Wednesday, December 31, 2014

புத்தாண்டு வேண்டுதல்!

அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!



ன்பால் நிறைந்த நெஞ்சம்

ண்டவனிடத்தில் தஞ்சம்

யல்பில் குழந்தை உள்ளம்

யப் பெருகும் இன்பம்

லகம் அனைத்தும் உறவு

க்கம் உயிரின் மூச்சு

தையும் தாங்கும் இதயம்

தம் இல்லா உதயம்

யம் இல்லா பக்தி

ரு முகமான தியானம்

யா எறும்பாய் உழைப்பு

வை சொன்ன அறம்

அமைதி நிறைந்த வாழ்வு!



--கவிநயா

Monday, December 29, 2014

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...


ஏரார்ந்த கண்ணி - 4

பூதனை இறந்த செய்தி கேட்டான்
பூவைப் பூநிறக் கண்ணனின் மாமன்!
சகடாசுரனைச் சடுதியில் அழைத்தான்
சின்னக் கண்ணனைக் கொல்லப் பணித்தான்!

கோகுலம் நோக்கிச் சகடனும் விரைந்தான்
குழந்தைக் கிருஷ்ணனைத் தேடி அலைந்தான்!
சாய்ந்து நின்றதோர் வண்டியின் அடியில்
தொட்டிலில் துயின்ற குழந்தையைக் கண்டான்!

வண்டிச் சக்கரம் புகுந்தான் அரக்கன்
வண்ணக் கண்ணனைக் கொல்லத் துணிந்தான்!
அறியாக் குழந்தை போலே பரமன்
அழுதான் சின்னக் கைகால் உதைத்து!

சற்றே பிஞ்சுக் காலை நீட்டி
சகடந்தன்னை எட்டி உதைத்தான்!
சடசடவென்று முறிந்தது வண்டி
திருவடி பட்டுச் சகடனும் ஒழிந்தான்!

பூந்தளிர்ப் பாதமும் கொஞ்சம் வலித்ததோ!
தீங்குரலெடுத்து அழுதான் கண்ணன்!
ஓடி வந்தாள் அன்னை யசோதை!
சிதறிக் கிடந்த வண்டியைக் கண்டாள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: மாதவிப் பந்தல்

Monday, December 22, 2014

பூதனை வதம்

ஏரார்ந்த கண்ணி - 3


தொட்டிலிலே தானிருந்தான்
தூமலர் போல் துயின்றிருந்தான்
கட்டித் தயிர் கடைந்த பின்னே
எட்டிப் பார்த்தால் காணவில்லை!

உள்ளம் பதை பதைக்க
ஊனுயிரும் உருகி நிற்க
கண்ணில் நீர் வழிய
கண்ண முகம் தேடுகின்றாள்…

சின்னக் குரலொன்று
சிணுங்கும் குரல் கேட்கிறது
திண்ணையின் மீதிருந்து
கண்ணன் குரல் கேட்கிறது!

ஆவலுடன் விரைந்திட்டாள்
அன்பு முகம் கண்டு விட்டாள்!
ஆனால் அவன் அருகில்?
அரக்கி ஒருத்தியன்றோ
அசையாமல் கிடக்கின்றாள்?!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா

ஏரார்ந்த கண்ணி - 1
ஏரார்ந்த கண்ணி - 2

படத்திற்கு நன்றி: http://vidyasury.com/2014/08/krishna-janmashtami.html

Tuesday, December 16, 2014

கண்ணன் பிறந்தான்!

ஏரார்ந்த கண்ணி - 2

கரு நீலத் தாமரையோ தொட்டிலிலே முளைத்தது!
தாய் விழிகள் திறக்கையிலே தாமரையோ சிரித்தது!

இருப்பதென்ன கனவுலகோ?
பார்ப்பதென்ன கற்பனையோ?
பிறந்த குழந்தை அழாமல்
அறிந்தவர் போல் சிரிக்கிறதே!
திறந்து விரியும் பொக்கை வாயில்
சொர்க்கமெல்லாம் தெரிகிறதே!
ஆயர்குல ராணிக்கு என்றுமில்லா ஐயங்கள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை,
ஆயர்குல இரத்தினத்தை,
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.stephen-knapp.com/krishna_print_onehundredseventynine.htm

Monday, December 15, 2014

ஆண்டவனை ஆண்டவள்

ஏரார்ந்த கண்ணி - 1


மார்கழித் திங்கள்...

