
பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது
பாப்பா நெஞ்சை மயக்குது மயக்குது
வண்ணம் காட்டிச் சிரிக்குது சிரிக்குது
வாவா என்றே அழைக்குது அழைக்குது!
ஊரைச் சுற்றித் திரியுது திரியுது
உணவைத் தேடி அலையுது அலையுது
மலரைக் கண்டால் மயங்குது மயங்குது
மதுவைக் குடித்து கிறங்குது கிறங்குது!
இறக்கை யெல்லாம் ஜொலிக்குது ஜொலிக்குது
இயற்கை அன்னையின் கைவண்ணம் கலக்குது
தொட்டுப் பார்க்க ஆசை பிறக்குது
கிட்டப் போனால் 'சட்'டுன்னு பறக்குது!
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/bestrated1/52666376/sizes/m/