Showing posts with label மாணிக்கவாசகர். Show all posts
Showing posts with label மாணிக்கவாசகர். Show all posts

Thursday, January 13, 2011

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


திருப்பள்ளியெழுச்சி - 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!


இன்றுடன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!!

Wednesday, January 12, 2011

களிதரு தேனே! கடலமுதே! கரும்பே!


திருப்பள்ளியெழுச்சி - 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான சிவபெருமானே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! உனக்கு பணி செய்யும் அடியவர்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களின் கண்களில் அகலாது நின்று, இன்பம் தருகின்ற இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பினும் இனியவனே! உன்னை வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! இந்த உலகத்தின் உயிராகிய எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Tuesday, January 11, 2011

மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!



திருப்பள்ளியெழுச்சி - 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: என்னை ஆட் கொண்ட இனிமையான அமுதம் போன்ற சிவபெருமானே! அழகிய மெல்லிய விரல்களையுடைய பார்வதி தேவியுடன் அடியவர்களின் உள்ளங்களில் நிறைந்து அருள்பவனே! அனைத்துக்கும் முதலும், நடுவும், முடிவுமாய் நிற்பவன் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். (குருத்த மரத்தின் அடியில்) ஆசானாக வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

Monday, January 10, 2011

இது அவன் திருவுரு; இவனே அவன்!


திருப்பள்ளியெழுச்சி - 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையின் தலைவனே! பரம்பொருளின் சுவையானது பழச்சுவையோ, அமுதத்தின் சுவையோ, அறிந்து கொள்ள அரியதோ, அன்றி எளியதோ என்பதை தேவர்களும் அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில், இதுவே அவர் திருவுருவம், அவரே இவர், என்று நாங்களும் அறிந்து கொள்ளும்படி, இந்த மண்ணுலகில் எழுந்தருளிக் காட்சி அளிப்பவனே! எங்களை உன் விருப்பம் போல ஆட்கொண்டு அருளிட, பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.tamilhindu.net/t1118-topic

Sunday, January 9, 2011

அணங்கின் மணவாளா!


திருப்பள்ளியெழுச்சி - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்:
உமாதேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் மெய்யடியார்கள், தங்கள் பந்தபாசங்களை துறந்து, உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்களும் தங்களின் இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Saturday, January 8, 2011

சிந்தனைக்கும் அரியாய்!


திருப்பள்ளியெழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. எம்பெருமானே! நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொண்டு அருள்வதற்காக, பள்ளி எழுந்தருள்வாயே!

Friday, January 7, 2011

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


திருப்பள்ளியெழுச்சி - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/

Thursday, January 6, 2011

யாவரும் அறிவரியாய், எமக்கு எளியாய்!



திருப்பள்ளியெழுச்சி - 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திரங்களின் ஒளி மங்கி, சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல இருக்கிறது. அழகிய கழல்களை அணிந்த உன் திருவடிகளை அன்போடு எனக்கு காட்டுவாயாக! தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/captain_don/368956096

Wednesday, January 5, 2011

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!


திருப்பள்ளியெழுச்சி - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! அருணன் கிழக்கு திசையை அணுகி வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து ரீங்கரிக்கின்றன. அருளாகிய செல்வத்தை அளவின்றித் தருகின்ற ஆனந்த மலையை ஒத்தவனே! அலைகடலைப் போன்ற அருட்கடலே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jamieanne/5092080665

Monday, January 3, 2011

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே!

தன்னை ஆட்கொண்ட, திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு இட வேண்டும் என்று தோன்றியது. எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்...ஓம் நமசிவாய!



திருப்பள்ளியெழுச்சி - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Tuesday, January 13, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 20





20.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.


போற்றி - யாவராலும் போற்றப்படுபவனே!

அருளுக நின் ஆதியாம் பாதமாலர் - எல்லாவற்றிற்கும் மூலமான நின் திருவடிகளை எமக்கு அருள்வாயாக!

அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் - எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் தளிர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக!

எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் - எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய பாதங்களை போற்றுகிறோம்!

எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் - எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மென்மையான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்!

எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் - எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளை போற்றுகிறோம்!

மால் நான்முகனும் காணாத புண்டரிகம் - திருமாலும் நான்முகனும் காண இயலாத தாமரை போன்ற பாதங்களை போற்றுகிறோம்!

யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள் - எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் பொன்னடிகளை போற்றுகிறோம்!

யாம் மார்கழி நீர் ஆடு - நாங்கள் உன்னைப் பாடிப் புகழ்ந்து மார்கழி நீராடுகிறோம்!


யாவராலும் போற்றப்படும் சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் மூலமான உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய திருவடிகளைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மலர் போன்ற மென்மையான பாதங்களைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளைப் போற்றுகிறோம்! திருமாலும் நான்முகனும் கண்டறியாத உன் தாமரை போன்ற பாதங்களைப் போற்றுகிறோம்! எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் உன் பொன்னடிகளைப் போற்றுகிறோம்! இவ்வாறு உன்னைப் பலவாறு போற்றி நாங்கள் மார்கழி நீராடுகிறோம்! உன் திருவடிகளைக் கொண்டு எங்களைக் காத்தருளல் வேண்டும்!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/



[இத்துடன் திருவெம்பாவை நிறைவு பெறுகிறது. கணபதிக்கும், ஈசனுக்கும், என் அன்னைக்கும், படித்த, படிக்கவிருக்கும், பின்னூட்டமிட்ட, இடவிருக்கும், அன்பர்களுக்கும், நன்றி!]



--திருச்சிற்றம்பலம்--


Monday, January 12, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 19



19.


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்.



எங்கள் பெருமான் - எங்கள் தலைவனே!

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் - உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம்

என்று அங்கு அப்பழம் சொல் - என்ற அந்தப் பழமொழியை

புதுக்கும் எம் அச்சத்தால் - மீண்டும் மொழிவது பொருத்தமன்று என்று உணர்ந்தும், அதனையே சொல்லும் எம் பயத்தினால்

உனக்கு ஒன்று உரைப்போம் கேள் - இறைவனாகிய உமக்கு நாங்கள் சொல்லுவதும் ஒன்று உண்டு

எம் கொங்கை - எங்கள் உடல்

நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க - உன் அன்பர் அல்லாதவர்களுக்கு உரிமையாக வேண்டாம்

எம் கை - எங்கள் கைகள்

உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க - உனக்கன்றி வேறிருவருக்கும் எந்த தொண்டும் செய்யாதிருக்கட்டும்

கங்குல் பகல் எம் கண் - எமது கண்கள் இரவிலும் பகலிலும்

மற்று ஒன்றும் காணற்க - உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்கட்டும்

இங்கு இப்பரிசு எம் கோன் நல்குதியேல் - இவ்வுலகத்தில் எங்கள் தலைவனாகிய நீ இவ்வாறே அருள்வாயானால்

ஞாயிறு எங்கு எழில் என் - சூரியன் கீழ்த்திசையிலன்றி எந்தத் திசை உதித்தால் என்ன, நாங்கள் கவலைப்பட மாட்டோம்!


[பழம் சொல் - பழமொழி; கங்குல் - இரவு]

எங்கள் தலைவனே! உன் கையில் சேர்க்கப் பெறும் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற அந்தப் பழமொழியை மீண்டும் சொல்வது பொருத்தமன்று என்று தெரிந்தும், எங்கள் அச்சத்தால் அதனையே சொல்கிறோம். எங்கள் இறைவனாகிய உனக்கு நாங்கள் சொல்வது ஒன்று உண்டு. எங்கள் உடல் உன் அன்பர்கள் அல்லாதார்க்கு உரிமையாக வேண்டாம். எங்கள் கைகள் உன்னையன்றி வேறு ஒருவருக்கும் தொண்டு செய்ய வேண்டாம். எங்கள் கண்கள் இரவிலும் பகலிலும் உன்னையன்றி வேறு ஒரு பொருளையும் காணாதிருக்க வேண்டும். இவ்வுலகத்தில், எங்கள் அரசனாகிய நீ, இவ்வாறே எங்களுக்கு அருள் செய்வாயானால், கதிரவன் கீழ்த்திசையிலன்றி வேறு எந்தத் திசையில் உதித்தால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம்!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/

Sunday, January 11, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 18



18.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பெண்ணே - பெண்ணே!

