Sunday, February 26, 2012

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மாபெரும் ஆன்மீக எழுத்தாளரான திரு.ரா.கணபதி அவர்கள் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது குறித்து கேள்விப்பட்டது முதல், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதுவும் திவாஜி அவர்கள் 'அண்ணா'வைப் பற்றி சொல்லுவதைப் படிக்கப் படிக்க, மனதின் நெகிழ்வும், கூடவே இந்த எண்ணத்தின் வலுவும் அதிகமாகியது. ஆனால் எழுத வேண்டும் என்ற என் ஆசைக்கும் அவசரத்துக்கும் தகுந்தாற்போல் இந்த வாரம் முழுக்க நேரம் இல்லை :( அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதவும் விருப்பமில்லை.

முன்பு ஒரு முறை, கிட்டத்தட்ட சரியாக ஒரு வருஷம் முன்பாக, திரு ரா.கணபதி அவர்களின் 'காற்றினிலே வரும் கீதம்' படித்த தாக்கத்தில், கண்ணன் பாட்டில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை இந்த சமயத்தில் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்...

**

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கின பிறகு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Sunday, February 19, 2012

வாயில் இருக்கு வழி!


சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.

இந்த மாதிரி பிரயாணம் பண்ணும்போதுதானே குருட்டாம்போக்குல யோசனை ஓடும்? (அப்ப மட்டுந்தானான்னு கேக்குறீங்க… தெரியுது தெரியுது!). அப்ப தோணுச்சு, நம்ம ஊர்லன்னா அங்கங்க நிறுத்தி நிறுத்தி, வழியில் வர்ற ஆளுங்களை வழி கேட்டுக்கிட்டே போயிருவோம், இங்க இப்படி நாமளே கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்தி பாத்துக்கிட்டே வர வேண்டியதா இருக்கே, அப்படின்னு. அது கூட பரவாயில்லை, கொஞ்சம் விட்டுட்டோம்னா, சுத்தி கித்தி, தொலைஞ்சு போயி, மறுபடி சரியான வழியைப் பிடிக்கிறதுக்குள்ள டென்ஷன் ஆகி… போதும் போதும்னு ஆயிடும்.

அந்த குருட்டாம்போக்கு யோசனையின் போதுதான் நம்ம ஊர்ல சொல்ற பழமொழி நினைவு வந்தது – ‘வாயுள்ள புள்ளை பிழைக்கும்’னு சொல்வாங்க இல்ல? அதே போல ‘வாயில இருக்கு வழி’, அப்படின்னும் சொல்வாங்க. அதாவது பேச்சுத் திறமை இருந்தா போதும், பொழச்சுக்கலாம். வாயத் தொறந்து சங்கோஜமில்லாம வழி கேக்க தெரிஞ்சா போதும், ஊர் போய்ச் சேந்துரலாம்.

‘வாயில இருக்கு வழி’ பத்தி நினைக்கும் போதுதான் ‘பளீர்’னு ஒரு பல்பு எரிஞ்சது. ஒரு வேளை இது ஆன்மீக சம்பந்தமாக ஏற்பட்டதோ, அப்படின்னு. பலப்பல மகான்களும், நாம சங்கீர்த்தனம்தான் இறைவனை அடைய கலியுகத்தில் சுலபமான வழின்னு சொல்லியிருக்காங்க. நாம சங்கீர்த்தனம் வாயினாலதானே பண்ணனும்? அதன்படி பார்த்தா, இறைவனை அடையும் வழி வாயில்தானே இருக்கு!

இது எப்படி இருக்கு? :) 


--கவிநயா

நன்றி: வல்லமை 
படத்துக்கு நன்றி: தினமலர்

Sunday, February 12, 2012

சோடி போட்டு பாடுங்க!

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)

லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!



பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே

ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே

பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே

ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே

பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா

ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

Sunday, February 5, 2012

பூஜை அறையா? வேண்டாமே!

