Thursday, May 22, 2014

பாஞ்சாலியின் சபதம்!

வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு... தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு... 

பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு. துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும் போது கூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும், எப்படி இந்த அதருமத்தை இத்தனை தூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா? 

பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்... அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்.


பாஞ்சாலியின் சபதம்

1.
அண்டம் நடுநடுங்க
அலை கடலும் இடம் மாற
தென்றல் காற்றதுவும்
சீற்றங் கொண்டு தடம் மாற
செய்யும் செயல் யாவும்
கைநழுவிப் புலம் மாற
வையம் முழுவதுமே
காரிருளில் தடுமாற
பெய்யும் மாமழையும்
பொய்த்து விட்டுப் போயிருக்க
உய்யும் வகையின்றி
உயிர்களெல்லாம் பரிதவிக்க
தருமம் தலை குனிய
தவமுனிவர் தவித்து நிற்க
சாத்திரம் சொன்னதெல்லாம்
நீர்த்து விட்ட பேச்சாக…!

2.
தீயில் உதித்து வந்த
தேவதைக்கும் இந்நிலையோ?
உலகை ஆள வந்த
உத்தமிக்கும் இத்துயரோ?
கண்ணிழந்த மன்னனவன்
            மனதாலும் குருடானான்;
பெண்ணின் துயர்த் தீயை
            வளர்த்து விட்ட நெய்யானான்!
சொல்லில் அடங்காத
            வேதனைக்கு வித்திட்டான்;
புல்லுக்கும் கீழான
            புத்திரரைப் பெற்றிட்டான்;
வினையை விதைத்திட்டால்
            அறுத்திடவும் வேண்டுமென
அறியாமல் அறிவிழந்தான்
            அத்தினாபுர அரசன்!

3.
ஐயோ என்றழுத
            அன்னைக்குத் துணையில்லை;
ஐவரை மாலையிட்டாள்
            ஆனாலும் பலனில்லை;
கண்ணீர் விட்டழுதாள்
            காப்பாற்று வாரில்லை;
கதறித் தானழுதாள்
            கற்பரசி திரௌபதையாள்!
விவேக விதுரரவர்
            வேதனையால் தலைகவிழ்ந்தார்;
பிதாமகர் பீஷ்மருமே
            பேசாதிருந் தாரே!
தருமத்தின் வாழ்வுதன்னை
            சூதாட்டம் கவ்வியதே;
அதருமப் பிடியினிலே
            அவையோரும் சிக்கினரே!

4.
துஷ்டன் துரியனுமே
            தம்பிக்கு ஆணையிட
துச்சாதன அரக்கன்
            துகிலுரிய வந்து விட்டான்!
வீரர் ஐவருமே
            வீணாக நின்றிருக்க
வில்லும் கதையம்பும்
            வேலையற்றுப் போயிருக்க
கதறிப் பரிதவித்த
            கண்மணியாள் திரௌபதியும்
கூவி அழைத்திட்டாள்
            கார்மேகக் கண்ணனைத்தான்;
கண்ணா கோவிந்தா
            நீயேயென் கதியென்றாள்;
துவாரகையை விட்டெனக்குத்          
            துணையாய் வா என்றழுதாள்!

5.
கூப்பிய கரமிரண்டும்
            சிரசின் மேல் வீற்றிருக்க
கூறிய சொல்லிலெல்லாம்
            ஹரி நாமம் ஒலித்திருக்க
மூடிய விழியிரண்டில்
            கண்ணீர் பெருகி வர
நாடிக் கலந்து விட்டாள்
            கண்ணனவன் திருவடியில்!
கமலத் திருவடியே
            சரணமெனக் கொண்டு விட்டாள்;
கண்ணன் தனையன்றி
            துணையில்லை என்று விட்டாள்;
செதுக்கிய சிற்பம் போல்
            சேயிழையாள் சமைந்து விட்டாள்;
ஒதுக்கி விட்டாள் அனைவரையும்
            ஒருவனையே பற்றி விட்டாள்!

6.
கண்ணன் வந்து விட்டான்
            வண்ணத் துகிலுருவில்!
பெண்ணிற் கருளிவிட்டான்
            பிரியமுடன் மனமிரங்கி!
துஷ்டத் தம்பியும்
            இழுத்துக் கொண்டிருக்கையிலே
விதவிதமாய் மேலாடை
            முளைத்தபடி இருந்ததுவே!
பட்டாய் பருத்தியாய்
            பகட்டாய்ப் பலநிறமாய்
கண்டவர் மயங்கிடவே
            மலையெனவே குவிந்ததுவே!
இழுத்துக் களைத்து விட்டான்           
            அற்பத் தம்பியுமே;
கரமிரண்டும் சோர்ந்திடவே
            நிலைகுலைந்து விழுந்து விட்டான்!