அண்ணாமலையான் - அண்ணாமலையில் உறையும் பெருமானின்

அடிக் கமலம் - திருவடித் தாமரைகளை

சென்று இறைஞ்சும் - சென்று வணங்கும்

விண்ணோர் முடியின் மணித் தொகை - தேவர்களது மகுடங்களில் விளங்கும் பல வகையான ரத்தினங்களும்

பொலிவு இழந்து - தம் பிரகாசத்தை இழந்து

வீறு அற்றாற்போல் - மழுங்கிக் காண்பது போலவும்

கண் ஆர் இரவி - எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற சூரியனின்

கதிர் வந்து - கிரணங்கள் பரவி

கார் சுரப்ப - இருளை நீக்குவது போலவும்

தண் ஆர் ஒளி மழுங்கி - குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி

தாரகைகள் தாம் அகல் - நட்சத்திரங்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும்

பெண்ணாகி ஆணாய் அலியாய் - பெண் உருவமாய், ஆண் உருவமாய், இரண்டும் இல்லா உருவமாய்

பிறங்கு ஒளி சேர் - மிகுந்த ஒளியையுடைய நம் இறைவனின்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி - ஆகாயகமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும்

கண் ஆர் அமுதமாய் நின்றான் - கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் நின்றான்

கழல் பாடி - வீரக்கழல் அணிந்த அவன் திருவடிகளைப் பாடி

இப்பூம்புனல் பாய்ந்து ஆடு - இந்த அழகிய தடாகத்தில் தாவி நீராடுவோமாக!


[வீறு - ஒளி; கண் ஆர் - எங்கும் நிறைந்த; இரவி - சூரியன்; கார் - இருள்]

பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://ulagan.tripod.com/sivafire.gif

Saturday, January 10, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 17



17.

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


கொங்கு உண் கரும் குழலி - வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே!

செங்கணவன் பால் - சிவந்த கண்களையுடைய திருமாலினிடத்தும்

திசைமுகன் பால் - நான்கு திருமுகங்களை உடைய பிரம்மனிடத்தும்

தேவர்கள் பால் - இந்திரன் முதலிய பிற தேவர்களிடத்தும்

எங்கும் இலாததோர் இன்பம் - யாவருக்கும் கிடைக்காத பேரின்பத்தை

நம் பாலதாக - நாம் அடையும்படியாக

நம் தம்மை கோது ஆட்டி - நம்மை குற்றங்களில் இருந்தும் நீக்கி ஆதரித்து

இங்கு - இவ்வுலகில்

நம் இல்லங்கள் தோறும் எழுந்து அருளி - நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்து அருளி

செங்கமலம் பொன் பாதம் - தம்முடைய, தாமரை மலர் போல் சிவந்த மிருதுவான திருவடிகளை

தந்து அருளும் சேவகனை - தரிசிக்க செய்த வீரச் செயல்கள் புரிந்த சிவபெருமானை

அங்கண் அரசை - அழகிய கண்களையுடைய நம் அரசை

அடியோங்கட்கு ஆர் அமுதை - அடியவர்களான எங்களுக்கு நிறைந்த அமுதைப் போன்றவனை

நங்கள் பெருமானை - நம் இறைவனை

நலம் திகழ - நமக்கு எல்லா நலன்களும் பெருகும் படியாக

பாடி - புகழ்ந்து பாடி

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து நீராடுவோமாக!


[கொங்கு - மணம், வாசனை; உண் - நிறைந்த; கோது - குற்றம்; சேவகன் - வீரச் செயல்களைப் புரிந்தவன்]

வாசனை பொருந்திய கருமையான கூந்தலையுடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்கு திருமுகங்களையுடைய பிரமனிடத்தும், இந்திரன் முதலிய தேவர்களிடத்தும், யாருக்கும் கிடைக்காத பேரின்பத்தை நாம் அடையும்படியாக, நம்மை நம் குற்றங்களிலிருந்து நீக்கி ஆதரித்து, இவ்வுலகில் நம் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளி, தம்முடைய தாமரை மலர் போல சிவந்த மிருதுவான திருவடிகளை தரிசிக்கச் செய்த, வீரச் செயல்கள் பல புரிந்த சிவபெருமானை, அழகிய கண்களையுடைய நம் அரசை, அடியவர்களாகிய நமக்கு நிறைந்த அமுதம் போன்றவனை, நம் பெருமானை, எல்லா நலன்களும் பெருகும்படியாகப் புகழ்ந்து பாடிக் கொண்டு, தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் திளைத்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : shaivam.org

Friday, January 9, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 16




16.

