Monday, March 31, 2008

என் கண்மணியே...

உன்னைச் சுமந்த நாள் முதலாய்
உனக்கென உயிர் சுமந்திருந்தேன்
உலகின் முதல் தாய் போலே
உள்ளம் இறு மாந்திருந்தேன்


நீ முகம் பார்த்துச் சிரிக்கையிலே
முத்த மழை நான் பொழிந்தேன்
நீ முதல் வார்த்தை பேசுகையில்
முத் தமிழோ என வியந்தேன்


தவழும் பிஞ்சுக் கால்களுக்கு
தண்டை யிட்டு அலங்கரித்தேன்
தாவி நெஞ்சில் உதைக்கையிலே
கால்கள் நோகும் எனத் தவித்தேன்


பால் நிலவைப் பொம்மையாக்கி
பாற் சோறு ஊட்டித் தந்தேன்
தென்றலிலே தொட்டில் கட்டி
தாலாட்டித் தூங்கச் செய்தேன்


அம்மா என்ற ழைக்கையிலே
அமுதம் என்ப தறிந்து கொண்டேன்
அன்றாடம் உன் நலமே
என் மூச்சாய் வாழ்ந்திருந்தேன்


உன்னைத் தந்த இறைவனுக்கு
உவகையுடன் நன்றி சொன்னேன்
புதையல் தந்த வள்ளலுக்கு
பாங்குடனே நன்றி சொன்னேன்


உடல் நலமின்றி இருக்கையிலே
உன் னருகில் நானிருப்பேன்
உடன் நலம் பெறவே வேண்டுமென்று
உறக்க மின்றி விழித்திருப்பேன்


உன் முகவாட்டம் கண்டு விட்டால்
உயிர் உருகக் கதறிடுவேன்
உன் ஆனந்தம் கண்டாலோ
மனம் நிறைந்து மகிழ்ந்திடுவேன்


கண்ண யர்ந்து உறங்கையிலும்
கனவி லுன்னைக் கண்டிருப்பேன்
உன் நினைவுகளைச் சேர்த்து வைத்து
நித்தம் நித்தம் நான் சுமப்பேன்


கடவுள் உன்னைக் காத்திடவே
காலமெல்லாம் துதித்திருப்பேன்
கண்மணியே உன் இன்பம்
காண்ப தற்கே தவமிருப்பேன்


விண் ணுலகம் சென்றிடினும்
உன் மனதில் வாழ்ந்திருப்பேன்
உயிர் மூச்சு நீங்கிடினும்
உந்தன் முகம் பார்த்திருப்பேன்


--கவிநயா

Tuesday, March 25, 2008

என்று வருவான்?

கனவில், ஒரு நதியில், அந்த நதியின் ஒரு கரையில்
கண்ணன் அவன் வருவான் என காத்திருக்கும் பொழுதில்...

மனதில், ஒரு நினைவில், அந்த நினைவின் ஒரு விளிம்பில்
மன்னன் அவன் வருவான் என மயங்கி நிற்கும் பொழுதில்...

கீழ்வானம் ப்ரசவிக்க கதிரவன் வெளி வந்தான்
காத்திருக்கும் மலர்கள் கண்டு களிப்புடனே சிரித்தான்

ஆள வந்த அரசன் போல வானில் வலம் வந்தான்
பகலின் பெரிய தீபம் போல உலகிற் கொளி தந்தான் -

ஆனால் -
கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அவன் முகமலரின் அழகைமனம் கருவண்டாய்ச் சுற்ற - அந்த
நினைவுக் கள்ளின் போதையிலே தான்மயங்கிச் சொக்க

அவன் இதழ் கொஞ்சும் குழல் கண்டு *காய்மையிலே சிக்க
அவன் நிறம் கொண்ட மேகம் கண்டு பிணக்கில் மனம் சுளிக்க -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

அந்தி நேரம் வந்த போதும் ஆதவன்பின் மறைந்த போதும்
வெள்ளை நிலா வான் வெளியில் வீதி உலா வந்த போதும்

விண்மீன்கள் மினுமினுத்து வானில்விளக் கெரித்த போதும்
காற்றுக்கூட ஓய்வெடுத்து மூச் சடக்கி நின்ற போதும் -

கண்ணன் வரவில்லை அந்த மன்னன் வர வில்லை;
காத்திருக்கும் ராதைக் கவன் காட்சிதர வில்லை!