ஆண்டாள், அவள் ஆண்டவனை.
நம்மையும் இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறாள் அப்பாவை, தம் திருப்பாவை மூலம்.

மார்கழி பிறந்தாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. ஆண்டாளுடன் கண்ணனும், மாணிக்க வாசகருடன் நமசிவாயமும் வந்து விடுகிறார்கள். மாதம் முழுவதும் அவர்களுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் இருப்பது போலத் தோன்றும்.

நவராத்திரி சமயத்திலும் அப்படித்தான். இந்த மாதிரியான பண்டிகைக் காலங்கள் முடியும் போது ஒரே ஏக்கமாக இருக்கும். ஏனென்றால் அந்த விசேஷ நாட்கள் முடிந்ததும், பழைய வேண்டாத எண்ணங்களும், பழக்கங்களும், காத்திருந்தாற் போல வந்து ஒட்டிக் கொண்டு விடும்.

அதே உணர்வுதான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கும் போதும்… என்னதான் அழுது அழுது சிரமப்பட்டு நடந்தாலும், அந்த அழுகையும் அவளிடமேதான் என்பதாலோ என்னவோ, நடந்து முடியும் போது எதையோ இழந்தாற் போல இருக்கும்.
ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். மார்கழி மாதமும் அதுவுமாக, திருப்பாவையில் (முடிந்தால் திருவெம்பாவையிலும்) பிடித்த சில வரிகளை எடுத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாமா என்று தோன்றியது… “கூடியிருந்து குளிர்வதுதானே” திருப்பாவையின் சிறப்பு?

முதல் பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்:
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்”
“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”

“ஏரார்ந்த கண்ணி” என்பதற்கு, அழகான கண்களை உடைய யசோதை என்பதாகப் பொருள் சொல்வார்கள்.  அழகான கண்கள் மட்டுமல்ல, பொருத்தமான கண்களும் கூட. எதற்குப் பொருத்தமான கண்கள்? ஓங்கி உலகளந்த உத்தமன் குழந்தையாக அவளிடம் வந்த போது, அவனைப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொள்வதற்கு அவள் கண்கள்தான் தகுதியுடையவையாக, பொருத்தமானவையாக இருந்தன.

யசோதைக்கு எப்படி அப்படிப்பட்ட அழகான கண்கள் அமைந்தனவாம்? குட்டிக் கிருஷ்ணன் பிறந்தது முதல், அவன் அழகையும், அவன் குறும்புகளையும், அவன் லீலைகளையும், பார்த்துப் பார்த்துக், கண்களை விரித்து விரித்து வியப்பாளாம். பெருமைப்படுவாளாம். சந்தோஷப்படுவாளாம். அதனால்தான் அவள் கண்கள் அவ்வளவு அழகான கண்களாக இருந்தனவாம். 

இப்படியும் ஓரிடத்தில் வாசித்தேன். எனக்குமே இந்த விளக்கம் பிடித்திருந்தது… யசோதை கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் விழி விரித்து வியப்பதான கவிதைகளை இனி அவ்வப்போது பார்க்கலாம்…

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

திருச்சிற்றம்பலம்.



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்.



காதல் சொன்னானோ?

மார்கழி மாதத்திற்கு வந்தனம்! இந்த மாதம் முழுவதும் இறை நினைப்பில் திளைத்திருக்கலாம்.

அந்த மாயக் கண்ணனின் நினைவில் பிறந்த ஒரு கவிதை கண்ணன் பாட்டில்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...

அன்புடன்
கவிநயா


Monday, December 8, 2014

குங்குமம் தோழி இதழில்...

குங்குமம் தோழி இதழில் இந்த வாரம்... நேரம் கிடைச்சா பாருங்க.

(வலைப்பூவில் பதியலாமா வேண்டாமான்னு யோசனையா இருந்தது...'tooting my own horn' மாதிரி ஆயிடுமோ அப்படின்னு... பிறகு தொடர்ந்து வாசிக்கிற நண்பர்களுக்காக பகிரலாம்னு தோணுச்சு...)


அன்புடன்
கவிநயா

Thursday, December 4, 2014

அருள் மலை!

அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஊர்க் கோவிலில் திருகார்த்திகைத் தீபம்

எண்ணும் மனம் உறைந்தான்
எண்ணமெல்லாம் நிறைந்தான்
அண்ணா மலை அவன் தான்
அருள் மலையாய் வளர்ந்தான்!

உண்ணா முலைக் கெனத்தான்
தண்ணிலவாய்க் குளிர்ந்தான்
கண்ணுதலான் கனிந்தான்
தன்னில் சரி பாதி தந்தான்!

கேட்கும் வரம் அத்தனையும்
அள்ளி யள்ளித் தந்திடுவான்
ஓமென்றால் ஆமென்பான்
தா யென்றால் தாயுமாவான்!

அயன் அரி அறியாத
அடி முடி கொண்டவன்தான்
கள்ளமற்ற அன்புக் கென்றால்
கட்டுப்பட்டு வந்திடுவான்!


--கவிநயா



Sunday, November 30, 2014

பாவனாகம்யா

‘கம்யா’ என்றால் ‘அடையத் தக்கவள்’ என்பது பொருளாம். ஒரு ஊருக்குப் போகப் பல வழிகள் இருப்பது போல், அம்பிகையை அடைவதற்கும் பல வழிகள் உண்டு.

பாவனா கம்யா – பாவனையால் அடையத் தக்கவள்
பக்தி கம்யா – பக்தியால் அடையத் தக்கவள்
தியான கம்யா – தியானத்தால் அடையத் தக்கவள்
ஞான கம்யா – ஞானத்தால் அடையத் தக்கவள்


என்று அவளை அடையப் பல வழிகளை வரிசைப் படுத்துகிறது, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

தியானத்தையும், ஞானத்தையும் காட்டிலும், என்னைப் போன்ற பாமரர்களுக்காகவே அம்மா, மற்ற இரண்டு வழிகளையும் தந்திருக்கிறாளோ என்று தோன்றும்… “ஆபால கோப விதிதா” அல்லவா, அவள்? எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள்… 


பக்தியும் பாவனையும் ஒன்றுக்கொன்று நிறைய தொடர்புடையவை. பக்தி அதிகரிக்க வேண்டுமானால் பாவனை அவசியம். பாவனை அதிகரிக்க வேண்டுமானால் பக்தி அவசியம். ஒன்றினால் மற்றொன்று மேலும் மேலும் வளரும், சிறப்புப் பெறும். இறைவனை நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவாகப் பாவிப்பதால், நமக்கும் அவனுக்குமான அன்பும் நெருக்கமும் அதிகமாகும்.

இறைவனை பல விதங்களில் பாவித்துக் கொள்ளலாம்…

சாந்த பாவம்:
உணர்வுகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் வயப்படாமல், இறைவனையே நினைத்துக் கொண்டு அமைதியாக அன்பாக ஆனந்தமாக இருப்பது. மகாபாரதத்தின் பிதாமகர் பீஷ்மருடைய பக்தி சாந்த பாவத்தைச் சேர்ந்ததாம்.

சாந்த பாவம் என்பது அலட்டிக் கொள்ளாமல் (ரொம்ப ‘ஷோ’ காட்டாமல்), அமைதியாக பக்தி செய்வது.

பீமன், அர்ச்சுனன் செய்யும் சிவ பூஜை பற்றி ஒரு கதை சொல்வார்கள்:

அர்ச்சுனன் தினமும் முறைப்படி சிவபூஜை செய்பவன். அதனால் அவனுக்குத் தானே சிறந்த சிவபக்தன் என்ற எண்ணம் (கர்வம்) இருந்தது. ஒரு நாள் அவன் கைலாயத்திற்குச் செல்லும் போது வழியில் பல வித மலர்கள் மலை மலையாய்க் குவிந்திருந்ததைக் கண்டான். அதைப் பற்றி விசாரித்த போது, அவையெல்லாம் பீமன் சிவ பூஜை செய்த போது அர்ப்பணித்த மலர்கள் என்று அறிந்தான். ஆனால் அவனோ பீமன் பூஜையில் அமர்ந்து பார்த்ததே இல்லை. அப்படி இருக்க இது எப்படிச் சாத்தியம் என்று கிருஷ்ணனை விளக்கம் கேட்டான். கிருஷ்ணனும், பீமன் தன்னுடைய மானசீக பூஜையில், உலகில் பூக்கும் மலர்களையெல்லாம் சிவனுக்கு அர்ப்பணித்து விடுகிறான் என்று விளக்கமளித்தான்.

