரம் ஓடி விட்டது. அதற்குள் பல விஷயங்களையும் யோசித்து, சில முடிவுகளுக்கு வந்திருந்தேன்.

என் பெயரில் இருக்கும் வீட்டையும், மற்றவைகளையும் நினைவு இருக்கும் போதே மஞ்சு பெயருக்கு மாற்றி விடுவது. என்னுடைய மறதிக்கு மருந்தாக வழக்கமாகப் போகும் இடங்களுக்கும், அங்கிருந்து வீட்டிற்கும், வரும் வழிகளை எழுதி எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்வது. என் பெயரையும், அட்ரஸையும் எந்நேரமும் என்னுடன் வைத்துக் கொள்வது. முடிந்த வரை மஞ்சுவுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பது. நிலைமை மோசமானால் சேர்த்து விட, இப்போதே ஒரு நர்ஸிங் ஹோம் பார்த்து வைப்பது.

இப்படியான சில முடிவுகளுக்கு வந்த பின் சற்றே அமைதியானாற் போல் இருந்தது மனசு.

அன்று சனிக்கிழமை. வழக்கம் போலக் குளித்து, பூஜை முடித்து, சமையலறையில் நுழைந்தேன். "பாட்டி, எனக்கு இன்னிக்குக் கேசரி பண்ணித் தர்றியா?" அம்முக்குட்டி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

சனி, ஞாயிறில் அவள் கேட்பதைச் செய்து கொடுப்பது என் வழக்கம். "கேசரிதானே, செஞ்சு தரேண்டா கண்ணா", குனிந்து அவளை அணைத்து முத்தமிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, சளசளவென்று ஏதாவது கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பாள், அம்முக் குட்டி. இதையெல்லாம் அனுபவிக்க இன்னும் எவ்வளவு நாளைக்கு எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?

சே, இந்தக் கண்ணீர் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து விடுகிறது. ரவையையும், சீனியையும் வெளியே எடுத்த வண்ணம், கண்ணீரை உள்ளிழுக்க முயன்றேன்.

"பாட்டீ, ஏன் அழற?" இந்தக் குட்டியிடமிருந்து தப்பவே முடியாது; கண்ணீருக்கிடையே பெருமிதப் புன்னகை விரிந்தது, இப்போது.

"இங்க வா, சொல்றேன்" அவளை அழைத்து என் மடியில் அமர்த்திக் கொண்டேன்.

"அம்மு, அன்னிக்கு ஒரு நாள், நாம ஒரு நர்ஸிங் ஹோம் போனோமே, ஞாபகம் இருக்கா?"

"ஓ. இருக்கே. நீ கூட உன் •ப்ரெண்ட ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்னியே?"

அந்த நர்ஸிங் ஹோமுக்குப் போனது மறக்க முடியாத நிகழ்ச்சியாகி விட்டது (இப்போதைக்கு).

அங்கு எதிர்பாரா விதமாக என்னுடன் வேலை செய்த ஒரு தோழியைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். எதிர்பார்த்தபடி, அவளுக்கு என்னைத் தெரியவில்லை. அவளுக்கு ஆல்ஸைமர்ஸ் முற்றிய நிலையில் இருந்தது.

ஏழைக் குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்து, தம்பி, தங்கைகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாளைக் கழித்து விட்டிருந்தாள். இந்த வியாதி இருப்பது தெரிந்த பிறகு, தனியாக வாழ முடியாத நிலை வரும் முன்னர் அவளே அந்த நர்ஸிங் ஹோமில் சேர்ந்து கொண்டு விட்டிருக்கிறாள். அவளைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை என்று அவளுடைய நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வந்தால் மட்டும் அவளுக்குத் தெரியவா போகிறது என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் யாராவது வந்தால்தானே அவளை நன்கு பார்த்துக் கொள்கிறார்களா, வசதிகள் நன்றாக இருக்கிறதா என்பதெல்லாம் கவனிக்க முடியும்?அவள் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தமாக இருந்தது. நாமாவது நினைவு இருக்கும் வரை அவளைப் போய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

"ஆமா. ரொம்ப நாளக்கி முன்னாடி, அந்தப் பாட்டி எனக்கு ரொம்ப ஃப்ரெண்டா இருந்தாங்க. ஆனா அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் எல்லாரையும் மறந்துட்டாங்க. என்னையும் அவங்களுக்கு ஞாபகமே இல்ல. அதே மாதிரிதான் எனக்கும் ஆகப் போகுதுன்னு டாக்டர் சொன்னாருல்லையா? அதனால இன்னும் கொஞ்ச நாளக்கப்புறம் உன்னயும், அம்மாவையும் கூட எனக்கு மறந்து போயிடுண்டா, கண்ணா", சொல்லும் போதே குரல் கம்மியது, எனக்கு.

என்னுடைய நிலைமை பற்றி அவளுக்குத் தேவையான அளவு சொல்லி இருக்கிறாள், மஞ்சு.

"பாட்டீ, உனக்கு என்னை மறந்து போனா என்ன, எனக்கு உன்னை ஞாபகம் இருக்குமே?"

பளிச்சென்று கேட்ட அம்முக்குட்டியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தேன்.

நான் மறந்தாலும், என்னை மறந்து விடாத உறவுகளைத் தந்த வரை, இறைவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் என்பதை ஒரு நொடியில் உணர்த்தி விட்டாள் அல்லவா என் அம்முக்குட்டி?


(நிறைவு பெற்றது)

-- கவிநயா

Thursday, July 15, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 2

(2)

முதல் பகுதி

வசதி இல்லாததாலும், பெண் பிள்ளைக்குப் படிப்பு அவசியமில்லை என்று என் பெற்றோர் நம்பியதாலும், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்ததே பெரிய விஷயமாய் இருந்தது.

