
நீலநிறக் காளியம்மா!
சூலங்கொண்டு வாடியம்மா!
தண்ணருளைப் பொழிகின்ற தாயே!
தரணியினைக் காத்திடவே வாயேன்!
கங்கெனவே இருகண்கள்
கயவர்களைக் கலக்கிவிடும்!
தொங்குகின்ற தீநாவோ
தீயவரைத் துரத்திவிடும்!
பதினெட்டுக் கரங்களுடன் தாயே!
பிள்ளைகளை அரவணைக்க வாயேன்!
கோரைப்பல் உடன்வந்து
கொடுவினைகள் களைந்துவிடும்!
விரிந்திருக்கும் கருங்கூந்தல்
வல்வினையை விரட்டிவிடும்!
பயங்கரியாய் உருக்கொண்ட தாயே!
பால்வெள்ளை உள்ளத்தில் வாயேன்!
தத்தகிட என்றாடி
தானவரை அழித்திடுவாய்!
தீம்தகிட என்றாடி
தீமைகளைப் பொசுக்கிடுவாய்!
திக்கெட்டும் சுழன்றாடும் தாயே!
தூவெள்ளை உள்ளத்தில் வாயேன்!
--கவிநயா

