Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Sunday, June 10, 2012

முளை கட்டுவது எப்படி?


ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்பிடறதும் அதிகமா பரவிக்கிட்டிருக்கு. இரண்டும் ஒண்ணுக் கொண்ணு முரணா இருக்குல்ல? ம், சரி அதை விடுங்க. அதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக்கலாம்.

உடம்பை நோய் நொடி இல்லாம நல்லா வச்சுக்கணும்கிற அக்கறை வளர்ந்துகிட்டு வர்றது நல்ல விஷயம் தான். அதுக்கு முதல்ல நாம வீட்டில், ஆரோக்கியமான உணவு வகைகளை சமைச்சு சாப்பிடணும். அடிக்கடி வெளியில் சாப்பிடறது நல்லதில்லை. ஆரோக்கிய உணவுன்னாலே காய்கறிகள், பழங்கள், இவற்றை நிறைய சேர்த்துக்கணும்னு எல்லோருக்கும் தெரியும். அதோட முளை கட்டிய பயறு வகைகளையும் மனசில் வச்சுக்கலாம்.

முளை கட்டிய பயறில், அசைவத்துக்கு இணையான புரதச் சத்து இருக்காம். சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு இது ரொம்பவே அவசியம். முளை கட்டிய பயறு வகைகள் இப்ப கடைகளிலேயே வித விதமான அளவுகளில் கிடைக்குதுங்கிறது உண்மைதான். ஆனா, என்ன இருந்தாலும் நாமளே செய்து சாப்பிடறதில் இருக்கிற திருப்தியே தனிதானே?

முளை கட்டறது பெரிய வேலையாக்கும் நினைச்சு நானுமே முன்னெல்லாம் செய்யாம இருந்தேன். அதுக்கு மெல்லிசான வெள்ளைத் துணி வேணும்னு வேற சொல்வாங்க, ஆனா என்கிட்ட அது கைவசம் இல்லை. அந்தக் காரணத்துக்காகவே ரொம்ப நாள் செய்யாம இருந்தேன். பிறகுதான் வெள்ளைத் துணி கூட தேவையில்லைன்னு தெரிஞ்சது :)

(நானே) முளை கட்டிய பச்சைப் பயறு :)
முதல் முதலா முயற்சி செய்யறவங்க, பச்சைப் பயறில் செய்யலாம். அது ரொம்ப சுலபமா முளை விடும். முளை கட்டறதுக்கு, பயறும் , தண்ணியும், பாத்திரமும் இருந்தா போதும்! மெலிசான வெள்ளைத் துணி வேணும்ன்னா, இருந்தா பயன்படுத்திக்கலாம், இல்லைன்னா பரவாயில்லை.

பச்சைப் பயறை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்! முதல் தரம் இந்த மாதிரி முளை விட்டு பார்த்த போது, எங்க வீட்டு நாய்க்குட்டி கிட்டக் கூட பெருமையா காட்டினேன்! :)

சரி, துணி இல்லாட்டினா என்ன பண்றது? அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும்.  மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்! படத்தில் இருக்கிற பயறு துணியில்லாம முளை கட்டினதுதான்.

பயறை காய விடாம ஈரப் பதத்தோட வைக்கணும் என்கிறதுதான் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம். முளை விட்டவுடனே உபயோகிச்சா நல்லது. அன்னிக்கே பயன்படுத்த முடியலைன்னா, குளிர்பெட்டியில் வெச்சுடணும்; அதன் பிறகு ரெண்டு அல்லது மூணு நாள் வரை வெச்சுக்கலாம்.

பச்சைப் பயறைத் தவிர, வெந்தயம், வெள்ளைக் கொண்டைக் கடலை, நிலக் கடலை, காஞ்ச பட்டாணி, இதெல்லாமும் முளை கட்டலாம்.

அதெல்லாம் சரி… முளை கட்டின பயறை எப்படி சாப்பிடறது?

முளை கட்டின பச்சைப் பயறு காய்கறி கலவைக்கு (salad) ரொம்ப நல்லாருக்கும். பச்சையாகவே காய்கறிகளோட எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள் போட்டு சாப்பிடலாம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை நிற குட மிளகாய், காரட், தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், மாங்காய், தக்காளி, இதெல்லாம் சேர்க்கலாம். பார்க்கவே அவ்வளவு வண்ண மயமா அழகா இருக்கும். 'என்னைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்! அப்படின்னு அழைப்பு விடுக்கும் :) பச்சையாக சாப்பிட பிடிக்காதவங்க, லேசா ஆவியில் அரை வேக்காடாக வேக வெச்சு சேர்த்துக்கலாம். 

பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, இதெல்லாம் சுண்டல் செய்யலாம். முளை கட்டின வெந்தயத்தை குழம்பு வைக்கலாம். ஏன், நாம சாதரணமா செய்யற பச்சைப் பயறு குழம்பு, சப்பாத்திக்கு செய்யற வெள்ளைக் கடலை மசாலா (channa masala), இதுக்கெல்லாம் கூட முளை கட்டி சேத்துக்கலாம்…

என்ன, பயறு ஊற வைக்க கிளம்பிட்டீங்களா? :)

எல்லோரும் ஆரோக்கியமா, சந்தோஷமா, இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, October 12, 2008

பழப் பாயசம் செய்யலாம், வாங்க !