ல்யாணம் சிறப்பாக முடிந்து விட்டது. “சாப்பாடு பிரமாதம்”, என்று சொல்லியபடி, ஒவ்வொருவராக விடை பெறவும் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் ஓரமாக இடப்பட்டிருந்த நாற்காலிகளில் மாப்பிள்ளையும் மணப் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். மாப்பிள்ளை சுந்தரின் நண்பர்களும், மணப் பெண் சோனுவின் தோழியரும் சேர்ந்து கொண்டு இருவரையும் கலகலப்பாய்க் கலாய்த்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு கதை அளந்து கொண்டிருக்க, குட்டிப் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அந்த இடமே கல்யாணக் களையுடன் களிப்பாய் இருந்தது.

“சுந்தரா, கண்ணால் ஒரு சேதி… சொல்லடா இந்நாள் நல்ல தேதி”, என்று சோனுவின் தோழி ஒருத்தி பாட, “why this கொல வெறி கொல வெறிடி?” என்று சுந்தரின் தோழன் எதிர்ப்பாட்டு பாட, ஒரே கலாட்டாதான்!

எப்போதும் கலகலப்பாகப் பேசித் தள்ளும் சோனு, இன்றைக்கு மிக அமைதியாக, கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, இதழ்கள் புன்னகையில் பூரிக்க, ஓரக்கண்ணால் சுந்தரையும், ‘கொலை வெறிக்’ கண்ணால் மற்றவர்களையும் (‘எங்களைக் கொஞ்சம் தனியா விட்டால் என்னவாம்?’) பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகளின் சந்தோஷ முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார், தந்தை மகேஸ்வரன். இருக்காதா பின்னே? சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவளை ஒற்றை ஆளாய், தாயும் ஆனவராய் இருந்து வளர்த்த தந்தை ஆயிற்றே!

“அது என்ன, தமிழ் பேரா வைக்காம, ‘சோனு’ன்னு வெச்சிருக்கீங்க?”, பெண் பார்க்க வந்த அன்றைக்கே கேட்டு விட்டான், சுந்தர்.

“ம்… அதுவா மாப்பிள்ளை? நாங்களும் என்னென்னவோ பேரெல்லாம் யோசிச்சுதான் வச்சிருந்தோம். ஆனா பொறந்தோன்னயே எம்பொண்ணு தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிச்சா. ‘சோனு’ அப்படின்னா ‘தங்கம்’னு அர்த்தம்னு தெரியும். அதனால அப்பவே ‘சட்’டுன்னு முடிவு பண்ணி அந்தப் பேரை வெச்சோம்.”

“அப்ப மட்டுமா? இப்பக் கூடத்தான் தங்கம் மாதிரி ஜொலிக்கிறா”, சோனுவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சுந்தர் தனக்குத் தானே முணுமுணுத்தான்.

“என்ன சொன்னீங்க மாப்பிள்ளே?”, எனவும்,

“ஒண்ணுமில்ல மாமா. பொருத்தமாதான் இருக்குன்னு சொன்னேன்”, என்று இலேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சமாளித்தான்.

ஆயிற்று. பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

“மாப்பிள்ளை, இப்படிக் கொஞ்சம் வாங்க”, என்று அவனைத் தனியாக அழைத்தார்.

“சொல்லுங்க மாமா.”

“மாப்பிள்ளை, என் பொண்ணு அடிக்கடி பூஜை அறைக்கு போகாம பாத்துக்கறது உங்க கையிலதான் இருக்கு.”

“என்ன மாமா சொல்றீங்க?” சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை.

“அதொண்ணுமில்ல, மாப்பிள்ளை. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணாச்சா? எல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்குவான்னாலும், என்கிட்டயும் சொல்ல முடியாத மனக் கஷ்டம் ஏற்பட்டா, பூஜை அறைதான் அவளுக்கு அடைக்கலம். விநாயகர்தான் அவளோட அத்யந்த நண்பர். அதனால, நீங்கதான் அவளைக் கண்கலங்காம பாத்துக்கணும்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்”, சொல்லி முடிப்பதற்குள் மகேஸ்வரனுக்கு கண் கலங்கி விட்டது.

