Showing posts with label ரா.கணபதி. Show all posts
Showing posts with label ரா.கணபதி. Show all posts

Sunday, February 26, 2012

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மாபெரும் ஆன்மீக எழுத்தாளரான திரு.ரா.கணபதி அவர்கள் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது குறித்து கேள்விப்பட்டது முதல், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதுவும் திவாஜி அவர்கள் 'அண்ணா'வைப் பற்றி சொல்லுவதைப் படிக்கப் படிக்க, மனதின் நெகிழ்வும், கூடவே இந்த எண்ணத்தின் வலுவும் அதிகமாகியது. ஆனால் எழுத வேண்டும் என்ற என் ஆசைக்கும் அவசரத்துக்கும் தகுந்தாற்போல் இந்த வாரம் முழுக்க நேரம் இல்லை :( அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதவும் விருப்பமில்லை.

முன்பு ஒரு முறை, கிட்டத்தட்ட சரியாக ஒரு வருஷம் முன்பாக, திரு ரா.கணபதி அவர்களின் 'காற்றினிலே வரும் கீதம்' படித்த தாக்கத்தில், கண்ணன் பாட்டில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை இந்த சமயத்தில் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்...

**

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கின பிறகு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Sunday, January 3, 2010

புன்னகையின் பொருள்



நீங்க கடவுளை திட்டறதுண்டா?

நான் நிறையவே திட்டுவேன். “இத்தனை துயரத்தையும் வேதனைகளையும் குடுத்திட்டு, நீ மட்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு, எப்பப் பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேற இருக்கியே. உனக்கே நியாயமா இருக்கா?” அப்படின்னு. எதிர்பாரா விதமா இந்தக் கேள்விக்கு விடை மாதிரி சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.

குழந்தை முதல் முதலா நடக்க முயற்சி செய்யும் போது, நாம அதோட ரெண்டு கையையும் பிடிச்சுக்கிட்டு மெதுவா நடத்தி கூட்டிட்டுப் போவோம். திடீர்னு ஒரு நொடி கையை விட்டுருவோம். குழந்தை பயந்துக்கும். நாம அதைப் பார்த்து சிரிப்போம். அதுக்காக, நாம குழந்தை பயப்படறதைப் பார்த்து சிரிச்சு ஆனந்தப் படறோம்னு பொருள் இல்லை. அந்த நொடி நேரம் பிடியை விட்டாலும், குழந்தை விழற மாதிரி இருந்தா நாம உடனே பிடிச்சுக்குவோம்னு நமக்கே தெரியும். குழந்தை தானா எவ்வளவு தூரம் சமாளிக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் வேடிக்கையா அப்படி செய்து பார்க்கிறோம்.

அதே போலத்தான் அன்னை பராசக்தியும். நம்மோடு எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கா. நம்மை எத்தனையோ துன்பத்திலும் இன்பத்திலும் உழல விட்டாலும், நம்மை இறுதியில் தாங்கிக் கொள்ளப் போகிறவள் அவள்தான்னு அவளுக்கே தெரியும். அதனாலதான் சிரிச்சிக்கிட்டே தன் குழந்தைகளை, நம்மை, அவ பார்த்துக்கிட்டிருக்கா. நாமதான் அவ தாங்கிப்பான்னு தெரியாமலோ, அல்லது நம்பாமலோ, பல சமயங்களில் தடுமார்றோம்.

திரு. ரா. கணபதி அவர்களின் ‘நவராத்திரி நாயகி’ என்ற புத்தகத்தின் முகவுரையில் அவர் சொல்லுகின்ற உவமைதான் இது. நல்லாருக்குல்ல?

என் புரிதலில், சொந்த வார்த்தைகளில் தந்திருப்பதால், செய்தியில் ஏதேனும் குற்றமிருந்தால் அது என்னுடையதே.


அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://babyanimalz.com/community/sites/default/files/images/PolarBears_02a-Mom_N_Baby-S.jpg