Monday, May 30, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 2

முதல் பகுதி இங்கே

இந்த முறை போகும் போது ஓரளவு வீட்டுப் பாடம் படிச்சிட்டு போனேன்.

எங்கூர்ல 10K அப்படின்னு 10 கி.மீ. மாரத்தான் ஒண்ணு நடந்தது. கோவிலுக்கு போறதுக்கு 2 வாரம் முந்திதான். அதில் ஓடறவங்க, நடக்கறவங்க, இல்ல ரெண்டும் மாத்தி மாத்தி செய்ய நினைக்கிறவங்க, எல்லாருமே கலந்துக்கலாம். தோழிகளோட நானும் நடக்கற குழுவில் சேர்ந்திருந்தேன். அதுக்காக வாரா வாரம் குறைஞ்சது ஒரு மணி நேரம் பயிற்சி செய்தோம். அதிலும் 10000 பேர் சேர்ந்திருந்தாங்க. அதைப் பற்றி எழுதப் புகுந்தா அது இன்னொரு பதிவாயிடும்! அதனால இதோட நிறுத்திக்கிறேன்!

எதுக்கு சொல்ல வந்தேன்னா, அதுல சேர்ந்ததால ரொம்ப தூரம் நடக்கறது பற்றி, அதுக்கு எப்படி தயாராகணும், அப்படிங்கிறது பத்தில்லாம் வாசிக்க நேர்ந்தது, உதவியா இருந்தது. அது முடிஞ்ச பிறகு, எங்க வீட்டுக்கு முன்னாடி பதிச்சிருக்கிற சரளைக்கல்லில், தினமும் அரை மணி நேரம் வெறுங் கால்ல நடந்து பழகினேன்.

சூடான மணல்ல நடந்தாலும், இந்த மாதிரி சரளைக்கல்லில் நடந்தாலும் பாதம் கடினமாயிடுமாம். அப்படி ஆகிட்டா கொப்பளம் வர்றது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அப்படியும் எனக்கு தவிர்க்க முடியலைங்கிறது வேற விஷயம் :)

சரி… விட்ட இடத்துக்கு போவோம், வாங்க!

தெரிஞ்ச சாமி பாட்டு, ஸ்லோகம், பஜனை, இப்படி பாடிக்கிட்டே நடந்தோம். இந்த மாதிரி பயணத்தின் போது நிறைய பாட்டு கோஷ்டிகளை பார்க்கலாம். ரொம்ப நல்லா பாடறவங்க நிறைய இருக்காங்க. அவங்களுக்கு பாட்டெல்லாம் மனப்பாடமாவும் தெரியும். அவங்க பாடப் பாட, கூட்டமெல்லாம் ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் சக்தி’ அல்லது ‘அரோகரா’ இப்படி பாட்டுக்குத் தகுந்த மாதிரி கோரஸ் பாடிக்கிட்டே நடக்கும். அந்த மாதிரி பாடல்கள் பொதுவாகவே ஒரு வேகத்தோட இருக்கும். அதை பாடும் போது நம்ம நடையும் தன்னால வேகம் எடுத்துரும்! ரொம்ப அருமையான அனுபவம் அது!

நாம சோர்ந்து போகிற சமயங்களில் அவளே அனுப்பி வச்ச மாதிரி எப்படியோ யாராச்சும் வந்து சேருவாங்க, அவ்ளோதான் வா, வான்னு சொல்லி பாட்டுப் பாடியே கூட்டிட்டு போயிடுவாங்க! இந்த மாதிரி முந்தைய வருஷங்களில் எனக்கே நிறைய நடந்திருக்கு.

எங்களுக்கு தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடி முடிச்சாச்சு. ரோடில் கல்லு ரொம்பவே குத்த ஆரம்பிச்சது. என் தங்கை, “செருப்பை வேணா போட்டுக்கோடி, போட்டுக்கோடி”, அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா.

