Wednesday, December 31, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 7




7.

அன்னே, இவையும் சிலவோ, பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இருஞ்சீரான்,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்,
என்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு, ஏலோர் எம்பாவாய்.



அன்னே - தாயே!

இவையும் சிலவோ - இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்!

பல அமரர் - பல தேவர்களும்,

உன்னற்கு அரியன் - நினைத்தற்குக் கூட அரியவனும்,

ஒருவன் - ஒப்பற்றவனும்,

இரும் சீரான் - பெரும் புகழை உடையவனது,

சின்னங்கள் கேட்ப - சங்கு, தாரை முதலிய விடியற்காலை இசைக்கருவிகள் முழங்கக் கேட்டு,

சிவன் என்றே வாய் திறப்பாய் - சிவா சிவா என்று சொல்லிக் கொண்டே உன் வாய் திறப்பாய்

தென்னா என்னா முன் - தென்னவனே என்று சொல்லும் முன்னர்

தீசேர் மெழுகொப்பாய் - நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் உருகுவாய்

என் ஆனை - என் தலைவன்

என் அரையன் - என் அரசன்

இன் அமுதன் - இனிய அமிழ்தம் போன்றவன் என்று

எல்லோரும் வெவ்வேறாய் சொன்னோம் கேள் - என்று நாங்கள் எல்லோரும் சொன்னாலும்

இன்னமும் துயிலுதியோ - இன்னும் உறங்குகிறாயே!

அன் நெஞ்சப் பேதையர் போல் - கல் போன்ற கடினமான மனமுள்ள அறிவில்லாதவர்களைப் போல்

வாளா - வீணாக, அசையாமல்

கிடத்தியால் - படுத்திருக்கின்றாயே!

என்னே துயிலின் பரிசு - தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!

[இரும் சீரான் - பெரும் புகழுடையவன்; உன்னற்கு - நினைத்தற்கு]

அடீ அம்மா! இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்! முன்பெல்லாம், அதிகாலையில் சங்கு, தாரை எனும் வாத்தியங்கள் ஒலித்தவுடன், பல தேவர்களும் நினைத்தற்குக் கூட அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழை உடையவனுமான அந்த இறைவனின் பெயரைச் சொல்லி, "சிவா சிவா" என்று சொல்லிக் கொண்டேதான் எழுந்திருப்பாய். "தென்னவனே" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய். ஆனால் இப்போதோ, "என் தலைவன், என் அரசன், அமிழ்தினும் இனிமையானவன்", என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பலவாறாகச் சொல்வதைக் கேட்டும், இன்னும் உறங்குகின்றாயே! கல் போன்ற கடினமான நெஞ்சம் கொண்ட அறிவில்லாதவர்களைப் போல் வீணாக, அசையாமல், படுத்திருக்கின்றாயே! உன் தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: shaivam.org

Tuesday, December 30, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 6



6.


மானே, நீ நென்னலை "நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன்" என்றலும், நாணாமே
போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்,
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.



மானே - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே!

நீ நென்னல் - நீ நேற்று,

நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் - நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்

என்றலும் - கூறியிருந்தும்,

நாணாமே - வெட்கப்படாமல் சொல்,

போன திசை பகராய் - அந்தச் சொல் இப்போது எந்த திசைக்குப் போயிற்று?

இன்னம் புலர்ந்தின்றோ? - இன்னும் விடியவில்லையா?

வானே - விண்ணில் உள்ள தேவர்களும்,

நிலனே - நிலத்தில் வசிக்கும் மாந்தர்களும்,

பிறரும் - மற்றவர்களும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான்,

தானே வந்து - தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி,

எம்மை தலையளித்து - நம்மை கருணை கூர்ந்து,

ஆட்கொண்டருளும் - ஏற்றுக் கொண்டு அருள் புரியும் (சிவபெருமானின்)

வான்வார் கழல்பாடி - மிகப் பெருமை வாய்ந்த திருவடிகளைப் பாடி,

வந்தோர்க்கு - வந்த எங்களுக்கு,

உன்வாய் திறவாய் - ஒன்றும் பேசாமல் உறங்குகிறாயே!

