Monday, August 6, 2012

பிறந்த நாள் பரிசு

முன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க!). அப்ப, வருஷா வருஷம் பிறந்த நாள், பிறந்த நாள்னு ஒண்ணு வரும். பிறந்த நாள்னா கண்டிப்பா புத்தாடை இருக்கும். காலையில் எழுந்து தலைக்குக் குளிச்சு, புதுசு போட்டுக்கிட்டு சாமி கும்பிடுவோம். பிறகு ஒரு தட்டுல நெறய்ய்ய சாக்லேட் எடுத்துக்கிட்டு பக்கத்து வீடு, அதுக்கும் பக்கத்து வீடு, எதிர் வீடு, அதுக்கும் எதிர் வீடு, இப்படி வீடு வீடா போயி, “எனக்கு பிறந்த நாள். மிட்டாய் எடுத்துக்கோங்க” ன்னு சொல்லுவோம். (அப்பல்லாம் மிட்டாய்னாலும், சாக்லேட்னாலும், எல்லாம் ஒண்ணுதான். இப்பல்லாம் சாக்லேட்னா வேற, மிட்டாய்(candy) ன்னா வேறயாம்!) பெரியவங்களா இருந்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்குவோம். “புது ட்ரஸ்ஸா? அழகா இருக்கே!”ன்னு சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும்! கூடவே, “நல்லாப் படிச்சு முதல் ராங்க் வரணும்”, அப்படின்னுதான் முக்கால்வாசி பேர் ஆசீர்வாதம் பண்ணுவாங்க!

சில சமயம் சாக்லேட்டுக்கு பதில் அம்மாவே ஏதாவது இனிப்பு செய்து தருவாங்க. அதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுப்போம். பிறகு கோவிலுக்குப் போவோம். அப்புறம் அம்மா நமக்குப் பிடிச்சதாப் பார்த்து சாப்பிட செய்து கொடுப்பாங்க. ஏதாவது குட்டியா தப்பு செய்தாக் கூட யாரும் திட்ட மாட்டாங்க. அப்படியே திட்டினாலும், அம்மா, “பிறந்த நாளும் அதுவுமா புள்ளைய ஒண்ணும் சொல்லாதீங்க”, அப்படின்னு தடையுத்தரவு போட்டுருவாங்க! நம்மையும் எதுக்கும் வருத்தப்படவோ, கோபப்படவோ விட மாட்டாங்க. “இன்றைக்கு உனக்கு பிறந்த நாள். சந்தோஷமா இருக்கணும்”, அப்படின்னு நினைவு படுத்துவாங்க. ஆக மொத்தம், அன்றைக்கு பூரா நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்.

பிறந்தா நாள்னாலே தரையில் கால் பாவாத பெருமையா இருக்கும். ஒண்ணுமே பண்ணாமயே, ஆனா என்னவோ பெரீசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு ச்செல்ல கர்வம்! ஹ்ம்… பிறந்து, வந்து, வளர்ந்து, இந்த உலகத்தில் ஒவ்வொரு வருஷமும் வாழறதே, survive பண்ணறதே, சாதனைதான்னு இப்பதானே புரியுது!

அதுக்கப்புறம் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி, ‘0’ வாயிருச்சு. யாராவது ஒரு சிலர் நினைவு வச்சுக்கிட்டு வாழ்த்து சொன்னாலே பெரிய விஷயம், பெரிய சந்தோஷம் என்கிற அளவு! இப்பல்லாம் பிறந்த நாள், அப்படின்னு சொல்லிக்கிறதும் இல்ல. யாராச்சும் மறந்து போயிட்டாங்கன்னா, ‘நீங்க என்னை வாழ்த்தவே இல்லையே’ன்னு கோவிச்சுக்கிறதும் இல்லை! (எவ்ளோ சமர்த்தாயிட்டேன் பாருங்க!) யாராவது சொல்ற வரை எனக்கே மறந்து போன பிறந்த நாட்களும் உண்டு.


