Sunday, December 26, 2010

கண்ணா நீ எங்கே?



கண்ணன் - என் காதலன்

எங்கே சென்றாயோ - கண்ணா
கொஞ்சம் வருவாயோ?
தேடி அலையும் தென்ற லுக்கு
தரிசனம் தருவாயோ?

வான வில்லின் நீலம் உனக்கே
வண்ணக் கண்ணா வா!
திரட்டி வைத்த வெண்ணை தின்ன
திருட்டுக் கண்ணா வா!

கோபி யரைக் கொஞ்சிப் பேச
கோகுலக் கண்ணா வா!
ஆயர் பாடி ஆவி னங்கள்
அழைக்கு துன்னை வா!

மயக்கும் குழலை இசைக்கும் கண்ணா
மயிலிற கோடே வா!
மண்ணைத் தின்ற மாயக் கண்ணா
என்னைக் காக்க வா, எந்தன் ஏக்கம் தீர்க்க வா!

--கவிநயா

அனைவருக்கும் மனம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்பே பெருகட்டும்! நலமே சூழட்டும்!!

Monday, December 20, 2010

கோவிந்தக் கிளி

கோவிந்தா… கோவிந்தா’

பிருந்தை உள்ளே நுழையும் போதே கிளியின் குரல்தான் அவளை வரவேற்கிறது.

வீட்டில் நிசப்தத்தின் ஆட்சி. பெரியாழ்வார் வீட்டில் இல்லை போலிருக்கிறது. கோதை என்ன செய்கிறாள்? ஒரு வேளை உறங்கிக் கொண்டிருக்கிறாளோ? இந்த எண்ணம் வந்தவுடன் தன் கொலுசுச் சத்தத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கிளியின் கூவலுக்கு எழாதவளா என் கொலுசுக்கு எழுந்திருக்கப் போகிறாள், என்று கூடவே தோன்றுகிறது.

அதோ… தரையில் துவண்ட கொடி போல் கிடக்கிறாள் கோதை. விழிகள் திறந்துதான் இருக்கின்றன. சரிதான்… அவள்தான் உண்பதையும் உறங்குவதையும் மறந்து எத்தனையோ காலமாகிறதே.

பக்கத்தில் போய் மெதுவாக அமர்கிறாள், தோழியின் மோனத்தைக் கலைக்க மனமில்லாமல். அவளைப் பார்க்கப் பார்க்க, கழிவிரக்கத்தால் கண்கள் கசிகின்றன, பிருந்தைக்கு. எப்படி ஆகி விட்டாள், என் தோழி!

சிவந்திருக்க வேண்டிய கன்னங்களுக்குப் பதில் உறக்கமிழந்த கண்கள் சிவந்திருக்கின்றன. வெளுத்திருக்க வேண்டிய கண்களுக்குப் பதில் முகமும் அதரங்களும் வெளிறிப் போய்க் கிடக்கின்றன. வசந்த கால மலரைப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது இலையுதிர் கால உதிர்ந்த சருகைப் போல் கிடக்கிறாள்.

கன்னத்தில் விழுந்து கண்களை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலைப் பரிவுடன் விலக்கி விடுகிறாள், பிருந்தை. அந்த ஸ்பரிசத்தில் கோதையின் கருவிழிகள் இலேசாக அசைகின்றன.

“யார் அது?..... ஓ…. வா… பிருந்தை”

அந்த வார்த்தைகளிலேயே களைத்து விட்டவள் போல் மீண்டும் மௌனமாகி விட்டாள் கோதை.

திரட்டி வைத்த வெண்ணெய் எதையும் உருக விடாமல் உடனடியாக உண்டு உண்டு, பேழை வயிறோனாய்* இருக்கும் அந்த நீலக் கண்ணன், இந்தப் பெண்ணை மட்டும் இப்படி இரக்கமில்லாமல் உருக விட்டு, இவள் பேதை வயிறை இப்படிக் காய வைத்து விட்டானே!

“கோபாலா… கோபாலா…” மறுபடியும் கொஞ்சுகிறது கிளி.


கைகளைத் தரையில் ஊன்றி, சற்றே நகர்ந்து தோழியின் மடியில் தலை வைத்துக் கொள்கிறாள் கோதை.

