Saturday, December 31, 2011

2012 - வாழ்த்துகள்!



புத்தம் புது வருஷமிங்கே பூத்துக் குலுங்குது;
சித்தமெல்லாம் அதில் நிறைந்து சிரித்து மகிழுது!
வித்தை போலவே உலகில் வளமும் கூடட்டும்;
சத்தியமே நமது வாழ்வில் சிந்து பாடட்டும்!

கத்தி போல மாந்தர் அறிவு கூர்மையாகட்டும்! – நல்ல
சக்தி கொண்ட மக்களோடு நாடு வளரட்டும்!
இச்சகத்தில் இந்தியாவைப் போல நாடுண்டோ! - என்று
மிச்சமுள்ள ஊருலகம் வாழ்த்து பாடட்டும்!

பிணக்குகளை மறந்து நாட்டின் ஒற்றுமை காப்போம்! - மன
ஊக்கத்துடன் நேர்மைமிகும் வாழ்வினை அமைப்போம்!
கலக் கங்கள் எதுவரினும் தளர்ந்திட மாட்டோம்! - நம்
இலக்கைமட்டும் நோக்கிவீறு நடையைப் போடுவோம்!

--கவிநயா

நன்றி: அதீதம்


Sunday, December 25, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.1: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.
பி.கு.2: வேறே எழுத நேரம் இல்லாததால், இன்றைக்கு கண்ணன் பாட்டில் இட்டதே இங்கேயும்.

Sunday, December 18, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

பி.கு.: முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டில் இட்டது. மார்கழிக்காக கண்ணனை இங்கே கடத்தி வந்து விட்டேன்!

Sunday, December 11, 2011

தேவி சரணம்


போன வாரம் சனிக்கிழமை அன்று ‘தேவி சரணம்’ என்கிற நடன நிகழ்ச்சி செய்தேன். ரெண்டு மூணு வருஷங்களாகவே அவளுக்காக ஒரு நடன நிகழ்ச்சி பண்ணனும்னு தோணிக்கிட்டே இருந்தது. பல சிரமங்களுக்கு இடையில் அவள் அருளால் நல்லபடியாக நடந்து முடிஞ்சிட்டது.

அன்னை மீதான பல வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினேன். எல்லாமே பிரபலமான பாடல்களாக இருந்ததால, நடனம் எப்படி இருந்தாலும், மக்கள் இரசிச்சாங்கன்னு தெரிஞ்சது :) குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகலேது?’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, இவற்றுக்கெல்லாம் ஆடினேன். என்னுடைய நடன ஆசிரியைக்கும் இந்த சமயத்தில் வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன் (அவங்க இதல்லாம் படிக்க மாட்டாங்கன்னாலும் :).

தேவி பாடல்களுக்கான நடனம் அவ்வளவா தெரியாது, தெரிஞ்சதும் ரொம்ப நாள் முன்னாடி கத்துக்கிட்டதுங்கிறதால மறந்துருச்சு. சில சமயம் மனசில் இருப்பதை பாடணும்னு தோணற மாதிரி, ஆடணும்னும் தோணும். என் பாட்டை நானே பாடி, நானே அபிநயம் பிடித்து ஆடுவதுண்டு. ஆனால், சில பாடல்களாவது ஒழுங்கா கத்துக்கணும், அப்படிச் செய்யற போது அவளை நினைக்கிற நேரமும் அதிகமாகும் என்கிற (சுயநல) நோக்கத்தோடதான் ஆரம்பிச்சேன்.

நிறைய பேருக்கு நான் ஏன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றேன்னு புரியவே இல்லை. நான் ஏதோ புதுவிதமான நடன நிகழ்ச்சி செய்யணுங்கிறதுக்காக செய்யறதா நினைச்சாங்க. உண்மையில் இது திறமையின் வெளிப்பாட்டுக்காக இல்லை (இருந்தாதானே வெளிப்படுத்த! :) மன உணர்வின், அவளுக்கான அன்பின், வெளிப்பாட்டுக்காக என்பது ஒரு சிலருக்குத்தான் புரிஞ்சது.

வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நடக்குது. பல சமயங்களில் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு தெரியறதில்லை. காரணமில்லாம துயரங்கள் வரும் போது, ‘இதுதான் விதி’ன்னோ, அல்லது ‘பூர்வ ஜென்ம பாவம்’னோ, அல்லது ‘பிராப்தம் அவ்வளவுதான்’னோ எழுதி வெச்சிடறோம். சில விஷயங்கள் காலம் கடந்து புரியும். ‘ஓ, அன்றைக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு இப்பதானே தெரியுது?’, அப்படின்னு மனசுக்குள் ஒரு விளக்கு எரியும்.

என் வாழ்க்கையில் எனக்கு என்ன புரிஞ்சதோ இல்லையோ, ரெண்டு விஷயம் மட்டும் இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதன் காரணம், அவளைப் பாடணும் என்கிறதுக்காகவே என்பதும்; காலம் கடந்தாலும் நான் நடனம் கத்துக்கிட்டதுக்கு காரணம், அவளுக்காக ஆடணும் என்பதற்காகவே, என்பதும்தான்.

ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டிருந்தாலும், கவிதை என்பதை என் உணர்வுகளுக்கு வடிகாலாதான் இறைவன் கொடுத்திருக்கான்னு ரொம்ப நாள் நினைச்சிக்கிட்டிருந்தேன் – அவளுக்காக, அவளைப் பற்றி, அவளைப் போற்றி, எழுத ஆரம்பிக்கிற வரை. அதுக்கப்புறம் தான் அந்த விளக்கு எரிஞ்சது!

அதே போலத்தான் நடனமும். சின்ன வயசிலிருந்து உள்ளுக்குள்ள இருந்த ஆசை இங்கே வந்து நிறைவேறக் காரணம் என்னன்னு இப்போதான் புரியுது. இறைவனுக்கான ஏக்கத்தை அருமையாகவும், மனப்பூர்வமாகவும், வெளிப்படுத்த, பரதம் ஒரு மிகச் சிறந்த சாதனம். பரதமும், ஆன்மீகமும் கையோடு கைகோர்த்துச் செல்பவை. வர வர பரதம் குழு நடனமாகவும், fusion நடனமாகவும், மாறிக்கிட்டு வரதைப் பார்த்தா கொஞ்சம் கவலையாதான் இருக்கு. அதனோட ஆன்மீகத் தன்மை அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போயிடுமோன்னு தோணுது.

எந்த ஒரு கலைஞனுக்குமே இறையருளினால்தான் அந்தக் கலை வாய்க்கிறது. அந்தக் கலையை இறைவனுக்கே காணிக்கையா தரும்போதுதான் அதன் நோக்கம் நிறைவடைவதைப் போல ஒரு உணர்வு. ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச வட்டம், எல்லா இடமும் சுத்தி வந்து மறுபடியும் அதே புள்ளியில் முழுமை பெறுவதைப் போல.

சின்னப் பிள்ளைங்கல்லாம் அப்பா, அம்மா, மற்ற பெரியவங்கல்லாம் விசேஷங்களுக்கு தர்ற பணத்தை சேர்த்து வைப்பாங்க. பிறகு யாருக்காச்சும் எதுக்காவது பரிசு தரணும்னா, அதில இருந்துதான் எடுத்து செலவழிப்பாங்க. இல்லன்னா அவங்ககிட்ட ஏது பணம்? அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு? எல்லாமே அவன் தந்ததுதான். அவன் தந்ததை அவனுக்கே திருப்பித் தரோம்.