ஊனே உருகாய் - உன் உடல்தான் உருகாதா?

உனக்கே உறும் - இப்படிக் கிடத்தல் உனக்குத்தான் பொருந்தும்

எமக்கும் - எங்களுக்காகவும்,

ஏனோர்க்கும் - பிறருக்காகவும்,

தம் கோனைப் பாடு - நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


[நென்னல் - நேற்று; வான் - பெருமை]

மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே! "நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்", என்று நீதானே நேற்று சொன்னாய்? நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன்! இன்னும் உனக்கு விடியவில்லையா? விண்ணில் வசிக்கும் தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இன்னும் மற்றவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான், தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி, நம்மைக் கருணையுடன் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தாரே! அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே! எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா? அதைக் கேட்டும், இப்படிக் கிடப்பது உன்னால்தான் முடியும். எங்களுக்காகவும், பிறருக்காகவும், நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக!


பொருளுக்கு நன்றி: Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி: http://shaivam.org

Monday, December 29, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 5



5.

மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.



ஏலக்குழலி - மயிர்ச்சாந்தினைப் பூசிய, வாசனை உள்ள கூந்தலை உடையவளே!

மால் அறியா - திருமால் (பன்றி உருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து தேடியும்)

நான்முகனும் காணா - பிரமனும் (அன்னப்பறவை உருக்கொண்டு உயரப் பறந்து தேடியும்) காண முடியாத

மலையினை - பெரிய வடிவு கொண்ட மலை போன்றவனை,

நாம் அறிவோம் - நம்மைப் போன்றவர்கள் அறியும் ஆற்றல் கொண்டோம்,

என்று உள்ள பொக்கங்களே பேசும் - என்று பொய்யான சொற்களையே பேசும்,

பால் ஊறு தேன்வாய் படிறீ - பாலும் தேனும் கலந்தாற்போல் இனிக்கப் பேசும் வஞ்சனை உடையவளே,

கடை திறவாய் - கதவைத் திறப்பாயாக!

ஞாலமே - இவ்வுலகத்தாரும்,

விண்ணே - தேவர்களும்,

பிறவே - பிறரும்,

அறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின்,

கோலமும் - திருவுருவத்தையும்,

நம்மை ஆட்கொண்டு அருளி - நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு,

கோதாட்டும் சீலமும் - நம்மைப் புனிதமாக்கிய அருள் குணத்தையும்,

பாடி - புகழ்ந்து பாடி,

சிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று உரக்கப் பாடினாலும்,

உணராய் உணராய் காண் - அறிந்து கொள்ளாமல்,

பரிசு - (விழித்துக் கொள்ளாதவளே) இதுதானோ உன் தன்மை?


[பொக்கம் - பொய் வார்த்தைகள், படிறீ - வஞ்சனை உடையவள்; கோது - குற்றம்; பரிசு - தன்மை]

'கமகம'வென்று மணக்கும் வாசனையான கூந்தலை உடையவளே! திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே! கதவைத் திறப்பாயாக! இவ்வுலகத்தாரும், தேவர்களும், பிறரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின் திருவுருவத்தையும், நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே! இதுதானோ உன் தன்மை?


பொருளுக்கு நன்றி : Thiruppavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://www.shaivam.org

Sunday, December 28, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 4



4.

ஒள்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ!
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ!
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
உள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.



ஒள்நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே!

இன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் பொழுது விடியவில்லையா?

வண்ணக்கிளி மொழியார் - அழகு பொருந்திய, கிளிபோல் இனிமையாகப் பேசும் பெண்கள்

எல்லாரும் வந்தாரோ - எல்லாரும் வந்து விட்டார்களா?