ஊன்றிய கைகளிலிருந்து வளையல்கள் தானாகக் கழன்று விழுகின்றன. அவற்றை எடுத்து தோழியின் கைகளில் மறுபடியும் போட்டு விடுகிறாள், பிருந்தை.

“பாரடி இந்தக் கிளியை… எப்போது பார்த்தாலும் அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது…”, என்று தோழியிடம் முறையிடுகிறாள் கோதை, சின்னக் குழந்தையைப் போல.

“வேறு என்னடி செய்யும் பாவம்? நீதானே அவன் பெயர்களை மட்டுமே அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன் மேல்தான் தவறு!”

“ஆமாமடி. அவன் பெயரையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது அவன் பெயரைக் கேட்டாலே என் ஏக்கமும் துக்கமும் அதிகரிக்கிறதேடி…. என்ன செய்வேன்?”

“உலகளந்தான்… உலகளந்தான்” என்று அழைக்கிறது கிளி, இப்போது.

“ஏய் கிளியே… சற்று சும்மா இருக்க மாட்டாய்!”, பிருந்தைக்கே பொறுமை போய்விடும் போல் இருக்கிறது.

“என்றைக்கேனும் உணவு தராமல் இருந்து விட்டால், முறையிடுவதற்காக இப்படித்தான் அவனை அழைக்கும்.**

கிளி சிறகடித்து வந்து பிருந்தையின் தோளில் அமர்ந்து கொள்கிறது.

“என்னை விட இந்தக் கிளிதான் அவன் பெயரை அதிகம் சொல்லியிருக்கும் என்று தோன்றுகிறதடி”, என்றவள், “இந்தக் கண்ணன் இருக்கிறானே… அவன் சரியான கள்வனடி”, என்கிறாள், சம்பந்தமில்லாமல்.

“அதுதான் தெரிந்த செய்தியாயிற்றே… அதற்கென்னடி இப்போது?” என்கிறாள் பிருந்தை பேச்சை வளர்க்க எண்ணி. இந்த மட்டுமாவது கோதை மோனத்தைக் கலைத்து இந்த உலகிற்கு வந்தாளே என்று இருக்கிறது அவளுக்கு.

“மனிதர்களை விட அவனுக்கு மற்ற உயிர்களிடத்தில்தான் அதிகப் பற்று போலும் என்று சமயத்தில் தோன்றுகிறதடி”

“எப்படிச் சொல்கிறாய்?”

“ம்… பாரேன்… மாடு கன்றுகள் இறப்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவன் காளிங்கனைக் கொன்றான்?”

“ஆமாமடி”

“கஜேந்திரன் அழைத்தவுடன் நொடியும் தாமதிக்காது கருடனில் ஏறிக் கணத்தில் வந்து விட்டானே?”

“உண்மைதான்”

“ஆயர்பாடியில் ஆவினங்களைக் காப்பதற்காக தன் பிஞ்சு விரலில் குன்றைக் குடையாக எடுத்தவனல்லவா அவன்?”

“ம்…”

“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”

“ஓஹோ... இப்போதல்லவா புரிகிறது, நீ இந்தப் பொல்லாத கிளியைச் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம்!”, ஆச்சரியத்தில் கண்கள் பெரிதாக விரிகின்றன, பிருந்தைக்கு.

“என்றுதான் வருவானோ என் கண்ணன்?” பெருமூச்சொன்று தப்பிச் செல்கிறது, கோதையிடமிருந்து.

“ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!”

இதைச் சொல்லும்போது இத்தனை நேரமும் சோகமாக இருந்த கோதையின் முகம், ஏதோவொன்று புரிந்து விட்டாற் போல சட்டென்று ஒளி பெற்று, சந்தோஷத்தில் பொலிகிறது.

**
*1ம் பத்து 4-ம் (பெரியாழ்வார்) திருமொழி
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

**12-ம் (நாச்சியார்) திருமொழி
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

**

--கவிநயா

பி.கு.: சில நாட்களுக்கு முன் கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன். எனக்கே பிடித்த பதிவு என்பதாலும், மார்கழிக்குப் பொருத்தம் என்பதாலும், வாசகர் வட்டம் வேறு என்பதாலும், இங்கும் இடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே வாசித்தவர்கள், பொறுத்தருள்க!