அந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.

பரிசு எப்படி இருந்தாலும், அதில் இருக்கிற பிரியம்தானே முக்கியம்?

அன்னையின் திருவடிகள் சரணம்.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

Sunday, December 4, 2011

நட்புக்கோர் நல்வணக்கம்!


ட்பு என்பது எவ்வளவு அழகான விஷயம்! இரத்த சம்பந்தம் இல்லாமல், ஏன், எந்த சம்பந்தமுமே இல்லாமல், எங்கோ பிறந்து, முற்றிலும் வெவ்வேறான சூழலில் வளர்ந்து, ஏதோ ஓரிடத்தில் சந்தர்ப்ப வசத்தால் சந்தித்து, எத்தனையோ விஷயங்களில் வேறுபட்டாலும், உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்ட மனமொத்த நட்பு அமையும் போது, அதன் சுகமே தனிதான்!

நட்பு, அழகான, மணம் மிகுந்த மலர் போன்றது;
மனமெல்லாம் மணம் பரப்புவதால்!
நட்பு, இதமான இசையைப் போன்றது;
இதயம் முழுக்க அமைதியைத் தருவதால்!
நட்பு, அன்பான தாய் மடி போன்றது;
தட்டிக் கொடுத்து தாலாட்டும் பாடுவதால்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றான் ஒரு கவிஞன். நட்பு அமைவதும் கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்று தோன்றுகிறது.

யாரிடத்திலும் சுலபத்தில் நெருங்கிப் பழகி விடாத சுபாவம் எனக்கு. கலகலப்பாகப் பேசவும், பழகவும் தெரியாது. அப்படிப்பட்ட எனக்கே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிய தோழி என்று சொல்லிக் கொள்ள ஓரிருவராவது இருந்திருக்கிறார்கள் என்றால், அது இறையருள் இல்லாமல் வேறென்ன?

நாடு விட்டு நாடு வந்த இடத்திலும் எனக்கு இப்படிப்பட்ட , விரல் விட்டு எண்ணக் கூடிய நட்பு கிடைத்திருக்கிறது. தெரிந்தவர்கள், உறவுகள், என்று யாரும் இல்லாமல் இங்கே வந்த போது கூடவே வந்த தனிமை, இத்தகைய புது உறவு கிடைத்தவுடன், என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியே போய் விட்டது!

[“A true friend knows your weaknesses but shows you your strengths; feels your fears but fortifies your faith; sees your anxieties but frees your spirit; recognizes your disabilities but emphasizes your possibilities.”

-William Arthur Ward]

என் கஷ்டம், தன் கஷ்டம், என் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி, என்று உரிமையுடன் பங்கிட்டுக் கொள்ளும் நட்பு. என்ன நிகழ்வாக இருந்தாலும், என்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து மகாராணி போல தாங்கும் அன்பு. ஊஹூம்… மகாராணி போலக் கூட இல்லை, மிகவும் செல்லமான குழந்தையைப் போல!

இத்தனை அன்புக்கும் எனக்கு தகுதி இருக்கிறதா, அதற்காக நான் என்ன செய்திருக்கிறேன், என்று அடிக்கடி தோன்றும். அந்த அளவிற்கு நானும் என் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று தெரியவும் இல்லை. அந்த நட்பைப் பற்றி, அந்த பலன் எதிர்பாராத வெள்ளை உள்ளங்கள் பற்றி, அந்த உள்ளங்களில் விளையும் கொள்ளை அன்பைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.

என் தோழிகள், இல்லையில்லை… என்னுடைய உடன் பிறவா சகோதரிகள், வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று மிகச் சிறப்பான வாழ்வு வாழ வேண்டுமென அந்த இறைவனை மனமார வேண்டிக் கொள்கிறேன்.

(*touch wood* - கண் படாமல் இருக்க! :)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா



Sunday, November 27, 2011

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?



இப்படி!



  Sing

           as though no one is listening

          Dance

                     as though no one is watching

                Love

                             as though you've never been hurt

                      Live

                                   as though the heaven is on the earth!




படித்ததும் பிடித்ததைப் பகிந்து கொள்ளத் தோன்றியது.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

Monday, November 21, 2011

சக்தி




மழை பெய்து கொண்டிருக்கிறது...

புதுமணப் பெண்ணின் நாணத்துடன்
மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் -

கை விலகாமல் வரைந்த நேர் கோடாய்...
சப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய்...
யாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்...

நீரோடு நீர் சேர
நுரை ததும்பக் குதூகலிக்கும்
ஓடைகள்...

பொங்கிப் பெருகி
புவி தழுவும் ஆசையுடன்
புது வெள்ளம்...

கருவம் வளர
தலை உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
கடலலைகள்...

ஈரந் துவட்ட
நேர மின்றி நீர் அருந்தும்
பூமி மாதா...

அனைத்துக்கும் காரணமான மழை
இன்னும் பெய்து கொண்டே இருக்கிறது...
அமைதியாக...


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்.

முன்னொரு காலத்தில் 'திண்ணை'யில் பிரசுரமானது.

Sunday, November 13, 2011

தியானத்தின் முதல் படி -

வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ளுதல்! :)


நீர் நிலைகள் இருக்கும் இடங்கள் தியானம் செய்ய மிகவும் உகந்தவையாம்...


ஏற்கனவே எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம்தானேன்னு சொல்றவங்க, மேலே படிங்க...

தியானம் என்கிற சொல்லில் இப்ப எல்லாருக்குமே ஒரு மயக்கம் இருக்கு :) தியானம் பண்ண பழகிக்கணும் அப்படின்னு எல்லாருமே நினைக்கிறோம். தியானம் பண்றது பற்றியும், அதனோட பலன்கள் பற்றியும், படிக்கவும் கத்துக்கவும், நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனாலும் எத்தனை பேரால அதை தொடர்ந்து செய்ய முடியுது என்பது கேள்விக் குறிதான். ஏன்னா, தியானம் என்பது தினசரி பயிற்சியினாலும், விடா முயற்சியினாலும்தான் கை கூடும். நம்மில் எத்தனை பேரால அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியுது?

[“Meditation is painful in the beginning but it bestows immortal Bliss and supreme joy in the end.” --Sri Swami Sivananda]

முதல் பழி நேரத்தின் மேலதான். எனக்கு நேரமே இல்லை; எவ்வளவு வேலைகள் வரிசையா இருக்கு? இதில் உட்கார்ந்து தியானம்னு தனியா செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கு? அப்படிங்கிறதுதான் முதல் காரணம்.

“ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யும் விருப்பம் இருந்தால், அவர் அதைச் செய்து விடுவார். இல்லையென்றால் அவரின் அந்த விருப்பம் உண்மையானதல்ல என்று பொருள்”, அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன். ‘When there is a will, there is a way’.

நமக்கு எது ரொம்ப முக்கியமோ, எது ரொம்ப பிடிக்குமோ, அதை எப்படியும் செய்திடறோம். ஆனா மற்ற வேலைகளை எப்படியும் தள்ளி போட்டுடறோம். அதே போலதான் இதுவும்.