எனக்கு இளையவளா இருந்தாலும் எங்க சின்னக் குழுவிற்கு அவதான் தலைவி! நல்லா பேசுவா, ரொம்ப சமர்த்து! ‘நீ மட்டும் எம்.பி.ஏ. படிச்சிருந்தா சூப்பர் மானேஜரா இருந்திருப்பேடி’ன்னு சொல்வேன்! எங்க கூட நடந்த தோழி ஏற்கனவே ஷு போட்டிருந்தா. சரி, இவ வேற ரொம்ப சொல்றா, வீட்லயும் ‘ஆமா, செருப்பு போட்டுக்கிட்டேன்’னு உண்மை(!) சொல்லணுமே, அப்படிங்கிற எண்ணத்தில் நானும் போட்டுக்கிட்டேன்…

இப்படி கொஞ்சம் மெதுவா நடந்துக்கிட்டிருந்த போது, தனியா நடந்திட்டிருந்த ஒருத்தர், ‘அரோகரா போடறீங்களா, வாங்க வாங்க’ன்னு சொல்லி, ‘அப்பனுக்கு… அரோகரா’ன்னு ஆரம்பிச்சு வேகமா முருகனோட பேர்களை சொல்லிக்கிட்டே போனார்… நாங்களும் உற்சாகமா அரோகரா போட்டுக்கிட்டு, அவரோட ஓரளவு வேகமாகவே நடந்தோம்.

இந்த மாதிரி பாட்டு கோஷ்டிகள் ரயில் சிநேகம் மாதிரி. முடிஞ்ச வரைக்கும் கொஞ்ச தூரம் அவங்களோட ஓடிட்டு, முடியலைன்னா பின் தங்கி நம்ம மெது நடைக்கு மாறிடுவோம்! ஆனா போன முறை நடந்த போது, அப்படி ரயில் சிநேகமா இல்லாம தொடர்ந்த சிநேகமாவே, ஒரு பாட்டு குழுவினரின் அறிமுகம் கிடைச்சது.

செந்தில் – வருஷா வருஷம் ‘இச்சடி’ங்கிற இடத்தில், நண்பர்களோட சேர்ந்து பாத யாத்திரை செய்யறவங்களுக்கு அன்னதானம் செய்துட்டு வரார். நல்ல பாடகர். பத்மநாபன் – ரொம்ப அருமையா பாடுவார். எப்பவும் ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்பார். அருமையான குரல். இவரை நீங்க விஜய் டி.வி.ல சூப்பர் சிங்கரில் பார்த்திருக்கலாம்! என்ன, என் அம்மன் பாடல்களுக்கு இசையமைச்சு பாடறேன், பாடறேன்னு, இது வரை சொல்லிக்கிட்டே இருக்கார்! அடுத்தது ஷண்முகம் – இவரும் நல்லா பாடுவார். கண்ணதாசன் பாடல்கள், மற்றும் எந்த பாடலா இருந்தாலும் பிடிச்சிருந்தா வரிகளை உடனே மனப்பாடம் செய்துடுவார்! யாரையாச்சும் ஓட்டிக்கிட்டே இருப்பார் :) இவர் தன்னோட ஒரு வயசு குழந்தையை தூக்கிட்டு நடந்தார் இந்த வருஷம்.

இச்சடி, புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மி. அல்லது 18? - நினைவில்லை. அங்கே சாப்பிட வரணும்னு ஏற்கனவே செந்தில் அழைச்சிருந்தார். அரோகரா போட்டுக்கிட்டே நடந்துக்கிட்டிருந்த போது ‘இச்சடி’ங்கிற பெயர்ப் பலகையைப் பார்த்தோம். (அட, அதுக்குள்ள வந்திருச்சான்னு ஆச்சர்யமா இருந்தது. அப்ப ராத்திரி எட்டரைதான் இருக்கும்னு நினைக்கிறேன்.) எங்க கூட வந்தவர்கிட்ட “நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரோம் அண்ணே”ன்னு சொல்லிட்டு, லைட்டெல்லாம் போட்டு ஜோரா சாப்பாடு நடந்துக்கிட்டிருந்த அந்த இடத்தில் நுழைஞ்சோம்.