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பிற் சிலம்பித், திருப்புருவம்
என்னச் சிலை குலவி, நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை, ஏலோர் எம்பாவாய்.


மழை - மழைக் கடவுளே!

கடலை முன்னி - கடல் நீரை நெருங்கி

சுருக்கி - வற்றச் செய்து

எழுந்து - மேகமாய் வானில் எழுந்து

உடையாள் என்ன திகழ்ந்து - நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி

எம்மை ஆள் உடையாள் - நம்பிராட்டியின்

இட்டு இடையின் மின்னி - மிகச் சிறிய இடையைப் போல் மின்னி

பொலிந்து - மிகப் பொலிவுடன் தோன்றி

எம்பிராட்டி - நம் தலைவியின்

திருவடி மேல் - திருவடிகளில் அணியப் பெற்ற

பொன்னம் சிலம்பில் சிலம்பி - பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடித்து முழங்கி

திருபுருவாம் என்ன - அவளுடைய அழகிய புருவம் போல

சிலை குலவி - வானவில்லைச் செய்து வளைத்து

நம் தம்மை ஆளுடையாள் தன்னில் - நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறையும்

பிரிவில்லா எம்கோமான் - நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானுடைய

அன்பர்க்கு - அன்பர்களுக்கு

முன்னி - முற்பட்டு

அவள் நமக்கு முன் சுரக்கும் - சிவபெருமானும் உமாதேவியும்

பொழியும் இன் அருளே என்ன - நன்மை பயக்கும் கருணைப் பெருக்கே போல

பொழியாய் - நீ மழையைப் பொழிவாயாக!


மழைக் கடவுளே! கடல் நீரை வற்றச் செய்து, மேகமாய் வானில் எழுந்து, நம்மை ஆட்கொண்ட உமாதேவியின் திருமேனியைப் போல் கருநிறமாக விளங்கி, நம்பிராட்டியின் சிறு இடையைப் போல் மின்னி பொலிவுடன் தோன்றி, நம் தலைவியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொன் நிறமான அழகிய சிலம்பின் ஒலி போல் இடியிடித்து விளங்கி, அவளுடைய அழகிய புருவம் போல வானவில்லைச் செய்து வளைத்து, நம்பிராட்டியாகிய உமாதேவியுடன் உறைந்து, நீக்கமின்றி நிற்கின்ற எம் அரசனாகிய சிவபெருமானின் அன்பருக்கு, சிவபெருமானும் உமாதேவியும் மனமுவந்து அருளும் கருணைப் பெருக்கைப் போல, நீ மழையைப் பொழிவாயாக!


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : www.geocities.com

Thursday, January 8, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 15




15.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே, நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள்; சித்தம் களிகூர,
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்,
பாரொருகால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவ ராமாறும்,
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வாருருவப் பூண்முலையீர், வாயார நாம் பாடி,
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


வார் உருவப் பூண்முலையீர் - கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே!

எம்பெருமான் என்று என்று - எம்பெரும்பானே! எம்பெருமானே! என்று

ஓர் ஒருகால் - ஒவ்வோர் சமயம் பலமுறை கூறியவளாக

நம்பெருமான் சீர் - நம் ஈசனின் சிறந்த குணங்களை

வாய் ஓவாள் - இடைவிடாமல் பேசுவாள்

சித்தம் களி கூர - மனதில் பேரின்பம் மிகுதலினால்

நீர் ஒருகால் ஓவா - கண்களில் நீர் ஓயாமல்

நெடும் தாரை கண் பனிப்ப - நீண்ட தாரையாய்ப் பெருகவும்

பார் ஒருகால் வந்தனையாள் - ஒரு சமயம் நிலத்தின் மீது வணங்குதலை உடையவள்

விண்ணோரை தான் பணியாள் - மற்ற தேவர்களை சிறிதும் வணங்க மாட்டாள்

பேர் அரையற்கு - நம் தலைவனிடத்தில்

இவ்வாறே - இவ்விதத்தில்

பித்து ஒருவர் ஆமாறும் - பித்துக் கொண்ட தன்மையையும்

இவ்வண்ணம் யார் ஒருவர் - இப்படி வேறு எவர்

ஆட்கொள்ளும் வித்தகர் - நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமைகள் உடையவர்