சரி... நமக்கு உண்மையிலேயே விருப்பம்தான், அதனால எப்படியோ இதுக்கு நேரம் கண்டு பிடிச்சிடறோம்னு வைங்க. அடுத்த தடைக்கல் என்ன?

நம்மோட பொறுமை(யின்மை).

இந்த அவசர உலகத்தில், நமக்கு எல்லாமே உடனே உடனே கிடைக்கணும். எதுக்குமே காத்திருக்கக் கூடிய பொறுமை யாருக்குமே இல்லை. (எனக்கும்தான் :)).

டிகாக்ஷன் போட யாருக்கு நேரம் இருக்கு? உடனடி காஃபி பவுடர் வந்த பிறகு நமக்கு அது எதுக்கு? நேரம் இல்லையா, திடீர் ரசப் பொடியை எடு. கரைச்சு விட்டு கொதிக்க வை. தலைக்கு குளிக்கணுமா? எண்ணெய் தேச்சு... சீயக்காய் போட்டு... எவ்ளோ வேலை! ஷாம்பூவைப் போட்டு குளி. சமைக்க நேரம் இல்லையா? உணவு விடுதிக்கு போய் சாப்பிடு. அதுவும் சாதாரண உணவு விடுதி கூட இல்லை, ‘விரைவு’ உணவு விடுதி. திடீர் விருந்தாளியா, கடைக்கு போய் தோசை மாவு, திடீர் சாம்பார் பொடி, இனிப்பு, இப்படி ஏதாவது வாங்கிடு. (இப்பல்லாம் திடீர் விருந்தாளியா போக முடியாதுங்கிறது வேற விஷயம் :). தொலைபேசி, சொல்லிட்டுதான் போகணும்!)

இந்த மாதிரியேதான், தியானம் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அதனோட பலனையும் instant-ஆ, உடனடியா எதிர்பார்க்கிறோம். ஆனா அது அவ்வளவு சுலபமில்லைன்னு தெரியும் போது, மனம் தளர்ந்து, முயற்சி செய்யறதையே விட்டுடறோம்.

தனியா இதுக்குன்னு உட்காரமலேயே எப்படி தியானத்தை விரும்ப கத்துக்கலாம்? விருப்பம் வந்திடுச்சுன்னா, மற்றதெல்லாம் பின்னாடியே வந்துடும். அதுக்கு, நம்ம மனசை ‘ருசி கண்ட பூனை’யாக்கணும் :)

அதுக்கு முன்னாடி, தியானம்னா என்ன, அதை எதற்காக பண்ணனும்னு நினைக்கிறோம், என்பதை பார்க்கலாம்...

(நான் expert-லாம் இல்லை. புரிஞ்சதை பகிர்ந்துக்கறேன். தவறு இருந்தால் தெரிஞ்சவங்க திருத்தணும்னு கேட்டுக்கறேன்.)

பொதுவாக சொல்லணும்னா, தியானம் என்பது எண்ணங்களை ஒருமுகப்படுத்தறதுதான். அதற்கு பலனா நாம எதிர்பார்க்கிறது (பெரும்பாலும்) மன அமைதிதான்.

எண்ணங்களை ஒருமுகப் படுத்துவது அப்படின்னு சொல்லும்போதே, ஒரு விஷயம் தெளிவாகுது. அதாவது, நம்மோட எண்ணங்களை நாமளே நல்லா புரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. அது என்ன பெரிய விஷயம்கிறீங்களா? நிச்சயமா பெரிய விஷயம்தாங்க! ஒரு சில நிமிஷங்கள் உங்க எண்ணங்களை கவனிச்சு பார்த்தாலே எத்தனை பெரிய விஷயம்னு தெரிஞ்சிடும்.

மனம் என்பது குரங்குன்னு சரியாதான் சொல்லி வச்சிருக்காங்க. ஒரு விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருப்போம், திடீர்னு சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துக்கு தாவிடும், மனசு. இதுக்கு முன்னாடி என்ன நினைச்சுக்கிட்டிருந்தோம், அப்படின்னே கூட சில சமயம் மறந்து போயிடும்!

மனம் என்பதோட வேலையே எண்ணங்களை உற்பத்தி செய்யறதுதான். ஒரு நாளைக்கு, தோராயமா 40000 முதல் 50000 எண்ணங்கள் நமக்குள்ள ஓடுதாம். நினைச்சு பார்த்தா பிரமிப்பா இருக்குல்ல?

அவ்வளவு எண்ணங்களையும் எப்படி ஒருமுகப் படுத்தறது? அதுக்குத்தான் நாம எண்ணங்களை நாமே புரிஞ்சுக்கணும்.

இத்தனை ஆயிரம் எண்ணங்களில், நமக்கு positive energy கொடுக்கிற எண்ணங்கள் ரொம்ப குறைவுதானாம். முக்கால்வாசி எண்ணங்கள் உபயோகமில்லாத எண்ணங்கள்தானாம். அதாவது, கடந்த காலத்தை பற்றிய கவலை, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், இப்படித்தான் பெரும்பாலான எண்ணங்கள் இருக்குமாம்.

இப்படிப்பட்ட negative energy-யினால என்ன ஆகுது? இன்னும் கொஞ்சம் நமக்கு உற்சாகம் குறைவதும், கவலை அதிகமாவதும்தான் மிச்சம். அதனாலதான் ஆன்மீகத்தில், கண்டதையும் நினைச்சுக்கிட்டிருக்காம, முடிஞ்ச வரை இறைவனின் நாமத்தை நினைக்கச் சொல்றாங்க.

இந்த பயனில்லாத எண்ணங்களோட கூட, அடுத்து என்ன வேலை இருக்கு, அடுத்த வாரம் என்ன செய்யணும், அப்படின்னு திட்டமிடுகிற எண்ணங்களும் இருக்கும். நிகழ்காலத்தை பற்றி, இந்த நிமிஷத்தைப் பற்றிய சிந்தனை அபூர்வமாதான் இருக்குமாம்.

யோசிச்சு பார்க்கும்போது அது உண்மைன்னே தெரியுது... தினசரி வேலைகள் செய்யும் போதெல்லாம் பழக்கத்தினால நாம அவற்றை இயந்திரத்தனமா செய்யறோமே தவிர, நம்ம கவனமெல்லாம், நினைவெல்லாம், வேற எங்கேயோதானே இருக்கு? பாதி நேரம் சாவிக் கொத்தை எங்கே வச்சோம், பணத்தை எங்கே வச்சோம், இப்படி முக்கிய விஷயங்களில் கூட கவனமில்லாம, அவற்றை எங்கேயோ வச்சுட்டு, வேற எங்கேயோ தேடிக்கிட்டிருப்போம்.

சில சமயம் ஸ்லோகங்கள் சொல்லும்போதே கவனமில்லாம சொல்லி நிறைய வரிகளை விட்டுட்டு, வேற எங்கேயோ போயிடுவேன் :( சமயத்தில் ஒரு பாட்டில் ஆரம்பிச்சு வேற ஒரு பாட்டில் கூட போய் முடியும்! :( திடீர்னு அடடா, என்ன பண்றோம், அப்படின்னு திட்டிக்கிட்டு, மறுபடியும் ஆரம்பிப்பேன்.