இந்த வருஷம் என்னமோ என் பிறந்த நாளை (போன வாரம்) நானே ரொம்பத்தான் கொண்டாடினேன். அதாவது காலைலயே கோவிலுக்குப் போனேன். (அதுவே பெரிய்ய கொண்டாட்டம்தான்!) ஆனா அர்ச்சகர் ரொம்ப பிசியா இருந்தார், அதனால தீபமோ, தீர்த்தமோ ஒண்ணும் கிடைக்கல. சின்னூண்டு ஏமாற்றம்தான். அம்மாகிட்ட போய் ஒரு டீல், ‘உன்னைத் தேடி வந்தேன், ஒண்ணுமே குடுக்கலையே நீ எனக்கு? உனக்கு என் மேல அன்பிருந்தா அதை எப்படியாச்சும் எனக்குக் காட்டு’ அப்படின்னு.

என் பெற்றோர், தங்கைகள், தோழிகள், எல்லோருமே தொலை பேசி வாழ்த்தினாங்க. யாருமே மறக்கலை, இந்த முறை! சாயந்திரம் நடன வகுப்பு இருந்தது. 7, 8 வயசு பிள்ளைங்களோடது. எதற்கோ பேச்சு வந்த போது, ஒரு குட்டிப் பொண்ணு, “என் அம்மாவுக்கு ஆகஸ்ட் 15 பிறந்த நாள்”, அப்படின்னு சொன்னா. உடனே நானும் யோசிக்காம சின்னப் பிள்ளை மாதிரி, “அப்படியா. எனக்குக் கூட இன்னிக்குதான் பிறந்த நாளாக்கும்”னு சொன்னேன்! அப்புறம் கொஞ்ச நேரம் அவங்கவங்க பிறந்த நாள் எப்பன்னு பேசிட்டு, வகுப்பில் ஆழ்ந்துட்டோம்.

வகுப்பு முடிஞ்ச பிறகு எல்லோருடைய வீட்டுப் பாட புத்தகத்தையும் பார்த்தேன். அதில் இரண்டு பிள்ளைங்க, அவங்க புத்தகத்தில் “Happy Birthday!”ன்னு, எழுதி வெச்சிருந்தாங்க! நான் மற்றவங்க புத்தகத்தைப் பார்க்கும் போது இவங்க எழுதி இருக்காங்க! சந்தோஷமா இருந்தது. நான் நன்றி சொன்ன போது, “முதல்லேயே தெரிஞ்சிருந்தா உங்களுக்காக நாங்க ஏதாவது செய்திருப்போம்”, அப்படின்னு சொன்னா, ஒரு பெரிய மனுஷி!

எல்லாம் பார்த்து முடிச்ச பிறகு, பிள்ளைங்க திடீர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, ஏதோ கண் ஜாடை காட்டிக்கிட்டாங்க. ஒரு பொண்ணு, “1…2…3…!” அப்படின்னு சொன்னா. உடனே எல்லோரும் சேர்ந்து “Happy Birthday to you” அப்படின்னு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! “Happy Birthday to you... chaa..chaa..chaa…” அப்படின்னு நடுவில் வாயாலேயே music effect வேற!

அப்பாடி! அந்த நிமிஷத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சந்தோஷத்தையும் நெகிழ்வையும், அனுபவிச்ச அன்பையும் வார்த்தைகளால் சொல்வது கஷ்டம். யாரும் சொல்லிக் கொடுக்காம, தானா மனசில் தோணி, அன்பை இந்த மாதிரி வெளிப்படுத்திய அந்தக் குட்டீஸையும், அந்த நாளையும் மறக்க முடியாது.

இப்பேற்பட்ட அழகான தருணத்தில் மறக்காம என் மனசுக்குள் வந்து சிரிச்சது யார்னு நினைக்கிறீங்க? நான் டீல் போட்டேனே, சாக்ஷாத் அவளேதான்!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Thursday, August 2, 2012

ஸ்ரீ மாதா

டி வெள்ளியும் அதுவுமாக, ஆடிக்குரியவளை, நம்மை ஆட்டி வைக்கிறவளைப் பற்றிப் பேசுவதற்கு ஆசை வந்தது :)

லலிதா சஹஸ்ரநாமத்தில் முதலாவதாக வரும் நாமம்தான், “ஸ்ரீ மாதா”. பிறகுதான் “ஸ்ரீ மஹாரஜ்ஞீ”. அதாவது, முதலில் அம்மா. பிறகுதான் அவள் மஹாராணி!