செந்திலைக் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. சாம்பார் பத்தலைங்கிற டென்ஷன்ல இருந்தார்! இருந்தாலும் அந்த நேரத்திலும் எங்களை பார்த்து பேசி அன்பா சாப்பாடு பரிமாறி, கவனிச்சுக்கிட்டார். பத்மநாபன், அவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். ஷண்முகத்தையும் அங்கேதான் பார்த்தோம். கணக்கு முடிச்சு சரி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்கிறதால மறு நாளில் இருந்துதான் நடப்போம், அப்படின்னார் செந்தில். ஒரு வழியா அவங்ககிட்ட விடை பெற்றுக்கிட்டு மறுபடி கிளம்பிட்டோம்.

செருப்பு போட்டு நடக்கறது உறுத்தலா இருந்தது. பிடிக்கலை. அதனால கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கழற்றிட்டேன். சாதாரணமா ஒரு மணி நேரத்துக்கு 4 அல்லது 5கி.மீ. நடக்கலாம். நாங்களும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் நடந்தோம், ஆரம்பத்தில்! 2 மணி நேரமெல்லாம் உட்காராம நடந்திருக்கோம். ஆனா லைட் தெரிஞ்சா போதும், அங்க கொஞ்சம் உட்காரலாமான்னு கெஞ்ச ஆரம்பிச்சிரும் காலு!

இப்படி நடந்துக்கிட்டிருந்த போது தோழி ஷூ தடுக்கி கீழே விழுந்துட்டா! முழங்கால்ல சிராய்ச்சு நல்ல காயமாயிடுச்சு. ரத்தமும் நிக்காம வந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த இடத்தில் சூரிதார் துணியே கொஞ்சம் கிழிஞ்சிடுச்சுன்னா பாருங்க! எங்களுக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு. எங்கேடா லைட் வரும், உட்காரலாம்னு பார்த்துக்கிட்டே போனோம். வலது பக்கத்தில்தான் ஒரு வீடு மாதிரி தெரிஞ்சது.

அங்க போனா, இரண்டு மூணு பைரவர்! வீட்டில் வளர்க்கறாங்க போல! அந்த வீட்டுக்காரரும் அவர் மனைவியும் வந்து அதையெல்லாம் தள்ளி போகச் சொன்னாங்க. உட்காருங்கன்னு சொல்லி உபசரிச்சாங்க. அங்கேயே வாசலில் உட்கார்ந்தோம். விஷயம் தெரிஞ்சு முதல் உதவி சாமான் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. ஆனா தோழியே எல்லாம் வச்சிருந்தா. அதனால அவ வச்சிருந்த பொருட்களை வச்சு, காயத்தை சுத்தம் பண்ணி, மருந்து போட்டு கட்டினோம். வீட்டுக்காரங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.

இந்த பயணத்தின் போது மட்டும் எங்கே, யார் வீட்டுக்கு போனாலும், அல்லது வழியில் என்ன தேவைப்பட்டாலும், எல்லோருமே அப்படி ஒரு அன்பா, உதவி மனப்பான்மையோட நடந்துக்குவாங்க… கூட நடக்கிற பக்தர்களும் அப்படித்தான்… இது ஒரு மிக அருமையான உணர்வு… எப்பவுமே எல்லாருமே இப்படி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!

அதுக்கப்புறம் தோழியால ரொம்ப வேகமா நடக்க முடியல. இருந்தாலும் அமைதியாகவே நடந்து வந்தா… இப்படியாக நடந்து, ஒரு வழியா கந்தர்வ கோட்டைக்கு வந்து சேர்ந்தோம்! அங்கதான் அன்னிக்கு தங்கணும். தங்கற வீட்டை ஏற்கனவே அடையாளம் கேட்டு வச்சிருந்தோம். அதன்படி கேட்டுக் கேட்டு அந்த வீட்டுக்கு நாங்க போய் சேர்ந்தப்ப, காலை மணி ஆறரை!