அதனால, தியானம் செய்ய முயற்சிக்கிறதுக்கு முன்னாடி, முதல்ல செய்ய வேண்டியது – வேடிக்கை பார்க்க கத்துக்கறதுதான்! அதாவது நம்ம எண்ணங்களை நாமே மூணாம் மனுஷன் மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கறது.

ஒவ்வொரு நிமிஷமும் நாம என்னதான் நினைக்கிறோம், அப்படின்னு அப்பதான் நமக்கே தெரியும். நம்ம கவனமெல்லாம் நம்முடைய எண்ணங்கள் மேல இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில்... இதோ வேண்டாத கிளையில் ஏறப் போகுது மனசு, அப்படின்னு உணர ஆரம்பிக்கும் போதே, அதை திசை திருப்பி விடறது சுலபம்!

முதலில் சில நிமிஷங்கள் மட்டும் வேடிக்கை பார்க்கலாம்; பிறகு நாள் முழுவதுமே வேடிக்கை பார்க்கிறது கைவந்த கலையாயிடும். வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் இந்தக் கலை நமக்கு கை கொடுக்கும்! நிகழ்காலத்தை அனுபவிச்சு வாழ்வதற்கும், பழங்காலத்தை, துன்பங்களை மறப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயத்தை குறைப்பதற்கும், இப்படி.... இதனால பதட்டங்கள் குறைஞ்சு, மனசில் அமைதியும் அதிகமாகிக்கிட்டே வரும்...

பிறகு எண்ணங்களை ஒருமுகப்படுத்தறது என்பது ரொம்பவே சுலபமாயிடும்.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க. (ஏன்னா நான் இன்னும் செய்து பார்க்கலை! ஹி... ஹி...)

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, November 6, 2011

நிரப்புவோமா?



மன மென்னும் கலன் –
காலியாய் வைத்திருந்தால்
கசடுகள் சேர்ந்து விடும்
கருமையில் தோய்ந்து விடும்
அன்பாலே நிரப்பி வைத்தால்
அகமெல்லாம் இன்பம் பொங்கும்
அகிலமெல்லாம் இனிமை தங்கும்!


--கவிநயா

Sunday, October 23, 2011

தீபாவளி பார்ட்டி!

அனைவருக்கும் அன்பான, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!



ன் கண்ணையே என்னால நம்ப முடியல! இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு! உடனே சரின்னு சொல்லி மெயில் அனுப்பத்தான் கை பரபரத்தது. இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சேன். என்னதான் இவங்க பிரபலமா இருந்தாலும், இவங்களோடல்லாம் நம்மால ஒட்ட முடியுமா, ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்தாப்ல பேச முடியுமா, இப்படில்லாம் ஓடிச்சு நெனப்பு. ராத்திரி பூரா குழப்பிக்கிட்ட பிறகு, என் பெஸ்ட் ப்ரெண்டை கூப்பிட்டு பேசினேன்.

என்ன பார்ட்டி, என்ன ஏது, அப்படி, இப்படின்னு பாட்டி மாதிரி விசாரிச்சப்புறம், “போய்த்தான் பாரேன். உன்னை என்ன கடிச்சா தின்னப் போறாங்க? ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே?”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா! “நீ சைக்காலஜி படிச்சுட்டு கவுன்சிலரா போயேண்டி”, அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கேன், அவகிட்ட!

அன்னிக்கு ராத்திரியே அவங்க தந்த போன் நம்பர்ல கூப்பிட்டு பேசினேன். ஏதாச்சும் சமையல் செய்து கொண்டு வரவான்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம்ப்பா. சும்மா ஜாலியா வா. தீபாவளி பார்ட்டி. வெளியதான் சாப்பிட போறோம்”, அப்படின்னாங்க.

ஹ்ம், இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்ன ட்ரஸ் போட்டுக்கலாம்? தீபாவளிங்கிறதால சேலை, சூரிதார், இப்படி போட்டுக்கிட்டு போனாதான் இலட்சணமா இருக்கும். எங்கிட்ட இருக்க துணிமணிங்களை கெளறி பார்த்துட்டு, கடைசியில கொஞ்சம் எளிமையா, அதே சமயம் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கிற சூரிதாரை தேர்வு செஞ்சு வச்சேன்.

அந்த நாளும் வந்தது. தலை குளிச்சு அழகா சூரிதாரை போட்டுகிட்டு, அதுக்கேத்தாப் போல வளையல் போட்டு, பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணாடி பார்த்தப்போ எனக்கே “பரவாயில்லையே”ன்னு தோணுச்சின்னா பாருங்க!

படபடக்கிற மனசோட பார்ட்டிக்கு போனேன். தீபாவளி பார்ட்டிங்கிறதால பட்டாசு மத்தாப்பெல்லாம் இருக்குமோ?

ஒரு ரெஸ்டாரண்ட்லதான் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்காவில் அதுக்கா பஞ்சம்? உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை! எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார்! என்ன பண்றதுன்னே தெரியல. போச்சு, இன்னிக்கு நெகெட்டிவ் மார்க்தான்ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.

பக்கத்தில் இருந்த பொண்ணு சொன்னா, “சூரிதார்ல நீ ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினது? இந்தியா போயிருந்தியா?”

நான் பதில் சொல்றதுக்குள்ள சர்வர் வந்துட்டா. “குடிக்கிறதுக்கு என்ன வேணும்?”

ஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க –

“பியர்”

“ரெட் வைன்”

“வைட் வைன்”

என் முறை வந்தது. “டயட் பெப்சி”.

எல்லாருடைய ஒரு மாதிரியான பார்வையையும் என் மேல உணர முடிஞ்சது.

சர்வர் அந்த பக்கம் போன பிறகு அறிமுகப் படலம் ஆரம்பிச்சது.

“உமா ஃப்ரம் இண்டியா. நான் மேல்படிப்புக்காக இங்கே வந்திருக்கேன்.”

“சரளா ஃப்ரம் இண்டியா. நான் ரிஸர்ச்சுக்காக.”

“கலா. என் கம்பெனி ப்ராஜக்டுக்காக இந்தியால இருந்து வந்திருக்கேன்”.

எல்லாரும் சொல்லி முடிச்சதும் என்னோட முறை.

“நான் ரேச்சல், ஃப்ரம் நியூயார்க். போஸ்ட் க்ராஜுவேட் பண்ண வந்திருக்கேன்”.


--கவிநயா


பி.கு.1. ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதியது.

பி.கு.2. கதையில் கலந்திருக்கிற அளவுக்கதிகமான ஆங்கிலத்தை மன்னிக்கவும். கதையில் தன்மை காரணமா நல்ல தமிழில் எழுதினா சரியா இருக்காதுன்னு தோணுச்சு! :)

பி.கு.3. என்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு.  கணினி பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால்...  'நினைவின் விளிம்பில்...', ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்...