தாள் - திருவடிகளை

வாயார நாம் பாடி - வாய் நிறைய நாம் பாடிக் கொண்டு

ஏர் உருவ பூம்புனல் பாய்ந்து ஆடு - அழகு மிக்க தாமரை நிறைந்த தடாகத்தில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


[ஓவாள் - இடைவிடாது கூறுவாள்; அரையன் - அரசன்]

கச்சணிந்து, அழகிய அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடைய பெண்களே! இந்த பெண்ணைப் பாருங்கள்! எம்பெருமானே எம்பெருமானே என்று ஒவ்வோர் சமயம் பலமுறை கூறுகிறாள்; நம் ஈசனின் சிறந்த குணங்களை இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்; மனதில் பொங்கும் பேரின்பத்தால் கண்களில் நீர் ஓயாமல் நீண்ட தாரையாகப் பெருகுகிறது; ஒரு சமயம் நிலத்தின் மேல் வீழ்ந்து வணங்குகிறாள்; மற்ற தேவர்களையோ சிறிதும் வணங்க மறுக்கிறாள். இவ்விதத்தில் தம்மிடம் பித்துக் கொள்ள வைக்கும் தன்மையை உடையவரை, நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளும் திறமையை உடையவரை, நம் தலைவனின் திருவடிகளை, நாம் வாய் நிறைய பாடிக் கொண்டு, அழகு மிக்க தாமரை நிறைந்த மடுவில் பாய்ந்து பாய்ந்து நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்

Wednesday, January 7, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14



14.


காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக்,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
சோதி திறம் பாடிச், சூழ்கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.


காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய தோடுகள் அசையவும்

பைம்பூண் கலன் ஆட - பசும்பொன்னால் செய்த அணிகலன்கள் ஆடவும்

கோதை குழல் ஆட - மலர் மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும்

வண்டின் குழாம் ஆட - அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும்

சீதப் புனல் ஆடி - குளிர்ந்த நீரில் மூழ்கி

சிற்றம்பலம் பாடி - சிவனார் ஆடும் அம்பலத்தைப் பாடி

வேதப் பொருள் பாடி - இறைவன் வேதமாக இருப்பதை பாடி

அப்பொருள் ஆம் ஆ பாடி - அதன் உட்பொருளாக இருக்கும் மேன்மையைப் பாடி

சோதி திறம் பாடி - அவன் ஒளிவடிவாய் நின்ற தன்மையைப் பாடி

சூழ் கொன்றை தார் பாடி - அவன் அணிந்துள்ள கொன்றை மாலையைப் பாடி

ஆதி திறம் பாடி அந்தம் ஆ பாடி - அவன் எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி

பேதித்து - அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி

நம்மை வளர்த்து எடுத்த - நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட

பெய்வளைதன் பாத திறம் பாடி - வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடி மாண்பையும் பாடி

ஆடு - நீராடுவோமாக!

[குழை - தோடு; கலன் - நகைகள்; கோதை - மலர்; பேதித்து - வேறுபடுத்தி]

காதுகளில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், மலர்மாலைகள் சுற்றிய கூந்தல் ஆடவும், அம்மாலைகளின் மேல் பறந்து சப்திக்கும் வண்டுகள் கூட்டம் ஆடவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, சிவனார் நடனமாடும் அம்பலத்தைப் பாடி, அவன் வேதமாகவும், அதன் உட்பொருளாகவும் இருக்கும் மேன்மையைப் பாடி, அவன் ஒளிவடிவாக நின்ற தன்மையைப் பாடி, அவனே எல்லாப் படைப்புகளுக்கும் முதலாயும் முடிவாயும் நிற்கும் தன்மையைப் பாடி, அஞ்ஞானத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மைத் தொண்டர்களாக ஏற்றுக் கொண்ட, வளைகள் அணிந்த உமையம்மையின் திருவடிகளின் மாண்பையும் பாடி, நீராடுவோமாக!


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://images.tribe.net/tribe/upload/photo/feb/e37/febe37d6-8dfb-484a-aafc-660ea2b891ba.large-profile.jpg

Tuesday, January 6, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 13



13.