தமக்கை இருவருக்கும் திருமணம் முடிந்த பின் எனக்கும் திருமணம் முடிந்தது. எனக்கு வாய்த்தவர் தங்கமானவராய் இருந்தார். அந்தக் காலத்திலேயே வரதட்சிணை வாங்காமல் என்னை ஏற்றுக் கொண்ட என் கணவரின் குடும்பம், என் குடும்பமாக மாற ரொம்ப நாள் ஆகவில்லை.

நான்கு வருடங்களில் மஞ்சுவைப் பெற்றெடுத்தேன். என்னைப் போன்ற வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்று இறுமாந்திருந்த வேளையில்தான் கண் பட்டாற் போல் அது நடந்தது; விபத்து ஒன்றில் சிக்கிய என் கணவர் கோமாவில் வீழ்ந்தார்.

அந்த ஒரு வருடமும் நரகம்தான். வயது சென்ற மாமனார், மாமியாருடனும், கைக்குழந்தையுடனும், நான் பட்ட மனக் கஷ்டத்திற்கும், பணக் கஷ்டத்திற்கும் அளவே இல்லை.

அருமைக் கணவர் பிழைப்பாரா என்று தெரியாமல், பிழைக்க வேண்டுமே என்று வேண்டியபடி சொந்தக் காலிலும் நிற்க முடியாமல் நான் பட்ட அவஸ்தையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வருடம் கழிந்த பின் என் கணவர் மற்றுமொரு முறை கண் திறக்காமலேயே இந்த உலகத்தை நீத்தார்.

அதன் பிறகு நானும் பலருடைய உதவியுடனும், பல விதமான சிரமங்களுக்கிடையில் பட்டம் படித்தேன். வேலைக்குப் போனேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை அறிந்து கொண்டேன். மஞ்சுவிற்கும் முடிந்த அளவு கற்றுக் கொடுத்தேன்.

இன்ஞினியரிங் படித்தாள். இப்போது காலேஜில் லெக்சரராக இருந்தபடி பி.எச்.டி. செய்கிறாள். இதற்கிடையில் அவள் விரும்பியவனுக்கே திருமணமும் முடித்தேன்.

அவளுக்குக் குழந்தை உண்டான போதுதான், "அத்தை, நீங்க எதுக்கு இன்னமும் வேலை செஞ்சுக்கிட்டு தனியா இருக்கணும்? எங்களோடயே தங்கிடுங்க. எங்களுக்கும் உதவியா இருக்கும்", என்று மாப்பிள்ளையே வற்புறுத்திய போது மறுக்க முடியவில்லை.

வாலன்ட்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு இங்கேயே வந்து விட்டேன். சம்பந்திமாரும் நல்லவர்களாக இருந்ததால், அவர்களிடமிருந்தும் இந்த ஏற்பாட்டிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இப்போது சமீப காலமாகத்தான் கொஞ்சம் பிரச்சினைகள் ஆரம்பம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால், ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொடுத்து, "இப்போதாவது என்னை நினைத்துக் கொள்", என்பார் போலும், கடவுள். அப்படித்தான் எனக்கும் இப்போது மறதியைக் கொடுத்து விட்டார்.

சமையல் சாமான்களிலிருந்து எல்லாவற்றையும் கை தவறி வைத்து விட்டு மணிக் கணக்கில் தேடுவது வழக்கமாகி விட்டது, எனக்கு. சில சமயம் என்ன தேடுகிறேன் என்பதே மறந்து விடும்!

ஒரு முறை என்னிடமிருந்த வீட்டுச் சாவியை எங்கோ வைத்து விட்டேன். அம்முக்குட்டியை ஸ்கூலில் இருந்து கூட்டி வர நேரம் ஆகி விட்டது. சாவியைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லை. பரவாயில்லை என்று கதவை இழுத்துச் சார்த்திக் கொண்டு போய் விட்டேன்.

திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது. மஞ்சுவோ, மாப்பிள்ளையோ வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி மஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவளோ அப்போதுதான் ஒரு வகுப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். உடனே வர முடியாத நிலைமை. அதனால் அவள் வரும் வரை நாங்கள் அதிகம் பழக்கமில்லாத அந்தப் பக்கத்து வீட்டில் இருக்க வேண்டி வந்து விட்டது.

மஞ்சு அன்றைக்கு என்னிடம் ரொம்பவே பொறுமை இழந்து விட்டாள். பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லாதிருந்திருந்தால், அன்றைக்கு அம்முக்குட்டியும் அவ்வளவு நேரமும் மழையிலேயே அல்லவா நனைய வேண்டி இருந்திருக்கும்?

மஞ்சு கோபித்துக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. வேடிக்கை என்னவென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது சாவி நான் எப்போதும் வைக்கும் இடத்திலேயேதான் இருந்தது. சரி, ஏதோ வயதாகி விட்டதால் கூடவே வரும் மறதி என்று என்னைத் தேற்றிக் கொண்டு, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றொரு முறை அப்படித்தான், ஒரு வெள்ளிக் கிழமை மாலை வழக்கம் போல் எங்கள் தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அன்றைக்கு ஏதோ விசேஷ பூஜை இருந்தபடியால் திரும்பும் போது இருட்டி விட்டது. நேரமாகி விட்டதே என்று எண்ணியபடி நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டேன்.

பத்து நிமிடங்களில் வந்து சேர வேண்டிய வீடு எங்கே போயிற்று? நாற் புறமும் சுற்றிச் சுற்றி ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே, இப்போது கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எந்த வீட்டைப் பார்த்தாலும் புதிதாக இருப்பது போல் இருந்தது. பீதி மனதைக் கவ்வ, கலவரம் வயிற்றைக் கவ்வியது.

பதட்டப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட வண்ணம், எங்கள் வீடு இருக்கும் தெரு பெயர் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம். சுத்தமாக நினைவில் இல்லை. வருடக் கணக்காகப் போகும் வழிதான். என்ன ஆயிற்று எனக்கு?