பீமனைப் போல மானசீகமாக, மனப்பூர்வமாக, வெளிப்பகட்டு இல்லாமல் ஈடுபாட்டுடன் செய்யும் பக்தியே சாந்த பக்தி எனலாம்.

தாஸ்ய பாவம்:
இறைவனை எஜமானனாகவும், தன்னை அவனுடைய வேலைக்காரனாக, தொண்டனாக, அல்லது அடிமையாக பாவித்துக் கொள்ளுதல். ஸ்ரீ ஆஞ்சநேயருடைய பக்தி அப்படிப்பட்டது. ஸ்ரீராமனின் அடிபணிந்து அவர் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அப்பரும் அப்படிப்பட்ட சிவபக்தியே கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்.

தன்னைப் புல்லினும் கீழாகப் பாவித்துக் கொண்டு, இறைவனையே எல்லாமாகக் கொண்டு அவனுக்கு பணிவிடை செய்வதே தாஸ்ய பாவம்.

அனுமனுக்கு இராமன் என்றால் கொள்ளைப் பிரியம். முதல் முதலாக சுக்ரீவனுக்காக இராம லக்ஷ்மணர்களைப் பற்றி விசாரிக்கச் செல்லும் போதே, ஸ்ரீராமனிடம் அவனுக்கு இனம் புரியாத அன்பும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகின்றன. அது முதல் ஸ்ரீராமனே அவனுக்கு எல்லாம், இராம நாமமே அவனுக்குத் துணை என்றாகி விடுகிறது. 

இராமனுக்குச் சேவை செய்வதே தன் வாழ்வென்று வாழ்ந்தவன் அனுமன். அந்த அன்பில், சேவையில், எந்த வித சுயநல நோக்கமும் இல்லை. சுக்ரீவனும், விபீஷணனும் இராமனுடன் இருந்து, அவனுக்கு உதவிய பின், அவரவர் இராஜ்யத்தைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் அனுமன் மட்டுமே இராமனின் அருகில் இடம் பெற்றான். கோவில்கள் தோறும் அவனே இராமனின் காலடியில் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கின்றான். அவனுடைய பக்தி கூட கற்புடையது. இராமனைப் போலவே கிருஷ்ணனும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும், அனுமனுக்கு இராமனைத் தவிர எவருமே பொருட்டல்ல. கிருஷ்ணனைக் குறித்துப் பேச்சு வந்த போது, “யார் அந்த கிருஷ்ணன்?” என்று கேட்டவன். அந்த அளவிற்கு ஸ்ரீராமனின் மேல் சற்றும் சஞ்சலமில்லாத ஒருமித்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டவன் அனுமன். அவனது பாவனை தாஸ்ய பாவனை.

சாக்ய பாவம்:
இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து, தனக்குச் சரிசமமாக நடத்துவது. அர்ஜுனனும், குசேலரும் ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர்களாகத் திகழ்ந்ததைப் போல. நால்வரில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானை நெருங்கிய தோழனாகப் பாவித்தவர். தனக்காகத் தன் மனைவியிடம் சிவபெருமானையே தூதாக அனுப்பியவர்!

பரவை நாச்சியாரை மணந்து கொண்ட பின், சிவத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும் காலத்தில், விதிப்படி சங்கிலி நாச்சியாரிடமும் பிரேமை கொண்டார், சுந்தரர். இதை அறிந்த பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு விட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இறைவனின் உதவியை நாடிய சுந்தரர், அவரைத் தன் பிரியத்துக்குரிய நண்பராக எண்ணியபடியால், அவரையே பரவையாரிடம் தனக்காகத் தூது செல்லும்படி உரிமையுடன் பணித்தார்! அதற்கிசைந்த பெருமானும், ஒரு முறை அல்ல, இரு முறைகள் திருவடிகள் தேயத் தூது சென்றதைச் சுந்தரரின் வரலாறு கூறும்! அப்பேர்ப்பட்ட அன்பு அவருடையது!

வாத்ஸல்ய பாவம்:
இறைவனைத் தன் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்துதல். குட்டிக் கிருஷ்ணனை ஏதும் அறியாத குழந்தையாகவே நினைத்து அன்பைப் பொழிந்த யசோதையின் பாவம் வாத்ஸல்யம்.