பைங்குவளைக் கார் மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த,
பொங்கு[ம்] மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து, நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்,
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்,
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பைங்குவளைக் கார் மலரால் - அப்போதுதான் அலர்ந்த கருநிற குவளை மலர்கள் இருப்பதாலும்

செங்கமலப் பைம்போது ஆல் - சிவந்த தாமரை மலர்கள் இருப்பதாலும்

அங்கு அம் குருகு இனத்தால் - அங்கு அழகிய நீர்ப்பறவைகள் இருப்பதாலும்

பின்னும் அரவத்தால் - மேலும் அங்கு திரியும் பாம்புகளாலும்

தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - உயிர்கள் தங்கள் அழுக்கு/ஆணவத்தைப் போக்கிக் கொள்ள அங்கு வருவதாலும்

எங்கள் பிராட்டியும் - எங்கள் தலைவியாகிய உமாதேவியும்

எம் கோனும் போன்று இசைந்த - எங்கள் அரசனான சிவபெருமானும் போல் விளங்கும்

பொங்கு[ம்] மடுவில் - நீர் நிறைந்த குளத்தில்

புகப்பாய்ந்து பாய்ந்து - புகுந்து இங்கும் அங்கும் தாவித் தாவி

நம்சங்கம் சிலம்ப - நம் கையில் அணிந்திருக்கும் சங்கு வளைகள் ஒலிக்கவும்

சிலம்பு கலந்தார்ப்ப - காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஆரவாரிக்கவும்

கொங்கைகள் பொங்க - மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கவும்

குடையும் புனல் பொங்க - நாம் திளைத்து ஆடும் குளத்தின் நீர் மேலே வரவும்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு - தாமரை மலர்கள் நிறைந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோம்


[குருகு - சிறு பறவைகள், குருக்கத்தி மலர்; அரவம் - பாம்பு; மலம் - அழுக்கு, ஆணவம்]

அப்போதுதான் அலர்ந்த கருங்குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும், பலவேறு நீர்ப் பறவைகளும், பாம்புகளும் இருப்பதாலும், பல உயிர்கள் வந்து தங்கள் ஆணவம் முதலான அழுக்குகளைக் களைந்து கொள்ள வருவதாலும், எங்கள் உமாதேவியும், எங்கள் தலைவனான சிவபெருமானும் போல் விளங்கும் இந்த நீர் நிறைந்த குளத்தில், புகுந்து, இங்கும் அங்கும் தாவி, நம் கைகளில் உள்ள சங்கு வளைகள் ஒலிக்கும் படியும், கால்களில் அணிந்த சிலம்புகள் ஆரவாரம் செய்யும் படியும், மிக்க மகிழ்ச்சியால் மார்பகங்கள் பூரிக்கும் படியும், நாம் திளைத்தாடுவதனால் நீர் பொங்கி மேலே வரும்படியும், தாமரை மலர்கள் நிறைந்த இந்த அழகிய நீரில் ஆழ்ந்து நீராடுவோமாக!



பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கூகுளார்



Monday, January 5, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 12




12.


ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டு ஆர்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.


ஆர்த்த - நம்மைப் பிணித்துக் கட்டிய

பிறவித் துயர் கெட - பிறவியாகிய துன்பம் நீங்கும்படி

நாம் ஆர்த்தாடும் - நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும்

தீர்த்தன் - தூய்மையானவன்

நற்றில்லைச் சிற்றம்பலத்தே - புனிதமான தில்லை வெளியினில்

தீயாடும் கூத்தன் - இடக்கையில் அனல் ஏந்தி களிப்புடன் ஆடும் கூத்தன்

இவ்வானும் குவலயமும் எல்லோமும் - ஆகாயத்தையும், புவியையும், இன்னும் எல்லாப் பொருள்களையும்

காத்தும் படைத்தும் கரந்தும் - படைத்தும், காத்தும், ஒடுக்கியும்(மறைத்தும்)

விளையாடி - விளையாடும் சிவபெருமானே!