என்றேனும் வருவானோ? ஏக்கம்தீர்த் திடுவானோ?
வாடுகின்ற ராதையவள் வாட்டம்போக்க வருவானோ?


-- கவிநயா

*காய்மை == பொறாமை

Thursday, March 20, 2008

மனசு

(1)

"அம்மா, அமெரிக்கா ஆன்ட்டிகிட்ட இருந்து ஒனக்கு லெட்டர் வந்திருக்கு போலருக்கு", வேலையிலிருந்து திரும்பிய விவேக் வந்திருந்த கடிதங்களைப் பார்வையிட்டபடி விசாரித்தான். "ஏம்மா, இன்னும் பிரிக்கவே இல்லயா?"

"ப்ச், நான் பாக்கிறேன், உனக்கு காஃபி போடவான்னு சொல்லு", சுவாரஸ்யமில்லாமல் சொல்லியபடி அவன் அருகில் வந்து அமர்ந்தாள், அகிலா.

"இல்லம்மா, ஒரேடியா சாப்பிட்டர்றேன். பசிக்குது. நான் போய் மாத்திட்டு வந்துர்றேன்"

மகன் அந்தப் பக்கம் சென்றவுடன், ஏற்கனவே தயாராக இருந்த சாப்பாட்டை மேசை மேல் எடுத்து வைத்து விட்டு, அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.

"என் இனிய அகிலாவுக்கு" என்று ஆரம்பித்த கடிதம், அவள் அமெரிக்கத் தோழி வசந்தி இன்னும் மூன்று வாரங்களில் இந்தியா வருவதாக அறிவித்தது. இந்த முறை குறைந்தது இரண்டு மாதங்களாவது இருப்பாளாம். "என் பிள்ளைகள் இரண்டு பேரிடமும் உன்னைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். உன்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்", என்ற வரிகளைப் படித்ததும் சற்றே குற்ற உணர்வு ஏற்பட்டது. ஏதோ ஒரு அமெரிக்க ஆன்ட்டியிடமிருந்து அவ்வப்போது கடிதம் வரும் என்பதைத் தவிர மகனிடம் வசந்தியைப் பற்றி அவளாக எதுவும் சொல்ல முற்பட்டதில்லை.

"என்னம்மா, என்ன விஷயம்? ஒரு மாதிரியா இருக்கீங்க?" சாப்பிட அமர்ந்தபடி விசாரித்தான்.

"என் ப்ரெண்டு வசந்தி அமெரிக்காவுல இருந்து வராளாம். அப்ப நம்மோட ஒரு வாரம் தங்கணுமாம்"

"தங்கட்டுமே? நாம இங்கதான இருக்கோம்? என்ன பிரச்சினை?" அவனுக்குப் புரியவில்லை.

"ஒண்ணும் பிரச்சினை இல்ல கண்ணா. நீ சாப்பிடு", அவனுக்கு சாப்பாட்டைப் பரிமாறினாள்.

"ஏம்மா, நீ அவங்களப் பத்தி ஒண்ணுமே சொன்னதில்லயே? அவங்கள உனக்கு எப்படித் தெரியும்?"

"நானும், வசந்தியும் சின்ன வயசில இருந்து காலேஜ் வரைக்கும் ஒண்ணாப் படிச்சோம். கல்யாணத்துக்குப் பிறகு அவ அமெரிக்கா போயிட்டதால அவ்வளவாத் தொடர்பில்லாமயே போயிடுச்சு. அவ்வளவுதான்", ஒரு காலத்தில் நெருங்கிய தோழியாயிருந்த வசந்தியுடனான தன் நட்பை இரண்டே வரிகளில் அடக்கி விட்டாள்.

"அவங்கள்ட்ட இருந்து அப்பப்ப லெட்டர் வந்துகிட்டுதான் இருக்கு. நீதான் அவங்களுக்கு எழுதுறதே இல்ல போலருக்கு?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. அது சரி, நாளைக்குப் பெரியம்மா பொண்ணுக்கு வளைகாப்பு இருக்கு; நாம காலைல சீக்கிரமே போகணும். ஞாபகம் இருக்கா? நீ லீவு சொல்லிட்டியா?"

