Thursday, December 16, 2010

ஜெகம் புகழும் புண்ய கதை

ன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாள் அவள். நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. சுற்றிலும் அப்பிக் கொண்ட இருளைக் கிழிக்கத் தகுந்த எந்த ஒளிக் கற்றையும் தென்படவில்லை. எப்பேர்ப்பட்டவள்! உலகத்தை எல்லாம் ஆளும் தேவி! மனிதப் பிறவி எடுத்ததால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்தவள். துன்பம் எல்லை மீறிய போது மனிதர்களைப் போலவே மனம் தடுமாறி விட்டாள். நம்பிக்கை இழந்து விட்டாள்.

இலங்கையில், அசோகவனத்தில், எத்தனை பேர் இருந்தாலும், அவள் மட்டும் தனிமையில். மனம் எப்போதும் ராமனிடத்தில்.

பத்து மாதங்கள்! பத்து மாதங்கள் பொறுத்தவள், இன்னும் இரண்டு மாதங்களே மீதம் இருக்கின்றன என்று உணர்கிற போது நம்பிக்கை நொறுங்கி விட்டது. இராவணனின் வற்புறுத்தலையும், அரக்கிகளின் கொடூரத்தையும் சகித்துக் கொண்டு இனியும் உயிர் தரித்துக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றி விட்டது.

நம்பிக்கை இழந்தது தன் நாயகன் மீதா, அல்லது தர்மத்தின் மீதா என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே அல்லவா?

சிம்சுபா விருட்சத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தன் முடிவை செயல்படுத்தும் வழியை ஆலோசிக்கிறாள். கண்களில் கண்ணீர் மட்டும் வழியா விடில், தூசு படர்ந்த அழகான ஓவியம் மரத்தில் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி எழில் படைத்தவள். ‘ராமா ராமா’ என்று அரற்றுகிறது நெஞ்சம்.

காவல் இருக்கும் அரக்கிகள் அயர்ந்திருக்கிறார்கள், இதுவே தருணம் என்று நினைக்கிறாள். அந்த நிமிடத்தில்தான் எதிர்பாராவிதமாக அவள் செவிகளில் அமிருத தாரை பாய்கிறது.

“ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம். அயோத்தியில் தசரதன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று மனைவியர். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதில் ஸ்ரீராமன் மூத்தவன். இளைய மனைவி கைகேயிக்குத் தந்த வரத்திற்காக தசரதர் ஸ்ரீராமனை பதினாலு வருடங்கள் காட்டிற்கு அனுப்ப நேர்ந்தது. அவருடன் இளவல் லக்ஷ்மணனும், மனைவி சீதையும் உடன் வந்தார்கள்…”

யாரோ மிக மதுரமான குரலில் நாதனின் சரிதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குரலில்தான் எத்தனை குழைவு; எத்தனை இனிமை; எத்தனை அன்பு! இந்த இலங்கையில் அவர் பெயரை, வரலாற்றை, இத்தனை அழகாகச் சொல்லுபவர்கள் யார்? அவர் மீது இத்தனை பிரியமும் பக்தியும் வைத்திருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்களா?

சுற்றும் முற்றும் பார்க்கிறாள். யாரும் தென்படவில்லை. ஒரு வேளை கனவு காண்கிறேனோ என்று எண்ணுகிறாள். அன்புக்குரியவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரமையோ என்றும் தோன்றுகிறது. ஸ்ரீராமனைப் பற்றிக் கேட்பது இந்தக் காயம்பட்ட உள்ளத்துக்குத்தான் எவ்வளவு இதமாக இருக்கிறது!


பாலைவனத்தில் தாகத்தில் தவிப்பவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த குளிர்ந்த நீருற்றுப் போலவும், பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கிடைத்த விருந்தைப் போலவும், இருளில் வழிதெரியாத கானகத்தில் கிடைத்த கைவிளக்கு போலவும் இருக்கிறது. அவரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. மேனியெங்கும் புளகமடைந்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

இந்த பத்து மாதங்களில் இது போன்ற ஒரு சந்தோஷத்தை அனுபவித்ததில்லை. என் வாழ்நாளில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலமும் உண்டா என்றல்லவா அவளுக்கு சந்தேகமாக இருந்தது? சக்கரவர்த்தித் திருமகனின் சரிதை, அவள் மனதில் பழைய ஆனந்தமான நினைவுகளைப் புதிதாகப் புஷ்பிக்கச் செய்கிறது. இது கனவாகவே இருந்தால்தான் என்ன, அந்தக் கனவு நீடிக்கட்டும் என்று எண்ணுகிறாள்.