“அடடா… என்ன மாமா நீங்க? சோனுவை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். சாமி கும்பிடறதுக்கு தவிர அவ வேற எதுக்கும் பூஜை அறைக்குப் போகாம நான் பாத்துக்கறேன். சரிதானே? நீங்க கண் கலங்காதீங்க… இங்கே பூஜை அறை வேற இல்லை”, என்று சிரித்துக் கொண்டே சொல்லவும், மகேஸ்வரன் முகத்தில் சந்தோஷப் புன்னகை பெரிதாய் விரிந்தது.


--கவிநயா

Sunday, January 29, 2012

பாத யாத்திரை போகப் போறீங்களா?


ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப்பீங்க. அதுல, இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாம போகப் போற (என்னை மாதிரியான) பேர்வழிகளும் கொஞ்சப் பேராவது இருப்பீங்க… ஹி..ஹி.. உங்களுக்காக அங்கங்கே படிச்ச, கேள்விப்பட்ட, அனுபவத்தில் உணர்ந்த சில குறிப்புகளை இங்கே கொடுக்கலாமேன்னு தோணுச்சு.

வைத்தீஸ்வரன் கோவில் போறதுக்கு ஒரு வாரம் விரதம் இருக்கணும் அப்படின்னு சொல்வாங்க. பழனிக்கும் அப்படி ஏதாச்சும் இருக்கும், எனக்கு தெரியல. விரதம்னா சாப்பிடாம இருக்கிற விரதம் இல்லை! நம்மை யாத்திரைக்கு மனதாலும் உடலாலும் தயார்படுத்தறதுக்குதான் விரதம். கிடைக்கறதை சாப்பிடணும். இருக்கிற இடத்தில் படுக்கணும், வெறுங்காலோட நடக்கணும். இதுக்கெல்லாம் நாம் தயாராகணும்.

சைவம் சாப்பிடணும், தரையில் படுத்து தூங்கணும், மிதியடி போடாம எல்லா இடத்துக்கும் போகணும், முடிஞ்ச வரை இறை சிந்தனையோட இருக்கணும். இதனால சுகமாவே வாழ்ந்து பழகின உடம்பும் காலும் கொஞ்சம் உறுதிப்படும்; மனசும் நெடுந்தூரப் பயணத்துக்கு போகப் போறோம்னு தயாராகத் தொடங்கும்.

ஆனா ஒரு வார விரதம் மட்டும் போதுமான்னு கேள்வி வருதில்ல? சபரி மலை போறவங்கள்லாம் 41 நாள் இருக்காங்களே! விரதம் என்பது நம்ம மனசு சம்பந்தப்பட்டது, எவ்வளவு நாள் வேணுன்னாலும் இருக்கலாம். ரொம்ப சுகவாசியா இருக்கவங்களுக்கு உடம்பும் மனசும் பழக, இதை விட அதிக நாள் தேவைன்னு நினைக்கிறேன் :)

என்னை மாதிரி குளிர் தேசத்தில் இருந்தா ஏப்ரலிலும் நல்லா குளிரும். அந்த சமயம் செருப்பு போடாம நடந்து பயிற்சி செய்ய முடியாது. அதுதான் பிரச்சனை :( சரி…போகட்டும்; சொந்த சோகக் கதையை விட்டுட்டு, இப்ப தலைப்புக்கு வருவோம்.

நடக்கறவங்களுக்கு கொப்பளம் வர்றதுதான் பெரிய பிரச்சனை. அது வர்றதுக்கு முன்னாடி, முன்னோடியா, கால்ல முள்ளு அருவுற மாதிரி ஒரு உணர்வு வரும். அந்த சமயத்திலேயே காலை கொஞ்சம் தாஜா பண்ணி, சுத்தம் பண்ணி, vaseline தடவினா வராமல் அப்படியே அமுங்கி விட வாய்ப்பு இருக்குங்கிறாங்க. ஆனா கொஞ்ச நேரம் பாதத்துக்கு ஓய்வும் குடுக்கணுமாம். ம்… நடக்கும்போது அதெல்லாம் நடக்கற காரியமா? நான் இன்னும் முயற்சித்துப் பார்க்கலை. ஆனா இது வரை எனக்கு கொப்பளம் வராம இருந்ததே இல்லை!