அம்மா பேச்சை மாற்றுவதை உணர்ந்தாலும், கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமல், "சொல்லிட்டேம்மா", என்றபடி கை கழுவ எழுந்தான், விவேக்.

(2)

அக்கா பெண்ணின் வளைகாப்பு களை கட்டி இருந்தது. சந்தோஷமான அந்த சூழலில் தான் ஒட்டாதது போல் உணர்ந்தாள், அகிலா. இது ஒன்றும் அவளுக்குப் புதுசில்லை. கணவனை இழந்த அவள் எப்போதும் ஒரு எளிமையான புடவையும், சின்னக் கறுப்பு பொட்டுமாகத் தான் இருப்பாள். எந்த விசேஷத்துக்கும் போவதை முடிந்த வரை தவிர்த்து விடுவாள். ஆனால், உள்ளூரிலேயே இருக்கும் அக்காவின் விசேஷத்துக்கு எப்படி வராமல் இருப்பது?

"அகிலா, வா, வா. என்ன நீ பாட்டுக்கு மூணாம் மனுஷி மாதிரி தாமதமா வர்றே? இங்க வந்து எனக்கு அடுப்படியில ஒரு கை குடு", உரிமையுடன் அவள் கையைப் பற்றி இழுத்துச் சென்றாள், அவள் அக்கா, ரமா.

"அவல் பாயசம் வச்சேன்; கொஞ்சம் பாத்து எறக்கிட்டு வா; எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க", நிற்க நேரமின்றி பேசியபடியே வந்தவர்களைக் கவனிக்கச் சென்றாள், ரமா.

தனியாக அடுக்களையில் விடப்பட்ட அகிலாவிற்கு மனசுக்குள் வசந்தியின் கடிதமும், விவேக் கேட்ட கேள்வியுமே சுற்றிச் சுற்றி வந்தன. விவேக் கேட்டதில் தப்பில்லை. இவள்தானே வசந்தியிடமிருந்து விலகி விலகிப் போனாள். ஆனால் ஏன்? தூக்கம் வராத இரவில் நிதானமாக யோசித்த போது, அவள் அடிமனது அவளுக்கு சுத்தமாகவே கோடிட்டுக் காட்டி விட்டது, காரணத்தை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பொறாமை. அவளுக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது, முதலில். ஒப்புக் கொள்ளாமல், உள்மனதுடன் பெரும் அடிதடியே நடத்தி விட்டாள். பிறகு ஒவ்வொரு விஷயமாகத் திரும்பிப் பார்க்கையில், வேறு வேறு காரணங்கள் சொன்னாலும், அடிப்படைக் காரணம் இதுதான் என்பது தெளிவாகியது. இவள் வாழ்க்கையில் வேண்டி ஆசைப்பட்டதெல்லாம், வசந்திக்கு அமைந்து விட்டது. இவளுக்கும் கணவன் அன்பானவன்தான்; வசதியானவன்தான்; ஆனால் அல்பாயுசில் போய் விட்டான். வசந்திக்கு அன்பான, ஆசையான கணவன். அமெரிக்காவில் வாசம்; ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்றாக இரண்டு குழந்தைகள். இரண்டு பேருமே இப்போது மருத்துவம் படித்து வருவதாகக் கேள்வி. துன்பம் என்றால் என்ன விலை என்று கேட்கும் வாழ்க்கை.

இவளுக்கு, சின்ன வயசில் கணவனை இழந்த பின், ஒரு வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். மாமனார் வீட்டிலும் சரி, அம்மா வீட்டிலும் சரி, மற்ற பொறுப்புகள் இருந்தபடியால், யாரும் இவளுடன் வந்து தங்க முடியாத நிலைமை. சென்னையில் புறாக் கூண்டுக்குள் தங்கிக் கொண்டு, டவுன் பஸ்ஸில் இடிபட்டு, அலுவலகத்தில் வேறு விதமான துன்பங்களைச் சந்தித்து, இப்படியாக எப்படியோ பிள்ளையை நல்லபடியாக வளர்த்து விட்டாள். அவனும் இப்போது பொறியியல் வல்லுநராக ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். அவளும் தன் அலுவலகத்தில் இப்போது மதிப்புக்குரிய ஒரு பொறுப்பில் இருக்கிறாள். இருந்தாலும்...

