Sunday, October 27, 2013

How to let go?


ஒரு துயரமோ, பிரச்சனையோ வரும்போது அதை இறைவனிடம் விட்டுடு, அவன் பார்த்துப்பான் அப்படின்னு பலரும் ஆறுதல் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. ஆனா அப்படின்னா என்ன? அதை எப்படிச் செய்யறது? அது தெரிஞ்சாதானே செய்ய முடியும்? பல பெரியவங்க சொல்றதையும்படிக்கிறதில், அது எப்படின்னு இப்பதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சிருக்கு.


நமக்கு ஒரு கணக்கு சரியா வரலை; எங்கேயோ உதைக்குது. அல்லது அலுவலக வேலையில் ஒரு விஷயம் எப்படி செய்யறதுன்னு தெரியலை. கேட்கவும் ஆளில்லை; நாமளேதான் கண்டு பிடிச்சாகணும். இந்த மாதிரி சமயத்தில் பொதுவா நாம செய்யறது என்ன? அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும்! ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும்! எப்படி இந்தக் கோணத்திலிருந்து யோசிக்காம விட்டோம்னு தோணும். “யுரேகா” ஞாபகம் இருக்கா!

நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போதும் அதே தவறைத்தான் செய்யறோம். அதை மனசுக்குள் போட்டு, புரட்டி எடுத்து, அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற  அளவு ஏதேதோ கோணங்களில் அதைப்பற்றி நினைக்கிறோம், கவலைப் படறோம். அந்த உணர்வுகள் ஏற்படுத்தற தாக்கத்தோடேயே, கோபத்தோடேயே, வருத்தத்தோடேயே, சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்துக்கறோம். ஆனா அது பிரச்சனையை சரி பண்ணாம, மேலும் எதிர் விளைவுகளைத்தான் தருது. புதை குழி மாதிரி நம்மை இன்னும் இன்னும் உள்ளே இழுத்துக்குது.

கார்லயோ, பைக்லயோ பிரச்சனை வந்தா என்ன செய்யறோம்? நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு  நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா? அப்படில்லாம் செய்தா, நீயே பாத்துக்கய்யான்னு சொல்லிட்டு அவரு கோச்சுக்கிட்டுப் போயிடுவாரு!

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் இந்த உதாரணம் பொருந்தும். நம்ம உடலைக் கவனிக்கிற பொறுப்பை, மருத்துவரை நம்பிதானே கொடுக்கிறோம். நீ சரியா செய்ய மாட்டே, நகருன்னு சொல்லிட்டு நாமளே கத்தியைத் தூக்க முடியுமா?

அதாவது, இந்த உதாரணங்கள் மூலம் சொல்ல வர்றது என்னன்னா, வேலை தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, நாம அதைப் பற்றி நினைக்கிறதில்ல, தலையிடறதில்லை, கவலைப்படறதும் இல்லை. அவர் சரி பண்ணிடுவார்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு காத்திருக்கோம்.

அதே போலத்தான் இறைவனிடமும் நம்பிக்கை வைக்கணும். அவன்கிட்ட ஒரு பிரச்சனையை ஒப்படைச்சாச்சுன்னா, அதைப் பற்றி நினைக்கிறதையும், கவலைப் படறதையும் விட்டுடணும். அப்படிச் செய்யும் போது என்ன ஆகும்? மனசு அமைதி ஆகும். அமைதியான மனசில்தான் இறைவன் குடியிருப்பான். அவனே நமக்கு நல்ல வழியைக் காட்டுவான். அவன் காட்டற வழிப்படி, உணர்ச்சி வசப்படாம, அமைதியோட, நடு நிலைமையோட செய்யற காரியங்கள்தான் நன்மை தரும்.

இதே கருத்தை ரொம்ப எளிமையா சொல்ற ஒரு ஆங்கிலக் கவிதையை முன்ன ஒரு முறை Hallmark card –ஒண்ணுல படிச்சிருக்கேன். ஆனா அப்ப அது சரியா புரியல;  கருத்து மட்டும் நினைவிருந்தது. எப்படி எப்படியோ கூகுளார்கிட்ட கேட்டு ஒரு வழியா முழுக் கவிதையையும் கண்டுபிடிச்சிட்டேன்!

Poem: Let Go and Let God!

As children bring their broken toys with tears for us to mend,
I brought my broken dreams to God because He was my friend.
But then, instead of leaving Him in peace to work alone,
I hung around and tried to help with ways that were my own.
At last, I snatched them back and cried, ”How can you be so slow?”
“My child,” He said, ”What could I do?
You never did let go.” ~Lauretta P. Burns

ரொம்ப அழகா, எளிமையா இந்த ஆங்கிலக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன தெரியுமா? சரணாகதி! அல்லது Total Surrender! ஆமாம்... அதேதான்! உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா? அவ்வளவுதான். கவலையை விடுங்க.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://imagineagirldaydreaming.blogspot.com/2013/09/let-go.html

பி.கு.: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…‘அம்மன் பாட்டு’ வலைப்பூவில் மட்டும் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை பாடல்கள் இட விருப்பம் இருக்கு. பார்க்கலாம்… அவள் விருப்பம் எப்படியோ? அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

Sunday, October 20, 2013

தொலைந்து போக ஆசை!

செல்லும் இடமெல்லாம் சேர்ந்தே கூட வரும்
தப்பிக்க நினைத்தாலும் காட்டிக் கொடுத்து விடும்
ஒருநொடியும் பிரியாமல் உயிர்த்தோழி போலிருக்கும் -
பொல்லாத கைபேசியை சொல்லாமலே விட்டு

விழிக்கின்ற நேரம்முதல் படுக்கின்ற நேரம்வரை
விதவிதமாய் கடமையெல்லாம் வரிசையிலே காத்திருக்கும்
கடிகார நேரமுடன் கைகோர்த்து தான்சுழலும் -
பொல்லாத வேலையெல்லாம் சொல்லாமலே விட்டு

அதைச்செய்தால் இதுவென்கும் இதைச்செய்தால் அதுவென்கும்
சொன்னாலும் சொல்லாமல் போனாலும் தவறென்கும்
இருந்தாலும் இல்லாமல் போனாலும் தவறென்கும் -
பொல்லாத உலகிதனை சொல்லாமலே விட்டு

பசி யென்கும் தாக மென்கும் தூக்க மென்கும்
பிறகு நோயென்கும் நொடியென்கும் வாதை யென்கும்
சொன்னபடி கேளாது தன்னிஷ்டம் போல் நடக்கும் -
பொல்லாத உடலிதனை சொல்லாமலே விட்டு

எங்கேதான் சென்றாலும் கூடவே தானும்வரும்
ஒரு நினைவில் இருக்கையிலே இன்னொன்றை செருகி விடும்
ஒரு கவலை குறைந்த தென்றால் மற்றொன்றை தேடித் தரும் -
பொல்லாத மனமிதனை சொல்லாமலே விட்டு

தொலைந்து போக ஆசை!


--கவிநயா

 படத்துக்கு நன்றி: http://www.behance.net/gallery/A-Quiet-Place/4490979


Friday, October 11, 2013

நவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி


தூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே
மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே
பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே
அருட்கடலாக சித்தி அளிக்கும் துர்க்கையே

ஆசுரி என்னும் நாமம் கொண்ட துர்க்கையே
அன்புடன் எம்மை என்றும் காக்கும் துர்க்கையே


அஷ்ட சித்திகள் யாவும் அருளும் துர்க்கையே
இஷ்டங்கள் யாவும் பூர்த்தி செய்யும் துர்க்கையே
சிவ நடன மென்னும் ஸ்ருங்கார தாண்டவத்திலே
சித்தி ராத்ரியாய் அவ தரித்த துர்க்கையே

