சின்னப் பிள்ளையில் யாரையாச்சும் கிண்டல் பண்றதுன்னா, “உனக்கு என்னதான் தெரியும், நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும்”, அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா உண்மையில், நல்லா, ஒழுங்கா, சாப்பிட தெரிஞ்சவங்க ரொம்ப குறைவுன்னே தோணுது. அதை சரியா செய்தாலே நம்மை எந்த நோயும் அண்டாது!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அப்படின்னு சொல்வாங்க… ஏதாவது ஒரு வியாதி வந்து துன்பப் படும்போதுதான் அதனுடைய உண்மையான பொருள் புரியுது இல்லையா, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பதைப் போல.
நாம ஆரோக்கியமா இல்லைன்னா, நாம மட்டும் கஷ்டப்படறதில்லை. நம்மை சேர்ந்தவங்களும் நமக்காக, நம்மோட சேர்ந்து பலவிதங்களில் சிரமப்படறாங்க. பல முதியோர்கள் பலவிதமா கஷ்டப்படறதையும், உறவினர்களால கூட பார்த்துக்க முடியாத அளவு துன்பப்படறதையும் பல இடங்களில் பார்க்கிறோம். வாழவும் முடியாம, சாகவும் முடியாம… எப்படிப்பட்ட வேதனை!
வயசு ஆக ஆகத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும் போல இருக்கு. பல விஷயங்கள் நம்ம கையில் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் நம்மால முடிஞ்ச வரைக்கும் முடிஞ்ச விஷயங்களை பண்றதுதானே நமக்கு நல்லது?

பாதி வியாதி உணவினால்தான் வருது. உணவில் இருக்கும் கிருமிகளை பத்தி மட்டும் சொல்லலை; உணவின் அளவு, சாப்பிடற நேரம், சாப்பிடற விதம், இப்படி எத்தனையோ காரணங்கள். ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்ததுன்னா, அதை அளவே இல்லாம சாப்பிடறோம். பசிக்குதோ பசிக்கலையோ, எல்லா வேளையும் மூச்சு முட்ட சாப்பிடறவங்களும் இருக்காங்க.
‘உணவே மருந்து’ அப்படிங்கிறார் ஒருத்தர். எப்படி?
• உணவு, நீர், உறக்கம், மூணும் அளவோட இருக்கணும்
• ஒரு முறை சாப்பிட்டது நல்லா ஜீரணமாகி, பசித்த பிறகுதான் அடுத்த முறை சாப்பிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்கிறவற்றையும் அளவோடுதான் சாப்பிடணும்
• சுவையா இருக்கேன்னு மிதமிஞ்சி சாப்பிடவே கூடாது
இதெல்லாம் நான் சொல்லலைங்க! வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்க வள்ளுவப் பெருந்தகைதான் இதையும் சொல்லி இருக்கார், ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில்.
விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)
ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…
மண்ணோடு மண்ணாப் போகப் போகிற உடம்பைப் பற்றி எதுக்காக இவ்வளவு கவலைப் படணும், அப்படின்னு தோணுதில்ல? எனக்கும் அப்படித்தான் தோணும்.. முந்தில்லாம்.
உடல் நலத்தை யாரும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தை கவனிச்சுக்கணும். ஆன்மீகத்தில் இருக்கிறவங்க கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. திருமூலர் சொல்லுவார்:
உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!
இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?
இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? (பேப்பர் பேனா இருந்தா போதும்னு சொல்லாதீங்க :)
இனிமேல் சாப்பிடறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் நினைவில் வச்சுக்குவோம். சரிதானே?
அனைவரும் அளவோடு உண்டு ஆரோக்கியமாய் வாழ, மனமார்ந்த வாழ்த்துகள்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.thirumurugan.in/2007/06/delicious-pictures-of-indian-food.html