யாத்திரைக்கு முன்னால்:

கடுக்காயைப் பொடி பண்ணி, நல்லெண்ணெயோட கலந்து, தினமும் ராத்திரி பாதத்தில் தடவிக்கிட்டா, பாதம் கெட்டிப்படுமாம். Rubbing alchohol அல்லது benzine தடவினாலும் அதே பலன் கிடைக்குமாம். இதுவும் இனிமேதான் செய்து பார்க்கணும்.

பாதம் இயற்கையாவே உறுதிப்படணும்னா, ரொம்ப நாள் முன்னாடியே பயிற்சி ஆரம்பிக்கணும். சூடான மணல்ல நடக்கறதும், சரளைக் கற்கள் மேலே நடக்கறதும் இதுக்கு ரொம்ப உதவியா இருக்குமாம்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயிற்சியை ஆரம்பிக்கிறது நல்லது. நல்லா சாப்பிடணும். நிறைய்ய்ய்ய்ய தண்ணீர் குடிக்கணும். ரொம்ப முக்கியம். நடக்கும்போது உடம்பு ரொம்ப வேகமா தண்ணீரை இழந்துடுமாம். அதே வேகத்தோட தண்ணீர் குடிக்கணும்.

பயிற்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி கை, கால் எல்லாம் நல்லா stretch பண்ணிக்கோங்க. பிறகு நீங்களே குறிப்பிட்ட நேரமோ, தூரமோ நிர்ணயிச்சிக்கிட்டு அந்த தூரத்துக்கு செருப்பு போடாம நடங்க. ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது உங்க பயிற்சியின் வேகத்துக்கு தகுந்த மாதிரியோ தூரத்தையும், நேரத்தையும் அதிகப் படுத்திக்கலாம். நடந்து முடிஞ்ச பிறகும் stretch பண்ணுவது அவசியம்.

முடிஞ்சா முன்னெச்சரிக்கையா ஒரு டெட்டனஸ் ஊசி போட்டுக்கறது நல்லது. ஒரு தரம் போடறது 5 வருஷத்துக்கு போதும்னு சொல்றாங்க… ஆனா அது எனக்கு கொஞ்சம் புரியல. மூணாம் வருஷம் நடந்துட்டு திரும்பி வந்த பிறகு, கொப்பளம் சரி பண்ண சிகிச்சைக்கு போன போது டெட்டனஸ் ஊசி போட்டுக்கிட்டேன். போன வருஷம் அதே காரணத்துக்காக வேற ஒரு டாக்டர்கிட்ட போனேன். போன வருஷம்தான் போட்டதுன்னு சொன்னேன், ஆனா அவங்க அதெல்லாம் பத்தாது, இப்ப ஒண்ணு போட்டே ஆகணும்னு சொல்லிட்டாங்க. அது என்ன கணக்கோ?

யாத்திரை தொடங்கிய பின்:

முதல்ல வேண்டியது, நம்பிக்கை. ‘நம்மால முடியுமா’ன்னு கொஞ்சம் மலைப்பா இருப்பது இயற்கை. ஆனாலும், ‘என்ன ஆனாலும் நிச்சயமா பாத யாத்திரையை நல்லபடியா முடிப்பேன்’, அப்படின்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கோங்க. நம்ம தேடிப் போற தெய்வம் எப்படியாவது நம்மைக் கொண்டு போய் சேர்த்துடும்னு நம்புங்க!

(ரொம்ப தளர்ந்து போற நேரங்களில் நானும் என் தங்கையும், ‘எல்லாரும் போய் சேர்ற அதே நாள்ல சேர முடியாட்டியும், அதுக்கு மேல எத்தனை நாளானாலும் எப்படியாச்சும் நடந்துதான் போய்ச் சேருவோம்’ அப்படின்னு சொல்லிக்குவோம்!)

நல்லா சாப்பிடுங்க. நடக்கும் போது Carbohydrates நிறைய சாப்பிடணும். அதுதான் நடக்கறதுக்கான சக்தியைக் (energy) கொடுக்கும். உடம்பு வெயிட் போடுவது பற்றில்லாம் கவலைப்பட சரியான நேரம் இது இல்லை! நடக்கும் போது கஞ்சி குடுப்பாங்கன்னு சொன்னேனே, அதன் ரகசியம் இதுதான்! கஞ்சி, இளநீர், மோர், இதெல்லாம் ரொம்ப நல்லது.

