உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Showing posts with label ஐரீன். Show all posts
Showing posts with label ஐரீன். Show all posts
Sunday, August 28, 2011
எங்க ஊருக்கு வந்த ஐரீன்
எதிர்பார்த்துக் கொண்டிருந்த புயல் ஆரம்பித்து விட்டது. மிகவும் பாதுகாப்பாக, வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உள்ளேயிருந்து பார்க்கையில் பயங்கரம் தெரியவில்லை. மாறாக, புயற்காற்று மிகவும் அழகு மிகுந்ததாக, ஆக்ரோஷம் நிறைந்ததாக, கண்ணகல வைப்பதாக, ‘அடேயப்பா!’ என்று அதிசயிக்க வைப்பதாக, மனசை மயக்குவதாகத்தான் இருக்கிறது.
மழை அடித்து ஊற்றுகிறது. வேகமாக வரும் காற்று, அந்த மழையை அப்படியே நாம் கைகளால் அல்லது துடுப்பால் தண்ணீரைத் தள்ளுவது போல் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தத் தண்ணீரால் பூமியைத் தொடக் கூட முடியவில்லை. அப்படியே காற்றோடு கை கோர்த்து பறந்து போவது போல் ஒரே ஓட்டம். அப்பாவும் பிள்ளையும் நடக்கும் போது, அப்பா கையை விட்டு விட்டுப் போய்விட நேர்ந்தால், ‘அப்பா, அப்பா’ என்று பிள்ளை பின்னாடியே ஓடுவது போல்தான் மழைத் தண்ணீரும் தரையில் கால் பாவாமலேயே காற்றோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இருக்கிற கைகளையெல்லாம் வான் நோக்கி விரித்துக் கொண்டு அந்த இறைவனை ‘இந்த க்ஷணமே வருகிறாயா, இல்லையா?’ என்று மிரட்டலாக இறைஞ்சுவது போல் இருக்கிறது. வராவிட்டால் தாமே அவனை எட்டிப் பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்துடன், விண்ணைத் தொட்டு விடும் விடா முயற்சியுடன் இருப்பது போல் இருக்கிறது.
‘எத்தனை நாள்தான் ஒரே இடத்தில் நிற்பது? என்னை இடம் மாற்றி விடு’ என்று கேட்பது போலவும் இருக்கிறது.
இருக்கும் இடத்திலும் சிறக்க முடியாமல், வேறிடத்துக்கும் போக முடியாமல் அவதிப்படும் இரண்டுங்கெட்டானைப் போல, வேரைப் பிடுங்கிக் கொண்டு போகவும் முடியாமல், எட்டி வானத்தைத் தொடவும் முடியாமல் இந்த மரங்களெல்லாம் தவித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.
நாம் இப்படி இங்கே உட்கார்ந்து புயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேறு யாருக்குமே எதுவும் ஆகாமல், எல்லோருமே நலமாக இருக்க வேண்டுமே, என்ற பிரார்த்தனையும் எழுகிறது. எங்கள் வீட்டுக்கு அருகிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றையும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
மின்சாரம் இல்லாமல் போனாலும் போய்விடும். மின்சாரம் இல்லா விட்டால் ஒரு தேநீர் கூடக் குடிக்க முடியாது. இந்த யோசனையுடனே அவசரமாக இரவுக்கு வேண்டியதை விரைவாகச் சமைக்கிறேன்.
மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கை விளக்கு, இப்படி எல்லாவற்றையும் எடுத்து கைக்கு எட்டிய தொலைவில், சட்டென்று எடுக்கும் விதமாக தயாராக வைக்கிறோம். ஆனால் எங்களுக்கு என்னவோ மின்சாரம் போகவில்லை. சில நண்பர்களுடன் தொலைபேசி, நலம் விசாரிக்கிறோம்.
வீட்டுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டிருக்கின்றன. வீட்டிற்கு எதிர்ப்புறமாக.
இரவு முடிந்து விட்டது. புயல் கடந்து விட்டது. மறு நாள் விடிந்து விட்டது. காற்றும் மழையும் ஓய்ந்து, மிகப் பிரகாசமாக வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. நேற்றுதானா அத்தனை புயலும், மழையும், என்று வியக்கும்படி…
ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும், கிளைகளும், வீதியெல்லாம் பாய் விரித்திருந்த இலைகளும்தான், ‘ஆம், நேற்றுதான்… அதற்கு நாங்களே சாட்சி’ என்று பதிலளிக்கின்றன.
இன்னும் நின்று கொண்டிருக்கும் மரங்களெல்லாம், பெருந் தாண்டவம் ஆடி முடித்த களைப்புடன், தியானத்தில் ஆழ்ந்து விட்டதைப் போல அசையாமல் நிற்கின்றன.
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)