அந்தக் குரலும் தொடர்ந்து ஸ்ரீராமனின் வரலாற்றைச் சொல்கிறது. அவருடைய அற்புதமான குணநலன்களையும், நிகரில்லாத வீரத்தையும், அவருக்குத் தன் துணைவியின் மேல் இருக்கும் அளவில்லாத பிரேமையையும், அவளைத் தேடுவதற்கென அகிலமெங்கும் அவர் வானரங்களை ஏவியிருப்பது பற்றியும், இப்படி எல்லாவற்றையும் அந்தக் குரல் சொல்கிறது.

சீதா தேவி மறுபடியும் தேடிப் பார்க்கிறாள். தனக்கு இத்தகைய மகிழ்ச்சியைத் தந்தவர் யார் என்று. அப்போது அந்த சிம்சுபா விருட்சத்தின் கிளைகளுக்கு இடையில் மின்னல் கீற்றுப் போல் ஒரு சிறிய உருவம் தெரிகிறது. நன்றாகப் பார்க்கையில் அது ஒரு சிறிய வானரம் போல் இருக்கிறது. இந்த வானரமா இத்தனை நேரமும் என் நாயகனைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்லியிருக்கும்? இருக்காது என்று நினைக்கிறாள்.

அந்தச் சமயத்தில், சொல்ல முடியாத தேஜசுடன் ஒளி வீசிய அந்த வானரம், மரத்தினின்றும் மெதுவாகக் கீழே இறங்கி வந்து அவளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறது.

**

இராமாயணத்தில் எனக்குப் பிடித்த கட்டங்களில் இதுவும் ஒன்று. அனுமன் சீதைக்காக ஸ்ரீராம சரித்திரத்தைச் சொல்வதும், அதைக்கேட்டு சீதை ஆனந்தப்படுவதும். அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் எனக்கும் எழுத ஆசை!

ஸ்ரீராம ஜெயம்.

வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு. 200-வது பதிவும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.forumohalu.org/index.php?topic=1930.0

23 comments:

  1. //இராமாயணத்தில் எனக்குப் பிடித்த கட்டங்களில் இதுவும் ஒன்று. அனுமன் சீதைக்காக ஸ்ரீராம சரித்திரத்தைச் சொல்வதும், அதைக்கேட்டு சீதை ஆனந்தப்படுவதும். அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் எனக்கும் எழுத ஆசை!//

    மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் கவிநயா.

    இருநூறுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  2. சிம்சுபா விருக்ஷம்! கதையைப் படித்திருந்தாலும் இந்த மரத்தின் பெயர் எல்லாம் மனதில் நின்றதில்லை. நீங்கள் எழுதியதில் அது கண்ணுக்கு முன்னே வந்து நிற்கிறது. :-)

    வைகுண்ட ஏகாதசி என்று உங்கள் பதிவைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    இருநூறுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஒரு நூறு தாண்டி
    இரு நூறு என்று
    பெறு நூறைப்
    பெரு நூறாகப் பெற்று...
    அது...
    அன்னை முன் ஊறும், முன்-நூறு
    நான் மறைப் பொருளில், நானூறு
    ஐயன் அருளில், ஐ-நூறு
    துயர் அறு நூறு,
    இன்பம் எழு நூறு,
    எண்ணம் சிறக்க எண்-நூறு
    எண்ணிலாப் பல நூறு பெருகி
    திரு நூறு என்றே தழைக்க வாழ்த்துக்கள்-க்கா!

    ReplyDelete
  4. ஓ, ராமாயணப் பதிவேனு ஓட்டமா ஓடி வந்தேன், 200க்கு 200 முறை வாழ்த்துகள். நல்ல பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. 200க்கு என் அன்பான வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  6. // மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் கவிநயா.

    இருநூறுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.//

    திருமதி ராமலக்ஷ்மி சொல்வதையே தான் நானும் சொல்லவேண்டும்.

    அந்த ராம பக்த அனுமனுக்கு இரு நூறு முடிந்ததற்கு நன்றி சொல்ல
    ஒரு நூற்றி எட்டு வடை மாலை சாற்றுங்கள்.

    இந்த சுப்பு தாத்தவுக்கும் நைவேத்தியம் முடிந்ததும் ஒரு கால் வடை
    ( ஒரு பிள்ளல் ) தாருங்கள்.

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ர நாம தஸ்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  7. //மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் கவிநயா.

    இருநூறுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  8. //சிம்சுபா விருக்ஷம்! கதையைப் படித்திருந்தாலும் இந்த மரத்தின் பெயர் எல்லாம் மனதில் நின்றதில்லை. நீங்கள் எழுதியதில் அது கண்ணுக்கு முன்னே வந்து நிற்கிறது. :-)//

    ரொம்ப சந்தோஷம் குமரா :) எனக்கென்னவோ அந்தப் பெயர் ரொம்பப் பிடிக்கும் :)

    //வைகுண்ட ஏகாதசி என்று உங்கள் பதிவைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.//

    அப்படியா. கண்ணன் பாட்டு 200-க்கு கண்ணன் என்ற கேயாரெஸ் அனுப்பின மடலெல்லாம் படிக்கலையா! சுத்த மோசம் :)

    //இருநூறுக்கு வாழ்த்துகள்!//

    மிக்க நன்றி.


    இருநூறுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. //ஒரு நூறு தாண்டி
    இரு நூறு என்று
    பெறு நூறைப்
    பெரு நூறாகப் பெற்று...
    அது...
    அன்னை முன் ஊறும், முன்-நூறு
    நான் மறைப் பொருளில், நானூறு
    ஐயன் அருளில், ஐ-நூறு
    துயர் அறு நூறு,
    இன்பம் எழு நூறு,
    எண்ணம் சிறக்க எண்-நூறு
    எண்ணிலாப் பல நூறு பெருகி
    திரு நூறு என்றே தழைக்க வாழ்த்துக்கள்-க்கா!//

    ஆஹா, வாழ்த்து சூப்பர்! மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  10. //ஓ, ராமாயணப் பதிவேனு ஓட்டமா ஓடி வந்தேன், 200க்கு 200 முறை வாழ்த்துகள். நல்ல பதிவுக்கு நன்றி.//

    நீங்க வருவீங்கன்னு நினைச்சேன் :) நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  11. //200க்கு என் அன்பான வாழ்த்துகள் :-)//

    மிக்க நன்றி உழவன் :)

    ReplyDelete
  12. //திருமதி ராமலக்ஷ்மி சொல்வதையே தான் நானும் சொல்லவேண்டும்.//

    மிக்க நன்றி சுப்பு தாத்தா.

    //அந்த ராம பக்த அனுமனுக்கு இரு நூறு முடிந்ததற்கு நன்றி சொல்ல
    ஒரு நூற்றி எட்டு வடை மாலை சாற்றுங்கள்.//

    உண்மைதான். 200-க்கு வேறு ஒரு (ஆன்மீக)பதிவுதான் தீர்மானித்து வைத்திருந்தேன். ஆனால் எதிர்பாரா விதமாக அனுமன் வந்து அமர்ந்து கொண்டான், ஏகாதசியும் அதுவுமாக :) சுந்தர காண்டம் படிச்சிக்கிட்டிருக்கேன். முடிந்ததும் வடை மாலை சாற்றலாமான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நீங்க வேற சொல்லிட்டீங்களே. நிச்சயம் சாற்றிடறேன்.

    //இந்த சுப்பு தாத்தவுக்கும் நைவேத்தியம் முடிந்ததும் ஒரு கால் வடை ( ஒரு பிள்ளல் ) தாருங்கள்.//

    கண்டிப்பா!

    ஆசிகளுக்கு நன்றிகள் தாத்தா.

    ReplyDelete
  13. டோனெட் வடையா? சேந்தனுக்கும் ரொம்ப பிடிக்கும். :-)

    ReplyDelete
  14. //டோனெட் வடையா? சேந்தனுக்கும் ரொம்ப பிடிக்கும். :-)//

    :) சேந்தனுக்கும் தந்துட்டா போச்சு :)

    ReplyDelete
  15. வாழ்த்துகள்

    தங்களின் வரிகள் காட்சியைக் கண் முன்னே மாதிரி

    ReplyDelete
  16. டபுள் சென்சுரிக்கு வாழ்த்துகள்!
    ம்ம்ம்ம்ம் ஏன் சிம்சுபா மரத்தை தேர்ந்தெடுத்தார் ன்னு மஹா பெரியவா எங்கேயோ சொன்னதா நினைவு! ஸர்ப் போட்டு கசக்கி பாக்கலாம்!

    ReplyDelete
  17. சுந்தர காண்டம் படிக்கிறீர்களா,கவிநயா?
    ரொம்ப நல்லது. இராமகிருஷ்ண மடத்து சுந்தர காண்ட பதிப்பொன்று உண்டு. இரண்டு பாகங்கள் உள்ளடக்கியது. மடத்து 'அண்ணா' அவர்களின் உரை அற்புதமாய் இருக்கும். அடுத்த தடவை இந்தியா வரும் பொழுது வாங்கி விடுங்கள்.

    மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது யாருக்கும், 'அட! இந்த அனுமன் சொல்லித்தான் இராம சரிதம் சீதைக்குத் தெரிய வேண்டுமா' என்று யாருக்கும் தோன்றும்.