(பயணம் தொடரும்…)

அன்புடன்
கவிநயா

Sunday, May 22, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 1

மருந்தை தேனில் குழைச்சு சாப்பிடும் போது, கடைசியில் தேனின் தித்திப்பு மட்டுமே அடிநாக்கில் நிக்குமே, அது போலத்தான் வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம்! நடந்து போய்ச் சேர்றதுக்குள்ள படற பாடு இருக்கே… அப்பப்பா! அப்படில்லாம் கஷ்டப்படும் போது, ‘போதும், போதும், இனிமே இப்படி நடக்க முடியாது, வேண்டிக்கக் கூடாது,’ அப்படின்னு தோணும்; ஆனா போய் சேர்ந்த பிறகு, அந்த சந்தோஷமும், நிறைவும் மட்டுமே மனசில் நிக்கும்; அந்த சமயத்தில் பார்த்தா, இன்னொரு முறையும் நடக்க மாட்டமான்னுதான் தோணும்!

கோவில்களுக்கு நடக்கறதில், கிரிவலம், திருப்பதி மலை ஏறுவது, இந்த மாதிரி சின்னச் சின்ன பயணங்கள் இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ரெண்டு பெரிய நடைப் பயணங்கள் இருக்கு. ஒண்ணு பழனி, இன்னொண்ணு வைத்தீஸ்வரன் கோவில்.

தைப்பூசத்துக்கு போய்ச் சேர்ற மாதிரி பழனிக்கு நடப்பாங்க. வெயில் குறைவான காலம்கிறதால பகல், இராத்திரி, இப்படி எந்த நேரம் வேணும்னாலும் நடப்பாங்களாம். ஆனா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சித்திரை மாசம் முதல் வாரம்தான் நடக்கறது. சரியான வெயில் காலம். அதனால பகல்ல ஓய்வு, இராத்திரிதான் நடை. முன்னெல்லாம் வை.கோவிலுக்கு காவடி எடுக்க மாட்டாங்க. இந்த முறை போனப்ப, சில காவடிகளையும் பாத்தேன். சில பேர் வருஷா வருஷம் நடப்பாங்க. சிலர், ஏதாவது வேண்டுதல் இருந்தால் மட்டும்… நானும், தங்கையும், இரண்டாவது வகை.

அந்தக் காலத்தில், எங்க கிராம பக்கங்கள்ல இருந்து வை. கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போகிற வழக்கம் இருந்திருக்கு. அதே பழக்கம் இப்பவும் தொடருது. கிட்டத்தட்ட 50-லிருந்து 60 வரை இரட்டை மாட்டு வண்டிகள் ஊரிலிருந்து வரும். நடக்கறவங்க இந்த வண்டிகளில் சேர்ந்துக்கலாம். தங்கற ஊர்களில் வண்டி ஏற்பாடு செய்யறவங்களே நாம தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செய்யறதோட, சாப்பாட்டுக்கும் வழி செய்துடுவாங்க. அதுக்கு சில வண்டிகளில் பணம் கட்டணும். இன்னும் சிலர் பக்தர்களுக்கு செய்யற சேவையாகவே செய்யறாங்க. தெரிஞ்சவங்களை, உறவினர்களை சும்மாவே சேர்த்துக்கறதும் உண்டு. இப்படி, என் தங்கை, அவள் தோழி, நானு, 3 பேர் எங்க உறவினர் வண்டி ஒண்ணுல சேர்ந்துக்கிட்டோம்.

