“நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா”
கண்ணதாசனின் வரிகளின் அழகுக்கும் பொருளுக்கும் கேட்கணுமா? ஒவ்வொரு சராசரி மனிதனின் உணர்வுகளையும் உள்ளத்தின் போராட்டங்களையும் பாடலில் வைத்ததால்தானோ என்னவோ அவருடைய பாடல் வரிகள் அப்படியே மனசுக்குள் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகின்றன.
இன்பம், துன்பம், இரண்டும் இல்லாத மனித வாழ்க்கையே இருக்க முடியாது. ஆனா என்ன, சில பேருக்கு துன்பத்தோட dosage கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், சிலருக்கு கொஞ்சம் குறைவா இருக்கும், அவ்வளவுதான். ஆனாலும் வலி, வலிதானே.
ஒரு முறை மருத்துவமனைக்கு தாங்க முடியாத வலியோட போனேன். நேரா நிக்கக்கூட முடியாத அளவு வலி. அப்போ, “உங்க வலியை எப்படி rate பண்ணுவீங்க, 1-ல் இருந்து 10-க்குள்ள?” அப்படின்னு கேட்டாங்க. (மனுஷனோட நிலைமை தெரியாம நடத்தப்படற மருத்துவமனை formalities பற்றி எழுதப் புகுந்தா அதுவே ஒரு பதிவாயிடும்!) . பல்லக் கடிச்சுக்கிட்டு “10” அப்படின்னு சொன்னேன்!
இந்த மாதிரியான வலி தாங்கற சக்தி மனுஷனுக்கு மனுஷன் வேறுபடும். எனக்கு 10-ஆ இருக்கிறது இன்னொருத்தருக்கு 5-ஆ இருக்கலாம், வேற ஒருத்தருக்கு 7-ஆ இருக்கலாம்; எனக்கு 5-ஆக இருப்பது, இன்னொருத்தருக்கு 7-ஆகவும், வேற ஒருத்தருக்கு 10-ஆகவும் இருக்கலாம்…
அதே போலத்தான் துன்பங்களைத் தாங்கற சக்தியும் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசப்படும்.
அலுவலகத்தில் சுறுசுறுப்பா வேகமா அதே சமயம் நல்லபடியா வேலைகளை முடிக்கிறவங்களுக்குத்தான் மேல மேல வேலை தந்துகிட்டே இருப்பாங்க. அதே போல துன்பப்படறவங்களுக்குத்தான் மேல மேல துன்பம் வருதோன்னு தோணும். ஏன்னா “அவள்தான் அதைத் தாங்கிக்கிட்டாளே… இதையும் தாங்கறளான்னு பார்க்கலாம்”, அப்படின்னே எல்லாம் நடக்கற மாதிரி இருக்கும்!
எப்படிப்பட்ட துன்பமா இருந்தா என்ன, 5-ஆ இருந்தாலும், 10-ஆ இருந்தாலும், துன்பம் துன்பம்தானே. அதைப் போய் யாருக்காச்சும் பிடிக்குமா? அதை மறக்கணும்னுதானே எல்லாரும் விரும்புவாங்க? (அப்பாடி! ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டா, அப்படின்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது :)
மனித வாழ்க்கைக்கு மறதி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ஆனா கஷ்டங்களை யாராலயும் சுலபமா மறக்க முடியறதில்லை. அப்படி மறக்கறதுக்கு என்ன செய்யணும்?
சில சமயம் ஒரு விஷயத்தை மறக்கணும்னு ரொம்ப பிரயத்தனப்பட்டோம்னா, அந்த விஷயம்தான் ரொம்ப நல்லா நினைவில் இருக்கும்! ஒரு விஷயத்தை சுலபமா மறக்கணும்னா அதை ‘உதாசீனப்’படுத்தணும், அதாவது ignore பண்ணனும் – அப்படின்னு
திவாஜி ஒரு முறை சொன்னார்.
அது சரி.. ஆனா அப்படின்னா என்ன? எப்படி அதைச் செய்யறது?
ஆங்கிலத்தில் சில பிரயோகங்கள் அழகா இருக்கும். அதில் ஒண்ணுதான் “entertaining a thought” அப்படிங்கிறது. அதாவது ஒரு பொருளையோ ஒரு விஷயத்தையோ பற்றி நினைக்கும் போது, அதுக்கு கை, கால், கண்ணு, மூக்கு, வாய், எல்லாம் வச்சு இன்னும் பெரிசாக்கி பாக்கறது.