எண்ணிக்கொடு - அவர்களை எண்ணிக் கொண்டு,

உள்ளவா சொல்லுகோம் - உள்ளபடி சொல்லுகிறோம்,

அவ்வளவும் - அது வரையிலும்,

கண்ணைத் துயின்று - தூங்கிக் கிடந்து,

அவமே - வீணே

காலத்தைப் போக்காது - காலத்தைக் கழிக்காமல்,

விண்ணுக்கு ஒரு மருந்தை - தேவர்களுக்குக் கூட ஒப்பற்ற அமிழ்தத்தைப் போன்றவனை,

வேத விழுப் பொருளை - வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை,

கண்ணுக்கு இனியானை - காண்பவர்களுக்கு இனிமையானவனை,

பாடிக் கசிந்து - வாயாரப் பாடி மனம் கசிந்து,

உள்ளம் உள்நெக்கு நின்று உருக - உள்ளம் மெழுகு போல் உருகும்படி

யாம் மாட்டோம் - எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட மாட்டோம்!

நீயே வந்து எண்ணி - நீயே எழுந்து வந்து கணக்கிட்டு,

குறையில் - குறையுமானால்,

துயில் - மீண்டும் சென்று உறங்குவாயாக!


"ஒளி பொருந்திய பற்களை உடைய பெண்ணே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?" என்று எழுப்ப வந்த பெண்கள் கேட்க,

"அழகு மிகுந்த கிளி போல இனிமையாகப் பேசும் பெண்களே! எல்லோரும் வந்து விட்டார்களா?" என்று உறங்கியிருப்பவள் வினவுகிறாள். (என்னை மாதிரி ஆள் போல!)

அதற்கு மற்ற பெண்கள், "எங்களோடு வந்திருப்பவர்களை எண்ணிக் கொண்டு பிறகு சொல்கிறோம். அது வரையிலும், தூங்கிக் கிடந்து காலத்தை வீணாக்காமல், தேவர்களுக்குக் கூட ஒப்பில்லாத அமிழ்தம் போன்றவனை, வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை, உள்ளம் மெழுகு போல் உருகும்படி பாடுவாயாக!" என்று கூறியும், அந்தப் பெண் இன்னும் எழுந்திராமல் இருக்கிறாள்.

எனவே காத்திருக்கும் பெண்கள், "எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட்டு சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். யாரேனும் குறைவதாகத் தெரிந்தால், நீ திரும்பவும் போய் உறங்கலாம்!" என்கிறார்கள்.


(எனக்கு பிடித்த பாடல் :)


பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : கைலாஷி - http://thiruvempavai.blogspot.com

Saturday, December 27, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 3




3.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப்பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட் கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோரெம்பாவாய்.



முத்து அன்ன வெண் நகையாய் - முத்து கோத்தது போல உள்ள வெண்மையான பற்களை உடையவளே!

முன் வந்து எதிர் எழுந்து - எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து,

என் அத்தன், ஆனந்தன், அமுதன் என்று - என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் எனப் பலவாறு புகழ்ந்து,

அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் - அனுபவித்து, வாய் நிறைந்து, இனிமையாகப் பேசுவாய்,

வந்து உன் கடை திறவாய் - வந்து உன் வாயில் கதவைத் திறப்பாயாக

பத்து உடையீர் - இறைவனிடத்து நீங்கள் மிகுந்த பற்று உடையவர்கள்,

பழ அடியீர் - பழைய தொண்டர்கள்,

பாங்குடையீர் - அவனிடம் மிக்க உரிமை உடையவர்களே,

புத்து அடியோம் - புதிய தொண்டர்களாகிய எங்களது

புன்மை தீர்த்து - கீழ்மை குணங்களை நீக்கி,

ஆட்கொண்டால் பொல்லாதோ - எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?

எத்தோ உன் அன்புடைமை - ஆகா, உன் அன்புதான் எவ்வளவு?

எல்லோம் அறியோமோ - என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா?

சித்தம் அழகியார் - மனத்தூய்மை உடையவர்கள்

பாடாரோ நம் சிவனை - நம் இறைவனைப் பாட மாட்டார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கு - நாங்கள் விரும்புவதெல்லாம் நீயும் வந்து எங்களோடு கலந்து கொள்ள வேண்டுமென்பதே!