எவ்வளவு நேரம் அந்த இருட்டில் சுற்றினேனோ, ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாமல் கால்கள் பின்னியது. திடீரென்று என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. மஞ்சுவும் மாப்பிள்ளையும். அந்த நிமிடத்தில் கடவுளையே பார்த்த மாதிரி அப்படி ஒரு நிம்மதியாய் இருந்தது, எனக்கு…

ஆனால் எல்லாம் மஞ்சுவின் குரலைக் கேட்கும் வரைதான். "அம்மா, உங்கள எங்கெல்லாம் தேடறது?" அவள் குரலில் இருந்தது வருத்தமா, கோபமா?

மறு நாள் முதல் ஆரம்பித்தது, டாக்டர் விஜயம். இன்று காலைதான் எனக்கு என்ன பிரச்சினை என்று முடிவாகச் சொன்னார் டாக்டர்.


(தொடரும்)

Wednesday, July 14, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள்

(1)

நட்சத்திரக் குழந்தைகள் எல்லாம் என்ன காரணத்தாலோ வானப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட, வானம் வெறுமையாகக் காட்சி அளித்தது, என் மனசைப் போல.

நேற்றுப் பெய்த மழையில் சின்னக் குட்டையாகத் தேங்கியிருந்த தண்ணீரில் பிரதிபலித்த நிலவின் பிம்பத்தை, "ப்ளக்" என்று குதித்த தவளை ஒன்று கலைத்து விட்டுச் சென்றது.

மெல்லிய கொலுசுச் சத்தம் என் பின்னால் ஒலித்தது. மஞ்சுதான். மௌனமாக என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எத்தனையோ வருடங்களாக எங்கள் இருவரின் வம்புகளுக்கும், அரட்டைகளுக்கும், பிரச்சினைகளுக்கும், தீர்வுகளுக்கும் சாட்சியாக இருந்து வரும் நிலவு, இன்று எங்கள் அயர்ச்சி மிகுந்த மௌனத்தையும், அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் கழிந்த பின்னர், என் அருகில் நெருங்கி வாகாக அமர்ந்து கொண்ட மஞ்சு, என் மடியில் தலை வைத்து முகம் புதைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் சூடாக என் புடவையை நனைத்தது மஞ்சுவின் கண்ணீர்.

வாஞ்சையுடன் அவள் முகத்தில் விழுந்த கூந்தலை விலக்கி விட்டுக் கண்களைத் துடைத்து விட்டேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இதோ என் மடியில் படுத்து குழந்தையாய்க் கண்ணீர் விடுகிறாளே மஞ்சு, அவள் அப்படி ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை. அவளுக்கே ஏழு வயதில் தங்கப் பதுமை மாதிரி ஒரு மகள் இருக்கிறாள். இருந்தாலும், என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லையோ என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

நானும், அவளும், ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழப் பழகி விட்டோம். பெண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவுதான் சொன்ன போதிலும், நான் அவர்களுடன் வந்து இருக்கச் சம்மதித்தது பெரிய தவறு. ஆனால் அதைக் காலம் கடந்த பின் உணர்ந்து என்ன பயன்? கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த என் செல்வ மகளுக்கு என் இறுதிக் காலத்தில் சிரமத்தையும் துன்பத்தையும்தான் தரப் போகிறேன் என்பது என்னவோ உறுதியாகி விட்டது.

இன்று காலையில் டாக்டர் சொன்னதெல்லாம் கனவு போல இருக்கிறது; ஆனால் கனவில்லை என்று என் மடியில் இறங்கும் மஞ்சுவின் கண்ணீர் அறிவிக்கிறது.

அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அடுக்கடுக்காய் வந்த துன்பங்களைச் சகிக்க முடியாமல், "இறைவா, இந்த இருண்ட காலங்கள் எல்லாம் கனவாகப் போய் விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்", என்று மனம் நொந்து வேண்டிக் கொண்டிருக்கையில், வானில் போய்க் கொண்டிருந்த எந்தத் தேவனோ, "ததாஸ்து", சொல்லி இருக்க வேண்டும்.

என் அம்மா நான் சிறுமியாய் இருந்த போது சொல்லி இருக்கிறார். நினைவுகள் எல்லாம் எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டுமாம்; ஏனென்றால் வானத்தில் உலவும் தேவர்கள் எப்போதாவது "ததாஸ்து" என்று சொன்னால், அந்த சமயத்தில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது அப்படியே பலித்து விடுமாம்.

"ஏம்மா மஞ்சு, நீ வேண்ணா உள்ள போய் படுத்துக்கோ. நாளைக்கு ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குன்னியே?", என்றேன். காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். மடியிலேயே தலை அசைந்தது, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா".

அவள் முகத்தைத் திருப்பி, நெற்றியில் முத்தமிட்டேன். மென்மையாக விரல்களால் கூந்தலை வருடி விட்டேன். அழுகை சற்றே அடங்கினாற் போல இருந்தது. சிறு வயதில் இருந்தே அப்படித்தான், எவ்வளவுதான் அழுகையும், ஆத்திரமும் இருந்தாலும், என் கை பட்டவுடன் அமைதியாகி விடுவாள்.

"மஞ்சு, உள்ள போய் படுத்துக்கிறியா? காலைல காலேஜுக்குப் போகணுமே?" என்றேன்.

விருட்டென்று தலை நிமிர்ந்து, "என்னம்மா நீங்க, இப்பத்தானே கேட்டீங்க..." என்று ஆரம்பித்தவள், சட்டென்று அவளே மௌனமானாள்.

"ஆமா, இப்பத்தானே கேட்டேன். ஸாரிடா", என்னும் போது என் கண்கள் குளம் கட்டின.

"அம்மா, ப்ளீஸ்...", என்றவள், என்னை இறுகக் கட்டி, கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரிம்மா, நீங்களும் வாங்க, படுக்கலாம்", என்று எழுந்தாள்.

"இல்லடா, நீ போ. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்"

"சீக்கிரமா வந்துடுங்க, குட் நைட்"


(தொடரும்)

Sunday, July 27, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 5

(முதல் பகுதி; ரெண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நாலாம் பகுதி)

இன்னக்குதான் அந்தப் பொன்னான நாள். எங்க அப்பா அம்மாவப் பொறுத்த வரைக்கும். சாயந்திரம் என்ன பொண்ணு பாக்க வராங்க. யாரு என்னன்னு கேக்காதீங்க. நான் எதுவுமே கேட்டுக்கல. கேட்டு என்ன ஆகப் போகுது அப்படிங்கிற நெனப்புதான். காலைல என்னய வழக்கத்துக்கு மீறி ரொம்ப நேரம் தூங்க விட்டுட்டாங்க எங்கம்மா. எண்ணெயத் தேச்சு ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வந்தேன். என்னய ஒரு வேலயும் பாக்க விடல. “பேசாம இருடி.. வேல பாத்தா டயர்டாயிரும். போய் உக்காரு. நாம் பாத்துக்கிறேன்”ன்னு சொல்லிட்டாங்க. இப்பிடிப்பட்ட அம்மாவுக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நான் செஞ்சதில தப்பில்லன்னு மறுபடியும் தோணிச்சு. ஆனா, இந்த மனசு இருக்கே… அதுதான் மொரண்டு பண்ணிக்கிட்டே இருக்கு.

அதுக்கப்பறமும் நான் அவர நெனக்காம இருந்ததே இல்ல. தேவிகிட்ட கேட்டிருந்தா ஏதாச்சும் சொல்லியிருப்பா அவரப் பத்தி. ஆனா நான் கேட்டுக்கல. அவளும் சொல்லல. ஒரே ஒரு தரம், “ஏய், நாம ரெண்டு பேரும் மாத்ஸ்ல எவ்வளவு வாங்கினோம்னு சுந்தரண்ணா கேட்டாருடி”, அப்பிடின்னா. அதோட சரி.

காலேஜ் போக ஆரம்பிச்சோன்ன மத்த வேலைகள்ல அவர அப்பப்ப நெனக்காம இருந்தாலும், அவர நெனக்கும்போதெல்லாம் கூடவே தாள முடியாத ஒரு ஏக்கமும் வரும். கண்ணெல்லாம் கலங்கிரும். எதையோ எழந்துட்டாப்ல தவிப்பா இருக்கும். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வச்சுட்டு இயல்பா இருக்க முயற்சிக்கிறதுலயே இத்தன காலமும் ஓடிருச்சு. இப்ப கல்யாணத்த பத்தி பேச்சு வந்தோன்னதான் இதோட முழு பாதிப்பும் என் மனநிலையும் எனக்கே புரிய ஆரம்பிச்சுது.

ஆனா இப்ப என்ன செய்ய முடியும்? தேவிகிட்டயாவது சொல்லியிருக்கலாம்னு தோணுது இப்ப. மனசு பூரா இவ்ளோ அன்பை வச்சுக்கிட்டு… இது என்ன பைத்தியக்காரத்தனம், இது வாழ்க்கைடி… அப்பிடின்னு இந்த மனசு இப்பதான் இடிச்சுக் காட்டுது. எங்க அம்மா அப்பாவும் கண்ண மூடிக்கிட்டு காரியம் பண்ணுறவங்க இல்ல. அதுனால சொல்லித்தான் பாக்கலாமே அப்பிடின்னு தோணுது… இந்த மாப்பிள்ளய புடிக்கலன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட இன்னக்கி ராத்திரியே சொல்லிர வேண்டியதுதான்…

ஆனா… இத்தன வருஷத்துல…ஒரு வேள அவருக்கு… ஏற்கனவே கல்யாணம்… இந்த நெனப்பு வந்தோன்ன என்னால அத தாங்கவே முடியல! கண்ணு ரெண்டையும் இறுக்கி மூடிக்கிட்டு வேகமா தலைய ஆட்டி அந்த நெனப்ப ஒதறித் தள்ளுனேன். அப்பிடி ஏதாச்சும் பெரிய விஷயமா இருந்தா தேவி கட்டாயம் எங்கிட்ட சொல்லியிருப்பா. எப்பிடியும் இன்னக்கி அம்மாகிட்டயும் தேவிகிட்டயும் பேசிர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த தீர்மானம் வந்தப்புறம் கொஞ்சம் நிம்மதியானாப்ல இருக்கு.

“கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னர் முகம் காண்பதில்லை;
கண்ணனுக்குத் தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை…”

சிடில சுசீலாம்மாவும் என் மன நெலைக்கு ஏத்த மாதிரி உருகிக்கிட்டிருக்காங்க…

“மது. போயி மொகத்தக் கழுவிட்டு வா. காப்பி போட்டு தரேன். குடிச்சிட்டு போய் ரெடியாகலாம்”, அம்மா அடுப்படிலருந்தே கொரல் குடுக்கறாங்க.

அம்மா எடுத்துக் குடுத்த பட்டுச் சேலைய கேள்வி கேக்காம கட்டிக்கிறேன். வேலயோட வேலயா அம்மா எந்தல முடியத் தளரப் பின்னி, எனக்குப் புடிச்ச மல்லிகப் பூவ தலை கொள்ளாம வச்சு விடறாங்க. “இந்த வளயலப் போடு, அந்த ஜிமிக்கியப் போடு”ன்னு கவிதா வேற என்னய ஒரேயடியா கவனிக்கிறா. பொட்டு வச்சு, மை எழுதி, கண்ணாடியில என்னய பாத்துக்கிறப்போவும் அவரு மொகம்தான் தெரியுது. இப்ப அவரு என்னயப் பாத்தா என்ன சொல்லுவாருன்னு மனசுக்குள்ள ஓடுது. எப்ப கொஞ்சம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டாலும் அவர் பாக்கலயேன்னு இருக்கும். இன்னக்கும் அப்பிடித்தான்…

என் இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னாடி போய் கையெடுத்துக் கும்பிடறேன், “எது நடந்தாலும் ஏத்துக்கிற மனப் பக்குவத்தை எனக்குத் தா”, அப்பிடின்னு எப்பவும் போல வேண்டிக்கிறேன். விபூதிய கீத்தா எடுத்து பொட்டுக்கு மேல இட்டுக்கும்போது, “அம்மா. அவங்கல்லாம் வந்துட்டாங்க”, கவிதா உற்சாகத்துல எட்டு வீட்டுக்குக் கேக்குறாப்ல கத்தறா.