அம்மாவிடம் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம் இயல்பு மாறாமல், நாம் நாமாகவே இருக்க முடியுமென்றால், அது அன்னையிடம் மட்டும்தான். அவளிடம்தான் நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

ஆனால் மஹாராணி என்றால் அப்படியா? அவளைப் பார்க்க வேண்டுமென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும்? அவளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டும்? அப்படியே மஹாராணியைச் சென்று பார்த்து விட்டாலும், அவளிடம் எவ்வளவு பயம், மரியாதை, ஒரு விஷயத்தைச் சொல்லலாமா கூடாதா என்கிற தயக்கம், இப்படி எத்தனையோ உணர்வுகள் இருக்கும்.

அப்படியெல்லாம் அன்னை பராசக்தியிடம் தயங்கவோ பயப்படவோ தேவையில்லை. அவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம்மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம்.

அதனால்தான் சஹஸ்ரநாமத்தை எழுதிய வாக் தேவதைகள், “ஸ்ரீ மாதா” என்பதை முன்னால் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
 
‘டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான்’ என்ற பழமொழி நினைவிருக்கிறதா? நாட்டிற்கு ராணியானாலும், தன் பிள்ளைகளுக்கு அம்மாதான். குழந்தைகளுக்கு தன் அம்மா மஹாராணியாக இருந்தாலும், வேலைக்காரியாக இருந்தாலும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது? அவர்களைப் பொறுத்த வரை, அவள் செல்லமான, அன்பைப் பொழிகின்ற அம்மா மட்டுமே.

அம்மா என்றால் அன்பு. அன்பு என்றால் அம்மா. அம்மாவிற்கு நம் மீது எப்போதாவது கோபம் வந்தாலும், அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும். நாம் துயரப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் காண முடியாமல், அப்படி ஒரு நிலைமை வருவதைத் தடுக்கவே அவள் கோபம் கொள்ளுவாள். அதையும் மீறி நாம் தவறு செய்து விட்டாலும், நம் நிலையைக் கண்டு, நமக்கு முன்னே அவள்தான் கண்ணீர் விடுவாள். நம்மை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த மனித உலகத்தைச் சேர்ந்த அன்னையருக்கே இத்தகைய உயர்ந்த குணம் இருக்கும் போது, உலகத்தையே ஆக்கிய, அண்ட சராசரத்துக்கெல்லாம் காரணியான அவளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ

மூடனாய் அடியேனும் அறிந்திலேன்

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ

என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.


சுப்பு தாத்தா சாவேரியில் இந்தப் பாடலை அழகுறப் பாடித் தந்திருக்கிறார், அற்புதமான படங்களோடு! நீங்களும் கேட்டு + பாருங்கள்! மிக்க நன்றி தாத்தா!

என்றார் பட்டினத்தார். எத்தனை எத்தனை ஜன்மங்களோ, அத்தனை அத்தனை அன்னையர் நமக்கு. ஆனால் இப்போதும் எப்போதும் எல்லோருக்கும் இருக்கிற ஒரே அன்னை அவள்தான். எத்தனையோ கோடானு கோடி பிள்ளைகள் இருந்தாலும், அவள் அன்பிற்குக் குறைவே இல்லை.

அவள் அன்பை எப்படித் தெரிந்து கொள்வது? எப்படி அனுபவிப்பது? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்வதைப் பாருங்கள் -"There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle."

இந்த உலகத்தின் ஒரு சின்னஞ்சிறு இலையின் அசைவிலும் அவள் இருக்கிறாள்; அவள் அருள் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு நிகழ்விலும் அவளைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, அவள் அன்பில் நனைந்து திளைக்கின்ற பாக்கியம் கிடைக்கிறது.

மழை எல்லோருக்கும் தான் பெய்கிறது. மழை பெய்கிற சமயத்தில் அண்டாவைத் திறந்து வைத்தால்தான் அதில் நீர் நிரம்பும். அதை விட்டு விட்டு, அண்டாவை மூடி வைத்து விட்டு, பிறகு மழை விட்ட பிறகு, “எனக்கு மட்டும் தண்ணீரே கிடைக்கவில்லை” என்று புலம்பினால் யார் குற்றம் அது?

அதே போல்தான், அவள் அருள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. மழையாவாது அவ்வப்போதுதான் பெய்கிறது, ஆனால் அவள் பேரருள் என்கிற மழை, விடாமல் பெய்து கொண்டேதான் இருக்கிறது. மனதைத் திறந்து வைத்தவர்களுக்கு, மனதை அதற்குப் பாத்திரமாக்கியவர்களுக்கு, மனம் முழுக்க அவள் அன்பும் அருளும் நிச்சயம் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

அன்னையின் திருவடிகள் சரணம்.

