
திருப்பள்ளியெழுச்சி - 1
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!
அருமையான பகிர்வும் விளக்கமும். நன்றி கவிநயா. தொடருங்கள்.
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி. நன்றி :)
ReplyDelete