“வாங்க வாங்க”, அப்பாவும் அம்மாவும் அவங்கள வரவேற்குறது எனக்கு கேக்குது. கொஞ்ச நேரத்துல என்னயக் கூப்புட அம்மா உள்ள வராங்க. “எங்கண்ணே பட்டுரும் போல இருக்கேடி”ன்னு சொல்லி கண்ணு கலங்க என் கன்னத்த வழிச்சு திருஷ்டி கழிக்கிறாங்க.

அம்மாவோட நான் ஹாலுக்கு போனதும் போகாததுமா அப்பா, “மாப்பிள்ள, இவதான் எம் பொண்ணு மது. அட, பாருங்க, உங்களுக்கே இண்ட்ரட்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்… உங்களுக்குதான் தெரியுமே. மது, இவருதாம்மா மாப்பிள்ள சுந்தர்”, அப்பிடிங்கிறார்!

என்ன! தரையப் பாத்துக்கிட்டு நின்ன எனக்கு தூக்கிவாரிப் போடுது. என் இதயம் துடிக்கிற சத்தம் அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டிருக்குமோ… மெதுவா நிமிந்து அப்பாவப் பாக்கிறேன். அப்பா கண்ணச் சிமிட்டி சிரிக்கிறார். அப்பா பக்கத்துல உக்காந்திருக்கது… அவர்தான்… என்னோட உயிர்த் துடிப்போட ஒண்ணாக் கலந்துட்ட என்னோட அவரேதான்!

மனசு இறைவனுக்கு இடைவிடாம நன்றி சொல்ல, மந்திரிச்சு விட்ட மாதிரி அவரயே, அவரோட அந்த அழகுப் புன்னகை முகத்தையே பாத்துக்கிட்டு நிக்கிறேன்!

***

என்னய மொத மொதல்ல பாத்தோன்னயே அவருக்கும் எம்மேல பிரியம் வந்ததையும், நான் ட்யூஷன விட்டு நின்ன பெறகும் அவரு என்னய மறக்கவே இல்லைங்கிறதையும், தேவி வீடு மூலமா அவரு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு வச்சிருந்தாருங்கிறதையும், எனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சோன்ன, தன் அப்பா அம்மாவ விட்டு எங்க வீட்டுல கேக்கச் சொன்னதையும்… இப்படி எல்லாத்தையும் அவர் அவருக்கே உரிய மென்மையான இனிமையான குரல்ல சொல்லச் சொல்ல, வாழ்நாள் பூரா……ம்… கொஞ்சம் இருங்க… என்னவர் கூப்பிடறாப்ல இருக்கு…. வரேங்க… அப்பறம் பாக்கலாங்க…

*சுபம்*


--கவிநயா

Saturday, July 26, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 4

(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே)

இன்னக்கி அவர்ட்ட சொல்லப் போறேன். எப்பிடித்தான் சொல்லப் போறேன்னு தெரியல. மனசு கெடந்து தவிக்குது. தேவியும் எங்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டா. எங்கப்பா கூட சொல்லிட்டாரு. நாந்தான் யாரு சொன்னதயும் கேக்கல.

மழை வேற கொட்டு கொட்டுன்னு கொட்டுது. “இத்தன மழையில போய் இன்னக்கு சொல்லாட்டி என்னடி? நாளக்கி போயேன்”, அப்பிடிங்கிறாங்க அம்மா. ஆனா என்னால முடியாது. எவ்வளவு சீக்கிரம் சொல்றனோ அவ்வளவுக்கு நல்லதுன்னு தோணிப் போச்சு.

அன்னக்கு அவரு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சதுமே எனக்கு கணக்கு மேல காதல் வந்திருச்சு. கணக்கு மேலயா, இல்ல…. ம்… அத அப்பறம் பாக்கலாம். என்ன அருமையா, பொறுமையா சொல்லித் தந்தாரு. நான் மொத நா நெனச்சது போலவே அவருக்கு கோவமே வரதில்ல. எவ்வளவு முட்டாள்தனமா கேட்டாலும் கோவிச்சுக்காம சின்னப் புள்ளக்கி சொல்ற மாதிரி எதமா பதமா சொல்லுவாரு. மொகத்துல இருக்க அந்த புன்னகை மாறுனதே இல்ல. அவர எனக்கு ரொம்பவே புடிச்சிருச்சு.

ஒரு தரம் தீபாவளிக்கு மறு நாள் ட்யூஷன் இருந்துச்சு. எங்கம்மா “இத கொண்டு போய் உங்க வாத்தியாருக்கு குடுடி”ன்னு சொல்லி பலகாரமெல்லாம் நெறய பாக் பண்ணி தந்தாங்க. நானும் தீபாவளிக்கு எடுத்த என்னோட அழகான புத்தம் புது பாவாட தாவணிய கட்டிக்கிட்டு போனேன். தேவி வீட்டுக்குள்ள இருந்தா போல. இவரு மட்டும் ஹால்ல இருந்தாரு. அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எங்கம்மா குடுத்தாங்கன்னு சொல்லி பலகாரத்தக் குடுத்தேன். என்னய பாத்துக்கிட்டே அத வாங்கிக்கிட்டாரு. பெறகு, “புது ட்ரஸ்ஸா. நல்லா இருக்கு”,ன்னு சொன்னாரு. என்ன தோணுச்சோ எனக்கு, நாம்பாட்டுக்கு லூசு மாதிரி அழ ஆரம்பிச்சிட்டேன்.