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

[இன்றைய மகிழ்ச்சி: ஆடி வெள்ளியும் அதுவுமாக அவளைப் பற்றி எழுதக் கிடைத்தது... அதுவும் 300-வது பதிவு (but who is counting? ஹி...ஹி...:)]

Thursday, July 26, 2012

வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா அருமையாக சஹானா ராகத்தில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! கேட்டுக் கொண்டதும் பாடித் தந்தமைக்கு மிக மிக நன்றி தாத்தா!


வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!
தரவேண்டும் தரவேண்டும் வரம் லக்ஷ்மி நீயே!

அஷ்ட லக்ஷ்மியாகி அருள்கின்ற தாயே!
அஷ்ட ஐஸ்வர்யங்களின் அதிபதி நீயே!
கஷ்டங்களைப் போக்கி காத்திடும் தாயே!
இஷ்டங்களைத் தந்து இன்பம் அளிப்பாய் நீயே!!

(வரவேண்டும்)

திருமாலின் திருமார்பில் திகழ்கின்ற தாயே!
தமிழ்மாலை உனக்காக, ஏற்பாயே நீயே!
ஒருமனதாகி உன்னைத் தொழுபவர்க்கே தாயே!
திருவாகி வளம்யாவும் அளிப்பாயே நீயே!!


--கவிநயா


Monday, July 23, 2012

யார் இந்தப் பெண்?


வாழுகிறாள்; ஆனால் வாடுகிறாள்
பாடுகிறாள்; அதிலும் வாடுகிறாள்
நாடுகிறாள்; அவனைத் தேடுகிறாள்
தேடுகிறாள்; மீண்டும் வாடுகிறாள்

இந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.

கனவிலேயே நிலைத்திருக்கும் கண்கள்.
அவன் நினைவிலேயே நிலைத்திருக்கும் நெஞ்சம்.
அவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.
அவன் சுவையிலேயே கனிந்திருக்கும் இதழ்கள்.

இந்தப் பெண்ணின் உலகமே வேறு.

ஆடியிலும் அவன் வதனம்.
பாடி வரும் அவன் வேய்ங்குழல்.
தொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே
எடுத்துச் சூடிக் கொள்ளும் அவன் தோள்கள்.

இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


--கவிநயா

Sunday, July 15, 2012

கோவிலுக்கு ஏன் போகணும்?


வீட்ல பூஜை அறை இருக்கு, சாமி இருக்கு, வீட்டில் உட்கார்ந்து பூஜை செஞ்சு, சாமி கும்பிட்டா பத்தாதா? எதுக்கு கஷ்டப்பட்டு நடந்து, அல்லது பிரயாணம் பண்ணி, கோவிலுக்கு போகணும்? அதுவும் இப்பல்லாம் கோவில்கள்லயும் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு! தள்ளு முள்ளுல போயி, இடிச்சுக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு பதில், அக்கடான்னு வீட்ல விளக்கேத்தி அமைதியா கும்பிட்டுட்டுப் போகலாம்… இந்த மாதிரி அங்கலாய்ப்புகளை நீங்களும் கேட்டிருப்பீங்கதானே…

நானும் அப்படித்தான் நினைப்பேன், முன்னல்லாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னுதானே சொல்றாங்க, அப்படி இருக்கறப்ப, எங்கே வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கும்பிடலாமே. கோவிலுக்குத்தான் போய்த்தான் கும்பிடணுமா என்ன? இப்படில்லாம் நானும் பேசி இருக்கேன். ஆனா, இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னு நிஜமாகவே நம்பி, அவனை எந்நேரமும் மனசில் வச்சு, அதற்குத் தகுந்தாற் போல ஒவ்வொரு நிமிஷமும் வாழறவங்க மட்டும்தான் அப்படிப் பேச முடியும். சுருக்கமா சொன்னா, தூய்மையான துறவிகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கு.