(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள்! :)

முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொஞ்சூண்டு பால்ல இதெல்லாம் ஊற வைங்க. செய்யறதுக்கு ஒரு 2 மணி நேரம் முன்னாடியே ஊற வச்சிடுங்க. ஏன்னா பாதாம் ஊற நேரம் ஆகும். அல்லது வென்னீர்ல ஊற வச்சா 10 நிமிஷத்துல ஊறிடுமாம். (இது துளசிம்மா டிப்ஸ் - அவங்களோட மத்த டிப்ஸ்க்கு பின்னூட்டம் பாருங்க :)

இப்ப கொஞ்சம் பால் இன்னொரு கிண்ணத்துல எடுங்க. அதுல நம்ம கஸ்டர்ட் பவுடர் இருக்கில்ல? இல்லையா? அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க! நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…

ம்… வாங்கியாச்சா? இப்ப அதுல ஒரு 2 மேசைக்கரண்டி எடுத்து ஆறின பால்ல – அதான் அப்ப எடுத்து வச்சோமே, அந்த பால்ல நல்லா கரைச்சுக்கோங்க. கட்டி கிட்டியெல்லாம் இல்லாம, பவுடர் இருந்த அடையாளமே தெரியாம கரைச்சுக்கோங்க. சூடான பால்ல கரைக்க வராது. இது முக்கியம்!

மறுபடி ஒரு 2 கப் பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து அடுப்புல வச்சு நல்ல்ல்லா காய்ச்சணும். ஓ, சொல்ல மறந்துட்டேனா – முதல்ல அடுப்ப பத்த வைச்சுக்கணுங்க!

பால் காயும்போது, பாதாம் பருப்போட தோல (வலிக்காம) எடுத்துட்டு முந்திரியையும் அதையும் பாலோட சேர்த்து மிக்ஸில அரைச்சுக்கோங்க.

காஞ்சுக்கிட்டிருக்க பால்ல கஸ்டர்ட் கரைசலை மெதுவா ஊத்தணும். ஒரு கை ஊத்தும்போது இன்னொரு கை பாலை கிளறிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா கட்டி தட்டிரும்! இதை செய்யும்போது அடுப்பைக் குறைச்சு வச்சுக்கோங்க. கலக்க கலக்க கொஞ்சம் கெட்டியா ஆகும் பாலு. இதுதான் நிஜமாவே கொஞ்சம் கவனமா செய்ய வேண்டிய வேலை.

பாயசம் கெட்டியா வேணும்னா அதுக்குத் தகுந்தாப்ல கஸ்டர்ட் பவுடரை சேத்துக்கலாம் – தண்ணியா வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனா ஆறினப்புறம் இன்னும் கெட்டிப்படும். அதனால பார்த்துக்கோங்க!

அப்புறம் கண்டென்ஸ்ட் மில்க் – அதாங்க, நம்ம ஊர்ல மில்க்மெய்ட்னு சொல்வோமே, அது, அரைச்ச பருப்பு விழுது, சில சொட்டுகள் வென்னிலா எசென்ஸ், ஏலக்காய் தூள், எல்லாத்தையும் பால்ல சேருங்க. நல்லா கலக்குங்க!

கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கிறது, இனிப்புக்காகத்தான். அது இல்லைன்னா வெள்ளை சீனி சேர்த்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ அது சேர்த்தாதான் கொஞ்சம் flavor, consistency, எல்லாம் நல்லாருக்குன்னு தோணும்.

இதோட அடுப்புக்கு வேலை முடிஞ்சிருச்சு. அடுப்பை அணைச்சு, பாயசத்தை எறக்கி வச்சு, நல்லா ஆற வச்சு, குளிர்பதனப் பொட்டில வைங்க.

பழப்பாயசம் பாக்கவும் அழகா இருக்கணும்னா பல வண்ணங்கள்ல பழங்கள் வாங்கி சேருங்க. ஆப்பிள், மாம்பழம் (ரொம்ப கனியாம கொஞ்சம் காய்வெட்டா இருக்கணும்), கருந்திராட்சை, செர்ரி, அன்னாசி, சாத்துக்குடி, இந்த பழமெல்லாம் சேர்க்கலாம். இன்ன பழம்தான் சேர்க்கணும்னு விதிமுறையெல்லாம் இல்லை. நல்லாருக்கும்னா சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் அழகா நறுக்கி அதையும் குளிர்பெட்டில வைங்க.

நல்லா குளுகுளுன்னு ஆனதுக்கப்புறம் பரிமாறுறதுக்கு முன்னாடி ஜிலுஜிலு பாயசத்துல வகைவகையா பழங்களை போட்டு அழகழகா எல்லாருக்கும் குடுங்க! நீங்களும் மறக்காம சாப்பிடுங்க!!

இந்த கஸ்டர்டையே கொஞ்சம் கெட்டியா ஐஸ்க்ரீம் பதத்துக்கு செய்து அதுல பழங்கள் போட்டும் குடுக்கலாம். அதுக்கு பேரு பழ சாலட் (fruit salad)!!

தேவையானதை மறுபடி ஒரு தரம் தொகுத்து சொல்லிர்றேன்:

பால் – 2.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் – 1 சின்ன can
கஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
வென்னிலா எசென்ஸ் – சில சொட்டுகள்
பழங்கள் – விருப்பப்படி

செய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!


--கவிநயா