Sunday, October 16, 2011

எல்லாம் நன்று!

peaceful


                                    எல்லாம் நன்று; அனைத்தும் நன்று;

                                    உணவும் உடையும் இடமும் நன்று;

                                    பசியேயில்லா உலகம் நன்று;

                                    உலகம் நன்று; மக்கள் நன்று;

                                    அன்பே நிறைந்த மனங்கள் நன்று;

                                    மனங்கள் நன்று; குணங்கள் நன்று;

                                    மகிழ்வே நிறைந்த உயிர்கள் நன்று;

                                    உயிர்கள் நன்று; உறவுகள் நன்று;

                                    உள்ளே ஒளிரும் ஒளியும் நன்று;

                                    ஒளியும் நன்று; வளியும் நன்று;

                                    உலகை நடத்தும் இயற்கை நன்று;

                                    இயற்கை நன்று; இயல்பும் நன்று;

                                    அனைத்தும் காக்கும் இறைமை நன்று;

                                    எல்லாம் நன்று; அனைத்தும் நன்று-

                                    என் கனவுகளில் மட்டும்...

--கவிநயா

Sunday, October 9, 2011

நீங்க பணக்காரரா, பிச்சைக்காரரா?


ஹ்ம்… என்ன கேள்வி இதுன்னு யோசிக்கிறீங்களா? பணக்காரர்னு சொன்னா ஏதாச்சும் கடன் கிடன் கேட்டு வந்துரப் போறாளோன்னு பயந்துராதீங்க :) இந்தக் கேள்வி பணம் சம்பந்தப்பட்டதில்லை, மனம் சம்பந்தப்பட்டது!

ஒரு நாள் தொலைக்காட்சியில் திரு.சுகிசிவம் அவர்களுடைய பேச்சைக் கேட்க நேர்ந்தது. அப்ப அவர் சொன்ன விஷயம் கொஞ்சம் சிந்திக்க வச்சது… அவர் சொன்னார், நாம எல்லாருமே அன்பை பிறரிடம் எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களா இருக்கோம், அப்படின்னு!

உண்மைதான்னு தோணுதில்ல? உணவை விட அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தான் மனுஷன் அதிகமா ஏங்கறான், அப்படின்னு அன்னை தெரஸாவும் சொல்லி இருக்காங்க. [“There is more hunger for love and appreciation in this world than for bread.” – Mother Teresa]. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும், அது ரொம்பவே உண்மை அப்படின்னு. மனித இயல்பே அதுதான். அந்த ஏக்கம்தான். அதைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் உறைக்கிறாப்ல சொல்லியிருக்காரு, அவ்வளவுதான். நாம அன்பு செலுத்தறதைக் காட்டிலும், மற்றவங்க நம்ம மேல அன்பு செலுத்தணும்னுதான் மனசு அதிகமா எதிர்பார்க்குது. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும்போது, எல்லாமே மாறிப் போயிடுது.

நம் மீது ஒருத்தர் அதிகம் அன்பு செலுத்தணும்னு நினைக்கிற போதே தன்னலம், பொறாமை, கோபம், வருத்தம், எல்லாம் கூடவே வந்துடுது. அவங்க நம்மைக் காட்டிலும் இன்னொருத்தர் கிட்ட அன்பா இருந்தாலோ, அதிகமா பேசினாலோ, நம்மால் தாங்க முடியறதில்லை. நாம அவங்ககிட்ட அந்த அளவு அன்பா இருக்கோமோ இல்லையோ, ஆனா நம்ம மேல மட்டும் அவங்க அளவில்லாத அன்பு செலுத்தணும்னு நினைக்கிறோம். அந்த நினைப்பே நம் துயரத்துக்கெல்லாம் காரணமாயிடுது.

ஒரே வீட்டில் பிறந்தவங்களா இருந்தா, அம்மாவுக்கு என்னை விட அவன்தான் செல்லம்னும், தோழிகளா இருந்தா, அவ அன்பு பூரா எனக்கே சொந்தமாகணும்னும், காதலர்களா இருந்தா, அவன் வேற பொண்ணுங்ககிட்ட சிரிச்சு பேசவே கூடாதுன்னும், தோணறதுக்கெல்லாம் இந்த எதிர்பார்ப்புதான் காரணம்.

யாரையாவது பற்றி எனக்கு இப்படி தோணும்போதெல்லாம், “பிச்சைக்காரியா இருப்பதல்ல என் விருப்பம், பணக்காரியா இருப்பதே”, அப்படின்னு எனக்கு நானே நினைவுபடுத்திக்கிறேன். பணக்காரியாக் கூட இல்லை; வள்ளலா இருக்கணும். அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக. யாரும் கேட்காமலேயே. யாரும் எதிர்பார்க்காத போதே.

போக வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும், முதல் அடி வைப்பதுதானே முக்கியம்!


அன்புடன்
கவிநயா

Wednesday, October 5, 2011

கனக தாரை - 19, 20, 21


19.
தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(H)ஷ
லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்


பாரெல்லாம் ஓர்குடை யின்கீழ் பரிவுடன் காக்கும் தாயே
பாற்கடல் அமுதாய் வந்து பரமனை மணந்தாய் நீயே
எண்திசை யாவும் காத்து நிற்கின்ற இபங்கள் சேர்ந்து
தங்கக் குடங்கள் தளும்ப கங்கை நீர் முகர்ந்து வந்து
வைகறைப் பொழுதில் உன்னை மங்கள நீராட்டுங்காலை
சென்னியில் பாதம் சூடி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!


20.
கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்
கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:


செய்யக் கமலத்தின் மேலே சிரிக்கின்ற கமலம் உன்னை
கண்பார்த்த அரியும் கமலக் கண்ணனாய் ஆனான்போலும்
கடல்போலக் கருணைபொங்கும் உன்கரிய விழிகள் என்மேல்
பட வேண்டும் அம்மா சற்றே ஏழை நான் உய்வதற்கே
இரக் கின்ற பிள்ளைக்காக இரங்கிடுவாய் அம்மா நீயே
பரந்த உன்கருணைக் கென்னை பாத்திரமாய்ச் செய்வாய் தாயே!


21.
ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்
கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:
ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:


ஆகம வேதப் பொருளின் அற்புத வடிவாம் தேவி
அன்னையாய் அன்புதந்து அகிலங்கள் காக்கும் ராணி
திருமகள் அவளைப் போற்றி தோத்திரம் இதனைப் பாட
கற்பனைக் கெட்டா செல்வமும், அற்புத ஞானக் கல்வியும்
கற்றவர் போற்றும் வாழ்வும், மற்றவர் போற்றும் குணமும்
மட்டிலா இன்பமும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார் உண்மை!


***சுபம்***


தோஹாவில் நம்ம தக்குடு அமர்க்களமா நவராத்திரி உற்சவம் நடத்திக்கிட்டிருக்கார். ஒன்பது நாள்ல பூர்த்தி பண்ற மாதிரி குங்குமலக்ஷார்சனை, தேவி மஹாத்மிய பாராயணம், ப்ரத்யக்ஷ நவகன்யா பூஜை, இப்படி எல்லா விதமான உபசாரங்களோட உற்சவம் நடந்துகிட்டிருக்கு. அதில் குங்கும லக்ஷார்ச்சனைக்கு அமைஞ்ச உம்மாச்சி யாருன்னு நினைக்கிறீங்க! இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான்! படத்தில் பாருங்க! கனக தாரைக்கு உதவினதோட இல்லாம, இப்போ வெகு பொருத்தமாக இந்தப் படத்தையும் அனுப்பித் தந்த தக்குடுவிற்கு நன்றி... நன்றி... நன்றி!!!