உதாரணத்துக்கு வெளிநாட்டு டூர் ஒண்ணு போகணும்னு உங்களுக்கு ரொம்ப நாளா ஆசைன்னு வச்சுக்குவோம். அதுக்கான திட்டம் எதுவும் போடலை, எப்ப போறீங்க, யாரோட போறீங்க, எவ்வளவு செலவாகும், எத்தனை நாள் விடுப்பு எடுக்கணும், ஒண்ணுமே தெரியாது. ஆனா அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கற்பனை மட்டும் விரிஞ்சுக்கிட்டே போகும். அங்க போகும்போது போடறதுக்கு எந்த மாதிரி உடைகள் வாங்கலாம், என்னென்ன இடங்களை பார்க்கலாம், அங்க போய் என்னென்ன பொருள் வாங்கலாம், இங்க உள்ளவங்களுக்கெல்லாம் பரிசுப் பொருள் என்ன வாங்கலாம், இப்படில்லாம்… இதைத்தான் அந்தக் காலத்துல நாங்க “ட்ரீம் அடிக்கிறது” அப்படின்னு சொல்லுவோம் :)
இதுவே ஒரு துயரம் தரும் நிகழ்ச்சி, நீங்க மறக்கணும்னு நினைக்கிற நிகழ்ச்சி, ஒண்ணு மனசில் வந்தது அப்படின்னு வைங்க… அப்ப என்ன ஆகும்? அதைப் பற்றி மனசில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு flashback ஓடும்… பிறகு அந்த சமயத்தில் நீங்க அனுபவிச்ச உணர்வுகளெல்லாம், வலிகளெல்லாம், மறுபடியும் ஏற்படும். அதை நினைக்க நினைக்க அந்த துன்பத்துக்கு காரணமானவர் மேல பழைய ஆத்திரம் மறுபடியும் வரலாம். உடனே அவரை இப்படித் திட்டணும், அப்படிக் கேள்வி கேட்கணும், இப்படி சண்டை போடணும்னு தோணலாம். அல்லது வருத்தம் மட்டுமே மேலோங்கி, அந்த வருத்தம், உங்களை எழுந்து எதுவுமே செய்ய விடாத மன அழுத்தத்தில் (depression) ஆழ்த்திடலாம்…
இது எதனால ஏற்பட்டது? அந்த துயர நிகழ்ச்சி மனதில் வந்ததுமே, அதை நீங்க ignore பண்ணாம entertain பண்ணியதால் ஏற்பட்டது!
அப்படின்னா அதை ignore பண்றதுக்கு என்ன செய்யணும்?
அந்த மாதிரி நினைவு மனசில் வரும்போது, அதைக் ‘கண்டுக்கக்’ கூடாது. “உன்னை யார் இப்போ இங்கே கூப்பிட்டா?” அப்படின்னு சொல்லி அதைத் தள்ளிடணும். குழந்தைங்க எதுக்காவது காரணமில்லாம அடம் பிடிச்சு அழும்போது, நாம கண்டுக்காம விட்டுட்டோம்னா, கொஞ்ச நேரத்தில் தானா நிறுத்திடுவாங்க. அதே போலத்தான் நம்ம மனசும். அடம் பிடிக்கிற குழந்தை!
அடம் பிடிக்கிற மனசை உதாசீனப்படுத்திட்டு, மத்த விஷயங்களில் அல்லது வேலைகளில் கவனத்தைச் செலுத்தணும். தோட்டத்துக்கு போய் தண்ணீர் ஊற்றலாம். பாதி படிச்சுட்டு வச்சிருக்கிற புத்தகத்தை எடுத்து படிக்கலாம். நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டு பேசலாம். ஷாப்பிங் போகலாம். சாக்லேட் சாப்பிடலாம் :) எதுவுமே இல்லையா, உங்களுக்குப் பிடிச்சதா, சந்தோஷம் தரக் கூடிய நினைவுகளை வலிய நினைச்சுப் பார்க்கலாம். அதைப் பற்றி ட்ரீம் அடிக்கலாம்! அதை விட்டுட்டு, துன்ப நினைவு பற்றியே விவரமாக நீங்களே ஞாபகப்படுத்திக்கிட்டு, அதைச் சுற்றியே எண்ணங்களை அமைச்சுக்கறதால, பிறகு நீங்களே அந்த பழைய உணர்வுச் சூழலிலேயே வசமா சிக்கிடறீங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்… ஆனா முயற்சி திருவினையாக்கும்!
இந்த மாதிரி, வேண்டாத நினைவுகள் வரும்போது ஒவ்வொரு முறையும் அதை conscious-ஆ உதாசீனப் படுத்தப் படுத்த, நாளடைவில் அவை தானா மறந்துடும். அப்படியே கொஞ்சம் நினைவிருந்தாலும், அதனுடைய தாக்கம் ரொம்பக் குறைச்சலாவேதான் இருக்கும்.
ஆக, நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!
எல்லோரும் நல்லா இருக்கணும்!
அன்புடன்
கவிநயா