7.
துரியன் தலை கவிழ்ந்தான்
            பாண்டவரோ தலை நிமிர்ந்தார்!
போன உயிர் வந்தது போல்
            அவையோரும் விழித்தமர்ந்தார்!
பீமன் சூளுரைத்தான்
            துரியன் தொடை பிளப்பதாக!
விஜயன் சூளுரைத்தான்
            கர்ணனைத் தான் மாய்ப்பதாக!
துஷ்டர்தம் செந்நீரைப்           
            பூசிக் குளித்த பின்னே
குழல் முடிப்பேன் அதுவரையில்
            குழல் முடியேன் தானெனவே
பாஞ்சாலத் திருமகளாம்
            பாரதத்தின் நாயகியாம்
திரௌபதையும் சூளுரைத்தாள்
            திக்கெட்டும் எதிரொலிக்க!



--கவிநயா
           
           
 நன்றி: வல்லமை

Monday, April 14, 2014

ஜயம் உண்டாகட்டும்!


அனைவருக்கும் புதிய, இனிய, தமிழ் 'ஜய' வருடவாழ்த்துகள்!

கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



சித்திரம் போலவே வண்ண வண்ணப் பூக்கள் 
   சிங்காரமாகவே பூத்திருக்க…

கத்தரி வெயிலுக்குக் கட்டியம் கூறியே 
   சித்திரை மாசம் வந்ததடி…

வானில் வலம் வந்த மேகக் கூட்டம் எல்லாம் 
   மாயாஜாலம் போலே மறைஞ்சதடி…

அமாவாசை இரவில் பௌர்ணமி நிலவாய் 
   வாழ்வில் ஒளி வீச வந்ததடி…



கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



வாசலிலே பல வண்ணக் கோலமிட்டு 
    விதவிதமாகவே அழகு செய்வோம்!

பலவிதச் சுவையுள்ள வாழ்க்கையைப் போலவே 
    அறுசுவை உணவுகள் செய்திடுவோம்!

வெற்றியை இலக்காய் கொண்டிடுவோம்! நாம் 
    முயற்சிப் படிகளைக் கட்டிடுவோம்!

வாழ்வில் யாவருமே வளர்ந்து இன்பம் பெற 
     இறைவன் அடிகளைப் பணிந்திடுவோம்!



கிழக்கு வெளுத்ததடி! சூரியன் முளைத்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!


--கவிநயா

Monday, March 3, 2014

கடவுள் எங்கே இருக்கிறார்?


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. கடவுள் கடவுள்னு எல்லோரும் சொல்றாங்களே… அவரைப் பத்தின சந்தேகம் தான். உடனே அவர் தன்னோட ஆஸ்தான பண்டிதரைக் கூப்பிட்டார். “எனக்கு உடனே இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சாகணும்”னார்:

கடவுள் இருக்கிறாரா, இருக்கிறார் என்றால் இந்த நிமிடம் எங்கே இருக்கிறார்?
அவர் எந்தத் திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

ஆஸ்தான பண்டிதரோ அவருக்குத் தெரிஞ்ச ஆன்மீக விளக்கங்களைச் சொல்லிப் பார்த்தார், ஆனால் அது எதுவுமே ராஜாவுக்குத் திருப்தியா இல்லை. “ஒரு நாள் எடுத்துக்கோங்க, ஆனா பதிலோடதான் சபைக்கு வரணும்”னு சொல்லிட்டார், ராஜா.

ஆஸ்தான பண்டிதர் சோகத்தோட வீட்டுக்குப் போனார். அங்கே அவரோட குட்டிப் பேத்தி, “ஏன் தாத்தா வருத்தமா இருக்கீங்க?”ன்னு விசாரிச்சா. உடனே இவரும்,”ராஜா இப்படியெல்லாம் கேட்டாரும்மா, அவருக்கு எப்படி விளங்க வைக்கிறதுன்னு தெரியலை”ன்னு சொன்னார். “அச்சோ தாத்தா, இதுக்கா கவலைப் படறீங்க? நான் போய் ராஜாவுக்கு விளக்கம் சொல்லிட்டு வர்றேன், நீங்க கவலையே படாதீங்க”ன்னு ஆறுதல் சொன்னா.

மறு நாள் காலைல ஆஸ்தான பண்டிதர் சபைக்கு வரவே இல்லை. ராஜாவுக்கோ ஒரே கோவம். வரலைன்னா தகவலாவது சொல்லியிருக்கலாமேன்னு சத்தம் போட்டுக்கிட்டிருக்கப்போ, ஒரு சேவகன் வந்து “ஆஸ்தான பண்டிதரோட பேத்தின்னு சொல்லிக்கிட்டு ஒரு குட்டிப் பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு சொல்லுது” அப்படின்னான். ராஜாவும் உள்ளே அனுப்பச் சொன்னார்.