சாதாரண மனுஷங்களுக்கு, நல்ல விஷயங்களைப் பற்றி அப்பப்ப ஒரு நினைவூட்டல் தேவையா இருக்கு. இறைவனைப் பற்றியும்தான்! அவனைப் பற்றி நினைச்சுப் பார்க்க உதவியாத்தான்  கோவில்கள் கட்டினாங்க. கோபுரங்களை உய…..ரமா கட்டறதுக்கும் அதுதான் காரணம். நாம எவ்வளவு தூ….ரத்தில் இருந்தாலும், புகைவண்டியில் போகும் போதோ, பேருந்தில் போகும் போதோ கூட கோபுரத்தைப் பார்த்தா, அந்த ஒரு நொடியாவது அவனை நினைச்சுக்கிறோமில்ல? கன்னத்தில் போட்டுக்கறோமில்ல? கோவில்களோட முக்கிய வேலை நம்முள் இருக்கிற ஆன்மீகத்தை  உணரச் செய்யறதும், வளரச் செய்யறதும்தான்! 

வீடு முழுக்க மின்சாரம் இருக்கத்தான் இருக்கு. ஆனா சுவிட்சைத் தட்டினாதானே விளக்கு எரியும்? ப்ளக் பாயிண்ட்ல சொருகினாதானே எந்த மின்சார பொருளும் வேலை செய்யும்? அதே போலத்தான் கோவில்களும். அதாவது, கோவில்களை ஒரு ‘concentrated energy source’ அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசில் முக்கால்வாசிப் பேர் இதைப் பண்ணி இருப்போம் – ஒரு குவி ஆடிக்குக் கீழ பேப்பரை வச்சு, சூரிய ஒளியை அதில் குவிச்சு, பேப்பரை எரிய வைக்கிறது. சூரிய ஒளி எல்லா இடத்திலும்தான் இருக்கு. அதுக்காக, பேப்பரை எங்கே வச்சாலும் எரிஞ்சிடுமா என்ன? அந்த சக்தியை ஒருமுகமாக்கி பயன்படுத்தும் போதுதான், அதனோட ஆற்றல் அதிகமா இருக்கு. அதே போலத்தான் கோவில்களும், அவற்றில் இருக்கிற தெய்வங்களும். அவை, ஒருமுகப் படுத்தப்பட்ட சக்தி.

‘Vibrations’ என்கிற சொல்லை எல்லோருமே இப்ப சர்வ சாதாரணமா பயன்படுத்தறோம். Vibrations அல்லது அதிர்வலைகள் என்பது இந்த அண்ட வெளியெங்கும் நிறைஞ்சிருக்கு; காற்றோடு கலந்திருக்கு. அவற்றில் நல்லவையும் இருக்கு; கெட்டவையும் இருக்கு. இதெல்லாம் அந்தக் காலத்தில் நம்ம ரிஷிகள் உணர்ந்து சொன்னதுதான். ஆனா இதையெல்லாம்  இப்பத்தான்  புதுசா கண்டு பிடிச்ச மாதிரி rediscover பண்ணிக்கிட்டே இருக்கோம். அதுவும், இதெல்லாம் வெளி ஆளுங்க வாயிலிருந்து  வரும் போதுதான் நம்ம கவனத்தை அதிகமா கவருது. நம் சொந்த இந்திய மண்ணின்  ஆன்மீக பலத்தை நாம புரிஞ்சிக்கலை என்பது மட்டுமில்ல, நாம அதை மதிக்கிறது கூட இல்லை என்பது தான் ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் :(

இப்ப இந்த அதிர்வலைகள் விஷயமும் அப்படித்தான். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும், எல்லாமே அதற்குண்டான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறதா சொல்றாங்க. அதனாலதான், அந்த மூணுமே எப்போதும் நல்லதாவே இருக்கணும்னு நம்ம பெரியவங்க வலியுறுத்தி வச்சிருக்காங்க. கூட்டுப் பிரார்த்தனை, உலக க்ஷேமத்துக்காக யாகங்கள் வளர்ப்பது, இதெல்லாம் நல்ல அதிர்வலைகளைத் தோற்றுவித்து நல்லது செய்யும். அதனாலதான் இதெல்லாம் செய்யறோம்.

தியானம் பண்றது கூட அப்படித்தான். தியானம் பண்றதுக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதே இடத்தில் தினமும் செய்யறது நல்லதுன்னு சொல்வாங்க. அதுக்கும் இதே காரணம்தான். தியானம் செய்யச் செய்ய, நாம ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த இடத்தில் நிறையுமாம். போகப் போக, நாம அதே இடத்தில் தியானம் செய்யச் செய்ய, நாம் சீக்கிரமே தியான நிலைக்குப் போகவும் அதே  அதிர்வலைகள் உதவுமாம். இது ஓஷோ அவர்கள் சொல்வது.