கண்டிப்பா கையில் வச்சுக்க வேண்டிய விஷயங்கள்: தண்ணீர், பேரீச்சம்பழம் (விரைவா சக்தி கொடுக்கக் கூடியது), குளுகோஸ், (இப்பல்லாம் protein bar னே கிடைக்குதே), கை விளக்கு, விரிச்சு உட்கார பாய் அல்லது துணி, அயோடெக்ஸ் மாதிரியான வலி நிவாரண மருந்து மாத்திரைகள், vaseline, முதல் உதவி சமாசாரங்கள். அதிக சுமை வேண்டாம்.

நடக்க ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி சாப்பிட்டுட்டு, ரெண்டு பாட்டில் (16 அவுன்ஸ்) தண்ணீராவது குடிக்கணுமாம். அதன் பிறகு நடக்கும் போது 15 நிமிஷத்துக்கு ஒரு முறை அரை கப்பாவது குடிக்கணுமாம். காஃபி குடிக்கிறதை தவிர்ப்பது நல்லது. இல்லன்னா அது உடம்பிலிருக்கிற தண்ணி சத்தை குடிச்சிடுமாம்.

குத்தாலந் துண்டுன்னு சொல்லுவோம், கொஞ்சம் மெல்லிசா இருக்கும். அந்த மாதிரி ஒரு துண்டை எடுத்து இடுப்பில் இறுக்கமா கட்டிக்கிட்டா, வெகு தூரம் நடக்கும் போது இடுப்பு வலி வராம இருக்கும்.

நடக்கும் போது அவ்வளவா பயன்படுத்தாத உடலோட மற்ற உறுப்புகளை அவ்வப்போது stretch பண்ணிக்கிறது நல்லதாம்.

பாதத்தைக் கழுவறதோ அல்லது குளிக்கிறதோ, பாதத்தை மென்மையாக்கிடுமாம். அதனால நடந்து முடிஞ்ச பிறகுதான் அதைச் செய்யணும்னு எங்கேயோ படிச்சேன். ஆனா நாங்க யாத்திரை போன போது நடக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தினமும் சாயந்திரம் குளிச்சிட்டுதான் கிளம்பணும்னு சொல்வாங்க. ஆனா அது இராத்திரி நடக்கும்போது தூக்கம் வராம இருக்கறதுக்கு. இதுக்கு என்ன பண்றது?

அவ்வளவு கவனமா இருந்த பிறகும் பாதத்தில் கொப்பளம் வந்துட்டா என்ன செய்யறது? வந்துட்டாலும், கண்டிப்பா காலை நல்லா ஊணிதான் நடக்கணும். அப்பதான் கொப்பளம் அப்படியே மேலே வந்துரும். நொண்டி நடக்க ஆரம்பிச்சீங்கன்னா, அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடும்! எதையாவது மிதிச்சிட்டா, காலைத் தேச்சிராதீங்க. உராய்வு, கொப்பளம் வரதை விரைவுபடுத்திரும். குறிப்பா மாட்டுச் சாணத்தை மிதிச்சா அது நல்ல விஷயம் தான். ஏன்னா அது ஒரு நல்ல கிருமி நாசினி.


யாத்திரை முடிந்த பின்:

அப்பாடான்னு இருக்கும்! நிறைவ்வ்வ்வா இருக்கும்! பிறகென்னங்கறீங்களா. ஆனா கால் வலி, பாத வலி, கொப்பளம், இதையெல்லாம் கவனிச்சுக்கணும். அலட்சியமா இருந்துராதீங்க. உடனடியா மருத்துவர்கிட்ட போய் குறிப்பா கொப்பளத்தை சரி பண்ணிக்கோங்க. சர்க்கரை நோய் இருக்கறவங்க இன்னும் கவனமா இருக்கணும்.

கால் வலி, பாத வலிக்கு தேங்காயெண்ணெயே நல்ல மருந்து. தாராளமா தடவிக்கிட்டு காலை நீட்டி வச்சுக்கிட்டு நல்லா ஓய்வெடுங்க.