உள்ளெ வந்த பொண்ணு பிரமாதமா ராஜாவை வாழ்த்திட்டு, உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் வந்திருக்கேன்னு சொன்னா. “என்ன, உங்க தாத்தாவுக்கு பதில் தெரியாததால உன்னை அனுப்பி சமாளிக்கிறாரா?”ன்னு கிண்டல் பண்ணாரு ராஜா. “அப்படில்லாம் இல்லை, இந்த மாதிரி சாதாரணக் கேள்விக்குப் பதில் சொல்ல நானே போதும், பண்டிதரெல்லாம் எதுக்கு?” அப்படின்னா குழந்தை.

“உங்க முதல் கேள்வி என்ன?”

ராஜா: “கடவுள் எங்கே இருக்கிறார்? “

குட்டிப் பொண்ணு அங்கேயிருந்த  பால் கிண்ணத்தைத் தொறந்து காட்டி, அதில் இருக்கறது என்னன்னு ராஜாவைக் கேட்டா.

ராஜா: “இது என்ன விளையாட்டு? இது பால்”

“பால் மட்டுந்தானா?”

ராஜா: “தயிரு, மோரு, வெண்ணெய், நெய் எல்லாம் இருக்கு”

“ஆனா, இதுல பால் மட்டும்தானே கண்ணுக்குத் தெரியுது? மற்றதெல்லாம் எங்கே?”

ராஜா, கொஞ்சம் தயங்கி: “எல்லாம் பாலுக்கு உள்ளே இருக்கு”

“அப்படித்தான் கடவுளும் எல்லாவற்றிலும் நிறைந்து கலந்து இருக்கார்”

“….”

“அடுத்த கேள்வி?”

ராஜா: “கடவுள் எந்தத் திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?”

குழந்தை அங்கேயிருந்த குத்து விளக்கின் சுடரைக் காட்டி, “இந்த விளக்கு எந்தத் திசையில் ஒளி வீசுது?” ன்னு கேட்டா.

ராஜா: “இது என்ன கேள்வி, விளக்கு எல்லாத் திசையிலும்தான் ஒளி வீசும்”

“அப்படித்தான் கடவுளும் எல்லாத் திசைகளையும் பார்த்துக்கிட்டிருக்கார்”

“….”

“மூன்றாவது கேள்வி?”

“கடவுள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?”

“எனக்கு ஒரே ஒரு உதவி வேணும்”

ராஜா: “எதுவா இருந்தாலும் செய்யறேன் தாயே”

“இன்னும் ஒரு நாழிகைக்கு நான் இந்த நாட்டை ஆளற ராணி ஆகணும்”

ராஜா, உடனே அவளை சிம்மாசனத்தில் உட்கார வெச்சு தலை வணங்கி நின்னாரு.

குட்டிப் பொண்ணு, “யாரங்கே. இந்தா ராஜாவைப் பிடிச்சி சிறையிலடையுங்கள்”னாளே பார்க்கணும். ராஜாவோட சேர்ந்து எல்லாரும் திகைச்சுப் போயிட்டாங்க.

அப்ப அவ சொன்னா, “கடவுள் இந்த நிமிஷம் இதைத் தான் பண்ணிக்கிட்டிருக்கார்; நம்ம எல்லாரையும் ஆட்டி வெச்சுக்கிட்டிருக்கார்” அப்படின்னு.


சமீபத்தில் தொ.காட்சியில் ஒரு பழைய ஆன்மீகப் படத்திலிருந்து  (திருவருட்செல்வர்னு நினைக்கிறேன்) சில காட்சிகளைப் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த காட்சி இது.

இந்தக் காட்சிக்கான சுட்டி: https://www.youtube.com/watch?v=hJx2T0lNxHc


--கவிநயா

Thursday, February 27, 2014

அண்ணாமலை சிவனே!


அனைவருக்கும் மஹாசிவராத்திரி வாழ்த்துகள்!
ஓம் நம சிவாய; சிவாய நம ஓம்.
சுப்பு தாத்தா வேலைகளுக்கு நடுவிலும், உடனடியாகப் பாடி அனுப்பி விட்டார்! அன்புக்கு மிக்க நன்றி தாத்தா!



அண்ணாமலை சிவனே
எமக் கருள்வாய் குருபரனே
உண்ணா முலையுடனே, இந்த
மண்ணாளும் அரனே!

பொன்னார் மேனிச்
சிவனே அரையில்
புலித்தோல் அணிந்தவனே, எங்கள்
கலிதீர்த் தருள்பவனே!

விண்ணவர் போற்ற
மண்ணவர் துதிக்க
கங்கையை அணிந்தவனே, எங்கள்
அன்னையின் மன்னவனே!