வெறும் நினைவுகளே ஆயாசம் தர, பெருமூச்சொன்று வெளிப்பட்டது, அகிலாவிடமிருந்து.

"அகிலா, வா வா. இன்னுமா பாயசம் ரெடியாகல? வளையல் போட ஆரம்பிக்கணும். வா", அக்கா வந்து மறுபடியும் அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துப் போனாள்.

இவள் "வேண்டாம்" என்று சொல்லச் சொல்ல விடாமல் இவளையும் வளையல் போட வைத்தாள். தன்னைப் போலவே மற்றொரு பெண்ணும் சற்று ஒதுங்கியே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள், அகிலா.

"வாம்மா வனிதா. நீயும் போடு", அவளையும் வற்புறுத்திப் போடச் செய்தாள், அக்கா.

அப்போதுதான் அவள் யாரென்று நினைவு வந்தது, அகிலாவிற்கு. அக்காவின் பக்கத்து வீட்டுப் பெண். பத்து வருடங்களாகக் குழந்தை இல்லாதவள்.

(3)

ஒரு வழியாக வைபவம் முடிந்து எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வெறிச்சோடியிருந்தது, வீடு.

"அக்கா, நீ வேணாப் போய்க் கொஞ்சம் படுத்துக்கோயேன்", பரிவுடன் பகிர்ந்தாள், அகிலா.

"இல்ல; இப்ப தூங்கினா, ராத்திரிக்குத் தூக்கம் வராது. சும்மா இப்படிக் கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்"

அக்காவின் பக்கத்தில் அகிலாவும் அமர்ந்தாள்.

"ஏங்க்கா, சிவப்புப் பொடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு வந்தாளே, வனிதா, அவளுக்குக் குழந்தை இல்லதானே?"

"ஆமா. பாவம். பத்து வருஷமாச்சு"

"பொதுவா என்ன மாதிரி, அவள மாதிரி ஆளுங்கள வளையல் போடச் சொல்ல மாட்டாங்க. நீ என்னடான்னா, எங்க ரெண்டு பேரையும் விடல"

"இந்த மாதிரி எந்த விசேஷத்துக்கும் நம்ம எல்லோரையும் கூப்பிடறது ஆசீர்வாதம் வாங்கிறதுக்குத்தான். அப்படி ஆசீர்வாதம் தர்றதுக்கு நல்ல மனசிருந்தாப் போதும்; வேற என்ன வேணும்? நீ என் தங்கை; என் பொண்ணு நல்லா இருக்கணும்னுதான் நினைப்ப"

"அப்ப வனிதா? .... நீ செஞ்சது தப்புன்னு நான் சொல்ல வரல; ஆனா உன்னோட காரணத்தை தெரிஞ்சுக்கணும்கிறதுக்காகக் கேக்கிறேன்"

"வனிதாவப் போல நல்ல மனசுள்ள பொண்ணப் பாக்கவே முடியாது. பொதுவா எல்லாம் இருக்கவங்ககிட்ட பெரிய மனசு இருந்தா அதுல ஒண்ணும் ஆச்சரியமே இல்ல. ஆனா தனக்கு இல்லாதப்பவும், மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்? அப்படிப்பட்ட பெரிய மனசு வனிதாகிட்ட இருக்கு. தனக்கு இல்லாட்டியும், இருக்கவங்களப் பாத்து பொறாமையோ, வயிற்றெரிச்சலோ படவே மாட்டா. அதனாலதான் அவளயும் வற்புறுத்திப் போட வச்சேன்"

அக்கா சொன்ன வார்த்தைகள் வேறு எங்கேயோ சென்று சுருக்கென்று தைத்தன, அகிலாவிற்கு. வீட்டுக்குப் போனவுடன், முதல் வேலையாக வசந்தியைக் கட்டாயம் குடும்பத்துடன் வரச்சொல்லிக் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

--கவிநயா

Wednesday, March 19, 2008

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

"அயிகிரி நந்தினி" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :)

நந்தியும் தேவரும் நயந்துன்னைப் போற்றிட மகிழ்ந்தின்பம் தருகின்ற மலைமகளே
விந்திய மலையின் உச்சியில் உறைந்து ஒளிர்பவளே ஜயம் தருபவளே
கறைக் கண்டன் அவனின் மனையவளே பலலீலைகள் புரிந்திடும் உமையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (1)

இறை வருக்கும் இறை யானவளே அறியா தவர்க்கும் அருள் புரிபவளே
ஓம் எனும் ப்ரணவத்தை ஆள்பவளே மூவுலகையும் காத்திடும் மூத்தவளே
தனுதிதி வம்சத்தை ஒழித்தவளே வீண் ஆணவம் அழித்திடும் அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (2)

புன்னகையால் மனம் கவர்பவளே எந்தன் அன்னையே கதம்பவனப்ரியையே
மலைகளுக் கெல்லாம் அரசனாம் அந்த இமயத்தின் சிகரத்தில் வசிப்பவளே
மதுகை டபர்களை வென்றவளே என்றும் ஆனந்த நடம் செய்யும் நாயகியே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (3)

அரக்கரைத் த்வம்சம் செய்பவளே போர்க் களிறுகளைக் கொன் றொழிப்பவளே
சிம்மத்தின் மீதேறி வருபவளே பெரும் கோபத்தில் ஜொலிக்கின்ற துர்க்கையம்மா
பகைவரின் தலைகளைக் கைகளின் பலத்தால் தூளாய்ச் சிதற வைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (4)

வெற்றியின் மறுவடி வானவளே கடும் பகைவரையும் கொன்று வெல்பவளே
சிவகணங்களைப் படையாகக் கொண்டு போர் தொடுத்தவளே காளி பயங்கரியே
பாவத்தின் வடிவாய்ப் பாதகம் புரிந்திட்ட அசுரரின் தூதரை அழித்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (5)

உனைச் சரணடையும் பகைவரின் பெண்டிர்க்கும் அடைக்கலம் தந்து காப்பவளே
மூவுல கினையும் மூர்க்கமாய் அடக்கிடும் அரக்கரை வேலால் பிளப்பவளே
திக்குகள் அதிர்ந்திட முரசுகள் ஒலித்திட சூரியனாய்த் தக தகப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (6)

ஒருஹூங் காரத்தால் எதிர்வரும் பகைவரைப் புகையெனக் கலைந்தோடச் செய்பவளே
போர்க் களத்தினிலே வீழ்கின்ற குருதியால் தழைக்கின்ற கொடியினைப் போன்றவளே
சங்கரன் அருகிலும் அரக்கரின் நடுவிலும் பேத மின்றிக் களித் திருப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (7)

மென்னுடலைப் பல விதவிதமாய்ப் பல அணிகலனால் அணி செய்தவளே
மின்னும் வாளுடன் கூரம் புகளுடன் எதிரிகள் தலைகளை அறுப்பவளே
பெரும்படை களையும் பொம்மைகள் போல விளையாட்டாய் வெட்டிச் சாய்ப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (8)

அண்டங்கள் திரண்டு போற்றிடும் வணங்கிடும் எங்களின் வெற்றித் திருமகளே
சங்கரன் கவனத்தைக் கவர்ந்திட நடமிட கிண்கிணிச் சலங்கைகள் அணிந்தவளே
அர்த்த நாரியாய் அரனுடன் இணைந்து ஆடியும் பாடியும் களிப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (9)

பூ முகத்தினிலே ஒளிரும் சிரிப்பால் ஞானிய ரையும் கவர்ந் திழுப்பவளே
அல்லி மலர்களை மலர்ந்திடச் செய்கின்ற குமுத சகாயனைப் போன்றவளே
நிலைகொள்ளாமல் சுற்றும்கருவண்டுகளைத் தன்னிரு விழிகளாய்க் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (10)

கதிரவன் கதிர்களைத் தாங்கி எதிரொலிக்கும் வெள்ளி மரங்களிடை வசித்திருக்கும்
மல்லரையும்வே டுவர்களையும் வெல்லும்விளையாட்டில் இஷ்டம் உடையவளே
சிவந்த வேர்களுடன் வெள்ளை மலர்கள் தாங்கும் அழகிய கொடியினை ஒத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (11)

வெறியுடன் தாக்கிடும் மதயா னைகளையும் எளிதாய் அடக்கிப் பணியச் செய்வாய்
மூவுல கினுக்கும் ரத்தினம் போன்ற நிலவின் அழ கொத்த இளவரசி
எழிற் புன்னகையால் மனங்களைக் கொள்ளை கொள்ளும் அன்புருவான அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (12)

மகிழமலர்களில் அமர்ந்த தேனீக்கள் கமல மலர்களையும் மொய்த்திடவே
அந்தக்கமலம்போல் மனங்கவர் நிறங்கொண்ட மாசற்ற நெற்றியை உடையவளே
கலைகளின் இயல்பாம் நளினம் மிகுந்த அன்னங்கள் தொடர வருபவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (13)

காடுகள் அடர்ந்த தருத் தரங்களிலே தெய்வீகப் பெண்டிர் சூழ்ந்திருக்க
அந்தவண்ண அழகு மலைப் பிரதேசத்தில் மகிழ்வுடன் வசிக்கும் மலைமகளே
கோகிலமும் மிக நாணும்படி தன் புல்லாங் குழலினை இசைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (14)

இடையினில் ஒளிரும் மஞ்சள் பட்டாடையால் நிலவொளியையும் தோற்கடிப்பவளே
பதம் பணிவோரின் ஆபரணங்களால் நகங்களும் ஜொலிக்க திகழ்பவளே
தங்கமலை உச்சியில் விளங்கும்கலசம்போல் அழகிய தனங்களை உடையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (15)

கதிரவனையும் விஞ்சும் வலிமை கொண்ட பலஆயிரம் கரங்களை உடையவளே
தாரகாசுரனை எளிதினில் வென்ற வேலவனின் அன்னை ஆனவளே
சுரதா சமாதி இருவருக்கும் மன அமைதியைத் தந்து காத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (16)

உன் மலரடிகளைத் தினமும் போற்றி அன்புடன் துதித்து வணங்கையிலே
தாமரை மலரில் வாசம் செய்யும் உன் திருவருள் எனக்கின்றிப் போய்விடுமோ?
உன் திருவடிகளே சதமென இருக்கையில் செல்வங்கள்ஏதும் என்னை விலகிடுமோ?
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (17)

பொன்னென மின்னிடும் பெருங்கடல் நீரால் உனக் கபிஷேகம் செய்கையிலே
சசியை அடைந்திட்ட சுரபதிக் கிணையாய் சுவர்க்கத்தின் இன்பம் கிடைத்திடுமே
சிவனவன் வசிக்கின்ற உன்மலரடியையே எனக்கும்அடைக்கலமாய்க் கொண்டுவிட்டேன்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (18)

ஒரு முகமாக ஒரு மனதாக உன்னெழில் வதனத்தைச் சிந்தை செய்தால்
இந்திர லோகத்து அரம்பையரும் உன்பக்தரை ஒதுக்கிடத் துணிவதில்லை
அன்பின் பெருக்கால் சுந்தரரைத் தன் பொக்கிஷமாக்கிக் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (19)

எளியோரையும் மிகக் கருணை கொண்டு காப்பவளே எமையும் காத்திடுவாய்
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையே உன்திரு வடிசரணம்
துயரங்கள் அனைத்தையும் களைந்திடுவாய் உன்விருப்பப்படி எமை அமைத்திடுவாய்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (20)

விநாயகர்

விநாயகர் என் இஷ்ட தெய்வம்; அவரைப் பத்தி முதல்ல எழுதறது பொருத்தம் தானே!

ஆனை முகத்தோனே! ஆறுமுகன் சோதரனே!
பானை வயிற்றோனே! பார்வதியின் புத்திரனே!
அருள் ஞானக் கணபதியே! மருள் யாவும் நீக்கிடுவாய்!
தும்பிக்கை கணபதியே! நம்பிக்கை தந்திடுவாய்!