சித்தாத்ரி துர்க்கையே சிவ தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

சர்வ சக்தியும் ஒன்றாய் இணைந்த துர்க்கையே
மர்த்தினியாக கன்மம் மாய்க்கும் துர்க்கையே
அபயம் தந்தெமை ஆ தரிக்கும் துர்க்கையே
ஜெயங்கள் யாவுமே தந்து காக்கும் துர்க்கையே

மூல துர்க்கையே மஹா லக்ஷ்மி துர்க்கையே
தேவி துர்க்கையே சரணம் தரணும் துர்க்கையே!


--கவிநயா

(சுபம்) 

வாசித்து வந்த அனைவருக்கும் அன்னையின் அருள் சிறக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

துர்க்காஷ்டகம் கேட்க: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்திற்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

Thursday, October 10, 2013

நவ துர்கா தேவியர் - தீப துர்க்கை, மஹாகௌரி


பந்த பாசங்கள் விரட்டிக் காக்கும் துர்க்கையே

ஞான ஒளிதன்னில் எம்மை நனைக்கும் துர்க்கையே

அஞ்ஞான இருள்தனை விரட்டி ஓட்டும் துர்க்கையே

உள்ளொளியாக நிலைத்து ஒளிரும் துர்க்கையே



தீப துர்க்கையே துயரம் தீர்க்கும் துர்க்கையே

தீபமாகியே நெஞ்சில் ஒளிரும் துர்க்கையே


வாலைக் குமரியாய் வந்து வாழ வைப்பவள்

வலிய அசுரரை அழித்த வலிமை மிக்கவள்

அத்தன் ஆடிய சுத்தத் தாண்டவத்திலே

எட்டு வயதினள் ஆக வந்த பட்டு துர்க்கையே



மஹா கௌரியாய் சஞ்சலம் தீர்க்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/
 

Wednesday, October 9, 2013

நவ துர்கா தேவியர் - லவண துர்க்கை, காலராத்ரி


பக்திக் கடலிலே பக்தரைக் கரைந்திடச் செய்து
பரம அருளுடன் பரத்துடன் இணையச் செய்பவள்
லவண அரக்கனை சத்ருகன் மாய்க்க உதவினாள்
மனதில் தூய்மையை அருளி நமக்கும் உதவுவாள்

லவண துர்க்கையே சுகங்கள் அருளும் துர்க்கையே
பவமது நீக்கி எம்மைக் காக்கும் துர்க்கையே


கரிய நிறத்தவள் இவள் காலம் வென்றவள்
காற்றின் வேகத்தில் வந்து கருணை செய்பவள்
ஈசன் ஆடிய பூதத் தாண்டவத்திலே
ஈ டில்லா அன்புடன் தோற்றம் தந்த தாயிவள்

கால ராத்ரியாய் வந்த கரிய துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 


--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

Tuesday, October 8, 2013

நவ துர்கா தேவியர் - ஜ்வாலா துர்க்கை, காத்யாயினி


பண்ட அசுரனை லலிதை எதிர்க்கும் போதிலே
சக்தி சேனையை இரவில் காக்க வேண்டியே
அக்கினியாலே பெரும் வளையம் அமைத்தவள்
அசுரர்கள் செய்த வஞ்சனை முறியடித்தவள்

ஜ்வாலா துர்க்கையே அருள் ஜோதி துர்க்கையே
அக்கினி ஒளியால் அதர்மம் அழித்த துர்க்கையே


காத் யாயன முனிவரின் விருப்பத்திற் கிணங்கி
கருணையினாலே மகளாய் வந்துதித்தவள்
சங்கரன் செய்த முனி தாண்டவத்திலே
அவன் நெற்றிக் கண்ணிலே தோற்றம் கொண்டவள்

காத் யாயினி யாக அருளும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/