Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!

நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம் தரும் நாள்
(நவ)

தேவியர்கள் மூவரும் நம்
இல்லம் தேடி வரும் நாள்
(நவ)

துர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்
(நவ)

அலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி அவற்றை அருள்பவளானாள்
(நவ)

நாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)


--கவிநயா

 

Sunday, October 9, 2016

ஞான வடிவினள்


வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள்
வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்
(வெள்ளை)

நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்
நான்முகன் நாவினிலே நின்றவளாம்
(வெள்ளை)

வீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்
மானனைய கருவிழிகள் மருண்டிருக்கும்
தேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்
ஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
(வெள்ளை)


--கவிநயா 


 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!


Sunday, September 4, 2016

முக்கண்ணன் முதல் மகன் முன்னின்று காக்கட்டும்!


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்!
சுப்பு தாத்தாவின் உற்சாகாமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!





ஆனை முக நாயகனே! ஆதிசக்தி பாலகனே!
ஐந்து கரம் கொண்டவனே! ஆறுமுகன் சோதரனே!
பெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே!
சிற்றம்பலத்தானின் செல்வப் புதல்வனே!

ஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித் திகழ்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால் வழி காட்டி உதவிடுவாய்!
பழி யேதும் வாராமல் விழியிமை போல் காத்திடுவாய்!

அருகம் புல் மாலைக்கும் அன்புக்கும் வசப்படுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
மூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து அருளிடுவாய்!
மோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை விரட்டிடுவாய்!

ஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம் ஓடிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
அஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து விடும்!
நம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை காத்து விடும்!


--கவிநயா

 

Tuesday, August 23, 2016

அழகுக் குழந்தை!

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்துகள்! 


கண்ணன் பிறந்தான், சின்னக் கண்ணன் பிறந்தான்

நானிலம் மகிழ, நான்மறை புகழக் கண்ணன் பிறந்தான்


எங்கள் மன்னன் பிறந்தான்

பூவைப் பூ வண்ணம் அவன் பூந்தளிர் மேனி, அவன்

பூஞ்சிரிப்பில் கிறங்கி விடும் மனமென்னும் தேனீ



வெள்ளித் தண்டை கொஞ்சக் கொஞ்ச

சேவடிகள் கெஞ்சக் கெஞ்ச

மூவடியால் உலகை அளந்த மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



வா யிதழில் தே னொழுக

வண்டு விழி தான் சுழல

அண்டமெல்லாம் தன்னுள் கொண்ட மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



அன்னை இல்லை என்பதனால்

அன்னை அன்பிற் கேங்கினனோ?

அன்னை யசோ தாவைத் தேடி மாயன் வருகிறான், அவன்

அழகுக் குழந்தையாகி அவள் மடியில் தவழ்கிறான்


---கவிநயா