தோழிக்கு முதல் வருஷம். எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சூண்டு அனுபவம் இருக்கு… வருஷா வருஷம் நடக்கறவங்க நெறய உதவிக் குறிப்புகள் தருவாங்க. காலைத் தேய்ச்சு நடக்கக் கூடாது, முழு பாதத்தையும் நல்லா ஊணி நடக்கணும், அதாவது கொப்பளம் வந்தாலும், வர்ற அறிகுறி இருந்தாலும், நல்லா ஊணிதான் நடக்கணும்; அதுக்காக நொண்டி நடக்க ஆரம்பிச்சா வேற பிரச்சனைகள் வரும்… நடக்க நடக்க இடுப்பில் வலி வர ஆரம்பிக்கும், அதை தவிர்க்க ஒரு துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக்கணும், சாணத்தை மிதிச்சாலும் காலைத் தேய்க்கக்கூடாது… தேய்ச்சா உடனே கொப்பளிக்கும், அதோட சாணம் நல்ல மருந்து… இப்படி நாங்க முதல் வருஷம் போன போதே நிறைய சொல்லி தந்தாங்க…

கோவிலுக்கு போறதால வெறும் காலோட தான் நடக்கணும். ஆனா இப்பல்லாம் நிறைய பேர் ஷூவும், செருப்பும் போட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா ரோடு அவ்வளவு மோசம்! எனக்கும் காலில் சில பல பிரச்சனைகள் இருந்ததால, செருப்பு போட்டு நடக்கறதுன்னா நட, இல்லன்னா வேண்டாம், அப்படிங்கிற அளவு வீட்டில் கண்டிப்பு. நடை கான்சல் ஆயிடுமோங்கிற பயத்தில், நானும் சமர்த்தா ஒரு ஜோடி செருப்பு வாங்கி எடுத்துக்கிட்டேன்!

அப்புறம் முக்கியமா, ஆளுக்கொரு கம்பு. தங்கையும் நானும் முந்தைய வருஷங்கள்ல பயன்படுத்திய கம்பு பூஜை அறையிலேயே வச்சிருந்ததை எடுத்துக்கிட்டோம். தோழிக்கு புதுசா ஒண்ணு வாங்கியாச்சு.

கம்புக்கு ரெண்டு வேலை. இராத்திரியில் நடக்கறதால, நாம தட்டிக்கிட்டே நடக்கும் போது விஷ ஜந்துக்கள் ஏதாச்சும் வந்தாலும், ஓடிடும். நம்மால நடக்க முடியாம சோர்ந்து போகும் போது, கம்புதான் நமக்கு இன்னொரு கால், நம்மோட துணை. கம்புக்கு பூ சுத்தி, கும்பிட்டு, எடுத்துக்கிட்டு போவாங்க. இப்பல்லாம் வழியெல்லாம் லைட் போட்டுதான் இருக்காங்க. ஆனாலும் சுத்தமா விளக்கில்லாத இடங்களும் நிறைய்யவே இருக்கு…

சிலர் கிராமத்திலிருந்து சித்திரை முதல் புதனில் ஆரம்பிச்சு 6 நாள் நடந்து, அடுத்த செவ்வாய் வை.கோவில் போய் சேருவாங்க. நாங்க புதுக்கோட்டையில் முதல் வியாழன் (ரெண்டாவது நாள்) ஆரம்பிச்சு, 5 நாள் நடந்து அதே செவ்வாய் அன்னிக்கு கோவிலுக்கு போவோம்.

முந்தியெல்லாம் கூட்டம் குறைச்சலா இருக்கறப்ப, முதல்ல போறவங்கள்லாம் வைத்தீஸ்வரன் கோவில் எல்லையில், எல்லாரும் வந்து சேர்ற வரை காத்திருப்பாங்களாம்; எல்லாரும் வந்த பிறகுதான் ஒண்ணா உள்ளே போவாங்களாம்… இப்பல்லாம் அப்படி இல்லை. கிட்டத்தட்ட 50,000 பேர் நடக்கும் போது, எப்படி கணக்கு வச்சிக்கறது, யாருக்குன்னு காத்திருக்கறது?

