Sunday, August 16, 2009

கடவுளை பார்க்கணுமா?

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார், "யார் வேண்டுமானாலும் இறைவனைப் பார்க்கலாம், பேசலாம்", என்று. அதற்கு என்ன தகுதி வேணுமாம்? அவரே அதையும் சொல்லுவார் கேளுங்கள்...

முதலில் இறைவனை அறியணும் என்கிற ஏக்கம் வேணும்
பிறகு உள்ளத்தால் எல்லாவற்றையும் துறக்க வேணும்

உலக இன்பங்களில் சிறிதளவேனும் பற்று இருக்கும் வரை இறைவனைக் காண முடியாது என்கிறார். நூலில் ஒரு சின்ன பிசிறு இருந்தாலும் அதனை ஊசியில் கோர்க்க முடியாது. அதைப் போலத்தான் ஒரு சின்ன உலகப் பற்று இருந்தாலும் இறைவன் வர மாட்டான்.

தாய் ஒருத்தி அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். குழந்தையை சில விளையாட்டு சாமான்களுடன் விளையாட விட்டு விட்டு, தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையும் சிறிது நேரம் நன்றாக விளையாடுகிறது. பிறகு அம்மாவுக்காக அழ ஆரம்பிக்கிறது. தாய் குழந்தையின் குட்டி அக்காவை அனுப்பி வேடிக்கை காட்ட செய்கிறாள். கொஞ்சம் அமைதி ஆகிறது குழந்தை. திரும்பவும் அம்மா வேண்டுமென அழும் போது, குழந்தையின் அண்ணன் போய் அதனுடன் விளையாடுகிறான். மறுபடியும் கொஞ்சம் அமைதி ஆகிறது. பிறகு மறுபடியும் அழும் போது குழந்தையின் தந்தை பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இப்படி ஒவ்வொருவராக போகவும் அவர்களோடு விளையாடிக் கொண்டு அமைதி அடையும் குழந்தை, கடைசியில், அம்மாதான் வேண்டுமென அழத் தொடங்குகிறது. அந்த சமயத்தில் எந்த பொம்மையைக் கொடுத்தாலும் தூக்கி எறிகிறது. அக்கா, அண்ணா, அப்பா, என யாரிடமும் வராமல், முகம் சிவக்க விடாமல் அழுகிறது. அப்போதுதான் அதன் அம்மா, கை வேலையை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வருகிறாள். குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறாள்.

அதே போலத்தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் விளையாடுவதற்கு ஒவ்வொரு பொம்மையாக அனுப்பி கொண்டே இருக்கிறான். நாமும் பொம்மைகளில் லயித்துப் போய், அவனை மறந்து விட்டு, ஆட்டத்தில் குறியாக இருக்கிறோம். குழந்தை எப்படியாவது விளையாடும் வரை, சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அம்மாவும் வருவதில்லை. நாம் விளையாட்டில் 'பிஸி'யாக இருக்கும் வரை இறைவனும் வருவதில்லை.

அதற்காக, எல்லாவற்றையும் துறந்து, இல்வாழ்க்கையையும் துறந்து துறவியாகச் சொல்லவில்லை, ஸ்ரீராமகிருஷ்ணர். உலக இன்பங்களில் நாட்டத்தை துறக்க வேண்டும் என்றே சொல்கிறார். 'கடமையை மட்டும் செய்; பலன்களில் பற்று வைக்காதே' என்கிற கீதை வாக்கியமும் இதைத்தான் குறிக்கிறது. நமக்கு எத்தனை வேலைகள், கடமைகள் இருந்தாலும், இறைவனை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவனே நம்மை இயக்குபவன் என உணர்ந்து, மறு கையால் நம் கடமைகளை செய்ய வேண்டும்.

அந்தக் கால வீடுகளில் (எங்க ஊர்ப்பக்கம் இப்பவும்) பெரிய பெரிய தூண்கள் இருக்கும். (அவை அழுக்காகக் கூடாதென்று அழகாக சேலை வேறு கட்டி வைத்திருப்பார்கள் :). சின்ன வயதில் அந்த தூணைப் பிடித்துக் கொண்டு அதனைச் சுற்றி சுற்றி வருவது பிடித்தமான விளையாட்டு. அதைப் போலத்தான் இறைவனை பிடித்துக் கொண்டு, அவனை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நம் காரியங்களை செய்ய வேண்டும்.

