Monday, June 21, 2021

முழுமுதற் பொருள்

 

விக்ன விநாயகா ஓம் ஓம் ஓம்
வேண்டுவன தருவாய், வினைகளெல்லாம் களைவாய்
(விக்ன)

முழுமுதற் பொருளே மூத்த கணபதியே
தொழுபவர்க் கருளும் துய்ய குணநிதியே
(விக்ன)

அருகம் புல்லுக்கும் அகம் மகிழ்பவனே
அரசமர நிழலில் அருளும் அரன் மகனே
மோதக ப்ரியனே முத்தமிழ் முதல்வனே
கோதில்லா குணத்தோனே குஞ்சர முகத்தோனே
(விக்ன)

 

--கவிநயா


Wednesday, January 13, 2021

பொங்கலோ பொங்கல்!

வணக்கம். எல்லோரும் நல்லாருக்கீங்களா?

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! கூடவே தாமதமான ஆங்கில புது வருட நல்வாழ்த்துகளும்!

உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உழவருக்கு நன்றி!
சுமக்காமல் தாயான பசுக்களுக்கு நன்றி!
நிலமெல்லாம் பண்படுத்தும் காளைகளுக்கு நன்றி!
கதிரொளியால் உயிரளிக்கும் கதிரவனுக்கு நன்றி!
ஐம்பூதங்களாகிக் காக்கும் இயற்கை அன்னைக்கு நன்றி!
சொன்னதெல்லாம் படைத்து நடத்தும் இறைவனுக்கும் நன்றி!!


எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!


அன்புடன்
கவிநயா



Sunday, November 26, 2017

நன்றி நவிலும் நாள்


இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில் நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி சொல்வது நல்லதல்லவா?

எங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான் கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.

மனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன் அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச் சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில் வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.

ஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப் பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி.

இன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருந்ததா? நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா? நன்றி சொல்லுங்கள்.  உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா? நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக் கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள் தானாக மறைந்து விடும்.

நமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில் சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின் மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.

“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


Sunday, October 8, 2017

நினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்

வெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்து ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஆனால் இன்று என்னவோ எழுத வேண்டுமென்று தோன்றியது. இன்னதைப் பற்றி என்று குறிப்பாக ஏதும் இல்லை.

எண்ணங்கள் தளும்பாத நேரமே இல்லை.
சிலவற்றைப் பகிரலாம்.
சிலவற்றைப் பகிர இயலாது.
கரையைத் தொடாமல் உள்ளேயே மடிந்து விடும் சில அலைகளைப் போல
சில எண்ணங்களும் தளும்பி விழாமல் உள்ளேயே மறைந்து விடுகின்றன.

‘மடிந்து’ என்று சொல்லாமல், ‘மறைந்து’ என்று சொன்னதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்,
எந்த எண்ணமும் மடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு உணர்வு உண்டு, ஒரு சக்தி உண்டு. நாம் எவ்வளவு திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ, அதைப் பொறுத்தே அதன் சக்தி கூடவோ குறையவோ செய்கிறது. அதனாலேயே பெரியோர்கள் நல்ல எண்ணங்களையே விதைத்து, நல்ல எண்ணங்களையே வளர்க்கச் சொன்னார்கள்.

இந்த நிமிடம் மனம் அமைதியாக இருக்கிறது. “content” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல. ஆனால் “போதும்” என்ற நினைப்பு வந்து விட்டால் அங்கு வளர்ச்சிக்கு இடம் இல்லை என்றும் சொல்வார்கள். அந்த எண்ணம்தான் இந்தப் பதிவிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

“போதும்” என்று இருக்கிற நிலையில் இருப்பது நல்லதா, அல்லது “போறாது” என்ற வெறியுடன் வளர்ச்சிக்கான வழிகளை ஆலோசிப்பது நல்லதா?

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைந்துதானே ஆக வேண்டும். ஓடி ஆடி உழைக்கச் சக்தி இருக்கும் போதே இந்நிலை வருவது நல்லதா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி வந்து விட்டால் அதற்கு “சோம்பல்” என்ற பொருள் ஏற்படுமா?

சமீபத்தில் வேலையிலிருந்து Grace Hopper Celebration என்ற கூட்டத்திற்குப் (conference) போயிருந்தேன். க்ரேஸ் ஹாப்பர் என்ற பெண்மணியை கௌரவப் படுத்தும் வகையில் அனிடா என்ற பெண்மணி, பெண் தொழில் நுட்ப வல்லுநர்களுக்காகவே ஏற்படுத்திய இயக்கம். 3 நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், 18000 பெண் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் அளக்க இயலாத திறமைகளும், உச்சியைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் தெரிந்தது. அடிமட்டத்திலிருந்து வந்து, வாழ்க்கையில் பலவிதமாக அடிபட்டு, உச்சத்தைத் தொட்ட பல பெண்மணிகளை அங்கு பார்க்க முடிந்தது. அதில் சிலருடைய உரைகளைக் கேட்கவும் முடிந்தது.

என்னுடைய நிலையையும் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் நான் பார்த்த பெண்மணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. நான் யார்? தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்னுடைய இலக்குதான் என்ன? இது போன்ற பல கேள்விகளை மீண்டும் என்னுள் தூண்டி விட்டிருக்கிறது. விரைவில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்…

வாசித்ததற்கு நன்றி.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!

நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம் தரும் நாள்
(நவ)

தேவியர்கள் மூவரும் நம்
இல்லம் தேடி வரும் நாள்
(நவ)

துர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்
(நவ)

அலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி அவற்றை அருள்பவளானாள்
(நவ)

நாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)


--கவிநயா

 

Sunday, October 9, 2016

ஞான வடிவினள்


வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள்
வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்
(வெள்ளை)

நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்
நான்முகன் நாவினிலே நின்றவளாம்
(வெள்ளை)

வீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்
மானனைய கருவிழிகள் மருண்டிருக்கும்
தேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்
ஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
(வெள்ளை)


--கவிநயா 


 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!