கோவில்களில் பார்த்தீங்கன்னா, எப்பவும் மங்களகரமான மந்திரங்கள், வாத்தியங்கள், பாடல்கள், நல்ல விஷயங்கள், இதெல்லாம் தான் நடந்துகிட்டே இருக்கும். அதனால கோவிலில் உள்ள ‘நல்ல’ அதிர்வலைகள் மிக மிக அதிகம். மனசு குழப்பமா இருந்தாலோ, கஷ்டமா இருந்தாலோ எதுக்கு கோவிலைத் தேடிப் போறோம்? அங்கே போனா நமக்கு ஒரு மன அமைதி கிடைக்குது என்பது நம் உள்ளுணர்வுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கிறதாலதான். அதனாலதான் தினமும் கோவிலுக்குப் போறது நல்லதுன்னும் சொல்லி வெச்சாங்க.

சில பழங்காலக் கோவில்களில் எக்கச்சக்கமா கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். திருப்பதி, பழனி, மாதிரி கோவில்களில் எப்பவுமே, சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதறதுக்கு என்ன காரணம்? காலம் காலமாக அங்கே நடக்கிற பூஜைகளாலும், ஓதுகிற மந்திரங்களாலும், அந்த கோவில்களோட புனிதத் தன்மை மிக அதிகமாக இருக்கு. அதனால, அந்தக் கோவில்களோட ஆகர்ஷண சக்தியும் அதிகமா இருக்கு.

அதனால, இனி சமயம் கிடைக்கிற போதெல்லாம் கோவில்களுக்கு போகலாம். விசேஷ நாட்களில்தான் கூட்டம் அதிகமா இருக்கும், அதனால கூட்டத்தில் போக முடியலைன்னா, நாம  மற்ற நாட்களில் போகலாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கலாம்; இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசலாம்; பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காத செயல்களை மட்டுமே செய்யலாம்…சரிதானே? :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

பி.கு. இதில் வருகிற உதாரணங்களெல்லாம் சொந்தச் சரக்கில்லை, மகான்களும், பல பெரியவங்களும் சொன்னவைகளைப் படிக்கிற போது கிடைச்சதுதான். எங்கே, யார் சொன்னது அப்படிங்கிற விவரங்கள் நிற்காட்டாலும்… சில விஷயங்கள் மட்டும் அப்படியே மனசில் நின்னுடும் இல்லையா? அதனாலதான் பெயர்களைக் குறிப்பிடலை. அனைத்து மகான்களையும் மிகுந்த பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

படத்துக்கு நன்றி: http://www.atmanpress.com/india-unveiled/photos.html
நன்றி: வல்லமை

Sunday, July 8, 2012

கண்மணியே கண்ணுறங்கு!



சுப்பு தாத்தா ஒரு பழைய ஹிந்தி பாடல் மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் :) மிக்க நன்றி தாத்தா! 

சுப்பு தாத்தா, மீண்டும் கேதாரம் ராகத்திலும் பாடியிருக்கிறார். அவருக்கு ரொம்பப் பிடிச்சிட்டது போல :) எனக்கும் இந்த ராகத்தில் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்களும் கேட்டுப் பாருங்க! மீண்டும் நன்றிகள் பல, தாத்தா!

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ

சேர்த்து வைத்த தவமனைத்தும்
சேர்ந்து உன்னைத் தந்ததுவோ
சின்னஞ்சிறு மலரே நீ ஆரிரரோ
சித்திரம் போல் கண்ணுறங்கு ஆரிரரோ!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://organicfamilycircle.com/baby-cradles.html

Sunday, July 1, 2012

அஞ்சலி… அஞ்சலி… கீதாஞ்சலி!

புத்தகங்கள் பற்றி ஒண்ணு சொல்வாங்க. அதாவது, படிக்கிறோமோ இல்லையோ, நல்ல புத்தகத்தைப் பார்த்தா, வாங்கி வச்சுக்கணுமாம். (லேனா தமிழ்வாணன் அவர்கள் சொன்னதுன்னு நினைக்கிறேன்). ஏன்? நாம அதை உடனே படிக்கலைன்னாலும், சில காலம் கழிச்சு படிக்கக்கூடிய ஆர்வமும், உணர்வும் வரலாம். ஆனா அப்படி வர்ற சமயத்தில் அந்தப் புத்தகம் கிடைக்கணுமே? அதுக்குத்தான்.
 