Thursday, December 16, 2010

ஜெகம் புகழும் புண்ய கதை

ன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாள் அவள். நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. சுற்றிலும் அப்பிக் கொண்ட இருளைக் கிழிக்கத் தகுந்த எந்த ஒளிக் கற்றையும் தென்படவில்லை. எப்பேர்ப்பட்டவள்! உலகத்தை எல்லாம் ஆளும் தேவி! மனிதப் பிறவி எடுத்ததால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்தவள். துன்பம் எல்லை மீறிய போது மனிதர்களைப் போலவே மனம் தடுமாறி விட்டாள். நம்பிக்கை இழந்து விட்டாள்.

இலங்கையில், அசோகவனத்தில், எத்தனை பேர் இருந்தாலும், அவள் மட்டும் தனிமையில். மனம் எப்போதும் ராமனிடத்தில்.

பத்து மாதங்கள்! பத்து மாதங்கள் பொறுத்தவள், இன்னும் இரண்டு மாதங்களே மீதம் இருக்கின்றன என்று உணர்கிற போது நம்பிக்கை நொறுங்கி விட்டது. இராவணனின் வற்புறுத்தலையும், அரக்கிகளின் கொடூரத்தையும் சகித்துக் கொண்டு இனியும் உயிர் தரித்துக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றி விட்டது.

நம்பிக்கை இழந்தது தன் நாயகன் மீதா, அல்லது தர்மத்தின் மீதா என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே அல்லவா?

சிம்சுபா விருட்சத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தன் முடிவை செயல்படுத்தும் வழியை ஆலோசிக்கிறாள். கண்களில் கண்ணீர் மட்டும் வழியா விடில், தூசு படர்ந்த அழகான ஓவியம் மரத்தில் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி எழில் படைத்தவள். ‘ராமா ராமா’ என்று அரற்றுகிறது நெஞ்சம்.

காவல் இருக்கும் அரக்கிகள் அயர்ந்திருக்கிறார்கள், இதுவே தருணம் என்று நினைக்கிறாள். அந்த நிமிடத்தில்தான் எதிர்பாராவிதமாக அவள் செவிகளில் அமிருத தாரை பாய்கிறது.

“ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம். அயோத்தியில் தசரதன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று மனைவியர். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதில் ஸ்ரீராமன் மூத்தவன். இளைய மனைவி கைகேயிக்குத் தந்த வரத்திற்காக தசரதர் ஸ்ரீராமனை பதினாலு வருடங்கள் காட்டிற்கு அனுப்ப நேர்ந்தது. அவருடன் இளவல் லக்ஷ்மணனும், மனைவி சீதையும் உடன் வந்தார்கள்…”

யாரோ மிக மதுரமான குரலில் நாதனின் சரிதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குரலில்தான் எத்தனை குழைவு; எத்தனை இனிமை; எத்தனை அன்பு! இந்த இலங்கையில் அவர் பெயரை, வரலாற்றை, இத்தனை அழகாகச் சொல்லுபவர்கள் யார்? அவர் மீது இத்தனை பிரியமும் பக்தியும் வைத்திருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்களா?

சுற்றும் முற்றும் பார்க்கிறாள். யாரும் தென்படவில்லை. ஒரு வேளை கனவு காண்கிறேனோ என்று எண்ணுகிறாள். அன்புக்குரியவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரமையோ என்றும் தோன்றுகிறது. ஸ்ரீராமனைப் பற்றிக் கேட்பது இந்தக் காயம்பட்ட உள்ளத்துக்குத்தான் எவ்வளவு இதமாக இருக்கிறது!


பாலைவனத்தில் தாகத்தில் தவிப்பவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த குளிர்ந்த நீருற்றுப் போலவும், பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கிடைத்த விருந்தைப் போலவும், இருளில் வழிதெரியாத கானகத்தில் கிடைத்த கைவிளக்கு போலவும் இருக்கிறது. அவரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. மேனியெங்கும் புளகமடைந்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

இந்த பத்து மாதங்களில் இது போன்ற ஒரு சந்தோஷத்தை அனுபவித்ததில்லை. என் வாழ்நாளில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலமும் உண்டா என்றல்லவா அவளுக்கு சந்தேகமாக இருந்தது? சக்கரவர்த்தித் திருமகனின் சரிதை, அவள் மனதில் பழைய ஆனந்தமான நினைவுகளைப் புதிதாகப் புஷ்பிக்கச் செய்கிறது. இது கனவாகவே இருந்தால்தான் என்ன, அந்தக் கனவு நீடிக்கட்டும் என்று எண்ணுகிறாள்.

