Thursday, July 15, 2010

மறந்து(ம்) விடாத உறவுகள் - 2

(2)

முதல் பகுதி

வசதி இல்லாததாலும், பெண் பிள்ளைக்குப் படிப்பு அவசியமில்லை என்று என் பெற்றோர் நம்பியதாலும், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்ததே பெரிய விஷயமாய் இருந்தது.

தமக்கை இருவருக்கும் திருமணம் முடிந்த பின் எனக்கும் திருமணம் முடிந்தது. எனக்கு வாய்த்தவர் தங்கமானவராய் இருந்தார். அந்தக் காலத்திலேயே வரதட்சிணை வாங்காமல் என்னை ஏற்றுக் கொண்ட என் கணவரின் குடும்பம், என் குடும்பமாக மாற ரொம்ப நாள் ஆகவில்லை.

நான்கு வருடங்களில் மஞ்சுவைப் பெற்றெடுத்தேன். என்னைப் போன்ற வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்று இறுமாந்திருந்த வேளையில்தான் கண் பட்டாற் போல் அது நடந்தது; விபத்து ஒன்றில் சிக்கிய என் கணவர் கோமாவில் வீழ்ந்தார்.

அந்த ஒரு வருடமும் நரகம்தான். வயது சென்ற மாமனார், மாமியாருடனும், கைக்குழந்தையுடனும், நான் பட்ட மனக் கஷ்டத்திற்கும், பணக் கஷ்டத்திற்கும் அளவே இல்லை.

அருமைக் கணவர் பிழைப்பாரா என்று தெரியாமல், பிழைக்க வேண்டுமே என்று வேண்டியபடி சொந்தக் காலிலும் நிற்க முடியாமல் நான் பட்ட அவஸ்தையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வருடம் கழிந்த பின் என் கணவர் மற்றுமொரு முறை கண் திறக்காமலேயே இந்த உலகத்தை நீத்தார்.

அதன் பிறகு நானும் பலருடைய உதவியுடனும், பல விதமான சிரமங்களுக்கிடையில் பட்டம் படித்தேன். வேலைக்குப் போனேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்தை அறிந்து கொண்டேன். மஞ்சுவிற்கும் முடிந்த அளவு கற்றுக் கொடுத்தேன்.

இன்ஞினியரிங் படித்தாள். இப்போது காலேஜில் லெக்சரராக இருந்தபடி பி.எச்.டி. செய்கிறாள். இதற்கிடையில் அவள் விரும்பியவனுக்கே திருமணமும் முடித்தேன்.

அவளுக்குக் குழந்தை உண்டான போதுதான், "அத்தை, நீங்க எதுக்கு இன்னமும் வேலை செஞ்சுக்கிட்டு தனியா இருக்கணும்? எங்களோடயே தங்கிடுங்க. எங்களுக்கும் உதவியா இருக்கும்", என்று மாப்பிள்ளையே வற்புறுத்திய போது மறுக்க முடியவில்லை.

வாலன்ட்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு இங்கேயே வந்து விட்டேன். சம்பந்திமாரும் நல்லவர்களாக இருந்ததால், அவர்களிடமிருந்தும் இந்த ஏற்பாட்டிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இப்போது சமீப காலமாகத்தான் கொஞ்சம் பிரச்சினைகள் ஆரம்பம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால், ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொடுத்து, "இப்போதாவது என்னை நினைத்துக் கொள்", என்பார் போலும், கடவுள். அப்படித்தான் எனக்கும் இப்போது மறதியைக் கொடுத்து விட்டார்.

சமையல் சாமான்களிலிருந்து எல்லாவற்றையும் கை தவறி வைத்து விட்டு மணிக் கணக்கில் தேடுவது வழக்கமாகி விட்டது, எனக்கு. சில சமயம் என்ன தேடுகிறேன் என்பதே மறந்து விடும்!

ஒரு முறை என்னிடமிருந்த வீட்டுச் சாவியை எங்கோ வைத்து விட்டேன். அம்முக்குட்டியை ஸ்கூலில் இருந்து கூட்டி வர நேரம் ஆகி விட்டது. சாவியைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லை. பரவாயில்லை என்று கதவை இழுத்துச் சார்த்திக் கொண்டு போய் விட்டேன்.

திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது. மஞ்சுவோ, மாப்பிள்ளையோ வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி மஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவளோ அப்போதுதான் ஒரு வகுப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். உடனே வர முடியாத நிலைமை. அதனால் அவள் வரும் வரை நாங்கள் அதிகம் பழக்கமில்லாத அந்தப் பக்கத்து வீட்டில் இருக்க வேண்டி வந்து விட்டது.

மஞ்சு அன்றைக்கு என்னிடம் ரொம்பவே பொறுமை இழந்து விட்டாள். பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லாதிருந்திருந்தால், அன்றைக்கு அம்முக்குட்டியும் அவ்வளவு நேரமும் மழையிலேயே அல்லவா நனைய வேண்டி இருந்திருக்கும்?

மஞ்சு கோபித்துக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. வேடிக்கை என்னவென்றால், திரும்பி வந்து பார்க்கும்போது சாவி நான் எப்போதும் வைக்கும் இடத்திலேயேதான் இருந்தது. சரி, ஏதோ வயதாகி விட்டதால் கூடவே வரும் மறதி என்று என்னைத் தேற்றிக் கொண்டு, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றொரு முறை அப்படித்தான், ஒரு வெள்ளிக் கிழமை மாலை வழக்கம் போல் எங்கள் தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அன்றைக்கு ஏதோ விசேஷ பூஜை இருந்தபடியால் திரும்பும் போது இருட்டி விட்டது. நேரமாகி விட்டதே என்று எண்ணியபடி நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டேன்.

பத்து நிமிடங்களில் வந்து சேர வேண்டிய வீடு எங்கே போயிற்று? நாற் புறமும் சுற்றிச் சுற்றி ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே, இப்போது கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எந்த வீட்டைப் பார்த்தாலும் புதிதாக இருப்பது போல் இருந்தது. பீதி மனதைக் கவ்வ, கலவரம் வயிற்றைக் கவ்வியது.

பதட்டப்படாதே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட வண்ணம், எங்கள் வீடு இருக்கும் தெரு பெயர் என்ன என்று யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம். சுத்தமாக நினைவில் இல்லை. வருடக் கணக்காகப் போகும் வழிதான். என்ன ஆயிற்று எனக்கு?

எவ்வளவு நேரம் அந்த இருட்டில் சுற்றினேனோ, ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாமல் கால்கள் பின்னியது. திடீரென்று என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. மஞ்சுவும் மாப்பிள்ளையும். அந்த நிமிடத்தில் கடவுளையே பார்த்த மாதிரி அப்படி ஒரு நிம்மதியாய் இருந்தது, எனக்கு…

ஆனால் எல்லாம் மஞ்சுவின் குரலைக் கேட்கும் வரைதான். "அம்மா, உங்கள எங்கெல்லாம் தேடறது?" அவள் குரலில் இருந்தது வருத்தமா, கோபமா?

மறு நாள் முதல் ஆரம்பித்தது, டாக்டர் விஜயம். இன்று காலைதான் எனக்கு என்ன பிரச்சினை என்று முடிவாகச் சொன்னார் டாக்டர்.


(தொடரும்)

7 comments:

  1. /மறு நாள் முதல் ஆரம்பித்தது, டாக்டர் விஜயம். இன்று காலைதான் எனக்கு என்ன பிரச்சினை என்று முடிவாகச் சொன்னார் டாக்டர்.


    (தொடரும்) /

    இப்படி விட்டு விட்டால் எப்படி

    ReplyDelete
  2. ஆகா...ஸ்பீடு கூடுது ;))

    ReplyDelete
  3. //Alzhemier-ஓ..//

    சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே :)

    ReplyDelete
  4. //இப்படி விட்டு விட்டால் எப்படி//

    அடுத்த பகுதி இட்டாச்சு திகழ் :)

    ReplyDelete
  5. //interesting...//

    வாங்க கோவை குமரன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)