கணபதியும், வேலும், மயிலும், சூலமும், மழுவும் துணை வர, நல்லபடியா போயிட்டு வாங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, January 22, 2012

சிறகடித்துப் பறக்கலாம்!


சின்னஞ் சிறிய குருவி போல
சிறகடித்துப் பறக்கலாம்!
வண்ண வண்ணப் பறவை போல
வான்முழுதும் அளக்கலாம்!

கன்னங்கருங் காக்கை போல
கூடியிருந்து மகிழலாம்!
பென்னம் பெரிய மரத்தைப் போல
பிறர்க்கு நிழலைக் கொடுக்கலாம்!

அளிந்த கனியைப் போல இனிய
வார்த்தைகளைப் பேசலாம்!
இயலாமல் இருப்பவர்க்கு இயன்ற
உதவி செய்யலாம்!

அன்பு என்னும் இறையை நமது
மனதில் நிலைக்கச் செய்யலாம்!
அகிலம் எல்லாம் நமது என்ற
உணர்வினிலே திளைக்கலாம்!!

--கவிநயா

நன்றி: அதீதம்
படத்துக்கு நன்றி: கூகுளார்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

பண்டிகைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது பொங்கல்தான். அதுவும் கிராமத்தில் கொண்டாடும் சுகமே சுகம்!

எங்க வீட்டுக் கோலம்

பாட்டி வீடு 'ஜே ஜே'ன்னு இருக்கும். சும்மாவே எனக்கு கோலம் போடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே பொங்கலும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு போல. (சொல்ல மறந்துட்டேனே! மார்கழியும் அதனாலதான் பிடிக்கும் - சின்னப் பிள்ளையா இருக்கும் போதே!)

முதல் நாள் இராத்திரியே முற்றத்தில் பெருசா பெருசா மாக்கோலம் போடுவோம். பிறகு அடுப்பு, பானைகளுக்கெல்லாமும் கோலமிட்டு மஞ்சள் கொத்து கட்டுவோம். மறு நாள் காலையில் குளிச்சு, புதுசு கட்டி, வாசல் நிறைய்ய்ய்ய வண்ணக் கோலம் போடுவோம். பிறகு அடுப்பில் விறகை வச்சு புகையப் புகைய ஊதி ஊதி கண்ணு எரிய எரிய அதை எரிய வச்சு பொங்கல் இட்டாதான் பொங்கல் கொண்டாடின மாதிரியே இருக்கும்! கோவிலுக்கு எல்லாப் பொருளும் எடுத்துகிட்டு போய் அங்கேயும் பொங்கல் வைப்போம். இதுக்கு நடுவில் சமையலும் நடக்கும். இன்னொரு பக்கம் கரும்பு, பனங்கிழங்கு இதெல்லாம் உள்ள போயிக்கிட்டே இருக்கும்!


அவலை நினைச்சுக்கிட்டே உரலை இடிச்ச கதைதான் இங்கே. வீட்டுக்குள்ளேயே குட்டியா கோலம் போட்டு, மின் அடுப்பில் பொங்கல் வச்சு, கிடைக்கிற காயை சமைச்சு வச்சு சாமி கும்பிட்டா பொங்கல் முடிஞ்சது. இந்த வருஷம் ஞாயிற்றுக் கிழமை வந்ததில் இங்கே எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம் :) ஓரளவு உருப்படியா சூரியன் இருக்கும் போதே சாமி கும்பிட்டாச்சு. (நம்மூர்ல விடுமுறை நாள்ல ஒண்ணு குறைஞ்சிருச்சேன்னு வருத்தம் போல!). என்ன செய்யறது, ஒருத்தருக்கு இருட்டுன்னா இன்னொருத்தருக்கு பகல்!

நீங்களும் சாப்பிட வாங்க!

நிலங்கள் அழிஞ்சு நகரங்கள் ஆகாமல், விவசாயமும் விவசாயிகளும் செழிப்பா இருக்கணும். உணவளிக்கும் உழவர்களுக்கும், கதிரவனுக்கும், மாடுகளுக்கும், எல்லாவற்றையும் நடத்தும் இயற்கைக்கும், அதையும் நடத்தும் இறைவனுக்கும், நன்றி... நன்றி... நன்றி!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா