Thursday, July 26, 2012

வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா அருமையாக சஹானா ராகத்தில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! கேட்டுக் கொண்டதும் பாடித் தந்தமைக்கு மிக மிக நன்றி தாத்தா!


வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!
தரவேண்டும் தரவேண்டும் வரம் லக்ஷ்மி நீயே!

அஷ்ட லக்ஷ்மியாகி அருள்கின்ற தாயே!
அஷ்ட ஐஸ்வர்யங்களின் அதிபதி நீயே!
கஷ்டங்களைப் போக்கி காத்திடும் தாயே!
இஷ்டங்களைத் தந்து இன்பம் அளிப்பாய் நீயே!!

(வரவேண்டும்)

திருமாலின் திருமார்பில் திகழ்கின்ற தாயே!
தமிழ்மாலை உனக்காக, ஏற்பாயே நீயே!
ஒருமனதாகி உன்னைத் தொழுபவர்க்கே தாயே!
திருவாகி வளம்யாவும் அளிப்பாயே நீயே!!


--கவிநயா


Monday, July 23, 2012

யார் இந்தப் பெண்?


வாழுகிறாள்; ஆனால் வாடுகிறாள்
பாடுகிறாள்; அதிலும் வாடுகிறாள்
நாடுகிறாள்; அவனைத் தேடுகிறாள்
தேடுகிறாள்; மீண்டும் வாடுகிறாள்

இந்தப் பெண்ணின் சோகம்தான் என்னே.

கனவிலேயே நிலைத்திருக்கும் கண்கள்.
அவன் நினைவிலேயே நிலைத்திருக்கும் நெஞ்சம்.
அவன் மணத்தையே சுவாசிக்கும் நாசி.
அவன் சுவையிலேயே கனிந்திருக்கும் இதழ்கள்.

இந்தப் பெண்ணின் உலகமே வேறு.

ஆடியிலும் அவன் வதனம்.
பாடி வரும் அவன் வேய்ங்குழல்.
தொடுத்து வந்த மாலையை அவள் கரங்களாலேயே
எடுத்துச் சூடிக் கொள்ளும் அவன் தோள்கள்.

இந்தப் பெண்ணின் நல்லூழ்தான் என்னே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


--கவிநயா

Sunday, July 15, 2012

கோவிலுக்கு ஏன் போகணும்?


வீட்ல பூஜை அறை இருக்கு, சாமி இருக்கு, வீட்டில் உட்கார்ந்து பூஜை செஞ்சு, சாமி கும்பிட்டா பத்தாதா? எதுக்கு கஷ்டப்பட்டு நடந்து, அல்லது பிரயாணம் பண்ணி, கோவிலுக்கு போகணும்? அதுவும் இப்பல்லாம் கோவில்கள்லயும் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு! தள்ளு முள்ளுல போயி, இடிச்சுக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு பதில், அக்கடான்னு வீட்ல விளக்கேத்தி அமைதியா கும்பிட்டுட்டுப் போகலாம்… இந்த மாதிரி அங்கலாய்ப்புகளை நீங்களும் கேட்டிருப்பீங்கதானே…

நானும் அப்படித்தான் நினைப்பேன், முன்னல்லாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னுதானே சொல்றாங்க, அப்படி இருக்கறப்ப, எங்கே வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கும்பிடலாமே. கோவிலுக்குத்தான் போய்த்தான் கும்பிடணுமா என்ன? இப்படில்லாம் நானும் பேசி இருக்கேன். ஆனா, இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னு நிஜமாகவே நம்பி, அவனை எந்நேரமும் மனசில் வச்சு, அதற்குத் தகுந்தாற் போல ஒவ்வொரு நிமிஷமும் வாழறவங்க மட்டும்தான் அப்படிப் பேச முடியும். சுருக்கமா சொன்னா, தூய்மையான துறவிகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கு.

சாதாரண மனுஷங்களுக்கு, நல்ல விஷயங்களைப் பற்றி அப்பப்ப ஒரு நினைவூட்டல் தேவையா இருக்கு. இறைவனைப் பற்றியும்தான்! அவனைப் பற்றி நினைச்சுப் பார்க்க உதவியாத்தான்  கோவில்கள் கட்டினாங்க. கோபுரங்களை உய…..ரமா கட்டறதுக்கும் அதுதான் காரணம். நாம எவ்வளவு தூ….ரத்தில் இருந்தாலும், புகைவண்டியில் போகும் போதோ, பேருந்தில் போகும் போதோ கூட கோபுரத்தைப் பார்த்தா, அந்த ஒரு நொடியாவது அவனை நினைச்சுக்கிறோமில்ல? கன்னத்தில் போட்டுக்கறோமில்ல? கோவில்களோட முக்கிய வேலை நம்முள் இருக்கிற ஆன்மீகத்தை  உணரச் செய்யறதும், வளரச் செய்யறதும்தான்! 

வீடு முழுக்க மின்சாரம் இருக்கத்தான் இருக்கு. ஆனா சுவிட்சைத் தட்டினாதானே விளக்கு எரியும்? ப்ளக் பாயிண்ட்ல சொருகினாதானே எந்த மின்சார பொருளும் வேலை செய்யும்? அதே போலத்தான் கோவில்களும். அதாவது, கோவில்களை ஒரு ‘concentrated energy source’ அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசில் முக்கால்வாசிப் பேர் இதைப் பண்ணி இருப்போம் – ஒரு குவி ஆடிக்குக் கீழ பேப்பரை வச்சு, சூரிய ஒளியை அதில் குவிச்சு, பேப்பரை எரிய வைக்கிறது. சூரிய ஒளி எல்லா இடத்திலும்தான் இருக்கு. அதுக்காக, பேப்பரை எங்கே வச்சாலும் எரிஞ்சிடுமா என்ன? அந்த சக்தியை ஒருமுகமாக்கி பயன்படுத்தும் போதுதான், அதனோட ஆற்றல் அதிகமா இருக்கு. அதே போலத்தான் கோவில்களும், அவற்றில் இருக்கிற தெய்வங்களும். அவை, ஒருமுகப் படுத்தப்பட்ட சக்தி.

‘Vibrations’ என்கிற சொல்லை எல்லோருமே இப்ப சர்வ சாதாரணமா பயன்படுத்தறோம். Vibrations அல்லது அதிர்வலைகள் என்பது இந்த அண்ட வெளியெங்கும் நிறைஞ்சிருக்கு; காற்றோடு கலந்திருக்கு. அவற்றில் நல்லவையும் இருக்கு; கெட்டவையும் இருக்கு. இதெல்லாம் அந்தக் காலத்தில் நம்ம ரிஷிகள் உணர்ந்து சொன்னதுதான். ஆனா இதையெல்லாம்  இப்பத்தான்  புதுசா கண்டு பிடிச்ச மாதிரி rediscover பண்ணிக்கிட்டே இருக்கோம். அதுவும், இதெல்லாம் வெளி ஆளுங்க வாயிலிருந்து  வரும் போதுதான் நம்ம கவனத்தை அதிகமா கவருது. நம் சொந்த இந்திய மண்ணின்  ஆன்மீக பலத்தை நாம புரிஞ்சிக்கலை என்பது மட்டுமில்ல, நாம அதை மதிக்கிறது கூட இல்லை என்பது தான் ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் :(

இப்ப இந்த அதிர்வலைகள் விஷயமும் அப்படித்தான். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும், எல்லாமே அதற்குண்டான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறதா சொல்றாங்க. அதனாலதான், அந்த மூணுமே எப்போதும் நல்லதாவே இருக்கணும்னு நம்ம பெரியவங்க வலியுறுத்தி வச்சிருக்காங்க. கூட்டுப் பிரார்த்தனை, உலக க்ஷேமத்துக்காக யாகங்கள் வளர்ப்பது, இதெல்லாம் நல்ல அதிர்வலைகளைத் தோற்றுவித்து நல்லது செய்யும். அதனாலதான் இதெல்லாம் செய்யறோம்.

தியானம் பண்றது கூட அப்படித்தான். தியானம் பண்றதுக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதே இடத்தில் தினமும் செய்யறது நல்லதுன்னு சொல்வாங்க. அதுக்கும் இதே காரணம்தான். தியானம் செய்யச் செய்ய, நாம ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த இடத்தில் நிறையுமாம். போகப் போக, நாம அதே இடத்தில் தியானம் செய்யச் செய்ய, நாம் சீக்கிரமே தியான நிலைக்குப் போகவும் அதே  அதிர்வலைகள் உதவுமாம். இது ஓஷோ அவர்கள் சொல்வது.

கோவில்களில் பார்த்தீங்கன்னா, எப்பவும் மங்களகரமான மந்திரங்கள், வாத்தியங்கள், பாடல்கள், நல்ல விஷயங்கள், இதெல்லாம் தான் நடந்துகிட்டே இருக்கும். அதனால கோவிலில் உள்ள ‘நல்ல’ அதிர்வலைகள் மிக மிக அதிகம். மனசு குழப்பமா இருந்தாலோ, கஷ்டமா இருந்தாலோ எதுக்கு கோவிலைத் தேடிப் போறோம்? அங்கே போனா நமக்கு ஒரு மன அமைதி கிடைக்குது என்பது நம் உள்ளுணர்வுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கிறதாலதான். அதனாலதான் தினமும் கோவிலுக்குப் போறது நல்லதுன்னும் சொல்லி வெச்சாங்க.

சில பழங்காலக் கோவில்களில் எக்கச்சக்கமா கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். திருப்பதி, பழனி, மாதிரி கோவில்களில் எப்பவுமே, சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதறதுக்கு என்ன காரணம்? காலம் காலமாக அங்கே நடக்கிற பூஜைகளாலும், ஓதுகிற மந்திரங்களாலும், அந்த கோவில்களோட புனிதத் தன்மை மிக அதிகமாக இருக்கு. அதனால, அந்தக் கோவில்களோட ஆகர்ஷண சக்தியும் அதிகமா இருக்கு.

அதனால, இனி சமயம் கிடைக்கிற போதெல்லாம் கோவில்களுக்கு போகலாம். விசேஷ நாட்களில்தான் கூட்டம் அதிகமா இருக்கும், அதனால கூட்டத்தில் போக முடியலைன்னா, நாம  மற்ற நாட்களில் போகலாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கலாம்; இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசலாம்; பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காத செயல்களை மட்டுமே செய்யலாம்…சரிதானே? :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

பி.கு. இதில் வருகிற உதாரணங்களெல்லாம் சொந்தச் சரக்கில்லை, மகான்களும், பல பெரியவங்களும் சொன்னவைகளைப் படிக்கிற போது கிடைச்சதுதான். எங்கே, யார் சொன்னது அப்படிங்கிற விவரங்கள் நிற்காட்டாலும்… சில விஷயங்கள் மட்டும் அப்படியே மனசில் நின்னுடும் இல்லையா? அதனாலதான் பெயர்களைக் குறிப்பிடலை. அனைத்து மகான்களையும் மிகுந்த பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

படத்துக்கு நன்றி: http://www.atmanpress.com/india-unveiled/photos.html
நன்றி: வல்லமை

Sunday, July 8, 2012

கண்மணியே கண்ணுறங்கு!



சுப்பு தாத்தா ஒரு பழைய ஹிந்தி பாடல் மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் :) மிக்க நன்றி தாத்தா! 

சுப்பு தாத்தா, மீண்டும் கேதாரம் ராகத்திலும் பாடியிருக்கிறார். அவருக்கு ரொம்பப் பிடிச்சிட்டது போல :) எனக்கும் இந்த ராகத்தில் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்களும் கேட்டுப் பாருங்க! மீண்டும் நன்றிகள் பல, தாத்தா!

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ

சேர்த்து வைத்த தவமனைத்தும்
சேர்ந்து உன்னைத் தந்ததுவோ
சின்னஞ்சிறு மலரே நீ ஆரிரரோ
சித்திரம் போல் கண்ணுறங்கு ஆரிரரோ!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://organicfamilycircle.com/baby-cradles.html

Sunday, July 1, 2012

அஞ்சலி… அஞ்சலி… கீதாஞ்சலி!

புத்தகங்கள் பற்றி ஒண்ணு சொல்வாங்க. அதாவது, படிக்கிறோமோ இல்லையோ, நல்ல புத்தகத்தைப் பார்த்தா, வாங்கி வச்சுக்கணுமாம். (லேனா தமிழ்வாணன் அவர்கள் சொன்னதுன்னு நினைக்கிறேன்). ஏன்? நாம அதை உடனே படிக்கலைன்னாலும், சில காலம் கழிச்சு படிக்கக்கூடிய ஆர்வமும், உணர்வும் வரலாம். ஆனா அப்படி வர்ற சமயத்தில் அந்தப் புத்தகம் கிடைக்கணுமே? அதுக்குத்தான்.
 
மேலே சொன்னதை சொந்த அனுபவமாக உணர்ந்தேன், தாகூர் அவர்களின் ‘கீதாஞ்சலி’ புத்தகத்தின் மூலம். ரொம்ப நாளா, வருஷமா என்கிட்ட அந்தப் புத்தகம் இருக்கு. எல்லோரும் உயர்வா பேசறாங்களே, அதில் என்னதான் இருக்குன்னு பார்க்கணும்கிற ஆர்வம். இறைவனைத் தேடி, இறைவனுக்காக ஏங்குவதாக அமைந்த அந்த கீதாஞ்சலி கவிதைகளைப் படிச்ச போது எனக்கு ஒண்ணும் புரியலை. அதனால ரொம்ப நாளா ஓய்வெடுத்துக்கிட்டிருந்தது அந்தப் புத்தகம். சமீபத்தில்தான் தண்ணி தெளிச்சு விழிக்க வெச்சிருக்கேன்.


கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சிலரோட எழுத்து மட்டும் நமக்குப் பிடிப்பது ஏன்? ஆங்கிலத்தில், ‘strikes a chord in our heart’ அப்படிம்பாங்க. அந்த சிலரோட எழுத்தில் இருக்கிற ஏதோ ஒண்ணு, ஒரு நிகழ்வு, அல்லது ஒரு கருத்து, அல்லது ஒரு எண்ண ஓட்டம்,  இதில் ஏதாவது ஒண்ணு நம்ம அலைவரிசையோட இயல்பா ஒத்துப் போகும். உடனே நமக்கு அது ரொம்பப் பிடிச்சிரும்.

சமீபத்தில் கீதாஞ்சலி புத்தகத்தை மறுபடி எடுத்துப் புரட்டிப் பார்த்த போது ஏதோ புரியற மாதிரி இருந்தது. குறிப்பா ‘Flower’ என்கிற கவிதையை மனசுக்கு நெருக்கமா உணர்ந்தேன். உடனே அதைத் தமிழில் எழுதிப் பார்க்கணும்கிற விருப்பமும் ஏற்பட்டது. எழுதி, வல்லமையிலும் பிரசுரமானது. ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சினை.

இணையத்தில் இருந்து எடுத்த கவிதையில் ஒரு இடத்தில் ‘It’ என்பதற்கு பதில் ‘I’ என்பதாக இருந்தது. அதானால் என் மொழியாக்கத்திலும், என்னையே ஒரு மலராகப் பாவித்து எழுதியிருந்தேன். வாசித்த ஒருவர் சுட்டிக் காட்டிய பிறகு மறுபடி பார்த்தால் ‘It’ என்பதே சரின்னு தெரிஞ்சது. அதனால இங்கே அதற்குத் தகுந்தாற்போல மாற்றி எழுதி இருக்கேன்…



உனக்கான மலர்

சின்னஞ் சிறு மலர் ஒன்று
இதழ்கள் விரித்துச் சிரிக்கிறது;
தாமதமின்றி உடனே நீ
பறித்துச் சூடிக் கொள்ளாயோ,
அது வாடி மண்ணில் வீழும் முன்னே?

உன் மாலை தன்னில் ஓர் மலராகும்
பேறு அதற்கிலை என்றாலும்
உன் விரல்களால் கொஞ்சம் தொட்டுப் பறித்து,
அந்த வலியைத் தந்தேனும்
அதற்குப் பெருமை சேர்த்திடுவாய்!
நாளிது ஓடி முடிந்திடும் முன்னே…
இம்மலருன்னைச் சேர்ந்திடும் காலம் கடந்திடும் முன்னே…

இந்த மலரின் நிறம் அப்படியொன்றும் ஆழமில்லை
இதன் மணமும் மனதை மயக்குவதாய் இல்லை
இருப்பினும்…
உன் சேவைக்கென இதை எடுத்துக் கொள்!
காலம் இருக்கையிலேயே பறித்துக் கொள்!


--கவிநயா

**

Original in English:

Flower
Rabindranath Tagore

Pluck this little flower and take it, delay not! I fear lest it
droop and drop into the dust.

It may not find a place in thy garland, but honour it with a touch of
pain from thy hand and pluck it. I fear lest the day end before I am
aware, and the time of offering go by.

Though its colour be not deep and its smell be faint, use this flower
in thy service and pluck it while there is time.

**


அன்புடன்
கவிநயா