வார்த்தையும் பேசி - உன் புகழையும், நமசிவாய எனும் திருமந்திரத்தையும் ஓதிக் கொண்டே

வளை சிலம்ப - கைவளைகள் ஒலிக்கவும்

வார் கலைகள் -நீண்ட மேகலைகள்

ஆர்ப்பு அரவம் செய்ய - மிகவும் சலசலக்கவும்

அணி குழல் மேல் - மலரால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட கூந்தலின் மேல்

வண்டு ஆர்ப்ப - வண்டுகள் ரீங்காரம் செய்யவும்

பூத் திகழும் பொய்கை - தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில்

குடைந்து - நீரைத் துளைத்து

உடையான் - நம்மை அடியவர்களாக உடைய சிவனது

பொற்பாதம் ஏத்தி - அழகிய திருவடிகளைப் போற்றி

இருஞ்சுனை நீர் ஆடு - பெரும் சுனை நீரில் நீராடுவோம்


நம்மைப் பிணித்துக் கட்டிய பிறவியாகிய துன்பம் நீங்கும்படி, நாம் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆராவரம் செய்து கொண்டாடும், தூய்மையானவனும், புனிதமான தில்லைவெளியினில் இடக்கையில் நெருப்பை ஏந்தி களிப்புடன் நடனமிடும் கூத்தனும், ஆகாயத்தையும், பூமியையும், இன்னும் எல்லாவற்றையும், படைத்தும் காத்தும் ஒடுக்கியும் விளையாடுபவனும், ஆகிய சிவபெருமானே! உன் புகழையும், நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் ஓதிக் கொண்டே, கைவளைகள் ஒலிக்கவும், நீண்ட மேகலைகள் சலசலக்கவும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை மலர்கள் விளங்குகின்ற தடாகத்தில், நீரைத் துளைத்து விளையாடி, நம்மை அடியவர்களாக உடைய சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி, பெரிய சுனை நீரில் நீராடுவோம்.


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: கூகுளார்

Sunday, January 4, 2009

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 11




11.

மொய்யார் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி,
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண், ஆரழல்போல்
செய்யா, வெண்ணீறாடீ, செல்வா, சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா,
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்,
எய்யாமற் காப்பாய் எமை, ஏலோர் எம்பாவாய்.


ஐயா - ஐயனே

ஆர் அழல் போல் செய்யா - இடக்கையில் பொருந்திய தீயைப் போல் சிவந்த மேனியனே!

வெண்நீறு ஆடி - வெண்மையான சாம்பலைப் பூசியவனே!

செல்வா - எல்லாச் செல்வமும் பெற்றவனே!

சிறுமருங்குல் - சிறிய இடையினையும்

மை ஆர் தடம் காண் மடந்தை மணவாளா - மை தீட்டிய விசாலமான கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே!

மொய் ஆர் - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற

தடம் பொய்கை புக்கு - அகன்ற தடாகத்தில் மூழ்கி

முகேர் என்ன - கையால் முகேர் முகேர் என்று தட்டி

குடைந்து குடைந்து - நன்றாக திளைத்து

உன் கழல் பாடி - உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடி

வழி அடியோம் - வழிவழியாய் அடியவர்களாய் வாழ்ந்து வந்தோம்

ஐயா நீ - தலைவனாகிய நீ

ஆட்கொண்டு அருளும் - பக்தர்களை உன்னருகில் ஈர்த்து அடிமைப்படுத்தி அருளும்

விளையாட்டின் - தீராத விளையாட்டை

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் - பின்பற்றீ, உன்னை வந்து அடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வழிகளையும் அனுசரித்து

உய்ந்து ஒழிந்தோம் - உன்னை நாடி வந்தோம்

எமை எய்யாமல் காப்பாய் - எங்களைக் கைவிடாமல் காப்பாயாக!


[செய்யா - சிவந்த மேனியனே; மருங்குல் - இடை; எய்யாமல் - கைவிடாமல்]

ஐயனே! இடக்கையில் ஏந்திய நெருப்பைப் போல் சிவந்த மேனியை உடையவனே! வெண்சாம்பலைப் பூசியவனே! எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியே! சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் கணவனே! வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற பொய்கையில் மூழ்கி, கையால் நீரை 'முகேர்' எனத் தட்டி, நன்றாகத் திளைத்து நீராடி, உன் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பாடி, பரம்பரை பரம்பரையாக உன்னுடைய அடியவர்களாக வாழ்ந்து வந்தோம். எங்கள் தலைவனாகிய நீ, பக்தர்களைத் தம்மிடம் ஈர்த்து அடிமைப் படுத்திக் கொள்ளும் விளையாட்டை பின்பற்றி, உன்னை வந்தடையும் தொண்டர்கள் வழிபட்டு உய்யும் எல்லா வகைகளையும் கண்டறிந்து, உன்னை நாடி வந்தோம். எங்களை கைவிட்டு விடாமல் ஏற்றுக் கொள்வாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org