“என்னங்க நீங்க? எதுக்கு அழறீங்க? எதும் தப்பா சொல்லிட்டனா? ரொம்ப ஸாரிங்க, அழாதீங்க”,ன்னு அவரு ரொம்பவே பதறிட்டாரு. அப்ப யாரோ வர்ற சத்தம் கேக்கவும், நான் கண்ணத் தொடச்சுக்கிட்டு சமாளிச்சுக்கிட்டேன். அப்பறமா நெனச்சுப் பாத்தேன்… அவரு பாக்கணும்னுதான அதக் கட்டிக்கிட்டுப் போனேன். பின்ன எதுக்கு அழுவணும்? அவரு என்னயப் பாத்ததையும் சொன்னதையும் நெனச்சுக்கிட்டே இருந்தேன். அவர் அப்பிடிச் சொன்னதுனால ஏற்பட்ட சந்தோஷத்துலதான் அழுதிட்டேன்னு தோணுச்சு. அது ஒண்ணுதான் அவரு எங்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேசினது.

அவரும் நானும் எப்பவும் கணக்கும் பொதுவா சில வார்த்தைகளும் தவிர வேற எதுவும் பேசிக்கிட்டதில்ல. இருந்தாலும் அவர்கிட்ட நான் ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டேன். அவர் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியுது. ஆனா இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு பயம் வந்திருச்சு இப்ப. அவரு மொகத்தக் கூட பாக்காம என்னய நம்பிக்கையோட ட்யூஷனுக்கு அனுப்பி வச்ச எங்க அம்மா அப்பாவ நெனச்சு பாக்கிறேன். காதல் கீதல்னு விழுந்துருவேன்னு அவங்கல்லாம் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க. அதுவும் இந்த வயசுல! ஆனா இப்பிடியே இவர்கூட பேசி பழகினா அது எங்க கொண்டு போய் விடுமோ. எம்மேல எனக்கே நம்பிக்கை இல்ல. அம்மா அப்பா நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கைய சிதைக்கணுமா. இப்பிடில்லாம் யோசிக்கிறேன். அவர பாக்காம இருக்கத நெனச்சாலும் தாங்க முடியல. அவருக்கு எம்மேல பிரியம் இருக்கா என்னனும் தெரியல. தெரிஞ்சு என்ன ஆகப் போகுது. இதுக்கு மேல வளர விட்டா தப்புன்னு மட்டும் தோணுது. அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்.

அதான், இன்னக்கி சொல்லப் போறேன், இனிமே ட்யூஷனுக்கு வரலன்னு.

அப்பாகிட்ட, “இப்ப அடிப்படையெல்லாம் புரிஞ்சிருச்சுப்பா. நானா படிச்சுக்கிறேன். ட்யூஷனுக்கு போயிட்டு வரதிலயே நெறய நேரம் போயிருது. மத்ததும் படிக்கணும்ல”,ன்னு சொல்றேன். அப்பாவும் மொதல்ல கொஞ்சம் தயங்குனாலும், என்னோட மார்க்கெல்லாம் பாத்துட்டு இதுக்கு ஒத்துக்கிட்டாரு.

இதோ அவரு வந்துட்டாரு. “இனிமே நான் ட்யூஷனுக்கு வர மாட்டேங்க. இது வரைக்கும் சொல்லிக் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. ஒங்ககிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்”, ன்னு சொல்றேன். அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல. தரையப் பாத்துக்கிட்டே எப்பிடியோ சொல்லி முடிச்சிட்டு நிமிந்து அவர பாக்குறேன். அவரு எப்பவும் போல அவருக்கே உரிய நிதானத்தோட இருக்காரு. ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு. “அப்பிடியா. சரிங்க. எக்ஸாமுக்கு ஆல் தெ பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க. நாந்தான் ஒங்கள மிஸ் பண்ணுவேன்”, அப்பிடிங்கிறாரு. அதுக்கு என்ன அர்த்தமோ? அவருக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்.

அதான் நான் அவர கடைசியா பாத்தது.

(தொடரும்)

--கவிநயா

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 3

(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே)

அன்னக்கு அவர பாத்ததுல இருந்து அவரு ஞாபகமாவே இருந்துச்சு. அவர் மொகமும் கண்ணும் எங்கண்ணயும் மனசயும் விட்டு அகலவே இல்ல. அவரு மேல மோதினதையும் அவரு சிரிச்சிக்கிட்டே சொன்னதயும் மனசுக்குள்ள திருப்பித் திருப்பி ஓட்டிப் பாத்துக்கிட்டே இருந்தேன். இன்னொரு முறை அவர எங்கயாச்சும் பாக்க மாட்டமான்னு ஒரே ஏக்கமா இருந்துச்சு. கூடவே, இது என்ன பைத்தியம்னு எனக்கே தோணுச்சு. இவ்ளோ பெரீய்ய்ய சென்னையில அவர எங்க பார்க்க முடியும். அவரு யாரு, என்ன பேருன்னு ஒரு மண்ணும் தெரியாது. அவரு சென்னைதானான்னு கூட தெரியாது. இப்பிடி இருக்கும்போது அவரையே நெனச்சுக்கிட்டு இருக்கேனேன்னு எனக்கே எம்மேலயே கோவமாவும் வந்தது.

அப்ப நான் ப்ள்ஸ் டூ படிச்சிக்கிட்டிருந்தேன். கணக்குல கொஞ்சம் வீக்கு நானு. என் அப்பாவுக்கு சொல்லிக் குடுக்க நேரம் இல்ல. ட்யூஷன் டீச்சர் கெடைப்பாங்களான்னு பாத்துக்கிட்டிருந்தோம். அப்பதான் என் ஃப்ரெண்டு தேவி வந்து எங்கப்பாகிட்ட சொன்னா…”அங்கிள், என் அண்ணனோட ஃப்ரெண்டு ஒருத்தரு ரொம்ப நல்லா மாத்ஸ் போடுவாரு. அவரு எனக்கு சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காரு. மதுவும் என்கூட வரட்டுமா அங்கிள்”ன்னு கேட்டா. உடனே எங்கப்பாவும், “ சரிம்மா. நீ போய்ப் பார்த்துட்டு வா”ன்னு சொல்லிட்டாரு.