புதுக்கோட்டையில் மச்சுவாடிங்கிற இடத்தில் விபூதி கொடுப்பாங்க. அதை வாங்கிக்கிட்டுதான் புறப்படணும். அந்த வியாழக்கிழமை சாயந்திரம் 5 மணி போல நாங்க தங்கி இருந்த வீட்டில் குளிச்சு, சாமி கும்பிட்டு புறப்பட்டோம். அங்கேருந்து மச்சுவாடிக்கு நடந்து வந்து, வரிசையில் நின்னு விபூதி வாங்கிக்கிட்டோம். நாங்க சேர்ந்துக்கிட்ட வண்டி எங்கே நிக்குதுன்னு கண்டு பிடிச்சு, அங்கே போனோம். அதுக்கே புதுக்கோட்டை எல்லையைத் தாண்டி வர வேண்டியதாயிடுச்சு! அவங்ககிட்ட ஹலோ சொல்லி, ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு கிளம்பியாச்சு!

கம்பு மட்டுமில்லாம, ஆளுக்கொரு தோள் பை வச்சிருந்தோம். அதில் தண்ணி, கொஞ்சம் குளுகோஸ் மாதிரியான சமாசாரங்கள், உட்கார்ற விரிப்பு, கை விளக்கு, தொலைபேசி, முதல் உதவி சாமான்கள், முக்கியமா ஐயோடெக்ஸ், மூவ், இது ரெண்டும்!

புதுக்கோட்டையில் கிளம்பினதிலிருந்து வழியெல்லாம் பிஸ்கெட், பூ, பழம், மிட்டாய், மஞ்சள் குங்குமம், இப்படி வரிசையா யாராச்சும் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்ல வேளையா ஒருத்தங்க ஒரு பை கூட கொடுத்தாங்க! அதுக்குள்ள எல்லாம் போட்டாச்சு. ஆனா சொமைதான் இப்ப ரெண்டு ஆயிடுச்சு!

ஒரு வழியா எல்லா கசமுசாவும் முடிஞ்சு, அமைதியாயிடுச்சு. ஊரைத் தாண்டியாச்சு. இப்ப நாங்க 3 பேரு மட்டும்தான். இருட்டிடுச்சு.

“விநாயகர் அகவல் சொல்லலாமா” அப்படின்னு “சீதக்களப” ஆரம்பிச்சு சொல்லிக்கிட்டே நடந்தோம்…


(பயணம் தொடரும்)

பி.கு.: முடிஞ்ச வரை சீக்கிரமே கோவில்ல கொண்டு போய் சேர்த்திடறேன்… :)

அன்புடன்
கவிநயா

Sunday, May 15, 2011

நலந்தானே?

சித்திரை வெயில் வீணாகாம ஊர் சுத்திட்டு வந்தாச்!

வைத்தீஸ்வரன் கோயில் பாத யாத்திரைக்குதான் போனேன். ஆனாலும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, மயிலை கற்பகாம்பாள், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் நடராஜர், தில்லை காளி, கடலூர் பாடலீஸ்வரர், மயிலாப்பூர் சாயிபாபா, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், துர்கா கோயில், பிரத்தியங்கிரா கோயில், காஞ்சி காமாக்ஷி, காஞ்சி வரதராஜர், எங்க ஊர் மீனாக்ஷி, குலதெய்வம் கோயில், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம், இப்படி எல்லாக் கோயிலும் சுத்திட்டு, மறுபடி வீட்டு பக்கத்தில் இருக்க பிள்ளையாருக்கு போய் ‘டாடா’ சொல்லிட்டு வந்துட்டேன்!

போகணும்னு நினைச்சு போகாமல் இருக்கிற கோயில்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு… பார்க்கலாம்… ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா, சில கோயில்களில் காசை கண்ல படறாப்ல வச்சிருந்தாதான் விபூதி குங்குமமே தர்றாங்க :(

வந்தவுடனே எங்க நடனப்பள்ளி ஆண்டு விழா வேலைகளில் முழுகிட்டதால, விலாவரியா ஒண்ணும் எழுத முடியல. சீக்கிரம் வரேன்…

முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! மதுரையில் இந்த வாட்டி ஒரு வழியா ஜிகிர்தண்டாவை ருசி பாத்தாச்!

அன்புடன்
கவிநயா