அந்தக் குரலும் தொடர்ந்து ஸ்ரீராமனின் வரலாற்றைச் சொல்கிறது. அவருடைய அற்புதமான குணநலன்களையும், நிகரில்லாத வீரத்தையும், அவருக்குத் தன் துணைவியின் மேல் இருக்கும் அளவில்லாத பிரேமையையும், அவளைத் தேடுவதற்கென அகிலமெங்கும் அவர் வானரங்களை ஏவியிருப்பது பற்றியும், இப்படி எல்லாவற்றையும் அந்தக் குரல் சொல்கிறது.

சீதா தேவி மறுபடியும் தேடிப் பார்க்கிறாள். தனக்கு இத்தகைய மகிழ்ச்சியைத் தந்தவர் யார் என்று. அப்போது அந்த சிம்சுபா விருட்சத்தின் கிளைகளுக்கு இடையில் மின்னல் கீற்றுப் போல் ஒரு சிறிய உருவம் தெரிகிறது. நன்றாகப் பார்க்கையில் அது ஒரு சிறிய வானரம் போல் இருக்கிறது. இந்த வானரமா இத்தனை நேரமும் என் நாயகனைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்லியிருக்கும்? இருக்காது என்று நினைக்கிறாள்.

அந்தச் சமயத்தில், சொல்ல முடியாத தேஜசுடன் ஒளி வீசிய அந்த வானரம், மரத்தினின்றும் மெதுவாகக் கீழே இறங்கி வந்து அவளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறது.

**

இராமாயணத்தில் எனக்குப் பிடித்த கட்டங்களில் இதுவும் ஒன்று. அனுமன் சீதைக்காக ஸ்ரீராம சரித்திரத்தைச் சொல்வதும், அதைக்கேட்டு சீதை ஆனந்தப்படுவதும். அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் எனக்கும் எழுத ஆசை!

ஸ்ரீராம ஜெயம்.

வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு. 200-வது பதிவும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.forumohalu.org/index.php?topic=1930.0

Sunday, December 12, 2010

எனக்கும்… ஒரு மயக்கம்…

எல்லாருக்கும் ஏதாவது ஒரு ‘மயக்கம்’ இருக்கும்தானே? அதாங்க…passion, அப்படின்னு சொல்றது…

என்னோட மயக்கங்கள் … எழுத்தும், நடனமும்தான்…

நடனத்தை விட எழுத்து ஒரு படி மேல்; ஏன்னா எப்ப வேணுமானாலும் எழுதலாமே!

எழுத்து எனக்கு ஒரு அந்தரங்கத் தோழி மாதிரி. அந்தக் காலத்தில் கடிதம் எழுதற பழக்கம் இருந்தப்போ, நீ…ள நீ…ள…மா கடிதங்கள் எழுதுவேன். பெற்றோருக்கு, தங்கைகளுக்கு, தோழிகளுக்கெல்லாம்… அதுக்கப்புறம் கடவுளுக்கும் நிறைய எழுதி இருக்கேன். திட்டி… திட்டிதான்!

யார் மேலயாவது ரொம்ப கோவமோ வருத்தமோ இருந்தா, அதைப் பற்றி மனசில் உள்ளதெல்லாம் கொட்டி எழுதிட்டு, பிறகு கிழிச்சுப் போட்டுருவேன்; மனசு அமைதியாயிடும். ஆனா அதெல்லாம் ச்சின்ன வயசில்… இப்ப அப்படில்லாம் அபரிமிதமா யார் மேலயும் வருத்தமோ கோவமோ வரதில்லை. அப்படியே தப்பித் தவறி வந்தாலும் நிலைக்காது. கொஞ்ச நேரத்தில் காணாம போயிடும். *touchwood*

சமயத்தில் தோணும், சே, யாரும் அவ்வளவா படிக்கிற மாதிரி கூட இல்லை (ராமலக்ஷ்மியைத் தவிர! – ஹி..ஹி.. தவறா நினைக்காதீங்க, சில சமயம் பின்னூட்டங்களைப் பார்த்து அப்படித் தோணும் :) - எதுக்கு எழுதிக்கிட்டிருக்கோம், அப்படின்னு மனசு தளர்ந்த நேரங்கள் உண்டு… ஆனா எது எப்படி இருந்தாலும் என்னால் எழுதாம இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்; எழுதறது மற்றவங்களுக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான்னு புரியுது. அதனால வருத்தப்படறதில்லை, இப்போ.

