Sunday, March 25, 2012

பாவை வனம்



கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.

என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.

என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

Sunday, March 18, 2012

அவ்யாஜ கருணா மூர்த்தி

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

“ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் “தர மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது. அவர் சொன்ன மாதிரியே அச்சு அசலாக இருக்காது. நினைவிலிருந்து எழுதுகிறேன். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

“அவ்யாஜ கருணா மூர்த்தி”. லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது. இதற்கு சுகிசிவம் அவர்கள் சொன்ன விளக்கம் தான் இதுவரை சொன்னது.

“வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணமில்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

எத்தனையோ செய்திகளைக் கேட்கிறோம், வாசிக்கிறோம், பார்க்கிறோம். ஆனால் சில செய்திகள் மட்டும் நினைவில் நின்று விடுகின்றன. அதைப் போலத்தான் சுகி.சிவம் அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்ட போதும். எங்கேயோ படித்த, கேட்ட கதைகளையும், செய்திகளையும், எப்படியோ கொண்டு வந்து பொருத்தமாக கோர்த்து விடுகிறார்! குறிப்பாக அன்னையின் இந்த நாமத்தைப் பற்றி விளக்கும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்கின்ற கதையை உதாரணமாகச் சொன்னார் பாருங்கள்… நானும்தான் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன், ஆனால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை! எனக்கு இந்த நாமத்தின் பொருள் அப்போது தெரியாதுதான்; தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் யோசிக்க வராது! ஹ்ம்… அதனால்தான் அவர் ‘சொல்லின் செல்வரா’க இருக்கிறார், நான் இப்படி இருக்கிறேன் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, March 11, 2012

செல்லக் குட்டிப் பாப்பா!



குட்டிக் செல்லப் பாப்பா பார்!
கட்டி வெல்லப் பாப்பா பார்!
கிட்டச் சென்று தொட்டுப் பார்!
பட்டுப் போல இருக்கும் பார்!

கையைக் காலை உதைக்கும் பார்!
காந்தம் போல இழுக்கும் பார்!
பையப் பையப் பேசும் பார்!
பொக்கை வாயில் சிரிக்கும் பார்!

கையில் விரலைக் கொடுத்துப் பார்!
கெட்டி யாகப் பற்றும் பார்!
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பார்!
குதூ கலமாய்ச் சிரிக்கும் பார்!

பசி எடுத்தால் அழுதிடும்!
உறக்கம் வந்தால் உறங்கிடும்!
கவலை ஏதும் இன்றியே
களிப் புடனே வாழ்ந்திடும்!

குழந்தை போல நீ இரு!
குறைகள் இன்றி வாழ்ந்திடு!
வெள்ளை உள்ளம் கொண்டிடு!
அள்ளி அன்பைத் தந்திடு!

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.happybabysite.com/

Sunday, March 4, 2012

நீயே சக்தி!


சுப்பு தாத்தா பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!


சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!

அன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்!
அன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்!
உயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்!
அகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்!
அம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்!
அன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்!

சக்தியும் நீயே! சகலமும் நீயே!
வித்தும் நீயே! விளைவும் நீயே!

அச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்!
துச்சம் நீயென எதிரியை அழிப்பாய்!
நல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை!
தீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை!
சக்தியை உணர்ந்து செயல்படுவாய்!
சகத்தினை நீயே காத்திடுவாய்!

சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!!


--கவிநயா


நன்றி: வல்லமை (மகளிர் வாரச் சிறப்பிதழ்)
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/

Sunday, February 26, 2012

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மாபெரும் ஆன்மீக எழுத்தாளரான திரு.ரா.கணபதி அவர்கள் சிவராத்திரி அன்று இறைவனடி சேர்ந்தது குறித்து கேள்விப்பட்டது முதல், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதுவும் திவாஜி அவர்கள் 'அண்ணா'வைப் பற்றி சொல்லுவதைப் படிக்கப் படிக்க, மனதின் நெகிழ்வும், கூடவே இந்த எண்ணத்தின் வலுவும் அதிகமாகியது. ஆனால் எழுத வேண்டும் என்ற என் ஆசைக்கும் அவசரத்துக்கும் தகுந்தாற்போல் இந்த வாரம் முழுக்க நேரம் இல்லை :( அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதவும் விருப்பமில்லை.

முன்பு ஒரு முறை, கிட்டத்தட்ட சரியாக ஒரு வருஷம் முன்பாக, திரு ரா.கணபதி அவர்களின் 'காற்றினிலே வரும் கீதம்' படித்த தாக்கத்தில், கண்ணன் பாட்டில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை இந்த சமயத்தில் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்...

**

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கின பிறகு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Sunday, February 19, 2012

வாயில் இருக்கு வழி!


சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.

இந்த மாதிரி பிரயாணம் பண்ணும்போதுதானே குருட்டாம்போக்குல யோசனை ஓடும்? (அப்ப மட்டுந்தானான்னு கேக்குறீங்க… தெரியுது தெரியுது!). அப்ப தோணுச்சு, நம்ம ஊர்லன்னா அங்கங்க நிறுத்தி நிறுத்தி, வழியில் வர்ற ஆளுங்களை வழி கேட்டுக்கிட்டே போயிருவோம், இங்க இப்படி நாமளே கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்தி பாத்துக்கிட்டே வர வேண்டியதா இருக்கே, அப்படின்னு. அது கூட பரவாயில்லை, கொஞ்சம் விட்டுட்டோம்னா, சுத்தி கித்தி, தொலைஞ்சு போயி, மறுபடி சரியான வழியைப் பிடிக்கிறதுக்குள்ள டென்ஷன் ஆகி… போதும் போதும்னு ஆயிடும்.

அந்த குருட்டாம்போக்கு யோசனையின் போதுதான் நம்ம ஊர்ல சொல்ற பழமொழி நினைவு வந்தது – ‘வாயுள்ள புள்ளை பிழைக்கும்’னு சொல்வாங்க இல்ல? அதே போல ‘வாயில இருக்கு வழி’, அப்படின்னும் சொல்வாங்க. அதாவது பேச்சுத் திறமை இருந்தா போதும், பொழச்சுக்கலாம். வாயத் தொறந்து சங்கோஜமில்லாம வழி கேக்க தெரிஞ்சா போதும், ஊர் போய்ச் சேந்துரலாம்.

‘வாயில இருக்கு வழி’ பத்தி நினைக்கும் போதுதான் ‘பளீர்’னு ஒரு பல்பு எரிஞ்சது. ஒரு வேளை இது ஆன்மீக சம்பந்தமாக ஏற்பட்டதோ, அப்படின்னு. பலப்பல மகான்களும், நாம சங்கீர்த்தனம்தான் இறைவனை அடைய கலியுகத்தில் சுலபமான வழின்னு சொல்லியிருக்காங்க. நாம சங்கீர்த்தனம் வாயினாலதானே பண்ணனும்? அதன்படி பார்த்தா, இறைவனை அடையும் வழி வாயில்தானே இருக்கு!

இது எப்படி இருக்கு? :) 


--கவிநயா

நன்றி: வல்லமை 
படத்துக்கு நன்றி: தினமலர்

Sunday, February 12, 2012

சோடி போட்டு பாடுங்க!

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)

லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!



பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே

ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே

பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே

ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே

பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா

ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்