சுலபமில்லைதான். அதற்கான முயற்சியும் பயிற்சியும் ஏக்கமும் பக்தியும் வர இறைவன் அருளட்டும்! கேளுங்கள்... கொடுக்கப்படும்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.


அன்புடன்
கவிநயா

16 comments:

  1. //ஸ்ரீராமகிருஷ்ணர். உலக இன்பங்களில் நாட்டத்தை துறக்க வேண்டும் என்றே சொல்கிறார். 'கடமையை மட்டும் செய்; பலன்களில் பற்று வைக்காதே' என்கிற கீதை வாக்கியமும் இதைத்தான் குறிக்கிறது. நமக்கு எத்தனை வேலைகள், கடமைகள் இருந்தாலும், இறைவனை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவனே நம்மை இயக்குபவன் என உணர்ந்து, மறு கையால் நம் கடமைகளை செய்ய வேண்டும்//

    அதையும் அவனிடமே விட்டு நீயே சரணாகதி என்று அடைந்து விட்டால் பிரச்னையே இருக்காது அல்லவா?

    ReplyDelete
  2. கவிநயா, மிக்க நன்றியுடன் தாங்கள் தந்த விருதை மேலும் ஆறு பேருக்கு அளித்துள்ளேன். அவற்றின் விவரத்தை அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.

    ReplyDelete
  3. //சுலபமில்லைதான். அதற்கான முயற்சியும் பயிற்சியும் ஏக்கமும் பக்தியும் வர இறைவன் அருளட்டும்! கேளுங்கள்... கொடுக்கப்படும்!//

    முயற்சி, பயிற்சி, ஏக்கம், பக்தி-- இவை எல்லாமும் வர இறைவன் தான் அருள வேண்டும். அருளை வேண்டின், அது கொடுக்கப்படும்.
    அவன் அருளால் அவன் தாள் வணங்கி..

    அழகாக முடித்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  4. //அதையும் அவனிடமே விட்டு நீயே சரணாகதி என்று அடைந்து விட்டால் பிரச்னையே இருக்காது அல்லவா?//

    ஆம். ஆனால் 'நான்' இருக்கும் வரை சரணாகதி சுலபமாக இல்லையே :( அதற்கும் அவனே அருள வேண்டும்.

    வருகைக்கு நன்றி கைலாஷி.

    ReplyDelete
  5. //அவற்றின் விவரத்தை அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.//

    பார்த்து பின்னூட்டி விட்டேன். பதிவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. //அவன் அருளால் அவன் தாள் வணங்கி..//

    சரியாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா.

    //அழகாக முடித்திருக்கிறீர்கள்..//

    மிக்க நன்றி. ஸ்ரீ குருதேவர் சொல்வதைத்தான் கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொன்னேன்.

    ReplyDelete
  7. //முதலில் இறைவனை அறியணும் என்கிற ஏக்கம் வேணும்//

    பதிவிலேயே ரொம்ப பிடித்த வரிகள்-க்கா!
    ஆசை உடையோர்க்கெ எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்! :)

    //நூலில் ஒரு சின்ன பிசிறு இருந்தாலும் அதனை ஊசியில் கோர்க்க முடியாது//

    எச்சிலைத் தொட்டுக் கோர்ப்பாங்க சில பேரு!
    வாயார பகவத் நாமம் என்னும் எச்சிலைத் தொட்டுக் கோர்த்துக்க வேண்டியது தான் நாமளும்! :)

    //அதைப் போலத்தான் ஒரு சின்ன உலகப் பற்று இருந்தாலும் இறைவன் வர மாட்டான்//

    :)
    உலகப் பற்றைத் துறந்தால் தான் இறைவன் வருவான் என்பது ரெம்பவும் கடினம்! :)

    ஆனால் மற்ற எல்லா விளையாட்டுப் பொருளையும் தூணைச் சுத்தி வச்சி விளையாடிக்கிட்டா பிரச்சனை இல்லை! எல்லா விளையாட்டிலும் தூணை மையப்படுத்திப்போம்! :)

    அந்தச் சேலை கட்டிய தூண் ஃபோட்டோ போடலீயாக்கா? :)))

    ReplyDelete
  8. அம்மா கதை அருமை.