"முத்து கோத்தது போல வெண்மையான பற்களை உடையவளே! எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து, என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் என்று இறைவனைப் பலவாறு புகழ்ந்து, அனுபவித்து, வாய் நிறைய இனிமையாகப் பேசுவாயே. படுக்கையிலிருந்து எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறப்பாயாக", என்று தோழியர் அழைக்க,

படுக்கையிலிருப்பவள், "இறைவனிடத்தில் மிகுந்த பற்று உடையவர்களே, பழைய தொண்டர்களே, அவனிடத்தில் மிக்க உரிமை உடையவர்களே! புதிய தொண்டர்களாகிய எங்களது கீழ்க் குணங்களை நீக்கி, எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்?" என்று கேட்க,

எழுப்ப வந்த தோழியர், "ஆகா. உன் அன்புதான் எவ்வளவு என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா? மனத்தூய்மை உடையவர்கள், நம் இறைவனைப் பாட மாட்டார்களா? நாங்கள் விரும்புவதெல்லாம், நீயும் வெளியே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே!" என்கிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://iranikulamtemple.com/kerala-hindu-temple/shivan.jpg

Friday, December 26, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 2



2.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்,
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்.

நேரிழையாய் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே!

இராப்பகல் நாம் பேசும்போது - இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம்

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் - என் பாசமெல்லாம் அந்த மேலான ஒளிவடிவான இறைவனுக்கே என்பாய்,

எப்போது - அதை மறந்து எப்போது,

இப் போது ஆர் அமளிக்கே - இந்த பூப்படுக்கையின் மேல்,

நேசமும் வைத்தனை - இவ்வளவு நேசம் வைத்தாய்!

நேரிழையீர் - நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே!

சீசீ இவையும் சிலவோ - இப்படி ஏன் இகழ்ந்து பேசுகிறீர்கள்!

விளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாட்டாகப் பழித்துப் பேசும் இடம் இதுதானோ?

விண்ணோர்கள் - தேவர்கள் கூட,

ஏத்துதற்குக் கூசும் - (இறைவன் திருவடியை) பாடிப் புகழ்வதற்கு ஏற்ற நல்வினை வாய்ப்பு தமக்கு இன்மையால் வெட்கப்படும்

மலர்பாதம் - அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

தந்து அருள வந்து அருளும் - நமக்கு அருள் புரிவதற்காக தந்து அருளும்,

தேசன் - பொலிவுடைய,

சிவலோகன் - சிவலோகநாதன்

தில்லைச் சிற்றம்பலத்து ஈசனார்க்கு - தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்துள் நடம்புரியும் ஈசனுக்கு,

அன்பார்யாம் - நாம் எல்லோரும் அன்புடையார் அல்லவா?

"சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்! ", என்று எழுப்ப வந்த பெண்கள் கூற,

உறங்கியிருக்கும் பெண் சொல்கிறாள், "நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே! ஏன் இவ்வளவு இகழ்ந்து பேசுகிறீர்கள்? விளையாட்டாகப் பழித்து பேசும் இடம் இதுவோ?" என்கிறாள்.

அதற்கு வெளியில் இருக்கும் கன்னியர், "இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா?" என்று கூறி அவளை எழுப்புகிறார்கள்.



பொருளுக்கு நன்றி : "Thiruppaavai and Thiruvempaavai" by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://thiruvempavai.blogspot.com

Thursday, December 25, 2008

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1

வணக்கம்.

எங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம். திடீர்னு திருவெம்பாவை பொருளோட எழுதணும்னு தோணிச்சு. சரியா மார்கழி 10-ல ஏன் தோணனும், இது இறையருளேன்னு நினைச்சு தொடங்கறேன்.