இந்தச் சமயத்தில், இங்கே வருகை தந்து, பின்னூட்டம் இட்டோ, இடாமலேயோ வாசிப்பவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

எழுதறவங்க எல்லார்கிட்டயுமே யாராச்சும் ஒருத்தராச்சும் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பாங்க: “எப்படி உங்களால இப்படி எழுத முடியது?” அப்படின்னு. ஆனா என்கிட்ட அப்படிக் கேட்டவங்களை விட “எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது?” அப்படின்னு கேட்டவங்க அதிகம்! அப்படின்னா நான் எழுதறது அந்த அழகில் இருக்குன்னு அர்த்தமா… தெரியல… :)

என்கிட்ட இருக்கறது ஒரே பதில்தான். “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”. எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தில் இதை அனுபவிச்சிருப்போம். ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருக்குன்னா, அதைச் செய்யறதுக்கு எப்படியாச்சும் நேரம் கண்டு பிடிச்சிருவோம். அப்படித்தான் நானும்.

முக்கால்வாசி நான் ‘எழுதறதெ’ல்லாம் கார் ஓட்டும்போது... சமையல் பண்ணும்போது... ஏதாவது தனிமை கிடைக்கும்போது... மனசில் ஓடிக்கிட்டிருக்கதுக்கெல்லாம் அப்பதான் ஏதாச்சும் உருவம் கிடைக்கும். அந்த மாதிரி வார்த்தைகள் வந்து விழற போதெல்லாம், எழுதறது ரொம்ப சுலபமா இருக்கே… யார் வேணுமானாலும் எழுதலாமே, ஏன் எழுத மாட்டேங்கிறாங்கன்னு தோணும்.

ஆனா சில சமயம் கரு கிடைச்சாலும், அதைப்பற்றி எழுதியே ஆகணும்கிற ஆசை ஏகத்துக்கு இருந்தாலும், அதுக்கு உருவே கிடைக்காது! அப்பல்லாம் ரொம்ப frustrating-ஆ இருக்கும். அப்பதான், அட, ஆமா… எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமில்லை, அப்படின்னும் நினைச்சுக்குவேன்!

கரு கிடைச்ச ஒருசில விஷயங்களுக்கு உரு கிடைக்க, சில சமயம் மாதக் கணக்கில் கூட ஆகியிருக்கு! அதனாலதான் எழுதறதை பிரசவத்துக்கு ஒப்பிடறாங்க போல!

மனசில் இருக்கறதை கணினியில் ஏற்ற முக்கால்வாசி இராத்திரியில்தான் நேரம் கிடைக்கும்.

ஒரு விஷயத்தைப் பற்றி எழுதணும்னா அதைப் பற்றி நிறைய சிந்திக்கணும். தியானம்கிறது அதுதான்… ஒரே விஷயத்தைச் சுற்றி எண்ணங்களை அமைச்சுக்கறது. ஆனா அதுவும் ‘கிட்டத்தட்ட’தான் நடக்கும். அப்பவும் திடீர்னு சம்பந்தமே இல்லாத கிளைக்குத் தாவிரும், மனசு.

கவிதை எழுதறதை விட கதை எழுதறது கஷ்டம், என்னைப் பொறுத்த வரை. ஏன்னா, கதைக்கு பல விஷயங்களையும், உண்மைகளையும், தகவல்களையும் சேகரிக்கணும். ரொம்ப யோசிக்கணும். சும்மா இஷ்டத்துக்கு ‘கதை’ விட முடியாது :) அப்படி விட்டா தர்க்க ரீதியா (logical-ஆ) அது எப்படி நடக்கும், இது எப்படி நடக்கும், அப்படின்னு கேள்விகள் வந்துரும். ஆரம்பமும், முடிவும், கச்சிதமா அமையணும்… அப்புறம்… திரும்பப் படிச்சுப் பார்த்து, செப்பனிடணும். அதற்கெல்லாம் நிறைய்ய்ய்ய நேரம் வேணும். அதனாலேயே, பல முறை நல்ல கருக்கள் தோணியும் எழுதாமலேயே விட்டிருக்கேன்…