    நல்ல பதிவுக்கா ;)

    ReplyDelete
  9. "ஒரு சின்ன பிசிறு இருந்தாலும்"

    என்று சொல்லிவிட்டீர்கள்...

    ஆனால் சிக்கு சிக்காய் இருக்கும் பெரிய நூல்கண்டை அல்லவோ, ஊசியில் கோர்க்க முயற்சிக்கிறோம்...

    பதிவும், உதாரணமும் அருமை கவிநயா...

    ReplyDelete
  10. வருக கண்ணா.

    //ஆசை உடையோர்க்கெ எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்! :)//

    புதசெவி (அப்பாடி! நானும் ரொம்ப நாளா இதை பயன்படுத்தணும்னு பாத்தேன் :)

    //வாயார பகவத் நாமம் என்னும் எச்சிலைத் தொட்டுக் கோர்த்துக்க வேண்டியது தான் நாமளும்! :)//

    அட, இது நல்லாருக்கே!

    //உலகப் பற்றைத் துறந்தால் தான் இறைவன் வருவான் என்பது ரெம்பவும் கடினம்! :)//

    குருதேவர் சொன்னதுதான் அதுவும். (எனக்கென்ன தெரியும்? :)

    //ஆனால் மற்ற எல்லா விளையாட்டுப் பொருளையும் தூணைச் சுத்தி வச்சி விளையாடிக்கிட்டா பிரச்சனை இல்லை! எல்லா விளையாட்டிலும் தூணை மையப்படுத்திப்போம்! :)//

    அது!

    //அந்தச் சேலை கட்டிய தூண் ஃபோட்டோ போடலீயாக்கா? :)))//

    இருந்திருந்தா போட்டிருக்கலாம் :(

    வருகைக்கு மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  11. //அம்மா கதை அருமை.//

    ஆமால்ல? ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னதாச்சே :)

    //நல்ல பதிவுக்கா ;)//

    மிக்க நன்றி கோபி.

    ReplyDelete
  12. //ஆனால் சிக்கு சிக்காய் இருக்கும் பெரிய நூல்கண்டை அல்லவோ, ஊசியில் கோர்க்க முயற்சிக்கிறோம்...//

    அட, சூப்பரா சொன்னீங்க!

    //பதிவும், உதாரணமும் அருமை கவிநயா...//

    (தூணைத் தவிர) எல்லாமே குருதேவரின் அமுத மொழிகளில் அவர் சொன்னதுதான். ஆங்கிலத்தில் படித்ததை எனக்கு புரிந்த அளவில் தமிழில் தந்திருக்கேன். அம்புட்டுதான் :)

    மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா.

    ReplyDelete
  13. // மிக்க நன்றி. ஸ்ரீ குருதேவர் சொல்வதைத்தான் கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொன்னேன்.//
    சில விஷயங்கள் எவ்வளோ சொன்னாலும் போறாதே!

    ஸ்வர்ணரேகாவின் பின்னூட்டம் அருமை! சிக்கலான நூல்...:-)

    ReplyDelete
  14. //சில விஷயங்கள் எவ்வளோ சொன்னாலும் போறாதே!//

    ரொம்ப உண்மை!

    //ஸ்வர்ணரேகாவின் பின்னூட்டம் அருமை! சிக்கலான நூல்...:-)//

    அதே... அதே!

    மிக்க நன்றி திவா.

    ReplyDelete
  15. ரசித்தேன்! நல்ல பதிவு!! :)

    ReplyDelete
  16. //மணிப்பக்கம் said...
    ரசித்தேன்! நல்ல பதிவு!! :)//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)