எனக்கா பொருள் எழுதத் தெரியாது. நான் இங்கு இடுகிற பொருள், திரு. எஸ். ஸ்ரீநிவாசன் என்கிறவர் எழுதிய, "Thiruppaavai and Thiruvempaavai" என்கிற புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் வெளிநாடுகளில் வாழுகிற இந்தியர்களுக்காகவே எழுதப் பட்டிருக்கு. பாடல்களும் பொருளும் தமிழ்லயும், ஆங்கிலத்துலயும் (transliteration) தொகுத்துத் தரப்பட்டிருக்கு. எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)

தினம் ஒரு பாடல் இடுவதாக, இடர் நீக்கும் கணபதியின், அவன் தகப்பன் ஈசனின், என் அன்னை சக்தியின், திருக்கழல்கள் பணிந்து தொடங்குகிறேன்.

திருவெம்பாவையை இன்னும் விளக்கமாகப் படிக்க வேண்டுபவர்கள், கைலாஷி அவர்கள் போன மார்கழியில் எழுதிய thiruvempavai.blogspot.com க்குச் சென்று பாருங்கள். படமும் அங்கிருந்துதான் எடுத்தேன். நன்றி கைலாஷி.




திருச்சிற்றம்பலம்

1.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!


வாள் தடம் கண் மாதே - ஒளி பொருந்திய, அகன்ற கண்களையுடைய பெண்ணே!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை - தோற்றமும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளிவடிவானவனை,

யாம் பாடக் கேட்டேயும் - நாங்கள் பாடுவதைக் கேட்டும்,

வளருதியோ - இன்னும் உறங்குகின்றனையோ?

வன்செவியோ நின்செவிதான் - உன் காதுகள், சொல்வதைக் கேளாத வன்மையான செவிகளோ?

மாதேவன் வார்கழல்கள் - இறைவனான சிவபெருமானின் அழகிய வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை,

வாழ்த்திய வாழ்த்தொலி போய் - நாங்கள் வாழ்த்திக் கொண்டே வரும் ஓசை,

வீதிவாய்க் கேட்டலும் - தெருவில் கேட்டவுடன் (ஒரு பெண்)

விம்மி விம்மி - தேம்பித் தேம்பி அழுது,

மெய்மறந்து - உணர்ச்சி இல்லாமல்,

போது ஆர் அமளியின் மேல் நின்றும் - மலர்கள் பொருந்திய படுக்கையிலிருந்து,

புரண்டு - உருண்டு கீழே விழுந்து,

இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - நிலத்தில், செயலற்று, ஒன்றுக்கும் உதவாதவளாய் கிடந்தாள்.

என்னே என்னே - இந்த அதிசயம் என்னென்பேன்?

ஈதே எம் தோழி பரிசு - எம் தோழியாகிய உன் நிலைமை இன்னும் படுத்துக் கிடப்பதோ?

Wednesday, December 24, 2008

கோதையின் வாடலும் பாடலும்

கோதை இல்லாத மார்கழியா? கண்ணன் இல்லாத சுடர்கொடியா? கோதையுடைய ஏக்கத்தைத் தீர்க்க முடியாட்டாலும், வெண்ணிலாவோட சேர்ந்து நாமும் அவள் பாடலை காது கொடுத்தாவது கேட்கலாம் வாங்க...



வெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்
வேதனையை அறியாயோ வெண்ணிலாவே?
கள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த
பேதையிடம் காய்வதென்ன வெண்ணிலாவே?

கண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்
கண்அவனின் குழலமுதம் உண்டதுண்டோ?
விண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்
நீண்டகரு விழியழகைத் தின்றதுண்டோ?

சின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்
வண்ணமலர் மார்பில்அணி அசைந்தாட
தோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த
போதையிலென் னுள்ளமவன் வசமாக

ஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்
காத்திருந்தால் வருவேனென்றான் வெண்ணிலாவே
காற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த
கள்வன்வர வேயில்லை வெண்ணிலாவே

கோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த
கோதையினை மறந்தானோ வெண்ணிலாவே?
வெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த
பெண்ணின்துய ரறியாயோ வெண்ணிலாவே??

--கவிநயா

Thursday, December 18, 2008

சுண்டக் காயும் சுண்டைக்காய்

பஸ் ஸ்டாப்புக்குள் நுழையும் போதே அவன் குரல் கேட்கிறது. எதற்காகவோ அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

“என்னடா, தெனம் அந்தக் குருட்டுப் பொண்ணோட அவ்வளவு வழிஞ்சுக்கிட்டிருக்கே? லவ்வு, கிவ்வு ஏதாச்சுமா?” கேட்பவன் அவன் நண்பன் போலும்.

கேள்வி அவளைப் பற்றியதாய் இருப்பதிலிருந்தே அவர்கள் இவள் வருவதைக் கவனிக்கவில்லை என்பது நிதர்சனம். இவளும் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆவலில், மனம் படபடக்க, ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள்.

“போடா. நீ வேற. நான் என்ன அவ்வளவு லூசா? என்னமோ பஸ் ஸ்டாப்ல பொழுது போகல; அவளும் நல்லாப் பேசறான்னு பேசினேன். குருட்டுப் பொண்ணை வச்சிக்கிட்டு வாழ்நாள் பூரா கஷ்டப்பட நான் ஒண்ணும் முட்டாளில்லடா. அட் லீஸ்ட் பார்க்க நல்லாருந்தாலும் பரவால்ல. இங்க அதுவும் இல்ல. அவளுக்குதான் நம்மைப் பார்க்க முடியாது, ஆனா நாம அவளைப் பார்த்துதானே ஆகணும்?”

பெரிய ஜோக் சொல்லி விட்டது போல் மறுபடியும் “ஹா ஹா ஹா” என்று சிரிக்கிறான்.

அப்படியே இழுத்து வைத்து நாலு அறை விடலாம் போல இருக்கிறது அவளுக்கு. எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகி விட்டது போல் இருக்கிறது. அவமானம் பிடுங்கித் தின்கிறது. பூமி பிளந்து அப்படியே அந்த நிமிடமே தன்னை விழுங்கி விடாதா என்றிருக்கிறது.

அவனா இப்படிப் பேசுகிறான்? நம்பவே முடியவில்லை அவளால். நடந்தவைகளைப் புரட்டிப் பார்க்கையில் அவன் ஒரு முறை கூட அவளை விரும்புவதாகச் சொன்னதில்லை என்பது உண்மைதான். ஆனால்??

அவன் இனிக்க இனிக்கப் பேசியது? அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தது? அவள் பிறந்த நாளுக்கு அழகான பேசும் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தது? அவளுக்குச் சிவப்பு நிறம் மிக அழகாக இருப்பதாகச் சொன்னது? ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருப்பதை நேரடியாகச் சொன்னால்தானா? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதெல்லாம் ஏமாற்றியதாகாதா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகாதா?

ஆனால் அவள்மேல் தான் தவறு. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியது அவள் தவறு. முன்பின் யோசியாமல் கனவுகளை வளர்த்துக் கொண்டது அவள் தவறு. பேசப்படும் வார்த்தைகள் எல்லாமே இதயத்திலிருந்து வருவதாக நினைத்ததும் அவள் தவறுதான். அவளைப் போல் பெண்கள் இருப்பதால்தான் அவனைப் போலக் கயவர்களும் இருக்கிறார்கள். பெண்ணின் மனசைச் சுண்டைக் காயாய் நினைத்து சுண்டிக் காயெறிந்து விளையாடுகிறார்கள்.

“ஆனால் நீ சுண்டைக்காய் இல்லையடி. நீ ஒரு பெண். அதிலும் அற்புதமான பெண். தாயை இழந்து, பார்வையை இழந்து, தகப்பனின் அன்பில் வளர்ந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, படித்து, வேலைக்குப் போய், சொந்தக் காலில் நிற்கும் பெருமைக்குரிய பெண். அப்படிப்பட்டவள் இந்த அற்ப மனிதனால் துவண்டு போவதா? அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா?” நன்றாகவே இடித்துக் காட்டுகிறது மனசு.

மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறாள். பேசும் வாட்சைத் தொடுகிறாள். அது உடனே சமர்த்தாக நேரத்தை அறிவிக்கிறது. தொடர்ந்து அருகில் காலடிச் சத்தம்.

“அடேடே, வந்துட்டீங்களா… எங்கே காணுமேன்னு பார்த்தேன்”, அவன் குரல்தான்.

“அட, எனக்காகவா காத்திருக்கீங்க?” எதுவும் நடவாதது போல் புன்னகைக்கிறாள்.

“ஆமாங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்குதான்… நான் முந்தியே உங்ககிட்ட சொல்லிக்கிடிருந்தேன்ல? நாளைக்கு பைக் டெலிவரி எடுக்கப் போறேன்… அதனால இனிமே நானே வந்து உங்களை….”

அவன் முடிப்பதற்குள் குறுக்கிடுகிறாள்.

“அப்படியா. சந்தோஷங்க. அப்ப இனிமே உங்கள பார்க்க முடியாது. என்ன… நீங்க இருந்ததால எனக்கும் பஸ்ஸுக்குக் காத்திருக்க நேரத்துல நல்லா பொழுது போச்சு. இனிமே வேற யாராச்சும் பேச்சுத் தொணைக்குக் கிடைப்பாங்களான்னு பார்க்கணும், அவ்வளவுதானே?” புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே அவன் தந்த அந்த வாட்சை நழுவ விடுகிறாள்.

“ஒரு நிமிஷங்க… வாட்ச் கீழ விழுந்திருச்சு”, அவன் குனிந்து எடுக்க முயலும் முன், “அப்படியா, எங்கேங்க?”, கேட்டுக் கொண்டே திரும்பி ‘தெரியாமல்’ வாட்சை மிதித்து விடுகிறாள். காலடியில் அது நொறுங்குவதை அவளால் உணர முடிகிறது.

இத்தனை காலமாக இல்லாத ஆசை ஒன்று இன்றைக்கு முளைக்கிறது – இந்த நிமிடம் அவன் முகம் போகும் போக்கைப் பார்க்கவேனும் பார்வை வேண்டுமென்று...


--கவிநயா

Monday, December 15, 2008

சிறை



சுவாசம் கூட
சுதந்திரமாய் வெளியேற இயலாமல்
இதயத்தின் கேவலில்
சிக்கித் திணறுகிறது

திரும்பும் திசையெல்லாம்
நெருப்புக் கம்பிகள்
வெப்பம் விரவுகின்றன
இரக்கமின்றி

ஏறும் பாரத்தை
எதிர்க்கத் தெரியாமல்
வாயில்லாப் பிராணியாய்
வலியில் புதைகிறது மனசு

ஒரு அடி வைக்க முயன்றாலும்
காலடியினின்றும்
விரோதித்து நழுவுகிறது பூமி

இருளைத் தழுவிய கண்கள்
ஒளியின் இருப்பை மறந்து
மாயை உணரா மனிதன் போல்
மயங்கிக் கிடக்கின்றன

வெட்ட வெளிச் சிறையின்
கரிய வானத்தில்
போனால் போகிறதென்று
கண் சிமிட்டிச் சிரிக்கிறது
ஒரே ஒரு நட்சத்திரம்


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/lakshmanaraja/2270901460/

Wednesday, December 10, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா !


அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஓராறு முகம் கொண்ட வேலா
ஓம்காரப் பொருள் சொன்ன பாலா
ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
அடிமைக்கு அருள் செய்ய வாவா!

நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்
பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்
சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை
விட்டுத் தெறித் தோடச் செய்வாய்!

சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
முத்தாக வந்து தித்த உன்னை - என்
சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!

மயில் மீது ஏறியே வருவாய் - என்
மனதிலே கோவில் கொண் டமர்வாய்
பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
பிறவிப் பயன் தந்து அருள்வாய்!


--கவிநயா


அம்மன் பாட்டு நூறாவது இடுகையும் இன்றுதான். வந்து அன்னையைத் தரிசித்து அருள் பெறுங்கள்!