
கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!
ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!
கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!
உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!
வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!
--கவிநயா
பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.
சுப்பு தாத்தா இந்த பாடலை மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார். மிகவும் நன்றி தாத்தா!