கனகதாராவின் மொழியாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. வருகை தந்த அனைவருக்கும் அன்னையின் பேரருள் என்கிற மழை தாரை தாரையாகப் பொழிய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்!


--கவிநயா

Tuesday, October 4, 2011

கனக தாரை - 17, 18


17.
யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!


கற்பகத் தருவே உன்றன் கடைக்கண் பார்வை வேண்டி
விருப்புடன் ஓர்நொடி யேனும் கருத்துடன் தொழுது நின்றால்
அளவில்லா பொருளும் வளமும் இன்பமும் அவர்க்குத் தருவாய்
அகிலத்தைக் காக்கும் அரங்கன் இதயத்தை ஆளும் தேவி
மனதாலும் வாக்காலும் செய்கின்ற செயல்கள் அனைத்தாலும்
அடிபணிந்து வணங்கு கின்றோம் அற்புதமே போற்றி போற்றி!



18.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)
ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே
த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்


பங்கயத்தில் பாங்காய் அமர்ந்து பங்கயங்கள் கரத்தில் ஏந்தி
பால் வெள்ளைப் பட்டுடுத்தி பதுமம் போல் வீற்றிருப்பாய்
மார்பினில் மாலைகள் தாங்கி மணக்கின்ற சந்தனம் பூசி
மாலவன் மனையாள் அடியார் மனமெல்லாம் மணம்பரப் பிடுவாய்
முடிவில்லா செல்வம் தந்து மூவுலகும் காக்கும் தேவீ
என்மேலும் கருணை வைத்தால் என்றும்நான் மகிழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, October 3, 2011

கனக தாரை - 15, 16


15.
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை
நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை
நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை


கதிரவனின் காதலியாம் கமலத்தில் வசிப்பவளே போற்றி
கமலத்தின் நடுவினிலே கதிரவன் போல் ஒளிர்பவளே போற்றி
புவி யாக்கும் அன்னையே பூ தேவியே போற்றி
புவி காக்கும் அன்னையே ஸ்ரீ தேவியே போற்றி
வான வரெல்லாம் வணங்கும் வசுந் தரியே போற்றி
நந்த கோபன் மருமகளே திருமகளே போற்றி போற்றி!



16.
ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி
ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி
த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி
மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே


அளவில்லாச் செல்வங்களைஅருள்கின்ற அன்னையே போற்றி
ஆண்டியையும் அரசனாக்கும் அற்புதத் தேவியே போற்றி
ஐம்புலனுக்கும் இன்பந் தரும் அஞ்சுக மொழியாளே போற்றி
பதுமங்களும் நாணும் எழில் பங்கய விழியாளே போற்றி
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் திருவே போற்றி
மாறாத அன்பைத் தந்தருளும் தாயே போற்றி போற்றி!


--கவிநயா

(தொடரும்)

Sunday, October 2, 2011

கனக தாரை - 13, 14

Sri Vishnu Bhagwan and Lakshmi Mata

13.
நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை
நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை
நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை
நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை


தங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி
தாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி
தரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி
தரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி
தேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி
சாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி!


14.

நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை


பிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி
ஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி
கோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி
தாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி
தாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி
தாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி!


--கவிநயா

(தொடரும்)

Saturday, October 1, 2011

கனக தாரை - 11, 12



11.
ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை
ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை


நற்பலன்கள் எல்லாம் அளிக்கும் நான்மறையின் தலைவி போற்றி
அகிலத்தின் அழகுக் கெல்லாம் ஆதார ஸ்ருதியே போற்றி
அழகுக்கு அழகு செய்யும் அழகுருவே அமுதே போற்றி
ஆயிரம்இதழ் தாமரையில் அமர்ந் தாட்சி செய்வாய் போற்றி
செல்வங்கள் எல்லாம் வணங்கும் செல்வநா யகியே போற்றி
புருஷோத்தமன் மார்பில் விளங்கும் பொன்மகளே போற்றி போற்றி!


12.

நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை
நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை
நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை
நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை


எழி லென்னும் சொல்லுக்குப் பொருளான திருவே போற்றி
கமலந்தான் விரிந்தது போல் மலர்ந்திட்ட முகத்தாய் போற்றி
கடைந்திட்ட பாற்கடலில் கதிரவன்போல் உதித்தாய் போற்றி
இன்னமுதும் மதியும் மகிழ இளையவளாய் எழுந்தாய் போற்றி
ஆதிசேஷன் மடியில் துயிலும் அரங்கனவன் மனையே போற்றி
அஞ்சனக் கருமை வண்ணன் அருமைத் துணையே போற்றி போற்றி!



--கவிநயா

(தொடரும்)

Friday, September 30, 2011

கனக தாரை - 9, 10

Vishnu- Lakshmi - Garuda

9.
த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்
அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்
நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:


அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்
நாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்
வினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே!


10.
கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி
சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை


கருடனைக் கொடியில் கொண்ட குமுதனின் காதல் தேவீ
நீயேதான் ஞானம் கல்வி அனைத்தையும் ஆளும் ராணி
பிறைதனை முடியில் கொண்ட பித்தனின் மனையும் ஆவாய்
யுகமது முடியும் போது அழிக்கின்ற சக்தியும் ஆவாய்
ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!

--கவிநயா

Thursday, September 29, 2011

கனக தாரை - 7, 8

Lord Vishnu and Goddess Laxmi

7.
விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ-
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)-
மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:


நீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்
நிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்
சுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்
மதுவென்னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்
சுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்
எண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே!


8.
இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்
த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே
த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


பக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ
பரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே
எத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்
இகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே
மலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்
உலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே!


--கவிநயா

(தொடரும்)

Wednesday, September 28, 2011

கனக தாரை - 5, 6

Devi Lakshmi e Vishnu

5.
காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:



கைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி
சாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே
கருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே
ஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே
அகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்
இகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே!


6.
ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:


போர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது
மலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்
நிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ
நேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்
கடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்
அளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே!


--கவிநயா

 (தொடரும்)

Tuesday, September 27, 2011

கனக தாரை - 3, 4


3.
ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:


பாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை
பார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்
பிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர
பாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை
சாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட
பொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே!


4.
பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா


கௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்
மதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்
மரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே
இந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை
கொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட
கற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, September 26, 2011

கனக தாரை

ஓம் கம் கணபதயே நம:

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பற்றி அறியாத பக்தர்கள் மிகவும் குறைவு. அந்த ஸ்தோத்திரத்தையும், அதன் பொருளையும் வாசிக்க வாசிக்க, அதனைத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'பொன்மழை' என்ற பெயரில் ஏற்கனவே இதனை மொழியாக்கம் செய்திருப்பதும் பெரும்பாலானோர் அறிந்ததே. அதனாலேயே ஒரு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அம்மாவுக்கு ஒரு (கவியரசு)பிள்ளை பிரமாதமான பரிசு அளித்து விட்டதால், இன்னொரு குட்டிப் பிள்ளை ஏதும் செய்யக் கூடாதென்று இருக்கிறதா என்ன? அதைப் போலத்தான் இந்தச் சிறியவள் தன்னால் இயன்ற அளவில் அம்மாவுக்காக நவராத்திரிக்கெனச் செய்த அன்புக் காணிக்கை, இது.

கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் தந்தாலும், உடனடியாக பொருளை சரி பார்த்து, சரியான நேரத்தில் பேருதவி செய்த என் அன்புக்குரிய தம்பி தக்குடுவிற்கு, என் மனமார்ந்த நன்றிகள். தக்குடுவிற்கும், மற்றும் இதனை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை எல்லா நலன்களும் அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.


"வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் 
நின் திருநாமங்கள் தோத்திரமே"




கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...

1.
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:


ஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன
அதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்
தமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை
மையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்
சற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட
செல்வங்கள் யாவும் பெற்று சகத்திலே உய்வேன் தாயே!

2.
முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய


நீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக
தரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்
நாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற
முராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்
நேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்
பாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே!


--கவிநயா

(தொடரும்)

Sunday, September 18, 2011

உருவ வழிபாடு ஏன்?


சுவாமி விவேகானந்தர் ஒரு முறை, இராஜபுதன சமஸ்தானம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கிருந்த திவானுக்கு அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த திவான் ஒரு முறை, மகாராஜாவிடம் விவேகானந்தரைப் பற்றிக் கூற, அரசருக்கும் விவேகானந்தரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருக்கும் போது, மகாராஜா, “சிலைகளை வணங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை; என் கதி என்ன ஆகும்?” என்று கேட்டு விட்டு ஏளனமாகப் புன்னகை புரிந்தார்.

சுவாமிகள் உடனே, “என்ன ஏளனம் செய்கிறீர்களா?”, என்று கேட்டார்.

மகாராஜா மீண்டும், “இல்லை சுவாமிகளே. பாமரர் போன்று நான் கல்லையும், மண்ணையும், உலோகத்தையும் வணங்க மாட்டேன். இது ஒரு குற்றம் என்றால் நான் மறுமையில் துன்புற நேரிடுமோ?” என்று கேட்டார்.

சுவாமிகள் அதற்கு, “ நல்லது. ஒவ்வொருவரும் அவரவர் கொள்கையின் படி நடந்து கொள்ளட்டும்”, என்று அமைதியாகக் கூறினார்.

சிறிது நேரம் கழிந்த பின், அங்கு சுவரில் மாற்றப் பட்டிருந்த படம் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார். அப்படத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, திவானை நோக்கி, “நீர் சிறு காரியம் ஒன்றைச் செய்வீரா?” என்று கேட்டார்.

திவான் உடனே, “தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்”, என்று கூறினார்.

அவரிடமிருந்து அந்த வாக்கைப் பெற்றுக் கொண்ட பிறகு, சுவாமிகள் தன் கையில் இருந்த படத்தின் மீது காறித் துப்பும்படி திவானை ஏவினார்; மற்றவர்களையும் அவ்வாறே தூண்டினார். ஆனால் அவர்கள் எல்லோருமே அவ்வாறு செய்வதற்கு அஞ்சினார்கள்.

அப்போது சுவாமிகள், “ஏன், இது வெறும் கண்ணாடியும், காகிதமும் தானே? இதில் துப்புவதற்கு என்ன தயக்கம்?” என்று வினவினார்.

அதற்கு அவர்கள், “இது எங்கள் அரசர் பெருமானின் படம் அல்லவா?” என்று அடங்கிய குரலில் கூறினார்கள்.

அதைக் கேட்ட சுவாமிகள், “இந்தப் படம் உங்கள் மகாராஜா அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இது அவருடைய பிரதிபிம்பம் மட்டுமே. ஆனாலும் இதன் மூலம் நீங்கள் அவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள். இது போன்றே, கல்லும் மண்ணும் கடவுள் ஆகி விட மாட்டா. ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று யாரும் வழிபடுவதில்லை. இவற்றால் செய்திருக்கும் விக்கிரகங்கள் அல்லது சின்னங்களின் மூலம் எல்லாம் வல்லவனாய், எங்கும் நிறைந்தவனாய் விளங்கும் முழுமுதற் கடவுளையே நினைத்து மக்கள் வணங்குகின்றனர். கடவுள் பற்றிய நினைவை உண்டாக்குவதற்கே உருவங்கள் உதவி புரிகின்றன”, என்று விளக்கமாகக் கூறினார்.

அதைக் கேட்ட மகாராஜா, “ சுவாமிகளே. இந்த விஷயத்தில் நான் இது வரை அறிவில்லாதவனாக இருந்தேன். இப்போது கண் விழித்துக் கொண்டேன்”, என்று கூறி விவேகானந்தரை கைகூப்பி வணங்கினார்.


-- "விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்" என்ற புத்தகத்திலிருந்து...

Sunday, September 11, 2011

மொழி


பெற்றவளை அம்மா என்றுதான்
நானும் அழைத்தேன்
நீயும் அழைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம்
அரிச் சுவடி தொடங்கித்தான்
நானும் படித்தேன்
நீயும் படித்தாய்

வானத்தின் நிறத்தை நீலம் என்பதாய்த்தான்
நானும் அறிந்தேன்
நீயும் அறிந்தாய்

வானவில் காண்கையில் அழகு என்றுதான்
நானும் ரசித்தேன்
நீயும் ரசித்தாய்

இருப்பினும்
கண்டத்தில் புறப்பட்ட
பொருளில்லாச் செருமல் போல்
நீ பேசுவன எனக்கும்
நான் பேசுவன உனக்கும்
புரியாமலே போவ தெப்படி?

--கவிநயா

Sunday, September 4, 2011

என்ன பேரு வைக்கலாம்?

பேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓகே மிஸ்’ அப்படின்னு இஞ்கிலீஷ் டீச்சருக்கு பேர் வச்சான்! ஏன்னா அவங்க “ஓகே? ஓகே?” அப்படின்னு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவாங்களாம்.

இப்ப குடும்பஸ்தனா ஆனபிறகும் அந்தப் பழக்கம் விடல. நண்பர்கள், உறவினர்கள், ஏன், பஸ்ல, ரயில்ல பழகறவங்களுக்குக் கூட பேர் வெச்சிருவான்.

அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நொறுக்கறதுக்கு உருளைக்கிழங்கு போண்டா பண்ணியிருந்தா, அவன் மனைவி ரமா. சுடச் சுட ஆனந்தமா சாப்பிட்டான்.

“ரமா, இந்த போண்டாவைப் பார்த்தோன்ன உனக்கு என்ன ஞாபகம் வருது, சொல்லு பார்ப்போம்”

போண்டாவை எண்ணெயில போட்டுக்கிட்டே “ரவி… ரவி… நீயும் வந்து போண்டா எடுத்துக்கோட கண்ணா. உனக்குப் பிடிக்குமே”, என்று மகனைக் கூப்பிட்டவள், “எனக்கொண்ணும் நினைவு வரலையே?” புருவத்தைச் சுருக்கினா, ரமா.

“நம்ம வீட்டுக்கு வந்த ஒத்தர் நீ பண்ணின போண்டாவெல்லாம் யாருக்கும் மிச்சம் வெக்காம தானே சாப்பிட்டாரே… நினைவில்லயா நம்ம போண்டா மாமாவை? அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன்!”