மேலே சொன்னதை சொந்த அனுபவமாக உணர்ந்தேன், தாகூர் அவர்களின் ‘கீதாஞ்சலி’ புத்தகத்தின் மூலம். ரொம்ப நாளா, வருஷமா என்கிட்ட அந்தப் புத்தகம் இருக்கு. எல்லோரும் உயர்வா பேசறாங்களே, அதில் என்னதான் இருக்குன்னு பார்க்கணும்கிற ஆர்வம். இறைவனைத் தேடி, இறைவனுக்காக ஏங்குவதாக அமைந்த அந்த கீதாஞ்சலி கவிதைகளைப் படிச்ச போது எனக்கு ஒண்ணும் புரியலை. அதனால ரொம்ப நாளா ஓய்வெடுத்துக்கிட்டிருந்தது அந்தப் புத்தகம். சமீபத்தில்தான் தண்ணி தெளிச்சு விழிக்க வெச்சிருக்கேன்.


கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சிலரோட எழுத்து மட்டும் நமக்குப் பிடிப்பது ஏன்? ஆங்கிலத்தில், ‘strikes a chord in our heart’ அப்படிம்பாங்க. அந்த சிலரோட எழுத்தில் இருக்கிற ஏதோ ஒண்ணு, ஒரு நிகழ்வு, அல்லது ஒரு கருத்து, அல்லது ஒரு எண்ண ஓட்டம்,  இதில் ஏதாவது ஒண்ணு நம்ம அலைவரிசையோட இயல்பா ஒத்துப் போகும். உடனே நமக்கு அது ரொம்பப் பிடிச்சிரும்.

சமீபத்தில் கீதாஞ்சலி புத்தகத்தை மறுபடி எடுத்துப் புரட்டிப் பார்த்த போது ஏதோ புரியற மாதிரி இருந்தது. குறிப்பா ‘Flower’ என்கிற கவிதையை மனசுக்கு நெருக்கமா உணர்ந்தேன். உடனே அதைத் தமிழில் எழுதிப் பார்க்கணும்கிற விருப்பமும் ஏற்பட்டது. எழுதி, வல்லமையிலும் பிரசுரமானது. ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சினை.

இணையத்தில் இருந்து எடுத்த கவிதையில் ஒரு இடத்தில் ‘It’ என்பதற்கு பதில் ‘I’ என்பதாக இருந்தது. அதானால் என் மொழியாக்கத்திலும், என்னையே ஒரு மலராகப் பாவித்து எழுதியிருந்தேன். வாசித்த ஒருவர் சுட்டிக் காட்டிய பிறகு மறுபடி பார்த்தால் ‘It’ என்பதே சரின்னு தெரிஞ்சது. அதனால இங்கே அதற்குத் தகுந்தாற்போல மாற்றி எழுதி இருக்கேன்…



உனக்கான மலர்

சின்னஞ் சிறு மலர் ஒன்று
இதழ்கள் விரித்துச் சிரிக்கிறது;
தாமதமின்றி உடனே நீ
பறித்துச் சூடிக் கொள்ளாயோ,
அது வாடி மண்ணில் வீழும் முன்னே?

உன் மாலை தன்னில் ஓர் மலராகும்
பேறு அதற்கிலை என்றாலும்
உன் விரல்களால் கொஞ்சம் தொட்டுப் பறித்து,
அந்த வலியைத் தந்தேனும்
அதற்குப் பெருமை சேர்த்திடுவாய்!
நாளிது ஓடி முடிந்திடும் முன்னே…
இம்மலருன்னைச் சேர்ந்திடும் காலம் கடந்திடும் முன்னே…

இந்த மலரின் நிறம் அப்படியொன்றும் ஆழமில்லை
இதன் மணமும் மனதை மயக்குவதாய் இல்லை
இருப்பினும்…
உன் சேவைக்கென இதை எடுத்துக் கொள்!
காலம் இருக்கையிலேயே பறித்துக் கொள்!


--கவிநயா

**

Original in English:

Flower
Rabindranath Tagore

Pluck this little flower and take it, delay not! I fear lest it
droop and drop into the dust.

It may not find a place in thy garland, but honour it with a touch of
pain from thy hand and pluck it. I fear lest the day end before I am
aware, and the time of offering go by.

Though its colour be not deep and its smell be faint, use this flower
in thy service and pluck it while there is time.

**


அன்புடன்
கவிநயா