    ஸ்ரீராமரின் தூதர் இவர் என்று முதலில் சீதா பிராட்டியார் நம்ப வேண்டும்.

    இவர் தான் சீதை என்று அனுமனும் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    (அரக்கினப் பெண்கள் வதியும் இடத்தில் இவர் ஒருவரே மானுடத் தோற்றத்தில் இருப்பினும், சீதை போன்ற உருவத்தினளை ராவணனும் மாயத்தால் சமைத்திருக்கலாம் என்பதினால்)
    ஸ்ரீராமர் அளித்த கணையாழி அனுமர் வசம் அடையாளம் சொல்ல இருந்தும், அதை தடாலென்று சீதையிடம் நீட்டி, "நான் தான் அனுமன். ராமபிரானின் தூதன்" என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வில்லை.

    மாறாக இராமர், அவர் வம்ச புகழ்பாடி சீதையிடம் அதற்கான
    சமிக்ஞையை எதிர்பார்க்கிறார், அனுமன். சீதையின் முகத்தில் அதற்கான தோற்றப் பொலிவைப் பார்த்ததும் தான் அனுமனின் அறிமுகம் அவரிடம் நடக்கிறது. சுந்தர காண்டத் தலைவன் அனுமன் தான்.

    "கேட்டார் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.."
    என்னும் தெய்வப்புலவரின் குறளுக்கு சரியான எடுத்துக் காட்டு அனுமன்.

    அதனால் தான் அவர் சொல்லின் செல்வர்.

    ReplyDelete
  18. //வாழ்த்துகள்

    தங்களின் வரிகள் காட்சியைக் கண் முன்னே மாதிரி//

    மிக்க நன்றி திகழ்.

    ReplyDelete
  19. //டபுள் சென்சுரிக்கு வாழ்த்துகள்!
    ம்ம்ம்ம்ம் ஏன் சிம்சுபா மரத்தை தேர்ந்தெடுத்தார் ன்னு மஹா பெரியவா எங்கேயோ சொன்னதா நினைவு! ஸர்ப் போட்டு கசக்கி பாக்கலாம்!//

    வாழ்த்துக்கு நன்றி திவாஜி. பெரியவா சொன்னதைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க!

    ReplyDelete
  20. //இராமகிருஷ்ண மடத்து சுந்தர காண்ட பதிப்பொன்று உண்டு. இரண்டு பாகங்கள் உள்ளடக்கியது. மடத்து 'அண்ணா' அவர்களின் உரை அற்புதமாய் இருக்கும். அடுத்த தடவை இந்தியா வரும் பொழுது வாங்கி விடுங்கள்.//

    கண்டிப்பாக ஜீவி ஐயா. தகவலுக்கு நன்றி.

    //"கேட்டார் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.."
    என்னும் தெய்வப்புலவரின் குறளுக்கு சரியான எடுத்துக் காட்டு அனுமன்.

    அதனால் தான் அவர் சொல்லின் செல்வர்.//

    அனுமன் ஸ்ரீராம சரிதத்தை ஏன் சொல்லுகிறான் என்று அழகாகச் சொன்னீர்கள். இராமாயணத்தில் எனக்கு (நிறைய பேருக்கு அப்படித்தான்னு நினைக்கிறேன்) ரொம்ப பிடித்தவர் அனுமன்தான்.

    வருகைக்கும் அழகான பின்னூட்டிற்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  21. ரொம்ப அழகா இருக்கு அக்கா! சிம்சுபா விருக்ஷம் எனக்கும் பிடிக்கும்! சுந்தரகாண்டம் திரட்டிப்பால் மாதிரி எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத ஒரு பதார்த்தம், அதுவும் கவினயா அக்கா எழுத்துல படிக்கர்த்துக்கு கசக்கவா செய்யும்!! 200-க்கு வாழ்த்துக்கள் அக்கா!

    @ திவா அண்ணா - நானும் ஆர்வமா வெயிடிங்கு!!..:)

    ReplyDelete
  22. //சுந்தரகாண்டம் திரட்டிப்பால் மாதிரி எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத ஒரு பதார்த்தம்//

    உண்மை!

    தக்குடு வாசிச்சதில் எனக்கு பரம சந்தோஷம் :) நன்றி தக்குடு.

    ReplyDelete
  23. போன சனிக்கிழமை (8-ம் தேதி) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றினேன். பதிவு படிச்ச எல்லாருக்கும் வேண்டிக்கிட்டேன். அனைவருக்கும் நன்றிகள் பல.

    ஸ்ரீராமஜெயம்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)