“ஏங்க, என் போண்டா அவருக்கு அவ்வளவு பிடிச்சதில எனக்கு சந்தோஷம் தான். பாவம் அவர ஏன் நீங்க இன்னும் கிண்டல் பண்றீங்க?” சொல்லிக்கிட்டே மணக்க மணக்க காஃபியைப் பக்கத்தில வெச்சா.

“அதில்ல ரமா. அவர் பொண்டாட்டி அவருக்கு போண்டாவே செஞ்சு குடுத்திருக்க மாடாங்கன்னு நெனக்கிறேன்… ஆமா, அந்தம்மாவை நினைவிருக்கோ ஒனக்கு?”

“ஏன் நினைவில்லாம? நல்லா நினைவிருக்கே”

“அதானே. எதை மறந்தாலும் அந்த ஜி.ஆர்.டி. ஆண்ட்டியை எப்படி மறப்பே?”

“ஏங்க, அவங்க எக்கச்சக்கமா நகை போட்டுக்கிட்டு வந்தது உண்மைதான், அதுக்குன்னு இப்படியா பேர் வெப்பீங்க?” அப்படின்னு சொன்னாலும் இதழில் பிறந்த புன்னகையைத் தடுக்க முடியலை, ரமாவுக்கு.

“பின்ன என்ன ரமா? நம்ம பையன் பிறந்த நாளுக்கு வர்றவங்க இப்படியா வர்றது? பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல! வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு!”

அத்தனையும் பேசிட்டு, கூடவே மறக்காமல், “காஃபியும் போண்டாவும் சூப்பர் ரமா”, மனைவியையும் மனமாரப் பாராட்டும் போது அழைப்பு மணி அடிச்சது.

“நாம் பாக்கிறேம்மா”, ரவி எழுந்து வாசலுக்கு ஓடிப் போய் கதவத் தொறந்தான்.

“ஹாய் அங்கிள். ஹாய் ஆண்ட்டி”, என்றவன், “அப்பா, நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அந்த போண்டா மாமாவும், ஜி.ஆர்.டி. ஆண்டியும் வந்திருக்காங்க”, என்று உள்ளே திரும்பி சத்தமாக அறிவித்தான்!

**

பாடம் 1: புறம் பேசாமல் இருப்பது மிக மிக நல்லது.
பாடம் 2: அப்படியே பேசினாலும் குறைந்தது குழந்தைகள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது.

**

--கவிநயா

Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!

சதுர்த்தித் திருநாளில் கற்பகக் கணபதியின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

Sunday, August 28, 2011

எங்க ஊருக்கு வந்த ஐரீன்


எதிர்பார்த்துக் கொண்டிருந்த புயல் ஆரம்பித்து விட்டது. மிகவும் பாதுகாப்பாக, வீட்டுக்குள்ளிருந்த வண்ணம் சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உள்ளேயிருந்து பார்க்கையில் பயங்கரம் தெரியவில்லை. மாறாக, புயற்காற்று மிகவும் அழகு மிகுந்ததாக, ஆக்ரோஷம் நிறைந்ததாக, கண்ணகல வைப்பதாக, ‘அடேயப்பா!’ என்று அதிசயிக்க வைப்பதாக, மனசை மயக்குவதாகத்தான் இருக்கிறது.

மழை அடித்து ஊற்றுகிறது. வேகமாக வரும் காற்று, அந்த மழையை அப்படியே நாம் கைகளால் அல்லது துடுப்பால் தண்ணீரைத் தள்ளுவது போல் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தத் தண்ணீரால் பூமியைத் தொடக் கூட முடியவில்லை. அப்படியே காற்றோடு கை கோர்த்து பறந்து போவது போல் ஒரே ஓட்டம். அப்பாவும் பிள்ளையும் நடக்கும் போது, அப்பா கையை விட்டு விட்டுப் போய்விட நேர்ந்தால், ‘அப்பா, அப்பா’ என்று பிள்ளை பின்னாடியே ஓடுவது போல்தான் மழைத் தண்ணீரும் தரையில் கால் பாவாமலேயே காற்றோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இருக்கிற கைகளையெல்லாம் வான் நோக்கி விரித்துக் கொண்டு அந்த இறைவனை ‘இந்த க்ஷணமே வருகிறாயா, இல்லையா?’ என்று மிரட்டலாக இறைஞ்சுவது போல் இருக்கிறது. வராவிட்டால் தாமே அவனை எட்டிப் பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்துடன், விண்ணைத் தொட்டு விடும் விடா முயற்சியுடன் இருப்பது போல் இருக்கிறது.

‘எத்தனை நாள்தான் ஒரே இடத்தில் நிற்பது? என்னை இடம் மாற்றி விடு’ என்று கேட்பது போலவும் இருக்கிறது.

இருக்கும் இடத்திலும் சிறக்க முடியாமல், வேறிடத்துக்கும் போக முடியாமல் அவதிப்படும் இரண்டுங்கெட்டானைப் போல, வேரைப் பிடுங்கிக் கொண்டு போகவும் முடியாமல், எட்டி வானத்தைத் தொடவும் முடியாமல் இந்த மரங்களெல்லாம் தவித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

நாம் இப்படி இங்கே உட்கார்ந்து புயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேறு யாருக்குமே எதுவும் ஆகாமல், எல்லோருமே நலமாக இருக்க வேண்டுமே, என்ற பிரார்த்தனையும் எழுகிறது. எங்கள் வீட்டுக்கு அருகிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றையும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

மின்சாரம் இல்லாமல் போனாலும் போய்விடும். மின்சாரம் இல்லா விட்டால் ஒரு தேநீர் கூடக் குடிக்க முடியாது. இந்த யோசனையுடனே அவசரமாக இரவுக்கு வேண்டியதை விரைவாகச் சமைக்கிறேன்.

மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கை விளக்கு, இப்படி எல்லாவற்றையும் எடுத்து கைக்கு எட்டிய தொலைவில், சட்டென்று எடுக்கும் விதமாக தயாராக வைக்கிறோம். ஆனால் எங்களுக்கு என்னவோ மின்சாரம் போகவில்லை. சில நண்பர்களுடன் தொலைபேசி, நலம் விசாரிக்கிறோம்.

வீட்டுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டிருக்கின்றன. வீட்டிற்கு எதிர்ப்புறமாக.

இரவு முடிந்து விட்டது. புயல் கடந்து விட்டது. மறு நாள் விடிந்து விட்டது. காற்றும் மழையும் ஓய்ந்து, மிகப் பிரகாசமாக வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. நேற்றுதானா அத்தனை புயலும், மழையும், என்று வியக்கும்படி…

ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும், கிளைகளும், வீதியெல்லாம் பாய் விரித்திருந்த இலைகளும்தான், ‘ஆம், நேற்றுதான்… அதற்கு நாங்களே சாட்சி’ என்று பதிலளிக்கின்றன.

இன்னும் நின்று கொண்டிருக்கும் மரங்களெல்லாம், பெருந் தாண்டவம் ஆடி முடித்த களைப்புடன், தியானத்தில் ஆழ்ந்து விட்டதைப் போல அசையாமல் நிற்கின்றன.


--கவிநயா