கண்ணா ரமுதே
களிதரும் தேனே
எழில் விழி உமை துணைவா
எங்கள் வழியிலும் துணையாய் வா!

பக்தருக் கருளும்
பரம தயாளா
பிறை மதி சூடியவா, எங்கள்
குறைகளைத் தீர்த்திட வா!

அன்பே சிவமாய்
உருக் கொண்டவனே
அருணாசல தேவா, எங்கள்
கருணாகரனே வா!


--கவிநயா

Monday, January 13, 2014

ஆனந்தப் பொங்கல்!

அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!


மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம்
கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம்
இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம்
இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்!

நல்ல எண்ணங்களால் மனசை உழுது வைக்கணும்
நற்குணத்தை நாத்து நட்டு பயிரு வளர்க்கணும்
ஆசை, குரோதம், தன்னலமாம் களைகள் பிடுங்கணும்
அன்பை வளர்த்து அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கணும்!

மாடு போல சோர்வில்லாம நாம உழைக்கணும்
மற்றவர்க்கு உதவிடவே வாழ்க்கை வாழணும்
உலகமெல்லாம் ஒரேவீடா நாம நினைக்கணும்
உள்ள மக்களெல்லாம் நம்ம சொந்தமாகணும்!

அகத்தினிலே படிந்த இருள் விலகி ஓடட்டும்
அகமெல்லாம் இறையருளால் நிறைந்து ஒளிரட்டும்
இதயத்திலோர் கதிரவனாய் அவன் விளங்கட்டும்
இன்பமெல்லாம் அவன் பதமே என்றுணரட்டும்!

இறையடிகள் பணிந்து விட்டால் ஓடும் துன்பமே
இறையவனை உணர்ந்து விட்டால் என்றும் இன்பமே
இறையவனின் நினைவாலே இதயம் பொங்குமே
இறை நாமம் சொல்லச் சொல்ல இன்பம் தங்குமே!


--கவிநயா

நன்றி: வல்லமை  பொங்கல் சிறப்பிதழ்


Tuesday, January 7, 2014

மறுபடியும் பிள்ளையார்


பிள்ளையார் வேஷம் போட்டு நிறைய படங்களில் பார்த்திருக்கோம். ஆனால் இது வரை நான் பார்த்ததிலேயே best பிள்ளையார், விஜய் தொலைக்காட்சியில், ‘சிவம்’ தொடர்ல வர்ற பிள்ளையார்தான்!

வழக்கமா செய்யற மாதிரி ஒரு யானை முக முகமூடியை மாட்டி விடாம, இந்தப் பிள்ளைக்கு மூக்கில் ஆரம்பிச்சு முகத்தோட முகமா தும்பிக்கை செய்திருக்காங்க. அதனால விநாயகர் முகம் ரொம்ப இயற்கையா, அழகா, அமைஞ்சிருக்கு. அதோட மட்டுமில்லாம, அந்தக் குட்டிப் பிள்ளைக்கு தொந்தியும் பிள்ளையார் போலவே perfect-ஆ இருக்கு! ஒரு காலை மடிச்சு ஒரு காலைத் தொங்க விட்டு உட்காரும்போது சாட்சாத் பிள்ளையாரே பிரத்தியட்சமா வந்துட்டாரோன்னு தோணும்!

பிள்ளையாரை முருகனுக்கு இளையவரா சித்தரிச்சிருக்காங்க. கள்ளமில்லாத வெள்ளை மனசோட, சத்தியவானா, அன்பானவரா, பரோபகாரியா இருக்கிற குட்டிப் பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான். அவர் வரும் காட்சிகள் எனக்குப் பிடித்தமானவை. நெற்றியும் கண்களும் மட்டுமே வெளியில் தெரியற நிலையில், கண்களை மட்டுமே சுருக்கியும், விரிச்சும் பாவங்களை வெளிப்படுத்தறது இந்தப் பிள்ளையோட சிறப்பு. சிவன் மற்றும் நந்தியா வர்றவங்களோட நடிப்பும் ரொம்பவே அருமை.

பிள்ளையாரா வந்து அசத்தற இந்தக் குட்டிப் பிள்ளை யாருன்னு தேடிப் பார்த்தேன், இன்னும் பேரு கண்டு பிடிக்க முடியலை. உங்களுக்குத் தெரியுமா?

***

அதோடு கூட புது வருஷத்துக்கான, எனக்குப் பிடிச்ச, ஆங்கிலக் கவிதை ஒண்ணு:

Once again, wish you all a very Happy, Healthy, and a Wonderful New Year!

“Another fresh new year is here . . .
Another year to live!
To banish worry, doubt, and fear,
To love and laugh and give!


This bright new year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!


I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!”


William Arthur Ward




அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி.