Thursday, September 11, 2008

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !

பாரதியின் நினைவு நாளன்று எனக்குப் பிடித்த அவருடைய கவிதை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர் சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்ற காண் இங்குச்
சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்.
கும்பிட்டெந் நேரமும் "சக்தி" யென் றாலுனைக்
கும்பிடு வேன்மனமே.
அம்புக்குந் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி யுனக்கிசைத்தோம்;
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்தளை
யத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய்மன
மேதொழில் வேறில்லைகாண்;
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி வேல்!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி, நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்சக்தி
வேல்சக்தி வேல்சக்தி வேல்!


இந்த பாடலை எம்.எஸ். அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம். சுட்டி தந்த குமரனுக்கு நன்றி.

அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !

19 comments:

  1. //அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !//

    அடியேன் அதை வழிழொழிகிறேன்.

    ReplyDelete
  2. வேகத்துடன் பாடும் இந்தப் பாடல் பல முறை மென்மையாக்கி குழந்தைகளுக்குத் தாலாட்டாகப் பாடியிருக்கிறேன் அக்கா. :-)

    நான்காவது பாடல் மட்டும் மனப்பாடம் ஆகவில்லை. மற்ற நான்கு பாடல்களும் மனப்பாடமாகத் தெரிகிறது. :-)

    எம்.எஸ். அம்மா இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். அது இணையத்தில் கிடைக்கும். தேடிப் பாருங்கள் அக்கா.

    ReplyDelete
  3. வாவ், இன்றைய தினத்தை இனிய தினமாக்கினீர்!
    ஓம் சக்தி, வேல் சக்தியான இந்தப்பாடலைத் தந்து!
    வாணிக்கு விண்ணப்பமாய் தந்த பாடலில்,
    கையொப்பமாய், மெய்யொப்பம் செய்தாரே,
    மேதினி மீதினீல் வீற்றிருக்கும் எம் பாரதி!

    ReplyDelete
  4. "ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !"

    புதிய சக்தி உள்ளத்தில் புகுந்தாற் போலொரு உணர்வு.

    எம்.எஸ் அம்மாவின் குரலில் பாடலைக் கேட்கையில் சிலிர்த்து விட்டது கவிநயா.

    சுட்டியைத் தேடிக் கொடுத்த உங்களுக்கும் கூடவே தேடச் சொன்ன குமரனுக்கும் நன்றிகள் பலப் பல.

    ReplyDelete
  5. வருக கைலாஷி. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. உங்க பிள்ளைங்க குடுத்து வச்சவங்க குமரா :) உங்களுக்கும் அவங்களோட சேத்து சுத்திப் போட்டுக்கோங்க!

    சுட்டிக்கு நன்றி. பதிவில சேர்த்துட்டேன்.

    ReplyDelete
  7. //கையொப்பமாய், மெய்யொப்பம் செய்தாரே//

    அடடா, பின்னூட்டங்கள்லயும் அசத்தறீங்க ஜீவா. சுவேதிகா வந்த நேரம்னு நினைக்கிறேன் :) நன்றி.

    ReplyDelete
  8. //எம்.எஸ் அம்மாவின் குரலில் பாடலைக் கேட்கையில் சிலிர்த்து விட்டது கவிநயா.//

    ஆமால்ல? எனக்கும் அப்படித்தான் ராமலக்ஷ்மி :) மிக்க நன்றி.

    (சுட்டியை நான் தேடறதுக்குள்ள குமரனே குடுத்துட்டார் :)

    ReplyDelete
  9. //நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி//

    இந்த நடுநிலைமை தான் ஞானிகளின் சிறப்பு. பாரதி கவிஞருள் சிங்கம். கவிதைக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  10. பாடலும் கேட்டேன். எம்.எஸ். அமுதுக்கு சுவை சேர்த்துள்ளார்கள்.

    ReplyDelete
  11. kavinaya if you are in chennai, check out http://www.sitagita.com/blogcontest/
    theres a bloggers competition for woman bloggers.

    ReplyDelete
  12. வாங்க ரமேஷ். ரசனைக்கு நன்றி.

    வலைபூ போட்டி பற்றின விவரத்துக்கும் நன்றி. நான் சென்னைல இல்ல; இப்போதைக்கு அமெரிக்கா. சென்னைல இருக்கவங்க கவனத்துக்கு அனுப்பி வைக்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  13. மஹாகவியின் எண்ண வேகத்திற்கு
    தாக்குப் பிடிக்க முடியாமல், வேகமாகப் பாடலை பாடுகையில்
    மூச்சு வாங்குகிறது; சக்தியின் ஆற்றலில் விழிகள் பனிக்கின்றன.
    உள்ளம் சிலிர்க்கிறது.
    ஆத்மஞானம் பெறுகிறோம்.
    மிக்க நன்றி, கவிநயா!

    ReplyDelete
  14. //மஹாகவியின் எண்ண வேகத்திற்கு
    தாக்குப் பிடிக்க முடியாமல், வேகமாகப் பாடலை பாடுகையில்
    மூச்சு வாங்குகிறது; சக்தியின் ஆற்றலில் விழிகள் பனிக்கின்றன.
    உள்ளம் சிலிர்க்கிறது.
    ஆத்மஞானம் பெறுகிறோம்.//

    அடடா, அனுபவத்தை அருமையாய்ச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  15. நல்ல பாடல். மதுரை ராமகிருஷ்ணா மடத்தில் மாலை பஜனையில் இந்த பாடலை நானும் ஸ்ரீ ஞானமயானந்தா அவர்களும் தினமும் பாடுவோம்.

    ரொம்ப நாள் கழித்து அந்த நினைவுகளை அசைபோடவைத்த இடுகை. நன்றி கவிக்கா!!!

    ReplyDelete
  16. //ரொம்ப நாள் கழித்து அந்த நினைவுகளை அசைபோடவைத்த இடுகை.//

    ஆஹா. மிக்க மகிழ்ச்சி :) நன்றி மௌலி.

    ReplyDelete
  17. fyi - ரமேஷ் தெரியப்படுத்திய blog contest பற்றி விசாரித்ததில், அது பெண்களுக்கானதுதான், ஆனால் சென்னைப் பெண்களுக்கு மட்டுமல்ல. பெண் பதிவர்கள் எங்கிருந்தாலும் கலந்து கொள்ளலாமாம். ஆனால் பதிவு ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமாம்.

    ReplyDelete
  18. மிக நல்ல பாடல். இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டது கல்கி இதழோடு வந்த ஒலிப்பேழையில்தான். எம்.எஸ்.எஸ் அவர்கள் குரலில். முறுமுறுவெனக் கேட்கச் செரிவாகவும் விறுவிறுவென்றும் இருக்கும். அந்தப் பாடலை மீண்டும் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  19. நல்வரவு ஜிரா.

    //முறுமுறுவெனக் கேட்கச் செரிவாகவும் விறுவிறுவென்றும் இருக்கும்.//

    நீங்க எழுதறதும் அப்படித்தான் இருக்கும், படிக்க :) இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)