சின்னக் குட்டிக் கிருஷ்ணன் மண்ணை அள்ளி உண்ட போது மிகுந்த கோபம் கொண்டு, அவனை வாயைத் திறக்கச் செய்தாள், யசோதை. அவனுடைய சிறிய திருவாயில், அகிலமே அடங்கியிருப்பதைப் பார்த்து மதி மயங்கி நின்று விட்டாள். அவள் குட்டிக் கிருஷ்ணன் பூதகியைக் கொன்றதை அறிவாள்; கள்ளச் சகடம் உதைத்ததை அறிவாள்; காளிங்கன் மீது நர்த்தனம் புரிந்ததை அறிவாள்… இப்படி அவன் லீலைகள் அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவன் ஆவினம் மேய்க்கக் கிளம்பும் போது, இல்லாத கவலையெல்லாம் அவளைப் பிடித்துக் கொள்ளும். “என் குட்டிக் கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தெரியாது… அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்”, என்று பலராமனிடம் படித்துப் படித்துச் சொல்லி அனுப்புவாள்.

மாதுர்ய பாவம்:
இறைவனைத் தன் தலைவனாகப் பாவித்துக் காதலில் திளைத்திருப்பது. பாவங்களிலேயே இதுவே உயர்ந்தது என்பார்கள். ஏனென்றால் மற்ற பாவனைகளில் பக்தன், இறைவனிடமிருந்து சிறிதேனும் விலகியே இருக்கிறான்; இறைவன் வேறு, தான் வேறு என்ற பாகுபாடு இருக்கிறது. ஆனால் மாதுர்ய பாவத்தில்தான் இறைவனத் தன் சரிபாதியாகப் பாவித்து, இரண்டறக் கலந்து விடும் நிலை ஏற்படுகிறது.

இதைப் பற்றிப் பேசும் போது பரதத்தில் சொல்லப்படும் நவரசங்களில் ஒரு ரசமான சிருங்கார ரசம் பற்றி நினைவு வருகிறது. சிருங்கார ரசத்தை ரசங்களுக்கெல்லாம் அரசன் என்பார்கள். பரதக் கலையில் முழு மனதுடன் ஈடுபடுகையில் இறைவனுடன் ஒன்றி விடும் நிலையை அடையலாம் என்பார்கள். சிருங்கார ரசம் மனிதர்களுக்கிடையேயான காதலைச் சித்தரிப்பதல்ல; இறைவனிடம் ஏற்படும் மேலான அன்பைச் சித்தரிக்கவே ஏற்பட்டது. அதனாலேயே அதற்கு ராஜ ரசம் என்ற பெயரும் ஏற்பட்டது. மாதுர்ய பாவத்தை அனுபவிக்கவே சிருங்கார ரசம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்தவர்கள் ஆண்டாள், மீரா, போன்றவர்கள். ஜெயதேவரின் சிருங்கார ரசம் ததும்பும் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணிக்கவாசகர் மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்ததாகக் கூறுவார்கள்.

அபத்ய பாவம்:
பாவனைகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம், மேற்சொன்ன பாவனைகள் பற்றி மட்டுமே வாசித்திருக்கிறேன். அதனால், இறைவனைத் தாயாகவோ, தந்தையாகவோ கொள்வதற்கு எந்தப் பெயரும் இல்லையா, என்ற கேள்வி அடிமனசில் ஓடிக் கொண்டே இருந்தது. பாவனாகம்யா என்ற நாமத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அவளருளால் ஒரு நாள் ஸ்ரீ பரமாச்சார்யார் சொன்னதைப் படிக்க நேர்ந்தது. “தெய்வத்தைப் பல பாவங்களில் வழிபடுவதில் நாம் குழந்தையாகவும் தெய்வம் தாயாகவோ, அல்லது தந்தையாகவோ இருப்பதற்கு 'அபத்ய'பாவம் என்று பேர். ஞானஸம்பந்தர் அப்படிப் பாடினவர்தான்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா வித பாவனைகளாலும் இறைவனை அனுபவித்து அறிந்தவர். அவற்றில் எதனைப் பின்பற்றினாலும், இறைவனை அடையலாம் என்று காட்டியவர். அப்பேர்ப்பட்ட பாவனையால் எளிதாக அடையத்தக்கவள் அம்மா என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.



அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!
 
அன்புடன்
கவிநயா