என் எழுத்துப் பயணம் பற்றி ஏற்கனவே இங்கே நிறைய சொல்லிட்டேன். கவிதைதான் முதலில் எழுத ஆரம்பிச்சேன்… பிறகு கவிதை, கதை, கட்டுரை, இப்படி ஒவ்வொரு வடிவமா எழுதிப் பார்த்தாச்சு. வயசு ஏற ஏற, மன நிலையும் மனப்போக்கும் மாற மாற, எழுதும் பொருளும், எழுதும் விதமும், வடிவமும் கூட மாறிக்கிட்டே இருக்கு… இதை என் அனுபவத்திலேயே நிதர்சனமா உணர்ந்துகிட்டு வரேன்.

சமீபமா இந்த வலைப்பூவை வாசிக்க ஆரம்பிச்சவங்க, நேரம் கிடைக்கையில் சில பழைய கவிதை, கதைகளையும் வாசிச்சுப் பாருங்க… உதாரணத்துக்கு சில:

கவிதைகள்: காணவில்லை, கைப்பைக் கனவுகள்
கதைகள்: இடுக்கண் வருங்கால்…, சிறகு முளைத்த சின்னப்பூ, காணாமல் போனவர்கள், சுண்டக்காயும் சுண்டைக்காய், …
குறுந்தொடர்: கண்ணனுக்குத் தந்த உள்ளம்

யார் கண்டா, உங்களுக்குப் பிடிச்சாலும் பிடிக்கலாம் :)

அது சரி என்னமோ எல்லாம் நீயே பண்ற மாதிரி ஒரேயடியா பீத்திக்கிறியே, அப்படின்னு உள்ள இருந்து ஒரு குரல் என்னைக் குட்டுது… சரிதானே…

“Thou workest thine own work; men only call it their own.” என்பது எனக்குப் பிடிச்ச வாசகம். “நாமெல்லாம் இயந்திரங்கள், நம்மை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் இறைவனிடம் இருக்கிறது” என்பார், ஸ்ரீராமகிருஷ்ணர். “ஆட்டி வைத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்றார் கண்ணதாசன். அதனால் உங்களையும் என்னையும் ஆட்டி வைக்கிற, எழுத வைக்கிற, வாசிக்க வைக்கிற, என் அன்னை பராசக்திக்கு அனந்தகோடி வணக்கங்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ இந்த பதிவை வாசிச்சீங்களா இல்லையான்னு பார்க்க உங்களுக்கு ஒரு பரீட்சை!

உங்களையும் நிச்சயம் யாராச்சும் கேட்டிருப்பாங்க. “எப்படி இப்படில்லாம் எழுத முடியுது உங்களால?” அப்படின்னு. இல்லைன்னா, நான் கேட்கிறேன்னே வச்சுக்கோங்களேன்.

எனக்கு நிறையப் பேரை அப்படிக் கேட்கணும்னு ஆசை. நகைச்சுவையா எழுதறவங்க, புதுக் கவிதைகள் எழுதறவங்க, சமூக அக்கறையோட எழுதறவங்க, உருக உருக கதை எழுதறவங்க, ஆன்மீகத்தைக் கரைச்சுக் குடிச்சு, அதைப் பற்றி அற்புதமா எழுதறவங்க, மனோதத்துவக் கட்டுரைகள் எழுதறவங்க, ஒரு ரசிகனாக இருந்து எழுதறவங்க, தமிழ் இலக்கியங்களை ரசனையுடன், பொருளுடன் எழுதறவங்க, இப்படி எவ்வளவு பேர்! இதில் நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியும். சில பேர் பின்னூட்டங்கள் கூட பிரமாதமா எழுதுவாங்க. நானு அதுல ரொம்ப வீக்!

நீங்க என்ன பண்றீங்க… அந்தக் கேள்விக்குப் பதிலை, உங்களுடைய எழுத்து அனுபவத்தை, ஒரு தொடர் பதிவா, வாசகர்களோட பகிர்ந்துக்கறீங்க! எழுத்துன்னு இல்லை, உங்களுடைய எந்த ‘மயக்க’த்தைப் பற்றியும் எழுதலாம். உதாரணமா புகைப்படக் கலையில் வெளுத்து வாங்கறவங்க நிறையப்பேர் இருக்கீங்க; படம் வரையறது, சமையல், இப்படி எதுவா இருந்தாலும், அதில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது, உங்க அனுபவங்கள் என்ன, அப்படின்னு எழுதலாம்.

யாரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விரும்பலை. அதனால இந்தத் தொடரின் விதிகள் ரொம்ப சுலபம். நீங்க யாரையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும்:

உங்க அனுபவத்தை பதிவாக எழுதணும்.

தொடர் பதிவுன்னு குறிப்பிடணும்.

இந்தப் பதிவுடைய சுட்டி, அல்லது நீங்க யாருடைய பதிவின் காரணமாகத் தொடர ஆரம்பிக்கிறீங்களோ, அவங்களோட பதிவின் சுட்டிக்கு இணைப்பு குடுக்கணும்.

நீங்க தொடரக் காரணமாக இருந்தவரின் பின்னூட்டத்தில் உங்க பதிவைப் பற்றித் தெரியப்படுத்தணும்.

அம்புட்டுதான்.

இப்படி உங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

என் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகளுடன்…

இப்ப என்ன திடீர்னு, அப்படிங்கிறீங்களா? வேறொண்ணுமில்லை… இது 199-வது பதிவுங்க.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே' -தாயுமானவர்

அன்புடன்
கவிநயா

Sunday, December 5, 2010

என்ன நடக்குது இங்கே?

நாளைக்கு அலுவலகத்தில் முக்கியமான தலைகளோட ஒரு மீட்டிங் இருக்கு. கொஞ்சம் பார்க்கிற மாதிரி ட்ரஸ் பண்ணிக்கணும். நாளன்னிக்கு கோவில்ல பூஜைக்கு மாலை கட்டணும். கடைக்கு எழுதற லிஸ்ட்ல மறக்காம பூ எழுதணும். ஆங்! கடைக்கு போகும்போது ராத்திரி சாப்பிட ரெடி மேடா ஏதாச்சும் வாங்கிட்டு வந்துரலாமா? இல்லன்னா காலைல சீக்கிரம் எழுந்து என்னவாச்சும் சமைக்கணும். காய் என்ன இருக்குன்னு தெரியல. அச்சோ! அவங்களுக்கு குழந்தை பிறந்தாச்சுன்னு சொன்னாங்களே! எப்ப அவங்கள பார்க்க போலாம்? கடைக்கு போய் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போகணும். இன்னிக்குக் காலைல எழுந்திருக்கும் போது ஒரு அழகான கவிதை வரி வந்துச்சே, அது என்ன? சே, எவ்வளவு பொருத்தமான உவமையோட வார்த்தைகளும் கோர்வையா அழகா வந்து விழுந்துச்சு! இப்ப மறந்து தொலைச்சிருச்சே. என்ன பண்றது? வேலையில இருந்து வரும்போது காருக்கு பெட்ரோல் வேற போடணும். அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போகும் போது போட நேரம் இருக்காது. டான்ஸ் வேற ப்ராக்டிஸ் பண்ணனுமே. பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்கிற டான்ஸை வேற ஒரு தரமாவது ஆடிப் பார்க்கணும். எதுக்கும் காலைல சீக்கிரம் எழுந்திரிச்சாதான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் படம் நல்லாதான் இருந்தது. அதில் ரிப்போர்ட்டரா வந்த பொண்ணு பேரு என்ன? எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. புதுசு யாரையும் தெரியல. நாளைக்காச்சும் ஏதாச்சும் சமைச்சே ஆகணும். ரெண்டு நாளா பழசை வச்சே ஓட்டியாச்சு. என்ன பண்றது? சப்பாத்தி பண்ணலாமா? பில்லெல்லாம் வேற கவனிக்கணும். இராத்திரி ப்ளாக் போஸ்ட் பண்ண நேரமிருக்குமான்னு தெரியலையே?

“க்ர்ர்ர்ர்ரிங்”. அலாரம் அடிக்குது.

பத்து நிமிஷம் ஆயாச்சு!

இன்னிக்கு நம்ம ‘தியானம்’ பண்ணி முடிஞ்சாச்சு!

--கவிநயா

பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?