அந்த சனிக்கெழம நான் தேவிகூட அவ வீட்டுக்கு போனேன். அன்னக்குதான் ட்யூஷன் ஆரம்பம். அவ அண்ணன் ராஜா வெளில கெளம்பிக்கிட்டிருந்தான். (அவ அவனை அவன், இவன்னு சொல்லி, எனக்கும் அப்பிடியே வந்துருச்சு).

“ஹாய் மது. போங்க போங்க. சுந்தர் உள்ளதான் இருக்கான்”, அப்பிடின்னு சொல்லிட்டு போனான்.

ஹால்ல உக்கார்ந்திருந்த அவரப் பாத்ததும் என் இதயம் ஒரு நிமிஷம் நின்னே போச்சு! பின்ன, இத்தன நாளும் என்னோட நெனப்புல இருந்த அதே மொகத்த நேர்ல பாத்தா… அவரேதான் இவரு. இவரேதான் அவரு… யப்பா. என் சந்தோஷத்த சொல்லி முடியாது!

“சுந்தரண்ணா. இவதான் மது. நாங்க ரெண்டு பேரும் உங்க ஸ்டூடண்ட்ஸ் இனிமே”, சிரிச்சுக்கிட்டே அவர்ட்ட என்னய அறிமுகம் பண்ணி வச்சா, தேவி.

“அப்பாடா. அண்ணான்னு சொல்லிட்டா!”, அப்பிடின்னு நிம்மதியாச்சு மனசு. நான் என்னமோ அவர அண்ணான்னு கூப்புடறதா இல்ல!

“ஹலோ”, அப்படின்னேன் மெதுவா, அவர பாத்தும் பாக்காம.

“ஹலோ. வணக்கங்க. நீங்கதானா…”, அப்பிடின்னு சொல்லிச் சிரிச்சாரு. அதே வெள்ளச் சிரிப்பு. மனச அள்ளிக்கிட்டு போற சிரிப்பு. அவருக்கு என்னய நெனப்பிருக்கோ என்னமோன்னு நெனச்சுக்கிட்டேன்.

“அன்னக்கு சுத்துப் புறம் தெரியாம பில்ல ரொம்ப கவனமா பாத்துக்கிட்டு வந்த மாதிரியே பாடத்தையும் கவனமாக் கேட்டுக்குவீங்கதானே”ன்னு சொன்னாரு.

அப்பிடி ஒரு சந்தோஷம் எனக்கு! மனசு கன்னா பின்னான்னு துள்ளிக் குதிச்சுச்சு! என்னய நெனவு வச்சிருக்காரே! உதட்டில ஒரு கள்ளப் புன்னகை வந்து ஒட்டிக்கிச்சு…தேவிதான் என்னய ஒரு மாதிரி பாத்தா. சரி சரி, ஒன்னய அப்பறம் வச்சுக்கறேங்கிற மாதிரி என்னயப் பாத்துட்டு, போய் மாத்ஸ் புத்தகத்த எடுத்துக்கிட்டு வந்தா…

(தொடரும்)

--கவிநயா

Friday, July 25, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 2

(முதல் பகுதி இங்கே...)

“மது…எழுந்திருடி… மணி ஏழாகப் போகுது. இன்னும் என்ன தூக்கம்? நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா, மாமியார்காரி வந்து என்ன இப்பிடிப் பொண்ண வளத்து வச்சிருக்கீங்கன்னு என்னயத்தான் திட்டுவா…”, அம்மா காலைல வேலயோட வேலயா வழக்கமான சுப்ரபாதத்தோட என்னய எழுப்புறாங்க.

ஆனா நான் எப்பவோ எந்திரிச்சுட்டேன். ம்… தூங்கினாதான எந்திரிக்கிறதுக்கு. ராத்திரி பூரா தூக்கமே இல்ல. மனசு பூரா பூரான் ஓடுற மாதிரி இருக்குது. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னமோ ஒரு சங்கடம் வயத்தப் பெசயுது. என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியல.

நேத்துதான் எனக்கு பரீட்சையெல்லாம் முடிஞ்சது. பாஸ் பண்ணிட்டேன்னா நானும் ஒரு இன்ஜினியர்னு சொல்லிக்கலாம். இன்னக்கி ஃப்ரெண்ட்ஸோட சேந்து பெரிய ஊர் சுத்தல் ப்ளான் பண்ணியிருக்கோம். எட்டர மணிக்கு ரெடியாகணும். என் பெஸ்ட் ஃப்ரெண்டு தேவி வந்தோன்ன ரெண்டு பேரும் சேர்ந்து காலேஜ் வாசல்ல மத்தவங்கள மீட் பண்ணறதா இருக்கோம். ஆனா என் மனசெல்லாம் அதுல இல்ல. வேற எங்கயோ இருக்கு.

“மதூஊஊஊ…. உன் ஃப்ரெண்டு காலங்காத்தால ரெண்டு தரம் ஃபோன் பண்ணிட்டா… எந்திரிடி!!!”, வந்துட்டாங்க எங்க வீட்டு சின்ன மகாராணி. என் அருமத் தங்கச்சி கவிதாவத்தான் சொல்லுறேன்.

சரிதான்.. இனியும் படுத்துக் கெடக்க முடியாதுன்னு தீர்மானிச்சு எந்திரிக்கிறேன். விறுவிறுன்னு காலை வேலையெல்லாம் முடிச்சுட்டு, தேவியக் கூப்புட்டு, “என்னடி விஷயம்”னு கேட்டா, அவ, “என்ன ட்ரஸ்டி போட்டுக்க போற இன்னக்கு?”, அப்பிடின்னு கேக்கறா! என்னமோ உலக சமாதானப் பிரச்சனை மாதிரி!

“ஏதோ ஒண்ணு. அதெல்லாம் யாரு யோசிச்சா?”, சலிச்சுக்கிட்டே சுவாரஸ்யமில்லாம சொல்லுறேன்.

“ஏய், என்னடி ஆச்சு ஒனக்கு? நானும் ஒரு வாரமா பாக்குறேன், சுரத்தே இல்லாம இருக்க. உன் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு பேரு, என்கிட்டயும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற” ன்னு திட்டுறா அவ.

“அப்பிடில்லாம் ஒண்ணும் இல்லடி.. சரி, நீ சொல்லு. என்ன ட்ரஸ் போடலாம்? சேல கட்டுவமா?” ன்னு கேக்கறேன்.

சேல கட்டுறதுதான் இப்பல்லாம் ரொம்ப ஸ்பெஷல். கொஞ்சம் பெரியவங்களே இப்பல்லாம் சேலை கட்டுறது அபூர்வமா இருக்கு. அதுனால இன்னக்கி மத்தவங்களும் சேலதான் கட்டுவாங்கன்னு நெனக்கிறேன். ஆனா எனக்கு சேல கட்டிக்கதான் ரொம்பப் புடிக்கும். சேலதான் இந்த ஒலகத்துலயே அழகான ட்ரஸ்ஸுன்னு நெனப்பு எனக்கு.

“ஓஹோ. ஆமாமா. ஒன்னய நாளைக்கி பொண்ணு பாக்க வராங்கள்ல? அதுக்கு இன்னக்கி ப்ராக்டிஸா?”அப்பிடின்னு கேட்டு கலகலன்னு சிரிக்கிறா தேவி.

அவளோட சேந்து என்னால சிரிக்க முடியல.

(தொடரும்)

--கவிநயா

Wednesday, July 23, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 1

அப்பதான் அவர முதல் முதலா பாத்தேன். ஆரெம்கேவியில அம்மாவுக்கு பொடவை வாங்கிட்டு வெளில வரப்ப, கைல இருந்த பில்லப் பாத்துக்கிட்டே வந்தவ, ‘பட்’டுன்னு யார் மேலயோ மோதிட்டேன். நிமிந்து பாத்தா அவருதான். சுறுசுறுன்னு கோவம் வந்துருச்சு. “பொண்ணுங்கள இடிக்கவுன்னே கடைக்கு வருவீங்களோ”, அப்டின்னு ஆரம்பிக்க போனேன். அதுக்குள்ள அவரு, “ஏங்க, பாதைய பாத்து போங்க. பில்ல அப்பறம் பாத்துக்கலாம். எங்கயாச்சும் தடுக்கி கிடுக்கி விழுந்து கிழுந்து வக்க போறீங்க”, அப்பிடின்னு லேசா சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. அப்பதான் அவர ஒழுங்கா பாத்தேன். நெசமாச் சொல்றேங்க, “தோள் கண்டேன் தோளே கண்டேன்” ங்கிற பாட்டுக்கு அர்த்தம் எனக்கு அப்பதாங்க முதல் முறையா முழுசா புரிஞ்சது.

ஆம்பளங்க கூட இப்பிடி ஒரு ரோஜாப்பூ கலர்ல இருப்பாங்கன்னு அவரப் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். செகப்பா இருக்கவங்க பல்லு பளிச்சுன்னு தெரியாத மாதிரி இருக்கும். ஆனா இவரு லேசா சிரிக்கும்போதே அவரு பல்லு வரிசை, என்னழகைப் பாரேன்னு மின்னிச்சு. மீசையெல்லாம் இல்ல. மழுமழுன்னு இருந்திச்சு மொகம். கருகருன்னு முடி, தல கொள்ளாம. சந்தனக் கலர்ல பாண்ட்டும், ரோஸ் கலர்ல ஷர்ட்டும் போட்டிருந்தாரு. எல்லாத்துக்கும் மேல அவரோட கண்ணுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அந்தக் கண்ணுல அப்பிடி ஒரு சாந்தம். அப்பிடி ஒரு அன்பு. கோவம்னா கிலோ என்ன வெலன்னு கேப்பாரு போல. அப்பிடியே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரையே பாத்துக்கிட்டு நின்னேன்.

“ஏய் மது. சீக்கிரம் வாடி.. ஆட்டோ புடிச்சாச்சு”, தங்கச்சி கீழ இருந்து கத்தறா. பொது எடத்துல பேரச் சொல்லிக் கத்தாதேன்னு எத்தன தடவ இந்தக் கழுதக்குச் சொல்லுறது. அறிவே இல்ல. இரு ஒன்னய. வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கிறேன். மனசுக்குள்ள அவளத் திட்டிக்கிட்டே, “வந்துட்டேண்டி”, அப்பிடிங்கிறேன். இவர் மேல வச்ச கண்ண இன்னம் வாங்கல…

அந்த ஆரெம்கேவி வாசல்ல பார்க் பண்றதுக்கெல்லாம் எடம் இருக்காது. ஒரே சனக்கூட்டம்தான். அதுனால ஆட்டோக்காரங்க அவசரப்படுத்துவாங்க. அவர விட்டு வெலக மாட்டேன்னு அடம் புடிச்ச பார்வைய ரொம்ப செரமப்பட்டு வெலக்கிக்கிட்டு, “ஸாரிங்க”, அப்டின்னு எனக்கே கேக்காத மாதிரி சொல்லிட்டு ஆட்டோவுக்கு போனேன்... திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டேதான். அவரும் என்ன ஒரு தரம் திரும்பிப் பாத்தாரு. அத நானும் பாத்தேன். சந்தோஷமா இருந்துச்சு. ரெண்டு பேரும் சிரிச்சிக்கிட்டோம்…

(தொடரும்)

--கவிநயா